என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓசூர்"

    • தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் வந்துள்ளார்கள்.
    • உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் இருந்து ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்ததுடன் அங்குள்ள தமிழர்களை சந்தித்தும் கலந்துரையாடினார். இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

    ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக இன்று காலை 8.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

    விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் திரளாக வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    அதன் பிறகு விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒருவார காலமாக ஜெர்மனி, இங்கிலாந்து, பயணத்தை நான் மேற்கொண்டேன். மனநிறைவோடு நான் திரும்பி இருக்கிறேன்.

    இந்த பயணத்தை பொறுத்தவரை மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்து இருக்கிறது. மொத்தம் 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் வந்துள்ளார்கள். உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    ஏற்கனவே இருக்கக் கூடிய 17 நிறுவனங்களும், மற்ற மாநிலங்களை நோக்கி போகாமல், நம்முடைய மாநிலத்திலேயே தங்களுடைய தொழிலை மேலும் விரிவுப்படுத்துவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள்.

    எனக்கு முன்னாடியே நான் புறப்படுவதற்கு 4, 5 நாட்களுக்கு முன்னாடியே என்னுடைய ஒட்டு மொத்த பயணத்தை முறைப்படுத்துவதற்காக மிக சிறப்பாக ஒருங்கிணைத்து, அந்த பணியை வெற்றிக்கரமாக நடத்திய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதே போல் அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

    தொழில்துறை அமைச்சரை பொறுத்தவரை, ஒரு துடிப்பான தொழில்துறை அமைச்சராக ராஜா இந்த பயணத்தின் மூலமாக நிரூபித்து உள்ளார்.

    கடந்த 4½ ஆண்டு காலத்தில் மேற்கொண்டிருக்கக் கூடிய எனது பயணங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

    இந்த வெளிநாட்டு பயணத்தில்தான், மிக அதிக அளவிலான, முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இது ரொம்ப வெற்றிகரமான பயணம். பெருமையான பயணமாகவும் இது அமைந்தது.

    அது ஏன் என்றால், உங்களுக்கே தெரியும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான, உலகின் முதன்மையான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருஉருவப் படத்தை திறந்து வைத்தது தான் அந்த பெருமைக்கு காரணம்.

    அதுமட்டுமல்ல சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கையும், நாம் கடந்து வந்த பாதையையும் இனி அடைய வேண்டிய இலக்கையும் விளக்கமாக நான் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறேன்.

    அதோட அயலக தமிழர்கள் சந்திப்பு கூட்டங்களில் பேசியது, சோயாஸ் பல்கலைக்கழக மாணவர்களிடம் திராவிட மாடல் பற்றி பேசியது, லண்டனில் இருக்கக் கூடிய பொதுவுடைமை தத்துவ மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடம், சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்ந்த இல்லம், திருவள்ளுவர் சிலை, ஜி.யு.போப் நினைவிடம் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று, பல பெருமைகளோடு நான் திரும்பி இருக்கிறேன்.

    முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சராக மட்டுமல்ல, பெரியாரின் பேரனாக, திராவிட இயக்கத்தை சார்ந்த தலைவராக, சுயமரியாதை உள்ள ஒரு தமிழனாக இந்த பயணம் எல்லா வகையிலும் எனக்கு தனிப்பட்ட வகையிலும் மறக்க முடியாத பயணமாக அமைந்து உள்ளது.

    சிலரால் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் எதுக்கு இந்த வெளிநாட்டு பயணம். இங்கிருக்கும் நிறுவனங்களை சந்தித்து பேசினால் போதாதா? என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு புலம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில், நிறைய ஜெர்மன் கம்பெனி வந்திருந்தார்கள்.

    அப்போது நம் தமிழ்நாட்டை பற்றி எடுத்து சொன்னதும் பல முதலீட்டாளர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? தமிழ்நாட்டில் இவ்வளவு கட்டமைப்பு இருக்கிறது என்று இப்போது நீங்கள் சொன்ன பிறகுதான் தெரியுது. இதுக்கு முன்னாடி வேறு ஒரு மாநிலம்தான் தங்களது பொட்டன்ஷியலை பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    இனி நிச்சயம் தமிழ்நாட்டை நோக்கி நிறைய முதலீட்டாளர்கள் வருவார்கள் என்று சொன்னார்கள்.

