என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hostages"

    • துப்பாக்கியால் சுட்டத்தில் பள்ளியின் தாளாளர் காயமடைந்தார். மேலும் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
    • அந்த இளைஞன் ஆயுதத்தை கீழே போட்டு போலீசாரிடம் சரணடைந்தான்.

    தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பள்ளியில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று மாலை, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞன் துப்பாக்கியால் சுட்டத்தில் பள்ளியின் தாளாளர் காயமடைந்தார். மேலும் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர். தொடர்ந்து அந்த இளைஞன் பள்ளிக்குள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தான்.

    தகவலறிந்து விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பெற்றோர்கள் பள்ளியின் முன் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இறுதியில் அந்த இளைஞன் ஆயுதத்தை கீழே போட்டு போலீசாரிடம் சரணடைந்தான். அவனை கைது செய்த போலீசார் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த பள்ளி தாளாளர் மற்றும் 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தாக்குதல் நடத்த பள்ளிக்குள் நுழைவதற்கு முன் அந்த இளைஞன் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பரிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த இளைஞன் தனது தங்கையை கண்டித்த ஆசிரியரை தேடி அங்கு வந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.   

    • காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
    • மீட்கப்பட்ட உடல் ரான் க்விலி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த கடைசி பிணைக்கைதியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது திங்கள்கிழமை, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட உடல் ரான் க்விலி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காகக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த அனைத்து பிணைக்கைதிகளும் இப்போது தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளார்.  

    கடந்த அக்டோபர் மாதம்இஸ்ரேல் உடன் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது உயிருடன் மீதமிருந்த பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது, 

    • 2023 தாக்குதலின்போது உயிரிழந்தவர்கள் உடல்களை ஹமாஸ், இஸ்ரேலிடம் ஒப்படைத்து வருகிறது.
    • ஹமாஸ் அனுப்பி வைக்கும் ஒரு உடலுக்கு, 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் அனுப்பி வைக்கிறது.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பிணைக்கைதிகள் மற்றும் பிணைக்கைதிகள் உடல்களை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைக்க வேண்டும்.

    உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதன்பின் 2023ஆம் ஆண்டு தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைத்து வருகிறது.

    அதனடிப்பையில் நேற்றிரவு 2023 அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டபோது உயிரிழந்த 3 இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது.

    இதனைத் தொடர்ந்து 45 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது. இந்த உடல்கள் நாசர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    போர் நிறுத்தம் ஏற்பட்ட கடந்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதியில் இருந்து, இதுவரை ஹமாஸ் 20 பிணைக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்துள்ளது. இன்னும் 8 உடல்களை ஒப்படைக்க வேண்டியுள்ளது.

    சிலநாட்களுக்கு ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு உடல்களை ஹமாஸ் அனுப்பி வைக்கிறது. வேகமாக உடல்களை அனுப்பி வைக்க இஸ்ரேல் வலியுறுத்துகிறது. மேலும், சில உடல்கள் பிணைக்கைதிகள் உடல்கள் இல்லை எனக் கூறுகிறது. காசா முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளதால், உடல்களை ஒப்படைக்கும் பணி சிக்கலாக உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அனுப்பும் ஒவ்வொரு உடலுக்கும், இஸ்ரேல் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை அனுப்ப வேண்டும்.

    • வெள்ளிக்கிழமை 3 உடல்களை ஹமாஸ் அமைப்பினர் அனுப்பி வைத்துள்ளனர்.
    • அவைகள் பிணைக்கைதிகளின் உடல்கள் அல்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். அப்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் எடுத்துச் சென்றது.

    இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலில் 1200 பேர் உயிரிழந்த நிலையில், காசாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் கடந்த மாதம் இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் உயிரோடு உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும். பிணைக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும். அதற்கு இணையாக இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். உயிரிழந்த பாலஸ்தீனர்களை ஒப்படைக்க வேண்டும்.

