என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT raid"

    • வெட்டுவாங்கேணியில் வசித்து வரும் சார்பானந்த் என்பவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
    • 2 இடங்களிலும் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணியில் வசித்து வருபவர் டாக்டர் சாமுவேல் காட்வின். சர்க்கரை நோய் சிறப்பு நிபுணரான இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலையில் சோதனை நடத்தினார்கள். இதேபோன்று வெட்டுவாங்கேணியில் வசித்து வரும் சார்பானந்த் என்பவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    2 இடங்களிலும் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. 2 பேர் வீட்டில் இருந்தும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • கொப்பரை தேங்காய்கள் தேவைப்படும்போது கொள்முதல் செய்யப்பட்டு மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்முதல் நிலையம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காந்தி வீதியில் மேரிகோ லிமிடெட் என்ற தனியார் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. மேலும் இதன் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    கொப்பரை தேங்காய்கள் தேவைப்படும்போது கொள்முதல் செய்யப்பட்டு மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

    அப்போது மதியம் 2 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் திடீரென வந்து இறங்கினர். அவர்கள் கொள்முதல் நிலையத்துக்குள் சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த சோதனை நீடித்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக தேங்காய் கொள்முதல் நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையிட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு அடிப்படையில் இந்த சோதனையை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்முதல் நிலையம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • சீஷெல் ஓட்டலின் உரிமையாளர் வேறு ஒருவர் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
    • தரமணியில் உள்ள சீஷெல் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் குன்ஹி மூசா என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

    நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான சீஷெல் ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானதையடுத்து இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    சென்னையில் வருமான வரி சோதனை நடக்கும் ஓட்டலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த ஓட்டலின் உரிமையாளர் வேறு ஒருவர் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.

    நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான இந்த ஓட்டல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குன்ஹி மூசா என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    கேரளா தலசேரியை சேர்ந்த குன்ஹி மூசா என்பவருக்கு சொந்தமான சீஷெல் ரெஸ்டாரண்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சீஷெல் ரெஸ்டாரண்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது

    சென்னை தரமணியில் உள்ள சீஷெல் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் குன்ஹி மூசா என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்து இருந்தார்.
    • வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா.

    அறிந்தும் அறியாமலும், சர்வம், நான் கடவுள், ஆரம்பம், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்து இருந்தார்.

    இந்த நிலையில், சென்னையில் உள்ள நடிகர் ஆர்யா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • சீஷெல் ஓட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • அண்ணா நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னையில் உள்ள சீஷெல் ஓட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    அண்ணா நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீஷெல் ஓட்டல்களில் சோதனை நடைபெற்று வருகிறது. துரைப்பாக்கத்தில் உள்ள சீஷெல் ஓட்டலிலும் சோதனை நடைபெறுகிறது.

    • கரூர் நகரில் அமைந்துள்ள ஜவுளி நிறுவனத்தில் நான்கு வாகனங்களில் வந்த கோவையை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஜவுளி நிறுவனங்களில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

    கரூர்:

    கரூரை தலைமை இடமாகக் கொண்டு சிவா டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை சரவணன் என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவருக்கு சொந்தமான தனியார் ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர்.

    கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர் நகரம், குளித்தலை மற்றும் சேலம், திருப்பூர், ஊட்டி உட்பட பல்வேறு ஊர்களில் இந்த ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான கிளைகள், வீடு மற்றும் அலுவலகங்களிலும் இந்த அதிரடி சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

    மேற்கண்ட இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது. ஒவ்வொரு ஊர்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு, வருமானம் தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கரூர் நகரில் அமைந்துள்ள ஜவுளி நிறுவனத்தில் நான்கு வாகனங்களில் வந்த கோவையை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஜவுளி நிறுவனங்களில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

    கரூர் நகரில் அமைந்துள்ள கடை, குடோன், வீடு மற்றும் குளித்தலையில் அமைந்துள்ள ஜவுளிக்கடை என நான்கு இடங்களிலும் சேலம், திருப்பூர், ஊட்டி ஆகிய கிளைகள் உட்பட மொத்தம் ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதேபோல் விழுப்புரம் மகாலட்சுமி பிளாசாவில் உள்ள ஜவுளி நிறுவனம், கடலூரில் இம்பீரியல் சாலையில் உள்ள உள்ள கே.வி.டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி நிறுனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜவுளிகள் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளன, அவை என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளன, என்ன விலையில் விற்கப்படுகிறது.
    • முறையாக பில்கள் போடப்படுகிறதா, வருமான வரி கணக்கில் கொண்டுவரப்படுகிறதா என்பது குறித்தும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் டி.வி.எஸ். ரோடு பகுதியில் பிரபல ஜவுளி கடைகள் உள்ளன. இதில் ஒரு ஜவுளிக்கடைக்கு நீலகிரி, கரூர், குளித்தலை உள்பட பல பகுதிகளில் கிளை நிறுவனங்களும் உள்ளன.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜவுளி விற்பனையில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறைக்கு புகார்கள் சென்றது.