    அடுத்து ஜெர்மனியில் என்.ஆர்.டபிள்யு. மினிஸ்டர் பிரசிடெண்ட் ஹன்ரிக் ஹிஸ்ட் அவர்களை சந்தித்து பேசினேன். அவரும் அதையேதான் சொன்னார்.

    இப்படியான தொடர்புகளை ஏற்படுத்தவும், பார்ட்னர்ஷிப் உருவாக்கவும்தான் வெளிநாடுகளுக்கு முதலமைச்சரான நானே நேரில் போனேன்.

    ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறவர் இன்னொரு நாட்டோட மாநிலத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவரை சந்திக்கும் போது பிசினசை தாண்டி இந்த உறவு வலிமையாகிறது. அதுதான் முக்கியம். அப்படித்தான் ஹென்றிக் ஹிஸ்ட், இங்கிலாந்து அமைச்சர் கேசரின் ஆகியோருடைய சந்திப்பு இருந்தது.

    அதே போல்தான் நீங்கள் கேட்கிற அடுத்த கேள்விக்கான பதில் என்னவென்றால், ஏற்கனவே தமிழ்நாட்டில் நிறுவனங்கள் இருந்தாலும், அவங்க புதிய திட்டங்களை இங்கேதான் தொடங்க வேண்டும். விரிவுப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை.

    அவர்களுடைய புதிய முதலீடுகளை தமிழ்நாட்டிலேயே மேற்கொள்வதாக உறுதி செய்ய வேண்டிய நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிற போது தான் அதை அவர்கள் உறுதி செய்தார்கள். அதுக்காக இந்த மாதிரி பயணங்கள் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல தமிழ்நாடு கொண்டிருக்கக் கூடிய மனிதவளம், உள்கட்டமைப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், சலுகைகள் இதைப் பற்றி முதலமைச்சராக இருக்கக் கூடிய நானே எடுத்துச் சொல்கிறேன்.

    இப்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, இன்னும் பல முதலீடுகளும், நிறுவனங்களும் இந்த சந்திப்பால் நிச்சயம் தமிழ்நாட்டுக்கு வரும் என்று நம்பிக்கையும் கொடுத்திருக்கிறார்கள்.

    உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் இன்று 8-ந்தேதி நான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து இன்னும் 2 நாளில் 11-ந்தேதி ஓசூருக்கு போகிறேன். அங்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, ஆட்டமெட்டல்லேன் அமைப்பையும், பணியாளர் தங்குமிடம் ஆகியவற்றையும் திறந்து வைத்து ரூ.1100 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறேன்.

    அதே மாதிரி ஏற்கனவே தூத்துக்குடியில் நடத்தியது மாதிரி ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த போகிறோம். அங்கேயும் பல ஆயிரம் கோடி முதலீடு வர இருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான எங்களது வெளிநாட்டு பயணங்களும், இங்கே மேற்கொள்ளும் பயணங்களும் எப்போதும் நிற்காது. இது தொடரும், தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வந்ததும் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் வழிநெடுக கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். கத்திப்பாரா ரவுண்டானா வரை நிர்வாகிகள் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    • தோண்டப்பட்ட மண்ணை, பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் நிரப்பும் பணி நடைபெற்றது.
    • போலீசார் கூறுகையில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு அங்கு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்காக, சாலையின் நடுவே மண் தோண்டப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக பணி நடைபெற்று வருகிறது.

    இங்கு 10-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். பணி தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை பணி மந்தமாக நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் தோண்டப்பட்ட மண்ணை, பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் நிரப்பும் பணி நடைபெற்றது.

    அப்போது, அங்கு எலும்பு இருந்ததை கண்டதொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஜூஜூவாடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், 3 மனித எலும்புகள், பேண்ட் ஒன்றும் இருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அங்கு கிடந்த தொடை எலும்பு மற்றும் கை பகுதி எலும்புகளை சேகரித்து சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு அங்கு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஒப்பந்ததாரர் ஜல்லி கற்களை அங்கிருந்து இடமாற்றிய போது அதற்குள் 3 மனித எலும்புகள், மற்றும் பேண்ட் ஒன்றும் இருந்தது தெரியவந்தது.

