search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "factory"

    • சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
    • படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் தற்போது 39 வழித் தடங்களில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகை இயக்கப்படுகிறது. முற்றிலும் சேர்கார் பெட்டிகளாக அதாவது அமர்ந்து செல்லும் வகையில் மட்டுமே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னை-கோவை, எழும்பூர்-நெல்லை, சென்னை-மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வந்தே பாரத் ரெயில் படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    முதலில் டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா, மற்றும் டெல்லி-பாட்னா போன்ற சில நகரங்களுக்கு இடையே இரவு நேர பயணங்களுக்காக இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் 10 செட் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் மாதம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு ஏப்ரல் முதல் அல்லது 2-வது வாரத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், "படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. தரம் மற்றும் அதன் ஆயுட்காலம் சர்வதேச தரத்தில் இருக்கும்.

    அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும். படுக்கை வசதி பெட்டிகள் அனைத்தும் 'கவாச்' அமைப்புடன் பொறுத்தப்பட்டு இருக்கும்.

    மேலும் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு ரெயிலும் 16 ஏ.சி. பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அதில் 850 படுக்கை வசதிகள் இடம் பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொழிற்சாலைகள் மக்கள் உயிரை அலட்சியப்படுத்தி லாபத்தைத் தான் பார்க்கின்றனர்.
    • ஏராளமானோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி மற்றும் தோல் வியாதி உள்ளது.

    திருவொற்றியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்த பாக்கியம் கூறியதாவது:-

    எண்ணூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவு மற்றும் அமோனியா வாயுவால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை போராட்டங்கள் நடத்தும் அவர்கள் அதற்கு நிரந்தர தீர்வு காணாமல் அடுத்தடுத்து மறந்து சென்று விடுகின்றனர். நாட்டின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது தான். குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை இருப்பதையும் தடுக்க முடியாது. ஆனால் தொழிற்சாலைகள் மக்கள் உயிரை அலட்சியப்படுத்தி லாபத்தைத் தான் பார்க்கின்றனர். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் ஏராளமானோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி மற்றும் தோல் வியாதி உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. குற்றச்சாட்டு
    • காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தான்றோன்றித்தனமாக செயல்பட்டு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் யுவராஜ் என்ற மற்றொரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவருக்கு 17 வயதுகூட பூர்த்தியாகவில்லை. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என சட்டம் உள்ளது.

    இதுகுறித்து மருந்து தொழிற்சாலை உரிய விளக்கம் தர வேண்டும். ஆளும் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் அரசு தொழிற்சாலை தவறுகளை மூடிமறைத்து அவர்களை காப்பாற்றும் செயலில் ஈடுபடுவது வேதனை தருகிறது.

    காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தான்றோன்றித்தனமாக செயல்பட்டு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். சீனியர் எஸ்.பி, டி.ஜி.பி. ஆகியோர் காலாப்பட்டு போலீசாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

    உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு அதிகபட்சமான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். மேலும் சிலர் உயிரிழக்கும் தருவாயில் உள்ள நிலையிலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது ஏன்?

    பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்க வேண்டும் என கவர்னரிடம் கேட்டுள்ளோம். தனியார் தொழிற்சாலை விபத்து, நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஒட்டு மொத்தமாக விபத்து ஏற்பட்ட முதல் தற்போதைய நிலை வரை ஒரு விரிவான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணை செயலாளர் நாகமணி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • கலெக்டரின் உத்தரவின் பேரில் இப்பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
    • பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ளது ராஜபாளையம் கிராமம். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் தொழிற்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு ராஜபாளையம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தொழிற்சாலையால் விலை நிலங்கள் பாதிப்பு, நிலத்தடி நீர்மட்டம், சுற்றுச் சூழல் பாதிப்பு. சுவாசக் கோளாறு உள்ளிட்ட ஏற்படும் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறி மாவட்ட கலெக்டரில் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் இப்பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் தார்தொழிற்சாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ராஜ பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தொழிற்சாலை அமைப்பதற்கான பணியைதடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் பெரியபாளைம் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் தனபால் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • வருமான வரியை கட்டவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    சென்னை ேவப்பேரியில் உள்ள தனியார் நிறுவனம், பூங்கா நகரில் உள்ள இன்னொரு நிறுவனம் மற்றும் மாதவரம் பூங்காநகர் ஆகிய இடங்களில் உள்ள மேலும் 2 தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை குறிவைத்து வருமான வரித்துைற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரும்பு பொருட்கள் மற்றும் மருந்து ரசாயனம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யும் இந்த 4 நிறுவனங்களிலும் முறை யாக வருமான வரியை கட்ட வில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்கு மாடி வணிக வளாகம் ஒன்றில் 5-வது மாடியில செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட வரு மான வரித்துறை அதிகாரி கள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி பிரிவு அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை யில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. இதுபோன்று சவுகார் பேட்டையில் உள்ள வணிக வளாகத்திலும், மாதவரம் நடராஜன் சாலையில் உள்ள குடோன் மற்றும் அலுவலகத் திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். சவுகார் பேட்டை பகுதியில் மட்டும் மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான தொழிற்சாலை கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். கடலூர் குடிகாடு பகுதியில் சிப்காட்டில் உள்ள இந்த மருந்து தொழிற்சாலைக்கு சென்னையில் இருந்து 4 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் அதிரடி இன்று காலையில் வந்தனர். தொழிற்சாலைக்குள் சென்ற அதிகாரிகள் அங்குள்ள அலுவலகம் மற்றும் தொழிற்சாலை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையின் முடிவில் தான் ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றபட்டதா என்பது தெரிய வரும். தனியார் மருந்து கம்பெனியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் கடலூர் சிப்காட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அங்கு வைத்திருந்த கயிறு, பஞ்சு கட்டுகள், காயர் பித் கேக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
    • எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை பகுதியில் ஆர்ஜி ஃபைபர் என்ற பெயரில் தேங்காய் மட்டையிலிருந்து பஞ்சு,கயிறு தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.வழக்கம் போல் நேற்று மாலை வேலை முடித்து சென்றார். இந்நிலை யில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றியதில் நிறுவனத்தில் இருந்த தளவாட சாமான்கள் , தயாரித்து வைத்திருந்த கயிறு, பஞ்சுகட்டுகள், காயர் பித் கேக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உடனடியாக தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுத்தனர்.எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது .

    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
    • தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கோவை:

    கோவை இடையர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபா கங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல இன்னல்களை தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட தொழில்துறையினர் தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் கூட சென்னை சென்று, அமைச்சர்களை சந்தித்து பேசினர். ஆனாலும் தொழில் முனைவோரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. கோவை இடைய ர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அங்கு பணியாற்றியவர்களும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

    மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இதேபோல் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் இன்று கருப்பு கொடியேற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. அன்று மின்தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இன்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வருகிறது.

    நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பி-யிலிருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல், 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவி டுதல் என்பன 5 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில் 12 கிலோவாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பியில் இருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றியுள்ளது.

    மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்கள் கூட்டமைப்பில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் சார்பில் இன்று கோவை உள்பட தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

    தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த கட்டமாக சென்னையில் வருகிற 16-ந் தேதி 25 ஆயிரம் தொழில் முனைவோர் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போரா ட்டம் நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சாதனங்கள் பழுதடைந்தும், சரியான முறையில் சுத்தம் செய்யாமலும் இருந்தது.

    கடலூர்:

    கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளை தமிழ்நாடு சட்டமன்றத் பேரவையின் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் உறுப்பினர்கள் எம்.எல்.ஏ க்கள் மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், சக்கரபாணி, அருள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது தொழிற்சாலை வளாகத்தில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த சாதனங்கள் பழுதடைந்தும், சரியான முறையில் சுத்தம் செய்யாமலும் விபத்து ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருந்து தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள், இந்த பகுதியில் பெரிய தொழிற்சாலையான இங்கு உரிய பராமரிப்பு இல்லாமல் சாதனங்களை பயன்படுத்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏதேனும் திடீர் விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள மக்களின் நிலை என்ன ஆகும் என கேட்டு எச்சரிக்கை விடுத்தனர். இது மட்டும் இன்றி இது போன்ற அஜாகரதியான சூழ்நிலையில் தொழிற்சாலை இயங்கலாமா? என சரமாரியாக கேள்வியும் எழுப்பினார்கள்.

