search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income Tax Department"

    • சுதாகரின் உறவினர்கள், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
    • ஏற்கனவே மணப்பாறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 44). இவர் அப்பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு கடந்த 1-ந் தேதி சென்ற மர்ம நபர்கள் தங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டு, உங்களது கடையில் சட்டவிரோதமாக மருத்துவம் பார்ப்பதாக புகார் வந்துள்ளதாக கூறி கடையை சோதனை இட்டுள்ளனர்.

    பின்னர் சுதாகரை விசாரணைக்கு வாருங்கள் என கூறி அழைத்து சென்றனர். தொடர்ந்து சுதாகரின் உறவினருக்கு போன் செய்த மர்ம நபர்கள், அவரை விடுவிக்க ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகரின் உறவினர்கள், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மணப்பாறை போலீசார் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களை மணப்பாறை-திருச்சி பைபாஸ் சாலையில் வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த நவ்ஷாத் (45), துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சேகர் (42), வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (44), மதுரையை சேர்ந்த மாரிமுத்து (53), சென்னையை சேர்ந்த வினோத் (37), தொப்பம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (37) என்பது தெரியவந்தது.

    இந்த 6 பேரும் பேரும் ஒரே குழுவாக சேர்ந்து, இதுபோன்று பல்வேறு இடங்களில் தங்களை பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் எனக்கூறி கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. இவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில், இந்தக் குழுவில் உள்ள வினோத், நவ்ஷத், கார்த்திக், மாரிமுத்து ஆகிய நான்கு நபர்கள், மணப்பாறையை சேர்ந்த சக்திவேல் (30), திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, துறையூர் சௌடாம்பிகை அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ஜவுளி வியாபாரியான மதுரை வீரன் (60) என்பவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 17-ந் தேதி சென்று, அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவரது வீட்டில் 5 லட்சம் பணம், தங்க நகை 5 பவுன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

    மணப்பாறை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சக்திவேல், மணிகண்டன் ஆகிய இருவரையும் துறையூர் போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரையும் கைது செய்த துறையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இச்சம்பவத்தில் கொள்ளை போன நகை, பணம் மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை ஏற்கனவே மணப்பாறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 மணல் குவாரிகளில் சோதனை நடைபெற்றது.
    • ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடு சம்பந்தமாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

    6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்ற தொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆடிட்டர் சண்முகராஜ் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மணல் குவாரிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் அளவு மற்றும் விற்பனை செய்யப்பட்ட அளவு ஆகியவற்றை பற்றியும் கணக்கிட்டனர்.

    குவாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் மணலில் போலி பதிவுகள் மூலம் முறைகேடுகள் நடப்பதை சில ஆவணங்கள் மூலம் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது.

    பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சில ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதை கண்டுபிடித்தனர். அத்துடன் போலி பில்கள் மூலம் மணல் விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி இழப்பை ஏற்படுத்தியதையும் கண்டுபிடித்தனர்.

    விசாரணையின் ஒரு பகுதியாக ஐ.ஐ.டி.கான்பூர் நிபுணத்துவத்தை பயன்படுத்தி அனைத்து மணல் அகழ்வு தளங்களிலும் தொழில்நுட்ப ஆய்வை மேற்கொண்டனர். அதில் மணல் அள்ளப்பட்ட இடங்களில் அளவுக்கு அதிகமாக மணல்கள் அள்ளப்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது.

    மொத்தம் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் விற்பனை நடைபெற்றுள்ள நிலையில் கணக்கு புத்தகத்தில் காட்டப்பட்டுள்ள வருவாய் ரூ.36.45 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர்.

    இதுகுறித்து அமலாக்கத் துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பலகோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ள காரணத்தால் இதுபற்றி விசாரிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி.விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது.

    அதன் அடிப்படையில் விசாரணை இப்போது தீவிரம் அடைந்து வருகிறது. ஏற்கனவே மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

    மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணிக்கு கோபெல்கோ கன்ஸ்டக்ஷன் என்ற தனியார் நிறுவனம் தமிழகத்தில் உள்ள 16 இடங்களுக்கு மொத்தம் 273 எந்திரங்களை வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.

    இதன் மூலம் சட்ட விரோ தமாக மணல் விற்பனையில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததின் அடிப்படையில் வரி ஏய்ப்பு தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் உட்பட எல்லாமே அற்புதமாகவுள்ளது.
    • 20 கிமீ நீளம் கொண்ட பாலத்தை 7-8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள். இதை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    மும்பை:

    மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலத்தை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த அடல் சேது பாலம் பற்றி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, "2 மணி நேர பயணம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்து விட்டது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? இப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

    நவி மும்பையில் இருந்து மும்பை, கோவாவில் இருந்து மும்பை, பெங்களூரில் இருந்து மும்பை என எல்லா பயணங்களும் அற்புதமான உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.

    இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் உட்பட எல்லாமே அற்புதமாகவுள்ளது. 20 கிமீ நீளம் கொண்ட பாலத்தை 7-8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள். இதை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று அவர் தெரிவித்தார்.

