search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudiyatham"

    குடியாத்தம் தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது.

    குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கடந்த வியாழக்கிழமை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியும், சனிக்கிழமை ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலையில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.

     அம்மன் சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. தொடர்ந்து கோவிலில் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின் சுற்றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கெங்கையம்மனை தரிசனம் செய்தனர். 
    குடியாத்தம் அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள சென்னாம்பள்ளியை பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது60). விவசாயி. இவர் நேற்று மாலை குடியாத்தம் காட்பாடி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த கார் முனிரத்தினம் மீது மோதியது இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் குடியாத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முனிரத்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1½ டன் செம்மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். #RedSandalwood
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர்கள் ரவி, முருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குடியாத்தம் சித்தூர் சாலையில் உள்ள சைனகுண்டா சோதனை சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த காரை மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. அதனை ஜீப்பில் துரத்தினர். 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போடிகுப்பம் என்ற இடத்தில் காரை மடக்கினர். காரை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். காரில் 1½ டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும்.

    காருடன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த செம்மரங்களை ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் இருந்த தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #RedSandalwood

    குடியாத்தத்தில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த பரதராமி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் லோகேசுக்கும், சித்தூரை அடுத்த யாதமூரி மண்டலம் பெருமாள்பல்லி கிராமத்தை சேர்ந்த தாமோதரன் என்பவரது மகள் லாவண்யாவுக்கும் (வயது 19) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் லாவண்யா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட லாவண்யாவிற்கு திருமணமாகி 3 மாதமே ஆனதால் வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் நேற்று குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வந்து லாவண்யாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் லாவண்யாவின் உறவினர்கள் அவரது சாவிற்கு நீதி வேண்டும், கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் லாவண்யாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    குடியாத்தம் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தையொட்டி உள்ள பாலாற்றில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் எடுக்க மணல் குவாரி அமைக்கப்பட்டது.

    இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெகு தூரத்தில் இருந்தும் மாட்டுவண்டிகள் வர தொடங்கின. அதிகாலை முதல் நள்ளிரவு வரை தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி செல்கின்றனர்.

    இதனால் பாலாறு சுரண்டப்பட்டு நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுவ தோடு விவசாயம் முற்றிலும் நாசமாகிறது.

    சுடுகாட்டை அழித்தும் மணல் சுரண்டப் பட்டுவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கடந்த அக்டோபர் மாதம் மாட்டு வண்டிகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அப்போது அதிகாரிகள் மணல்குவாரியை மூட நடவடடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர்.

    இந்நிலையில் இதுவரையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திர மடைந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மீண்டும் பாலாற்றில் குவிந்து மணல் குவாரியை முற்றுகையிட்டு மணலை ஆள்ளவிடாமல் போராட்டம் செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    குடியாத்தம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட நகை தொழிலாளி அவரது மனைவி பரிதாபமாக இறந்தனர். #Mysteryfever

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள மூங்கபட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரி (வயது 33) நகை தொழிலாளி. இவரது மனைவி ரோஜா (எ) குமரி (27), மதியழகன் (6), கோபியா (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.

    அரி, ரோஜா இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கபட்டனர். அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    நேற்று மாலை 2 பேர் உடல் நிலையும் மோசமானது. இதனையடுத்து வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டனர். அங்கு சேர்க்கபட்ட சிறிது நேரத்தில் அரி பரிதாபமாக இறந்தார். ரோஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    மூங்கப்பட்டு கிராமத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். வட்டார மருத்துவ அலுவலர் விமல் தலைமையில் அங்கு மருத்துவ முகாம், சுகாதார பணிகள் நடந்தது.

    அரி, ரோஜா தம்பதி இறந்ததால் அவர்கள் குழந்தைகள் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.  #Mysteryfever

    பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியான சம்பவம், குடியாத்தம் பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. #Swineflu

    குடியாத்தம்:

    குடியாத்தம் பீமாபுரத்தில் மேல்ஆலத்தூர் ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ராமமூர்த்தி (வயது43), விவசாயி. இவருக்கு கல்பனா என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் ராமமூர்த்தி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிறகும், காய்ச்சல் தீவிரமடைந்ததால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளித்தும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை.

    இதையடுத்து, சென்னை பெரும்பாக்கம் சேரன் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, ராமமூர்த்தியின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், பன்றிக்காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியான சம்பவம், குடியாத்தம் பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. பீமாபுரத்தில் நகராட்சி நிர்வாகம் தீவிர சுகாதார பணிகளை செய்து வருகிறது.

    மேலும், மருத்துவ குழு முகாமிட்டு கிராம மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் பலருக்கு காய்ச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    அவர்கள் எதுபோன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Swineflu

    குடியாத்தம் அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கூடநகரம் பார்வதியா புரத்தை சேர்ந்தவர் வாசு, எலக்ட்ரீசியன். இவரது மனைவி வனிதா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

    இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வனிதா இன்று காலை வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே எறும்புத்தின்னியை வேட்டையாடி செதில்களை கடத்திய ஆந்திர வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர் ரவி மற்றும் வன அலுவலர்கள் தமிழக-ஆந்திர எல்லையான சைனகுண்டா சோதனை சாவடியில் நேற்றிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ஆந்திராவில் இருந்து பைக்கில் வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த சிறிய மூட்டையில் 1½ கிலோ அரியவகை கொண்ட எறும்புத்தின்னி செதில்கள் இருந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஆந்திர மாநிலம் பலமனேர் பழையபேட்டை மசூதி தெருவை சேர்ந்த முகமது இஸ்லாமில் (25) என்பது தெரியவந்தது.

