என் மலர்
உலகம்

மர்வான் பர்கௌதி: 23 ஆண்டுகளாக இஸ்ரேல் சிறையில் வாடும் 'பாலஸ்தீனத்தின் மண்டேலா' விடுதலை ஆகிறாரா?
- இதற்கு ஈடாக இஸ்ரேல் 250 பாலஸ்தீனக் கைதிகளையும், காசாவிலிருந்து சிறை பிடிக்கப்பட்ட சுமார் 1,700 பேரையும் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது.
- ஃபதா (Fatah) என்ற இயக்கத்தை நடத்தி வந்த பர்குத்தி பாலஸ்தீனத்தில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்குப் பிறகு தலைமை ஏற்கத் தகுதி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.
காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து, ஹமாஸ் அமைப்பு சுமார் 20 இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவிக்க உள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேல் 250 பாலஸ்தீனக் கைதிகளையும், காசாவிலிருந்து சிறை பிடிக்கப்பட்ட சுமார் 1,700 பேரையும் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை இந்த செயல்முறை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாலஸ்தீனர்களிடையே அதிக செல்வாக்கு கொண்ட தலைவராக கருதப்படும் மர்வான் பர்கௌதி (Marwan Barghouti), இஸ்ரேல் விடுவிக்கவுள்ள கைதிகள் பட்டியலில் இடம்பெறாதது பேசுபொருளாகி உள்ளது.
பர்கௌதி உட்பட முக்கியமான உயர்நிலைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் வலியுறுத்தி வருவதாகவும், இதுதொடர்பாக மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஃபதா (Fatah) என்ற இயக்கத்தை நடத்தி வந்த பர்கௌதி பாலஸ்தீனத்தில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்குப் பிறகு தலைமை ஏற்கத் தகுதி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவர் பால்ஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா என்று கருதப்படுகிறார்.
தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
இதேபோல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய மர்வான் பர்கௌதி 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளாக ஐந்து ஆயுள் தண்டனைகளுடன் இஸ்ரேலியச் சிறையில் உள்ளார்.
பாலஸ்தீனக் குழுக்களின் அரசியல் பிளவுகளைத் தாண்டி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகப்பெரிய செல்வாக்கையும் ஆதரவையும் பர்கௌதி பெற்றுள்ளார்
பர்கௌதியை விடுதலை செய்தால் பாலஸ்தீனத்தில் குறிப்பிடத்தக்க தலைமையாக அவர் மாறக்கூடும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்றும் கூறப்படுகிறது.