    2020 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பகுதியில் உள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணத்தை ரொக்கமாகவும், 3.94 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
    • சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் துறையினர் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    புதுவை இளங்கோ நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் வந்தனர். அவர்கள் அந்த வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

    சோதனையின் இடையே அவ்வப்போது அதிகாரிகள் வெளியே வருவதும் மீண்டும் வீட்டிற்குள் செல்வதுமாக இருந்தனர். இந்த சோதனை இரவு 8 மணிவரை நீடித்தது. சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

    அதில் சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றதாக தெரிகிறது. பணம் எதையும் பறிமுதல் செய்து சென்றார்களா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிபாக்கத்தில் உள்ள வைத்திலிங்கம் எம்.பி.சம்பந்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த வருமானவரி சோதனை நடந்தபோது காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் காரைக்காலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். வருமானவரி சோதனை குறித்து அவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பா.ஜனதா வேட்பாளரான புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரின் உறவினர் வீடு, பா.ஜனதா வேட்பாளர் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவின் கணவர் அன்பரசு தனது காரில் கட்டு கட்டாக பணம் கொண்டு செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜீயபுரம் துணை போலீஸ் பிரண்டு பாலசந்தர் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அந்தக் கார் எட்டறையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.

    உடனே இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 5 பேர் கொண்ட வருமானத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இது ரூ.1 கோடி அளவுக்கு இருக்கும் என கூறப்பட்டது.

    பின்னர் அந்த பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் அதன் பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவை விசாரணைக்காக அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு முன்பும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற முசிறி காவல் நிலையம் முன்பும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அன்பரசு அ.தி.மு.க. பிரமுகர் ஆவார்.

    • வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் ஒரு மணி நேரம் சோதனை.
    • வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் பரபரப்பு.

    சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளை கவனித்து வருகிறார்.

    இந்நிலையில், திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    வருமான வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் முதல் சுமார் ஒரு மணி நேரம் தீடீர் சோதனை நடத்தினர்.

    பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு, கடலூர் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்று (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து விட்டு சென்றனர்.

    வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தொல்.திருமாவளவன் கூறுகையில்," எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது
    • நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது

    சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை ஆகிய 4 மத்திய அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் எனக்கோரி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பிக்கள் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே தர்ணா நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையில் டோலா சென், சாகரிகா கோஷ், சாகேத் கோகலே, சாந்தனு சென் ஆகிய எம்.பி.க்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டது.

    பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது என்ற தங்களது புகாரை தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர்.  

    • வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

    அவர்கள் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 2 இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வீடு, அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது.வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 2பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது
    • நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது

    கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசினார் டி.கே.சிவகுமார். அப்போது, "நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. ஏற்கெனவே முடிந்து போன விவகாரத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

    நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் இந்தியா கூட்டணி நிச்சயம் பதிலடி கொடுக்கும். தோல்வி பயத்தில்தான் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது
    • இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை

    வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,823 கோடி ரூபாய் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "நமது ஜனநாயக நாட்டில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை, ஆனால் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக நாங்கள் பயப்பட மாட்டோம், வரும் தேர்தலில் நம் நாட்டு மக்கள் பாஜகவுக்கு இதற்காக பதிலையே வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    பாஜகவின் 8,250 கோடி தேர்தல் பத்திர ஊழல் இந்திய நாட்டையே உலுக்கியது. ஆளும் கட்சி தங்களது நண்பர்களிடம் இருந்து பணத்தை பெரும் அதே சமயத்தில், வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியை குறிவைத்து 1800 கோடி அபராதம் விதித்துள்ளது.

    தேர்தல் நேர்மையாக நடைபெறவேண்டும் என்பதையே ஜனநாயகம் விரும்புகிறது. வரி பயங்கரவாதத்தை அல்ல. ஒரு கட்சி பல ஆயிரம் கோடிகளை மிரட்டி வசூலித்துவிட்டு, மற்றொரு கட்சிக்கு பல ஆயிரம் கோடியை அபராதமாக செலுத்த உத்தரவிடுவது எப்படி நியாயம்?. பாஜக அரசு வரி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது" என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

    • இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சி வருமானவரி கணக்கில் முரண்பாடாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வருமானவரி துறை சார்பில் ரூ.1,823 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்திலும் இந்த போராட்டத்தை நடத்த காங்கிரசார் முடிவு செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

    அப்போது போலீசார் 24 மணி நேரத்துக்கு முன்பே போராட்டத்துக்கு அனுமதி கேட்க வேண்டும். அதனால் நாளை நீங்கள் போராட்டம் நடத்தினால் தடையை மீறித்தான் நடத்த வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து காங்கிரசார் அப்படி ஒன்றும் அவசரம் இல்லை என்கிற எண்ணத்தில் நாளைக்கு போராட்டத்தை நடத்திக் கொள்கிறோம் என்று நழுவிச் சென்றுள்ளனர். முறையான அனுமதி கிடைத்த பிறகு பேராட்டம் நடத்திக் கொள்கிறோம் என்று கூறியுள்ள காங்கிரசார் நாளை போராட்டம் நடத்த காத்திருக்கிறார்கள்.

    • தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.
    • புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் சகோதரரும் தற்போதைய எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் டாக்டர் சி.என்.மஞ்சுநாத் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆகியோர் வாக்காளர்களுக்கு அதிகளவில் குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டினார். இந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

    மேலும் பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் வாக்காளர்களுக்கு கொடுக்க அவரது புகைப்படத்துடன் கூடிய சுமார் 10 லட்சம் பிரஷர் குக்கர் விநயோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 4 லட்சம் குக்கர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதற்கிடையே குமாரசாமி புகாரை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள னர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்பட்டது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குக்கர் உற்பத்தி நிறுவனத்திடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் இதே போன்ற புகாரின் பேரில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடதக்கது.

    ×