    இவர், எறும்புத்தின்னியை வேட்டையாடி செதில்களை வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபரிடம் விற்பனை செய்ய கடத்தி வந்ததாக கூறினார்.

    இதையடுத்து, வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முகமது இஸ்மாயில் கைது செய்யப்பட்டார்.

    இச்சம்பவத்தில் தொடர் புடைய வாணியம்பாடியை சேர்ந்த தொழில் அதிபரை பிடிக்கவும் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதிகளில் அரிய வகை எறும்புத்தின்னிகள் அதிகம் உள்ளன.

    கரையான், எறும்பு, சிறிய பூச்சிகளை உணவாக உண்டு வாழ்கின்றன. எறும்புத்தின்னிகளின் உடல் முழுவதும் கடினமான செதில்கள் நிரம்பியிருக்கும்.

    மனித நடமாட்டம் அல்லது மற்ற விலங்குகள் தாக்க முற்பட்டால் எறும்புத்தின்னி தனது உறுப்புகளை சுருட்டிக் கொண்டு பந்து போன்று தற்காத்துக் கொள்ளும். எறும்புத்தின்னிகளின் செதில்கள் ‘வயகரா’ தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    எறும்புத்தின்னிகளின் செதில்களுக்கு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நல்ல விலை கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால், இங்குள்ள வனப்பகுதிகளில் செதில்களுக்காக எறும்புத்தின்னிகளை வேட்டையாட மர்ம நபர்கள் ஏராளமாக சுற்றித்திரிவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    குடியாத்தம் அடுத்த பிச்சானூரில் உள்ள வெங்கடேச பெருமாள் சிலையில் நீர் வடிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்து வழிபட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பிச்சானூர் அப்பு சுப்பையர் வீதியில் தென் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி 3-வது சனிக்கிழமையான இன்று காலை வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அப்போது, வெங்கடேச பெருமாள் சிலையின் மூக்கு பகுதியில் இருந்து திடீரென தண்ணீர் வடிந்தது. அர்ச்சகர் துணியை வைத்து துடைத்தும் தண்ணீர் வருவது நிற்கவில்லை.

    பக்தர்கள் சாமி சிலையில் வடிந்த தண்ணீரை ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கினர். இத்தகவல், பிச்சனூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பரவியது.

    ஏராளமான பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்து வெங்கடேச பெருமாளை வணங்கி செல்கின்றனர்.
    குடியாத்தம் அருகே தன்னை கடித்த கண்ணாடி விரியன் பாம்புடன் பெண் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பல்லலக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி புனிதா (வயது 39). இவர், இன்று காலை சமையல் செய்வதற்காக தனது வீட்டு முற்றத்தில் உள்ள அடுப்பில் தீ மூட்டினார்.

    அடுப்பில் வைப்பதற்காக அருகில் கிடந்த தென்னை மட்டைகளை எடுத்தார். அப்போது, அதில் இருந்த ஒரு கண்ணாடி விரியன் குட்டிப்பாம்பு புனிதாவின் கையில் கடித்தது. அந்த பாம்பை புனிதா அடித்துக் கொன்றுவிட்டார்.

    பிறகு, கொன்ற பாம்பை எடுத்துக் கொண்டு புனிதா குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். டாக்டர்களிடம் இந்த பாம்பு தான் என்னை கடித்து விட்டு என்று தூக்கி காண்பித்தார்.

    பாம்பை பார்த்தவுடன் டாக்டர்கள், நோயாளிகள் திடுக்கிட்டனர். உடனடியாக புனிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நலமாக உள்ளார். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு காணப்பட்டது.

    குடியாத்தம் மோர்தானா அணை கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் மோர்தானா அணையில் 13வது முறையாக கடந்த 26-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. குடிநீர் பாசனத்திற்காக கவுண்டன்ய ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி வீதமும், வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்களில் வினாடிக்கு தலா 70 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    வரும் 5-ந் தேதி காலை 8 மணி வரை 10 நாட்களுக்கு நாள்தோறும் 240 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ளதால், வலது, இடது புற கால்வாய்கள் மற்றும் கவுண்டன்ய ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்வாய், ஆற்றில் இளைஞர்கள், பொதுமக்கள் அதிகளவில் குளித்து மகிழ்ந்தனர்.

    குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் சத்யராஜ் (வயது 31) என்ற கட்டிடத் தொழிலாளி, நேற்று மாலை தனது பைக்கில் கிராமத்திற்கு அருகே ஓடும் மோர்தானா இடதுபுற கால்வாயில் குளிக்க சென்றார். பைக்கை நிறுத்தி விட்டு கால்வாயில் வேகமாக ஓடிய தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருந்தார்.

    அவர், குளித்து கொண்டு இருந்த இடத்தின் அருகில் கொட்டாற்றின் கீழே 150 மீட்டர் தூரத்திற்கு சுரங்க கால்வாய் உள்ளது. இடதுபுற கால்வாயில் குளித்த சத்ய ராஜ் சுரங்க கால்வாயில் சிக்கினார். தகவலறிந்ததும், குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அதிகாரி சிதம்பரம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து சத்யராஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு 10 மணி வரை மீட்பு பணி நடந்தது. தண்ணீர் வந்துக் கொண்டே இருந்ததாலும், இருள் சூழ்ந்ததாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இதையடுத்து, நீர்வள ஆதார துறை உதவி பொறியாளர் ரவி, பணி ஆய்வாளர் சிவாஜி உதவியுடன் இடது புறக்கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தண்ணீர் ஓட்டம் நின்றதையடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் சுரங்க கால்வாயில் இருந்து சத்யராஜின் உடல் வெளியே வந்தது.

    போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

    ×