என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை உயர் நீதிமன்றம்"
- லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை.
- 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவு.
லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பித் தர விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என விஷால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஶ்ரீராம், "15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம்" எனக்கூறினார். வட்டி தொகை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், "அப்படியானால் 'திவாலானவர்' என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா?" எனவும் விஷால் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும், 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம் எனவும் இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.
இதனையடுத்து, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
- கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார்.
- கும்கி 2 படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கும்கி 2 படம் வரும் 14ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பட வெளியிட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது எனக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதா என காவல்துறை கண்காணிக்க வேண்டும்
- சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று வழக்கின் விசாரணையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.
- நதிகளின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற உத்தரவு
- அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் உத்தரவு
பக்கிங்ஹாம் கால்வாய் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கனகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
- குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரியும் அங்குள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருவண்ணாமலை கோவில் தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்
- சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்குவழங்கப்படும் இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று என்று செவிலியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு செவிலியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- டெண்டர் ஒதுக்குவது தொடர்பான கொள்கை முடிவில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என வாதம்
- மலிவான விளம்பரத்திற்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை:
2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அப்போது, நெடுஞ்சாலைத் துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் கடந்த ஜூலை மாதம் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைத்தளங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்த செய்திகள் மற்றும் தகவல்களை பதிவிட்டிருந்தது. இதையடுத்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உசேன் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், அறப்போர் இயக்கத்தின் செயல் தனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்ததாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறியிருந்தார். மேலும், தனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பதிவு செய்வதற்கும் தன்னைப்பற்றி பேசுவதற்கும் தடை விதிக்க வேண்டும், 1.10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, எந்த அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது கொள்கை முடிவு, அதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என்று குறிப்பிட்டார்.
டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் சார்பில் யாரும் டெண்டரில் முறைகேடுகள் நடந்ததாக எந்த வழக்கும் தொடரவில்லை. புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் மலிவான விளம்பரத்திற்காகவும் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், தங்களிடம் இருக்கும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்றும், அறப்போர் இயக்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அதன்படி இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதுறாக பேச தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அறப்போர் இயக்கத்திற்கு எதிராக இந்த தடை உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
மேலும், டெண்டர் முறைகேடு புகாரில் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதுறாக பேச தடைவிதித்தது சென்னை உயர் நீதிமன்றம்
- புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும்.
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 5 வழக்கறிஞர்கள் மற்றும் 3 நீதித்துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது. இதையடுத்து புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரை செய்யப்பட்ட நீதித்துறை அலுவலர்கள்:
1. பெரியசாமி வடமலை
2. ராமச்சந்திரன் கலைமதி
3. கோவிந்தராஜன் திலகவதி
பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள்:
1. வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன்
2. லெஷ்மண சந்திர விக்டோரியா கவுரி
3. பிள்ளைப்பாக்கம் பாகுகுடும்பி பாலாஜி
4. ராமசாமி நீலகண்டன்
5. கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன்
கடந்த 17ம் தேதி நடந்த கொலிஜியம் கூட்டத்தில், மேற்கண்ட பரிந்துரை தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர். புதிய பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும்.
- தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும்
புதுடெல்லி:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 4 மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும்படி உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் அளித்த பரிந்துரையில் இடம்பெற்ற 4 மாவட்ட நீதிபதிகள் பெயர்கள்:
1. ஆர்.சக்திவேல்
2. பி.தனபால்
3. சின்னசாமி குமரப்பன்
4. கே.ராஜசேகர்
சென்னை உயர் நீதிமன்ற கொலிஜியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் இந்த நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்திருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர். 4 புதிய நீதிபதிகள் பதவியேற்றால் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக உயரும்.
- அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார்.
- நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார்.
அப்போது, அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை அமைச்சர் ரகுபதி கடிதமாக வழங்கினார்.
பேச்சுவார்த்தையின்போது, நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
- கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மதிப்பை விட 3 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டதாக என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம் என நீதிபதி கருத்து.
சென்னை:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் முதற்கட்ட பணியை தொடங்கியது. கால்வாய் அமைப்பதற்காக அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், பயிர்கள் செழித்து வளர்ந்திருந்த நிலங்களில் என்எல்சி நிர்வாகம் பள்ளம் தோண்டியது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பி வேதனை தெரிவித்துள்ளது.
என்எல்சி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி என்எல்சி நிர்வாகம் தொடர்ந்த அவசர வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறி காவல்துறை தரப்பில் வீடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்து என்எல்சி நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஆகஸ்ட் 3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
இதற்கிடையே கால்வாய் அமைக்கும் பணிக்காக நிலங்களை தோண்டுவது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, 20 வருடங்களுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மதிப்பை விட 3 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், இப்போது நிலத்தை என்எல்சி நிர்வாகம் சுவாதீனம் எடுத்துக்கொள்ள உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது பயிர்கள் அறுவடை செய்யும் வரை 2 மாதம் காத்திருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.
நிலத்தில் புல்டோசர் வைத்து கால்வாய் தோண்டும் பணிகளை பார்த்து அழுகையே வந்துவிட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே பெரிய பஞ்சத்தை பார்க்கப்போகிறோம். அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம். அப்படி ஒரு நிலைமை வரப்போகிறது. அப்போது இந்த நிலக்கரியெல்லாம் பயன்படாது. இதற்காக என்எல்சி கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை.
கொள்ளிடம் பாயும் இடங்கள் எல்லாம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பஞ்சத்தின் ஆபத்தை உணராமல் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் காரணமாக, சோழநாடு சோறுடைத்து என்ற பெருமையை அந்த பகுதிகள் இழந்துவிட்டன.
பூமியை தோண்டித் தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே இருந்தால் அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது? என்ற கேள்வி எழுகிறது. மூன்று மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக என்எல்சி கூறுகிறது. ஆனால் எத்தனை மடங்கு இழப்பீடு வழங்கினாலும்கூட பணத்தை வைத்துக்கொண்டு விவசாயி என்ன பண்ணுவான்? மக்கள் பாதிக்கப்படுவதை அதிகாரிகளும் புரிந்துகொள்ளவில்லை.
இவ்வாறு நீதிபதி தண்டபாணி வேதனை தெரிவித்தார்.
- கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
- அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
நெய்வேலியில் என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அந்த நிலத்தின் வழியாக கால்வாய் தோண்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்காக செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அழிக்கப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், என்.எல்.சி. விரிவாக்க பணி தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தை 5 ஆண்டுகளாக என்.எல்.சி. பயன்படுத்தவில்லை என்பதால், நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். மேலும் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்.எல்.சி. தொந்தரவு தரக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கால்வாய் தோண்டாவிட்டால் சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்துவிடும் என்றும், 1.5 கிமீ நீளத்துக்கு சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும் என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிலத்தை பயன்பாட்டிற்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், நிலத்தை கையகப்படுத்தியபின் சாகுபடி செய்ய அனுமதித்தது ஏன்? அந்த நிலத்துக்கு வேலி அமைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், என்.எல்.சி.க்காக அரசு கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிரமாண பத்திரம், மனுதாரரின் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாதரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.