    கடந்த வெள்ளிக்கிழமை 30 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் காசாவுக்கு அனுப்பி வைத்தது. அத்துடன் பிணைக்கைதிகள் விடுவிப்பு- பாலஸ்தீன கைதிகள் விடுதலை ஒப்பந்தம் நிறைவுக்கு வந்தது. ஆனால் ஹமாஸ் இன்னும் அனைத்து உடல்களையும் ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது.

    இதனால் மேற்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவது குறித்து பதற்றமான நிலைதான் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு மூன்று உடல்களை இஸ்ரேலுக்கு காசா அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் உடல்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த உடல்கள் 2023, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டபோது இறந்தவர்களின் உடல்கள் அல்ல என இஸ்ரேல் புலனாய்வுத்துறை கூறியதாக, ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெயர் தெரிவிக்க விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகமும், மூன்று உடல்களும் எந்தவொரு பிணைக்கைதிகள் உடையது அல்ல. ஆனால், விரிவான அறிக்கை ஏதும் கொடுக்கப்படவில்லை.

    அதேவேளையில் ஹமாஸ் ஆயுதப்படை பிரிவு "நாங்கள் உடல்களின் மாதிரிகளை ஒப்படைக்க முன்வந்ததாகவும், ஆனால் இஸ்ரேல் அதை மறுத்துவிட்டு, பரிசோதனைக்காக உடல்களை கேட்டதாகவும். இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை நிறுத்துவதற்கான உடல்களை ஒப்படைத்தோம்" என தெரிவித்துள்ளது. அந்த உடல்கள் யாருடைய உடல்கள் எனத் தெரியவில்லை.

    ஒப்பந்தத்தின்படி 11 உடல்களை இஸ்ரேல் பெற்றுள்ளது. ஆனால் 17 உடல்களை ஒப்படைப்பதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. ஒருசில நாட்கள் இடைவெளி விட்டுவிட்டு ஒன்று அல்லது இரண்டு உடல்களை என ஹமாஸ் உடல்களை ஒப்படைத்து வருகிறது.

    இஸ்ரேல் 225 உடல்களை ஒப்படைத்துள்ளது. இதில் 75 உடல்கள் மட்டுமே உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 20 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
    • பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா (ஹமாஸ்) இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்து உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து முதல் கட்டமாக இரு தரப்பினருக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடங்கி இருக்கிறது. காசாவில் ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்து சுமார் 1,900 பாலஸ்தீனர்கள் கைதிகளை இஸ்ரேல் ரிலீஸ் செய்ய வேண்டும் இதுதான் போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நிலை.

    போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து இன்று காலை முதற்கட்டமாக இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 7 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர். எய்டன் மோர், கலி, கிவ்பெர்மன் உள்ளிட்ட பிணைக்கைதிகளும் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். இதை கேட்டு அவர்களது உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இஸ்ரேல் தலைநகர் டெல்–அவிவ் உள்ளிட்ட நகரங்களில் பெரிய திரையில் பிணைக்கைதிகள் ரிலீஸ் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அவர்கள் கையில் கொடியுடன் உற்சாகத்தை வெளிபடுத்தினார்கள். இஸ்ரேல் ராணுவம் அவர்களுக்கு உடற்தகுதி சோதனை மேற்கொண்டபின்னர், தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று குடும்பத்துடன் இணைய இருக்கிறார்கள்.

    இதற்கிடையே 2ஆவது கட்டகமாக 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். இதனால் உயிரிடன் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். இவர்கள் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றனர்.

    பிணைக்கைதிகளுக்கு ஈடாக பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது. போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடங்கி இருப்பது இரு நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காசாவில் உயிருக்கு பயந்து முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்ப தொடங்கி இருக்கிறார்கள்.

    எகிப்தில் ஷர்ம் அல்-ஷேக் நகரில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் காசா அமைதி உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் முக்கிய மத்தியஸ்தர்களான எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்- சிசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த மாநாட்டில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக எகிப்து செல்வதற்கு முன்பாக இஸ்ரேல் சென்றுள்ளார்.

    இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்னதாக டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காசாவில் போர் முடிவுக்கு வந்து விட்டது. காசாவில் மறு கட்டமைப்பை உருவாக்க விரைவில் அமைதி வாரியம் அமைக்கப்படும். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதற்காக கத்தார் பெருமைப்பட வேண்டும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மிக சிறப்பாக பணியாற்றினார்.

    தற்போது அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த தருணத்தை எல்லோரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர். இதுவரை இப்படி நிகழ்ந்தது இல்லை. இந்த போர் நிறுத்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றுவது பெருமை அளிக்கிறது.

    இதுவரை எப்போதும் நடந்திராத ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். இஸ்ரேலுக்கு பிறகு நாங்கள் எகிப்துக்கு செல்கிறோம். மிகவும் சக்தி வாய்ந்த பெரிய நாடுகள், பணக்கார நாடுகள், பிற நாடுகள் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க போகிறோம். அவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதற்கு ஈடாக இஸ்ரேல் 250 பாலஸ்தீனக் கைதிகளையும், காசாவிலிருந்து சிறை பிடிக்கப்பட்ட சுமார் 1,700 பேரையும் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது.
    • ஃபதா (Fatah) என்ற இயக்கத்தை நடத்தி வந்த பர்குத்தி பாலஸ்தீனத்தில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்குப் பிறகு தலைமை ஏற்கத் தகுதி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

    காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து, ஹமாஸ் அமைப்பு சுமார் 20 இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவிக்க உள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேல் 250 பாலஸ்தீனக் கைதிகளையும், காசாவிலிருந்து சிறை பிடிக்கப்பட்ட சுமார் 1,700 பேரையும் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை இந்த செயல்முறை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பாலஸ்தீனர்களிடையே அதிக செல்வாக்கு கொண்ட தலைவராக கருதப்படும் மர்வான் பர்கௌதி (Marwan Barghouti), இஸ்ரேல் விடுவிக்கவுள்ள கைதிகள் பட்டியலில் இடம்பெறாதது பேசுபொருளாகி உள்ளது.

    பர்கௌதி உட்பட முக்கியமான உயர்நிலைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் வலியுறுத்தி வருவதாகவும், இதுதொடர்பாக மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

     ஃபதா (Fatah) என்ற இயக்கத்தை நடத்தி வந்த பர்கௌதி பாலஸ்தீனத்தில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்குப் பிறகு தலைமை ஏற்கத் தகுதி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவர் பால்ஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா என்று கருதப்படுகிறார். 

    தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

    இதேபோல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய மர்வான் பர்கௌதி 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளாக ஐந்து ஆயுள் தண்டனைகளுடன் இஸ்ரேலியச் சிறையில் உள்ளார்.

    பாலஸ்தீனக் குழுக்களின் அரசியல் பிளவுகளைத் தாண்டி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகப்பெரிய செல்வாக்கையும் ஆதரவையும் பர்கௌதி பெற்றுள்ளார்

    பர்கௌதியை விடுதலை செய்தால் பாலஸ்தீனத்தில் குறிப்பிடத்தக்க தலைமையாக அவர் மாறக்கூடும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்றும் கூறப்படுகிறது. 

    • இந்த பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க வேண்டியது அவசியம் என்று வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
    • பசியால் வாடும் காசா மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் அனுப்ப ஐ.நா. தயாராக உள்ளது என்று அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.

    2023, அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லபட்டனர்.

    இதன்பிறகு காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் பதிலடித் தாக்குதல்களில் இதுவரை 67,160 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

    ஹமாஸ் தாக்குதல் தொடுத்து இன்றுடன் 2 இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிரழந்தவர்கள், பணய கைதிகளாக உயிரிழந்தர்வர்களுக்கு நினைவேந்தல் நடைபெற்றது.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை ஏற்று போரை முழுவதுமாக நிறுத்துவது குறித்துஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் ரிசார்ட் நகரில் இன்று (அக்டோபர் 7) இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.