    மனித எலும்புகளை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த இடத்தில் பிணமாக கிடந்தது யார்? என விசாரணை நடத்தி வருகிறோம். ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காணாமல் போனவர்கள் குறித்தும், பாலம் அமைக்கும் பணியாளர்கள் குறித்த விபரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    • இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் அருகே பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் இணைப்பு பகுதி கடந்த 21-ந் தேதி விரிசல் ஏற்பட்டதால், பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், வாகனங்கள் மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், நேற்று காலை தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் மேம்பாலத்தில் இணைப்பு பகுதி மேலும் விலகாமல் தடுக்க பாலத்தின் தூணின் மேல் பகுதியில் மரக்கட்டைகளை அடுக்கி முட்டு கொடுத்தனர்.

    பின்னர் பாலத்தில் சோதனைக்காக இலகு ரக வாகனங்களை இயக்க அனுமதித்து, தொடர்ந்து 2-வது நாளாக பொறியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் கூறியதாவது:-

    கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாலம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் பாலத்தில் வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையில் சென்று வந்தன.

    தற்போது வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளன. மேலும், ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பாலத்தின் மீது செல்வதால் பாலத்தில், பால்பேரிங்கி சேதமாகி உள்ளது.

    இதுபோல வாகனங்கள் அதிகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் பேரிங் சேதம் இருக்கிறதா என்பது தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும்.

    ஓசூர் பாலத்தில் இணைப்பு விலகியபகுதி மேலும் விலகாமல் இருக்க மரக்கட்டைகளை அடுக்கி வைத்து, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தமிழக எல்லையான ஓசூர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஓசூர்:

    கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள் டீசன் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் இருந்து கர்நாடகா வழியாக மகாராஸ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் ஏராளமான லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லாமல், தமிழக பதிவு எண் மற்றும் பிற மாநில பதிவு எண் கொண்ட லாரிகள், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி, இ.எஸ்.ஐ. மருத்துவ மனை அருகே, மூக்கண்ட ப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் இன்று 2 -வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக எல்லையில் இருந்து அத்தியாவசிய பொருட்களை எற்றி சென்ற லாரிகள் மட்டும் கர்நாடகா மாநிலத்திற்குள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

    • மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • எரிசாராயத்தை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார்.

    ஓசூர்:

    கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளாவிற்கு அடிக்கடி மதுபான வகைகள், எரிசாரயம், குட்கா பொருட்கள் சாதாரண ஆட்கள் என்ற போர்வையில் கார், இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கோவை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமையில் ஏட்டு மதிவாணன், அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ஓசூர்-சேலம் பை பாஸ் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 215 கேன்களில், 7,525 லிட்டர் எரிசாரியம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் இருந்து பெங்களூர்-ஓசூர் வழியாக கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து எரிசாராயத்தை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த சயாத் மற்றும் பாபுராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
    • வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் கடும் அனல் காற்று வீசியதால் மக்கள் சாலைகளில் நடமாடவே அச்சமடைந்தனர்.

    கடும் வெயில் காரணமாக பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    இந்த நிலையில், நேற்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமாக காணப் பட்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் மழை லேசாக தூறத் தொடங்கியது. பின்னர் திடீரென மழை பொழியத் தொடங்கியது.

    நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும், ஓசூர் பஸ்நிலையம், ஜி.ஆர்.டி. சர்க்கிள், பாகலூர் ரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனி பஸ் ஸ்டாப், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    மேலும் இந்த பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இந்த நிலையில், கனமழை பெய்ததையடுத்து வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியதால்மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தமிழக-கர்நாடகா எல்லையில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பெலகாவியில், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து பஸ் கண்டக்டரை தாக்கிய வர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    பஸ் டிரைவர் மீதான மராட்டிய தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், பெலகாவி காப்பாற்றப்பட வேண்டும்.

    எம்.இ.எஸ். கட்சியை தடை செய்ய வேண்டும். ,மேகதாது , கலச பண்டூரி, மகதாயி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னட சலுவளி வாட்டள் கட்சி தலைவர் வாட்டள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் சார்பில், கர்நாடக மாநிலத்தில் `அகண்ட் கர்நாடக பந்த்' என்ற பெயரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


    இதன் ஒரு பகுதியாக, ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகில், இன்று காலை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட 30 பேரை கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் இன்று தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து எல்லை பகுதியில் கர்நாடகா மற்றும் தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது.
    • பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவார்கள். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    அதே போல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் கோவில் பகுதியில் குறவர் நடனம், புலியாட்டம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அங்குள்ள காட்டாற்றில் இருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதேஸ்வரசாமி எழுந்தருளினார். பின்னர் ஒசூர் பகுதியில் சுவாமி சப்பர வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் சாமிக்கு தோங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.