    இதையடுத்து சென்னை மற்றும் கோவையிலிருந்து வருமானத்துறை அதிகாரிகள் நேற்று இரவு சேலம் வந்தனர். அவர்களுடன் சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளும் இணைந்து இன்று காலை 8 மணி அளவில் அதிரடியாக அந்த கடைக்குள் நுழைந்தனர்.

    பின்னர் கடையில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியில் இருந்தும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. கடையின் ஷட்டர் பாதி நிலையில் பூட்டப்பட்டது. அங்கு இருந்தவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு அறையையும், ஒவ்வொரு தளத்தையும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.

    அப்போது ஜவுளிகள் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளன, அவை என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளன, என்ன விலையில் விற்கப்படுகிறது, முறையாக பில்கள் போடப்படுகிறதா, வருமான வரி கணக்கில் கொண்டுவரப்படுகிறதா என்பது குறித்தும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் காடு டிஸ்க்களையும், பில்களையும் தொடர்ந்து ஆய்வு செய்தனர். முக்கிய ஆதாரங்கள் வருமானத்துறை அதிகாரிகளுக்கு சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதையொட்டி அந்த பகுதியில் பரபரப்பு நிலவுவதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். மற்ற கிளைகளிலும் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜவுளிக்கடையில் அதிகளவில் விற்பனை நடைபெற்றது.
    • இன்று 2-வது நாளாக ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    கரூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கரூர், குளித்தலை, சேலம், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட 5 இடங்களில் கிளைகள் உள்ளது.

    இந்நிலையில் கரூர் மற்றும் சேலத்தில் உள்ள கிளைகளில் நேற்று காலை திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கடை உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர்.

    சேலம் 4 ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்த ஜவுளிக்கடையின் கிளையில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை, பிற்பகலை தாண்டியும் நீடித்தது. மொத்தம் 4 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகை புரிந்து சோதனைகளில் ஈடுபட்டனர்.

    ஜவுளிக்கடையின் ஒவ்வொரு தளங்களாக சென்று சோதனை நடத்திய அவர்கள், முறையாக வருமான வரி கட்டியுள்ளார்களா? அதற்குரிய ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜவுளிக்கடையில் அதிகளவில் விற்பனை நடைபெற்றது. ஆனால் அதற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாகவே வருமான வரித்துறை சோதனையில் இறங்கி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக கடை அடைக்கப்பட்டு உள்ளே சோதனை நடந்து வரும் நிலையில், ஜவுளி எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.
    • ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில உணவு, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கங்குல கமலாகர். இவர் கிரானைட் வியாபாரிகளுக்கு சட்டவிரோதமாக குவாரி லைசென்ஸ் வழங்கி உதவுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனையொட்டி ஐதராபாத், கரீம் நகர் ஆகிய பகுதிகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப்பிரிவினர் 20 குழுக்களாக ஒரே நேரத்தில் அமைச்சருக்கு சொந்தமான வீடுகள், குடியிருப்பு பகுதிகள், குவாரிகள், கிரானைட் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

    கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.

    மேலும் அவருக்கு நெருக்கமாக உள்ள பல கிரானைட் வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகின்றன.
    • தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பாமாயில் மற்றும் பருப்பு நிறுவனத்துக்கு சொந்தமான பெரிய குடோன் மற்றும் உரிமையாளரின் வீடு ஆகியவை உள்ளது.