    நேற்று (திங்கட்கிழமை) முதற்கட்டமாக நடந்த நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தையில், பிணைக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தம் ஆகிய முதல் கட்ட நிபந்தனைகளில் பெரும்பாலானவற்றை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்கள், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தூதுக் குழுவினருடன் தனித்தனியாகப் பேசினர்.

    அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று டிரம்ப்புக்கு நிலவரங்களைத் தெரிவித்தனர்.

    இந்த பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க வேண்டியது அவசியம் என்று வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.

    காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்து, மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

    ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் மற்றும் காசாவின் எதிர்கால நிர்வாகம் எப்படி இருக்கும் என்பன போன்ற முக்கிய கோரிக்கைகளில் இன்னமும் தெளிவின்மை நீடிக்கிறது.

    ஹமாஸ் ஆயுதங்களைக் களைந்த பிறகு இஸ்ரேல் தனது படைகளை காசாவிலிருந்து திரும்பப் பெறும். பின்னர் காசாவுக்கு ஒரு சர்வதேச பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டு, டிரம்ப் மற்றும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோர் மேற்பார்வையிடும் ஒரு சர்வதேச நிர்வாகத்தின் கீழ் காசா இருக்கும்.

    ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் முன்மொழிவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    பசியால் வாடும் காசா மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் அனுப்ப ஐ.நா. தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். 

    • காசா சிட்டியை போர் மண்டலாக அறிவித்து இஸ்ரேல் தாக்குதலை அதிகரித்துள்ளது.
    • 2023 அக்டோபர் மாதம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளது.

    காசா சிட்டியில் இருந்து இரண்டு பயணக்கைதிகள் உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளார். காசா சிட்டி மீது தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில், இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2023ஆம் அண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேல் கொல்லப்பட்டனர். 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். உயிரிழந்த சிலரின் உடல்களையும் கடத்திச் சென்றனர்.

    அப்போது உயிரிழந்த இலான் வெய்ஸ் என்பவரின் உடலும், மற்றொரு அடையாளம் தெரியாத உடலும் தற்போது மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இலான வெய்ஸின் மனைவி மற்றும் குழந்தைகள் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டன. 2023 நவம்பர் மாத போர் நிறுத்தத்தின்போது அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    தற்போது ஹமாஸ் அமைப்பிடம் 50 பேர் பிணைக்கைதிளாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதில் 20 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், பணயக்கைதி ஒருவர் உடல் மெலிந்த நிலையில், சுரங்கத்தில் குழி தோண்டுவதுபோன்ற வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

    காசா சிட்டியை போர் பகுதியாக அறிவித்து, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா சிட்டியில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் வசித்து வருகின்றனர். இவர்கள் பசியால் உயிரிழந்து வரும் அபாய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் வற்புறுத்தலாம் அத்தியாவசிய பொருட்கள் தற்போது கொண்டு செல்லப்படுகிறது. தற்போது போர்ப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

    • பணயக்கைதிகள் வேண்டுமென்றே பட்டினியால் கொல்லப்படவில்லை, அவர்கள் எங்கள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் சாப்பிடும் அதே உணவையே சாப்பிடுகிறார்கள்.
    • பட்டினியால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.

    ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, தங்கள் காவலில் உள்ள இஸ்ரேலிய பணய கைதி எலும்பும் தோலுமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டது.

    இஸ்ரேல் காசாவுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை மறுத்து வரும் நிலையில் பட்டினியால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். 

    இந்நிலையில் இஸ்ரேலின் தடையினால் இஸ்ரேலிய கைதிகளும் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை காட்டும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

    "பணயக்கைதிகள் வேண்டுமென்றே பட்டினியால் கொல்லப்படவில்லை, அவர்கள் எங்கள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் சாப்பிடும் அதே உணவையே சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் கிடைக்கவில்லை" என்று ஹமாஸ் கூறியுள்ளது.

    ஏற்கனவே இஸ்ரேலில் ஆளும் பிரதமர் நேதன்யாகு அரசுக்கு எதிராக போராடி வரும் அந்நாட்டு மக்களின் சீற்றத்தை இது மேலும் அதிகரித்தது.