    முக்கிய வீதி வழியாக சப்பர வீதி உலா வந்தது. பின்னர் காலை 7.30 மணியளவில் கோவிலை சென்றடைந்தது. கோவில் முன்பு 30 அடி நீளத்தில் குண்டம் தயார் செய்யபட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து காலை 8 மணியளவில் கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அதை தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கினர்.

    திருவிழாவில் தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், மெட்டல்வாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.

    • போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
    • போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், மருந்து, மாத்திரை தயாரிக்கும் கம்பெனிகளும் அடங்கும்.

    இந்த நிலையில், தங்கள் தயாரிப்புக்கு எத்தனால் மற்றும் ஆல்கஹால் பயன்படுத்தும் அங்குள்ள 2 மருந்து, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பூனப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலை என மொத்தம் 3 தொழிற்சாலைகளில் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, எத்தனால் மற்றும் ஆல்கஹால் இருப்பு சரியாக உள்ளதா, என்றும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா, அவற்றின் காலக்கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்தும் போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.

    • தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் நாகராஜ், இவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி ஜோதி (35). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதில் மூத்த மகளான தன்யா ஸ்ரீ என்ற சிறுமி, நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று குழந்தை தன்யா ஸ்ரீயை துரத்தி துரத்தி கடித்தது. இதனை பார்த்து . அதிர்ச்சியடைந்த அவளது தாய் ஜோதி, நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடினார். அப்போது, அவரையும் அந்த நாய் கடித்து விட்டது.

    தெரு நாய் கடித்ததில் தாய், மகள் என 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரு நாயை விரட்டி விட்டு, படுகாயம் அடைந்த தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஓசூர் மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தெருவில் விளையாடும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்வோர் என பொதுமக்களை நாள்தோறும் அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இடம் தேர்வு செய்யப்பட்டு, கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
    • கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டின் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இந்த விமான நிலையம் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

    முன்னதாக சென்னையின் 2-வது விமான நிலையத்தை கட்டுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதற்காக காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு அவற்றை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

    எனினும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியதில் இருந்தே மனு அளித்து வந்த கிராம மக்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த விமான நிலையத்துக்கான பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமலே உள்ளது. இந்த நிலையில், ஓசூரில் புதிய விமானம் நிலையம் கட்டுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    விமான நிலையம் பற்றிய அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், இதற்காக இடம் தேர்வு செய்வது, அதனை கையகப்படுத்துவது என அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியாகும். அதிக தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக ஓசூர் இருக்கிறது.

    எனினும், ஓசூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்களே அங்குள்ள நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், 2 ஆயிரம் ஏக்கரில் ஓசூரை சுற்றி எத்தனை கிராமங்கள் இடம்பெறும், அந்த கிராமங்கள் எவை என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

    நிலம் தேர்வானதும், அங்குள்ள மக்கள் வேறொரு இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்படுவர். இது தொடர்பாக மக்களுக்கு நோட்டீஸ் வழங்குவது, பத்திரிகை செய்தியாக தெரிவிப்பது போன்ற நடைமுறைகள் அரசு சார்பில் பின்பற்றப்படும்.

    இதைத் தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறையை சேர்ந்த நில எடுப்பு அதிகாரிகள் தனியே நியமிக்கப்படுவர். இவர்களை வைத்து நிலம் கையகப்படுத்தப்படும். மாநிலத்திற்கு புதிய விமான நிலையம் கட்டுவதில் அரசு இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை அரசு எப்படி கையாளும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இந்த நிலையில், ஓசூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பு அந்த மாவட்ட மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

    • 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

    ஓசூர்:

    சேலம் சரக குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் போலீசார் தளி ஆனேக்கல் சாலையில் உள்ள உச்சனப்பள்ளி முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 40 கிலோ எடை கொண்ட, 20 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து வேனை ஓட்டி சென்ற தளி கும்பார் வீதியை சேர்ந்த அல்லாபகாஷ், (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

    ×