search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தத்தில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    குடியாத்தத்தில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

    குடியாத்தத்தில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த பரதராமி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் லோகேசுக்கும், சித்தூரை அடுத்த யாதமூரி மண்டலம் பெருமாள்பல்லி கிராமத்தை சேர்ந்த தாமோதரன் என்பவரது மகள் லாவண்யாவுக்கும் (வயது 19) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் லாவண்யா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட லாவண்யாவிற்கு திருமணமாகி 3 மாதமே ஆனதால் வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் நேற்று குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வந்து லாவண்யாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் லாவண்யாவின் உறவினர்கள் அவரது சாவிற்கு நீதி வேண்டும், கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் லாவண்யாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×