    இதையடுத்து இஸ்ரேலிய கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி வழங்க வேண்டும் என்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வலியறுத்தினார்.

    செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜூலியன் லாரிசனை தொலைபேசியில் அழைத்து பணய கைதிகளுக்கு உடனடியாக உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்று நேதன்யாகு கோரியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் காசாவிற்கு மனிதாபிமான உதவி வழித்தடங்கள் திறக்கப்பட்டு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டால், இஸ்ரேலிய கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவ அனுமதிப்போம் என என்று ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.  

    • 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்ட நிலையில், 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு 7ஆம் தேதி திடீரென இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அத்துடன் உயிரிழந்த சிலரின் உடல்களையும் எடுத்துச் சென்றனர்.

    இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசா முனை உருக்குலைந்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனார்.

    பேச்சுவார்த்தை மூலம் இரண்டு முறை இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டனர்.

    ஹமாஸ் பிடியில் இன்னும் 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். தற்போது காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய வருகிறது. பாதுகாப்பு பகுதிகளை அதிகரிப்பதற்காக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஜூடி வெயின்ஸ்டெயின் (70), கட் ஹக்காய் (72) ஆகிய இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    கணவன் மனைவிகளாக இவர்கள் கிப்புட்ஸ் நிர் ஓஸ் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் நடைபயணம் மேற்கொண்ட போது ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக்கொலை செய்து உடல்களை எடுத்துச் சென்றுள்ளனர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் கொல்லப்பட்ட செய்தி உறுதி செய்யப்பட்டது.

    இருவருடைய உடல்களும் மீட்கப்பட்ட நிலையில் பெஞ்சமின் நேதன்யாகு "இஸ்ரேலின் அனைத்து மக்களுடன் நானும், எனது மனைவியும் இணைந்து, அவர்களுடைய அன்பான குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் பயங்கரமான இழப்பால் எங்கள் இதயங்கள் வேதனையடைகின்றன. அவர்களில் நினைவு ஆசீர்வதிக்கப்படட்டும்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஜூடி வெயின்ஸ்டெயின், கட் ஹக்காய் ஆகிய இருவரும் அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர்கள்.

    • இஸ்ரேல் 1,236 பாலஸ்தீன கைதிகளையும் 180 பாலஸ்தீனியர்களின் உடல்களையும் திருப்பி அனுப்பும்
    • அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஒப்பந்தம் வழங்கினார்.

    ஹமாஸ் எந்த விலை கொடுத்தாவது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

    காசா போரை நிறுத்த அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் வழங்கிய ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால், அது முற்றிலுமாக அழிக்கப்படும் என்று காட்ஸ் எச்சரித்துள்ளார்.

    காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு ஈடாக இரண்டு கட்ட பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஸ்டீவ் விட்காஃப் முன்மொழிந்துள்ளார்.

    இதன் கீழ், 10 உயிருள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளும் 18 இறந்த உடல்களும் ஒப்படைக்கப்படும். இஸ்ரேல் 1,236 பாலஸ்தீன கைதிகளையும் 180 பாலஸ்தீனியர்களின் உடல்களையும் திருப்பி அனுப்பும்.

    அக்டோபர் 2023 இல் ஹமாஸ் தாக்குதலின் போது 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களில் 57 பேர் இன்னும் காசாவில் உள்ளனர். அவர்களில் 34 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    அமெரிக்கா ஹமாஸுக்கு போர்நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளதாகவும், அதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    • போர்நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பு பிணைக்கைதிகளை விடுவித்து வருகிறது.
    • அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்து வருகிறது.

    கெய்ரோ:

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் தரப்பில் சுமார் 2,000 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 50,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    மீதமுள்ள பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அதிபர் டிரம்ப் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், எங்களிடம் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார் என அறிவித்துள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலி அல்-ஹய்யா இஸ்ரேலுக்கு போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஹமாஸ் அமைப்பிடம் 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×