    மேலும் தொழிற்சா லைகளை சரியான முறையில் பராமரித்து உயிர் பலி ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் ஏற்படுத்த வேண்டும். இதனை உறுதி மொழி குழுவினரால் மீண்டும் சில நாட்களில் திடீர் ஆய்வு செய்யப்படும். அப்போதும் இது போன்ற நிலை நீடித்தால் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தொழிற்சாலை வளாகத்தில் புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஏதேனும் தொழிற்கூடங்கள் அல்லது வேறு ஏதேனும் தொடங்கினால் உரிய அனுமதி பெற்று தொடங்க வேண்டும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கான்கிரீட் வேலை நடந்து கொண்டிருக்கும்போது விபத்து
    • பீகார் மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் மாவட்டத்தில் மெல்லச்செருவு கிராமத்தில் உள்ளது "மை ஹோம்" சிமென்ட் தொழிற்சாலை.

    இன்று அந்த தொழிற்சாலையில் அங்கு நடைபெற்று வந்த கான்கிரீட் அமைக்கும் பணியின்போது திடீர் விபத்து ஏற்பட்டது. கான்கிரீட் கலவையை எடுத்துச்செல்லும் இரும்பு குழாய்கள் உடைந்து ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து தற்போது வரை 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரின் சடலங்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சிலர் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

    பலியானவர்கள் உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மை ஹோம் நிர்வாகம், எந்த கருத்தும் கூறவில்லை. வேறு எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

    • பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    அரசின் விதிகளுக்குட்பட்டு இயங்கிவரும் கல்குவாரிகள் தங்கள் உரிமைத்தை புதிப்பிக்க விண்ணப்பிக்கும் போது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 2014 ஆண்டிற்கு முன்பு இருந்த பழைய நடைமுறையிலேயே தற்பொழுதும் இயங்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் 5 ஹெக்டேருக்கு மேல் குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி அதன்பின் உரிமம் வழங்கப்படுகிறது. இதில் 5 ஹெக்டேர் என்பதை 25 ஹெக்டேராக உயர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆகவே கல்குவாரி மற்றும் கிரஷர்கள் தொழிற்சாலை உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழக அரசு விரைந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தீக்காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏறு்பட்டது. அம்பர்நாத் எம்ஐடிசியில் உள்ள தொழிற்சாலையில் நைட்ரிக் ஆசிட் டேங்க் அருகே மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக குடிமை அதிகாரி தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அம்பர்நாத், ஆனந்த் நகர் மற்றும் உல்லாஸ் நகரில் இருந்து தலா இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர் சூர்யகாந்த் ஜிமாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தீக்காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தானே குடிமை அமைப்பின் பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவு தலைவர் யாசின் தத்வி கூறினார்.

    மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாரல் அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை மத்திய, மாநில அரசு மானியத்தில் இயங்கி வருகிறது.
    • கலெக்டர் ரவிச்சந்திரன் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில், மத்திய, மாநில அரசு மானியத்தில் சாரல் அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையை புதிய தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவதற்காக அதன் நிர்வாக இயக்குனர் கே.ஆர். பால்துரை தலைமையில் பங்குதாரர்கள், தென்காசி கலெக்டரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

    இந்நிலையில் கலெக்டர் ரவிச்சந்திரன் அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தவிட்டில் இருந்து எண்ணெய் தயாரிக்கும் முறைகள் குறித்தும், புதிய தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் கே.ஆர். பால்துரை, பங்குதாரர்கள் வெண்ணிநாடார், ராஜன், தொழில்மைய மேலாளர் மாரியம்மாள் மற்றும் கே.ஆர்.பி. இளங்கோ, சஜனா, பரமசிவன், அலுவலர்கள் சேகர், தட்சணா மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×