என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    படம் பாருங்க.. விசில் அடிங்க.. ஆனா ஓட்டு தி.மு.க.-வுக்கு தான்!- தயாநிதி மாறன்
    X

    "படம் பாருங்க.. விசில் அடிங்க.. ஆனா ஓட்டு தி.மு.க.-வுக்கு தான்!"- தயாநிதி மாறன்

    • ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும்.
    • உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.

    ஈரோடு மாவட்டம் கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில விளையாட்டு அணி செயலாளருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய அளவில் வளர்ச்சி சதவீதம் 5.6 சதவீதமாக உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் வளர்ச்சி 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    குறுக்கு வழியில் மட்டுமே ஆட்சியை பிடிக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. பாஜவிற்கு அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறார்.

    அதனால் தான் கடந்த தேர்தலில் துரோகத்திற்கும், குறுக்கு வழிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற ஒற்றை கருத்தோடு தி.மு.க.வை வெற்றி பெற வைத்து மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்தீர்கள்.

    இன்று புதியதாக வந்த ஒருவர்(விஜய்) மீது இளைஞர்கள் மோகத்தில் உள்ளனர். அம்மாக்கள் சொன்னால் தான் அவர்கள் கேட்பார்கள். படத்தை பார்க்க சொல்லுங்கள், விசிலை அடிக்க சொல்லுங்கள். ஆனால் வாக்குகளை தி.மு.க.விற்கு போட சொல்லுங்கள்.

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், ஆயிரம் ரூபாயை தடுக்க பார்த்தவர்களுக்கு சவுக்கடியாக 5,000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக கொடுத்தவர் தான் தமிழக முதலமைச்சர். அதை அடுத்த முறை ஆட்சி பொறுப்பேற்றதும் 2,000 ரூபாயாக தருவதாக உறுதி அளித்துள்ளார்.

    கர்ப்பப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி 16,000 ரூபாயாக உள்ள நிலையில் அதை இந்திய அளவில் இலவசமாக கொடுத்து வருபவர் நம் முதலமைச்சர். எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் இல்லை.

    தேவைப்பட்டால் நாங்கள் கற்றுக் கொள்கிறோம். ஆனால் திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம். ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும். ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திரம் கிடைத்தபோது அவர்கள் மொழியை 97 சதவீதம் பேர் பேசி வந்தனர். ஆனால் இன்று 3 சதவீதம் பேர் தான் அவர்கள் தாய் மொழியை பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தி திணிப்பால் ஒரு மொழியே அழிந்து வருகிறது.

    உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×