search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rose flowers"

    • பூங்காவில் பல்வேறு வகை ரோஜா செடிகள் வளர்க்கப்படுகிறது.
    • மலர் செடிகள் நடவு செய்து பணியாளர்கள் பராமரித்து வருகிறார்கள்.

    ஏற்காடு:

    தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. இங்கு நிலவும் குளிர்ச்சியான காலநிலை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது. இதனால் இங்கு வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள தாவரவியல் பூங்கா, மான் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரிக்கரை பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்து சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர். அதுபோல் ஏரியில் குதுகலமாக படகுசவாரி செய்து உற்சாகம் அடைகின்றனர்.

    இந்த நிலையில் நடப்பாண்டுக்கான கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சிக்கான முன் ஏற்பாடுகள் தோட்டக்கலை துறை சார்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மலர் செடிகள் நடவு செய்து பணியாளர்கள் பராமரித்து வருகிறார்கள்.


    மேலும் பூங்காவில் பல்வேறு வகை ரோஜா செடிகள் வளர்க்கப்படுகிறது. இந்த ரோஜா மலர்களுக்கு தனி கவனம் செலுத்தி வளர்க்கப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏற்காடு அண்ணா பூங்காவில் பல வகை நிறங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.

    இது கண்களை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பூத்துக்குலுங்கும் இந்த மலர்களை மனதில் மகிழ்ச்சி ததும்ப வியந்து பார்த்தப்படி அதன் முன்பு நின்று செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இதே போல் ஏற்காடு ரோஜா தோட்டத்திலும் பல வகை வண்ண ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.

    • காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
    • மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். பரிசு பொருட்களை பரிமாறி கொள்ளும்போது அதனுடன் ரோஜா பூவையும் சேர்த்து கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.

    பரிசு பொருட்கள் கொடுக்க முடியாமல் இருந்தாலும் காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

    இதையடுத்து காதலர்தின ஸ்பெஷல் ரோஜா பூக்கள் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து பட்டர்ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, காஷ்மீர் ரோஜா என பல வகைகளிலும், பல வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    சில்லரை வியாபாரிகள் இந்த ரோஜாக்களை பொக்கே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு ரோஜா பூக்கள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஊட்டியில் தொடங்கிய கண்காட்சியில் 25 ஆயிரம் ரோஜா மலர்களால் பிரமாண்ட இந்தியா கேட் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத் தப்பட்டு வருகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., கோபாலகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



    இந்நிகழ்ச்சியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, சாந்தி ராமு எம்.எல்.ஏ., தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம், துணை இயக்குனர் உமாராணி, ஆவின் இணைய தலைவர் மில்லர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ரோஜா கண்காட்சியில் இந்திய தலைநகரமான டெல்லியில் அமைந்து உள்ள இந்தியா கேட் போன்று (இந்திய நுழைவு வாயில்) 25 ஆயிரம் ரோஜா மலர்களால் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது 12 அடி நீளம், 16 அடி உயரத்தில் கம்பீரமாக தோற்றமளித்தது. அதன் முன்பு ராணுவ பாதுகாப்பு குறித்த படம் இருந்தது. சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா மலர்கள் கண்களை கவரும் வகையில் அமைந்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அதற்கு முன் நின்று தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    குழந்தைகள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் நிகழ்ச்சியில் இடம்பெறும் சோட்டா பீம் 5 ஆயிரம் ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் சோட்டா பீம்மை ஆர்வமுடன் பார்த்தனர். பூங்காவின் முன்பகுதியில் ரோஜா இதழ்களை கொண்டு ட்வீட்டி ரங்கோலி அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரோஜா பூங்காவுக்குள் நுழைந்ததுமே சுற்றுலா பயணிகளின் மனதில் இந்த ரங்கோலி பிரமிப்பை ஏற்படுத்தியது. ரோஜா கண்காட்சியை காண பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.



    இதுதவிர மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், 6 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஜல்லிக்கட்டு காளை, ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 6 ஆயிரம் ரோஜா மலர்களால் மயில், கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை சார்பில் 5 ஆயிரம் மலர்களை கொண்டு படகு ஆகியவை வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த படகில் காய்கறிகள், பழங்கள் வைக்கப்பட்டு இருந்தது.

    திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், ரோஜா மலர்களால் ஆன ரோஜா மாலை, ரோஜா இதழ்களை கொண்டு தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி ரோஜா அல்வா காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கண்காட்சியில் போட்டியாளர்கள் கலந்துகொண்டு வீட்டில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் கோப்பைகள், மரத்தொட்டிகளிலும் ரோஜா மலர்களை அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.
    ×