என் மலர்
இந்தியா

டெல்லியில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. 4 நாட்களில் 2வது சம்பவம்
- நீண்ட நேரமாக பள்ளத்தில் விழுந்து கிடந்தபோதும் தாமதமாகவே மீட்புப் பணிகள் தொடங்கின.
- கடந்த பிப்ரவரி 6 அன்று மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் தோண்டியிருந்த பள்ளத்தில் விழுந்து மற்றொரு இளைஞர் உயிரிழந்தார்.
டெல்லி ரோகிணி செக்டர் 32 பகுதியில் உள்ள மகாசக்தி காளி கோயில் அருகே, திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த பிரிஜு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த தேஜ்பால் யாதவ் என்பவர் கூறுகையில், "இந்த நபர் நீண்ட நேரமாக பள்ளத்தில் விழுந்து கிடந்துள்ளார். அவரது நண்பர்கள் மாலை 4 மணிக்கே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால் நான் 112 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளித்த பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கின" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 6 அன்று மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் தோண்டியிருந்த பள்ளத்தில் விழுந்து, தனியார் வங்கியில் பணிபுரிந்த 25 வயது இளைஞர் பலியானார்.
டெல்லி மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.