    சென்னை:

    பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாமாயில், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு தமிழகத்தில் சில நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பக்கூடிய பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து அதனை பேக்கிங் செய்து அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    5 நிறுவங்களும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களாக விளங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ஒரு நிறுவனம் தண்டையார்பேட்டையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 7 மொத்த விற்பனை கடைகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பாமாயில் மற்றும் பருப்பு நிறுவனத்துக்கு சொந்தமான பெரிய குடோன் மற்றும் உரிமையாளரின் வீடு ஆகியவை உள்ளது. தண்டையார்பேட்டை சந்தியராயன் கோவில் தெருவில் நிறுவன ஊழியர் ஒருவரின் வீடு உள்ளது. கணக்காளராக பணி புரிந்து வரும் இவரது வீட்டிலும், குடோன் மற்றும் உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தி.நகர் மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. சென்னை அண்ணா சாலையில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இதே போன்று இன்னொரு நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகின்றன. சோதனை நடைபெற்று வரும் நிறுவனங்களின் பெயர் விவரங்களும் வெளியாகி உள்ளன.

    இன்று காலை 6 மணியளவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருமான வரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை முடிவில் 5 நிறுவனங்களிலும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும். இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறையினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மல்லா ரெட்டியின் மகன் சந்தோஷ் ரெட்டிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • தெலுங்கானாவில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி.

    இவர் நடத்தி வரும் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ சீட்டுகளை உறவினர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டியின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு என 50 இடங்களில் நேற்று காலை 5 மணிக்கு சோதனையை தொடங்கினார்.

    இந்த சோதனையில் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களில் இருந்து வந்த 400க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மல்லா ரெட்டியின் உறவினர் வீடுகளில் இருந்து ரூ.5 கோடி பணம் மற்றும் தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மல்லா ரெட்டியின் மகன் சந்தோஷ் ரெட்டிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் சந்தோஷ் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சந்தோஷ் ரெட்டிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினரிடம் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    மல்லா ரெட்டியின் மகள், மருமகன் துருக்கிக்கு சுற்றுலாவுக்கு சென்று உள்ளனர். அவர்களது வீட்டில் உள்ள 2 டிஜிட்டல் லாக்கர்களின் பாஸ்வேர்டு எண் தெரியாததால் வருமான வரித்துறை அதிகாரிகளால் லாக்கர்களை திறக்க முடியவில்லை.

    அவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    அவர்கள் நாடு திரும்ப தாமதம் செய்தால் வங்கி லாக்கர்களை உடைத்து சோதனை செய்யப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் மல்லா ரெட்டி மற்றும் அவரது உறவினர்களின் தொலைபேசி அழைப்பு பட்டியலை வைத்து அவர்கள் யார் யாருடன் எப்போதெல்லாம் பேசினார்கள்.

    எதற்காக பேசினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானாவில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தொண்டர்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் குவிந்து இருப்பதால் அந்தந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து மல்லாரெட்டியின் உறவினர்கள் சிலர் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி உள்ளனர்.
    • பூட்டப்பட்ட வீடுகளில் அதிரடியாக நுழைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையில் மல்லா ரெட்டி மற்றும் அவரது மருமகன் ராஜசேகர ரெட்டி மற்றும் மகள் ஆகியோரின் பெயரில் 300 வங்கி கணக்குகளும், 80 லாக்கர்கள் உள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    ராஜசேகர ரெட்டி மற்றும் அவரது மனைவி வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று உள்ளதால் அவர்களின் 2 வங்கி லாக்கர்கள் நேற்று திறக்கப்பட்டு சோதனை செய்தனர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. மேலும் அவர்கள் இன்று ஐதராபாத் வந்த பின்னர் மீதம் உள்ள 78 லாக்கர்களை திறந்து சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

    மேலும் மல்லா ரெட்டியின் உறவினர் வீடுகளில் முதல்முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் ஸ்கேனர்களை வைத்து எந்தெந்த அறையில் நகை, பணம், முக்கிய ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என சோதனை செய்தனர்.

    வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து மல்லாரெட்டியின் உறவினர்கள் சிலர் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி உள்ளனர். இருப்பினும் பூட்டப்பட்ட வீடுகளில் அதிரடியாக நுழைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையில் பிரவீன் ரெட்டி வீட்டில் ரூ.1.50 கோடி, திருச்சூல் ரெட்டி வீட்டில் ரூ.2 கோடி, ரகுநாத ரெட்டி வீட்டில் ரூ.2 கோடி, சுதிர் ரெட்டி வீட்டில் ரூ.1 கோடி என மொத்தம் ரூ.10.50 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது வீட்டில் வலுக்கட்டாயமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியதால் மகன் மகேந்தர் ரெட்டிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக போயன பள்ளி போலீசில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது அமைச்சர் மல்லா ரெட்டி புகார் செய்தார்.

    அவரது புகாரை ஏற்ற போலீசார் வருமான வரித்துறை அதிகாரி மேரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×