search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver"

    • காரின் மீது மோதிய பிறகு ரெயில் நிறுத்தப்பட்டது.
    • ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

    மேற்கு வங்க மாநிலம் கர்தஹா ரெயில் நிலையம் அருகே லெவல் கிராசிங் கேட் மூடும்போது ரெயில் பாதையில் கார் ஒன்று மாட்டிக் கொண்டது. அப்போது அவ்வழியே வந்த ரெயில் காரின் பின்புறத்தில் மோதியது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    ஹஸர்துவாரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததாலும், காரில் பயணிகள் யாரும் இல்லாமல் இருந்ததாலும், ஓட்டுநருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    காரின் மீது மோதிய பிறகு ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

    லெவல் கிராசிங் கேட்டை வேகமாக கடக்க முற்பட்டபோது இந்த ரெயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு காரை விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடினார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்த விபத்திற்கு அடுத்து, லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கிழக்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

    • சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
    • சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    டிரைவர்-கண்டக்டர் கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இது சம்பந்தமாக அனைத்து கிளை மேலாளர்கள்-மண்டல மேலாளர்களுக்கு மாநகர போக்கு வரத்து கழக மேலாண் இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை வருமாறு:-

    மாநகரப் போக்குவரத்து கழகத்தை சார்ந்த அனைத்து பணிமனைகளிலும் பணி புரியும் டிரைவர்கள் கண்டக்டர்கள் கட்டாயம் சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும். சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.

    எனவே டிரைவர்-கண்டக்டர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிகிறார்களா என்பதை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
    • தலையாமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் உள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியுள்ளது. தர்ஷன் தனது காதலி பவித்ரா கௌடாவுடன் மேலும் 11 பேரை இணைத்துக்கொண்டு இந்த கொலையை அரேங்கேற்றியுள்ளதாக கூறபடுகிறது. கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமியின் உடல் பெங்களூரு காமாட்சிபாளையா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

     

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது முந்தைய நாள் இரவில் இரண்டு கார்கள் அங்கிருந்து சென்றது பதிவாகியிருந்தது. பின்னர் அதில் இரண்டாவது கார் நடிகர் தர்ஷனுடையது என்று கண்டறியற்பட்டது. முதலாவதாக சென்றது ஒரு டாக்ஸி ஆகும். அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் அந்த டாக்ஸியை ஓட்டி வந்த டிரைவர் ரவி தற்போது போலீசில் சரணடைந்துள்ளார். தர்சன் கைது செய்யப்படும் தலைமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.

    டாக்ஸி டிரைவர் ரவியின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகர் தர்ஷன் கொலைப் பழியை ஏற்கும் படி வேறு ஒருவருக்கு அதிக பணம் அளிக்க முயன்றுள்ளார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

    • ஜெய்ப்பூர் அருகே டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே விரைவு சாலையில் 10 அடி உயரத்தில் இருந்து ஸ்லீப்பர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    • ஓட்டுநர் கவனக்குறைவாக தூங்கியதால் டிவைடரில் மோதி 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே விரைவு சாலையில் 10 அடி உயரத்தில் இருந்து ஸ்லீப்பர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரில் இருந்து ஹரித்வார் செல்லும் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்து, ஓட்டுநர் கவனக்குறைவாக தூங்கியதால் டிவைடரில் மோதி 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விபத்து ஏற்பட்டதை அறிந்து அப்பகுதியில் வசித்து வருபவர்கள்பேருந்தின் உள்ளே சிக்கியவகர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இந்த விபத்தில் அங்கிதா என்ற 19 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பேருந்துக்குள் சிக்கியிருந்த 22 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது.
    • விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது. ஓஹியோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கிளார்க் பாலத்தை செகென்ட் ஸ்ட்ரீட் பாலம் என்றும் அழைக்கின்றனர்.

    இந்த பாலத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி டிரக் ஒன்று எதிரில் வந்த கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு ஆற்றை நோக்கி பாய்ந்து அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்து சம்பவத்தில் மீட்புக்குழு விரைந்து செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெண் ஓட்டுநர் உயிர்தப்பினார்.

    சினிமாவில் வரும் கட்சிகளுக்கு இணையாக இந்த விபத்து மற்றும் மீட்புப் பணி தொடர்பான காட்சிகள் அந்த சமயத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    விபத்தை மிக அருகில் இருந்து அது எப்படி நடக்கிறது என்பதை விறுவிறுப்பான இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது. இதனால் இந்த வீடியோ X தளத்தில் 13 மில்லியன் பார்வைகளைத் தாண்டி வைரலாகி வருகிறது. டாஸ்காம் என்பது கார், டிரக் உள்ளிட்ட வாகனங்களில் விண்ட் ஸ்க்ரீனில் பொருத்தப்படும் வீடியோ பதிவு செய்யும் கருவி என்பது குறிப்பிடத்தக்கது.

    • விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்ற புகார் எழுந்தது
    • இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம்

    ஏப்ரல் 22 அன்று விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்து, அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் நிறுத்தாமல் சென்றதாக ஊடகங்களில் புகார் எழுந்தது.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து ஓட்டுனர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசுவை பணிநீக்கம் செய்துள்ளனர்.

     

    • மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர அரசு பஸ்(எண்101)சென்றது. பூந்தமல்லி அருகே கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் கடந்து சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக அந்த மாற்றுதிறனாளியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்த மாநகர பஸ்சை விரட்டி வந்தார். சிறிது தூரத்தில் அந்த பஸ்சை மடக்க நிறுத்தி மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்து வந்தது தொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் ஆவேசமாக சமூக ஆர்வலரை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். மேலும் எதுவும் செய்யமுடியாது என்று மிரட்டும் வகையில் கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மாற்றுத்திறனாளி பின்னர் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.

    கண்டக்டரும், டிரைவரும் வாக்குவாதம் செய்யும் காட்சியை சமூகஆர்வலர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மார்ச் 31 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணவகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
    • 36 வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

    டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் அதிவேகமாக வந்த மெர்சிடிஸ் எஸ்யூவி கார் உணவகத்தின் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) பிற்பகல் 3 மணியளவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணவகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து உணவகத்தின் உள்ளே இருந்த மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    36 வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக நொய்டாவில் வசிக்கும் பராக் மைனி என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், மெர்சிடிஸ் எஸ்யூவி காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநர் மது அருந்தி வாகனம் ஒட்டினாரா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    சென்னை:

    மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினரும் ஒன்று சேர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

    சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.

    இதையொட்டி சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

    எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    • பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள செம்பரக்கல் பகுதியை சேர்ந்தவர் பரீத் (வயது49). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக தம்பனூர் சென்ட்ரல் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

    கருநாகப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்பு நெஞ்சுவலி தாங்க முடியாமல் பஸ்சுக்குள்ளேயே சுருண்டு படுத்தார். இதையடுத்து அவர் கருநாகப்பள்ளி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக வந்தனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும், பரீத் தான் ஓட்டிவந்த பஸ்சை கவனமாக மெதுவாக ஓட்டிச்சென்று ரோட்டோரமாக நிறுத்தி விட்டார். இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த 30 பயணிகள் தப்பினர்.

    பயணிகளை காப்பாற்றி விட்டு, தனது உயிரை விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் சத்யா நகரில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மாநகரப் பேருந்து பஸ் கண்டக்டராக கே.கே. நகர் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 24- ந் தேதி அசோக் நகர் பகுதியில் இருந்து கே.கே. நகர் பணிமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக அதே பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வரும் அலெக்சாண்டர் ராஜா என்பவர் ஏழுமலையின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார். அப்போது கே.கே. நகர் பணிமனையின் அருகில் ஏழுமலையின் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானது.

    ஏழுமலைக்கு அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 13-ந் தேதி வங்கி கணக்கில் இருந்து 800 ரூபாய் எடுக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி தனது செல்போனுக்கு வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் விசாரித்தார்.

    அப்போது வேறு ஒரு நபர் ஆதார் எண் மற்றும் ஏ.டி.எம். கார்டை காண்பித்து தனது பாஸ்புக் காணவில்லை என்றும் இதனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து 800 ரூபாயை எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. ஏழுமலையின் கை யெழுத்தை அலெக்சாண்டர் ராஜாவே போலியாக போட்டு பணம் கேட்டு உள்ளார். கையெழுத்தில் சந்தேகம் ஏற்படவே வங்கி அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். நீண்ட காலமாக தனது கையெழுத்து மாறி உள்ளதாகவும் தற்போது தான் நேரடியாக வங்கிக்கு வந்து பணம் எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஏழுமலை சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டார். அப்போதுதான் டிரைவர் அலெக்சாண்டர் ராஜா தனது பெயரில் போலியாக ஆதார் அட்டையில் புகைப் படத்தை மார்பிங் செய்து வங்கியில் கொடுத்ததும் அதேபோல் தனக்கு பாஸ்புக் இல்லை என்றும் புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி ஏழுமலையின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் தனக்கு கடன் வேண்டுமென இந்தியன் வங்கிக் கிளையில் கேட்டு அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து உள்ளார்.

    நேற்று மீண்டும் ஏழுமலைக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியன் வங்கி மூலம் பத்து லட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம் என வந்து உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    அதன் பிறகு ஏழுமலை நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக வங்கிக்கு வந்த அலெக்சாண்டர் ராஜாவை பிடித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லிப்ட் கேட்டபோது கீழே விழுந்த ஏழுமலையின் மணிபர்சில் இருந்து ஆவணங்களை எடுத்து அலெக்சாண்டர் ராஜா கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    • மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணி அளவில் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்தநிலையில் அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வரும் தாராபுரம் தெற்கு தெருவை சேர்ந்த தாஸ் (வயது 35) என்பவர் கடைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சின் டிரைவர் பாபு சாப்பிட்டு விட்டு பஸ்சின் ஜன்னல் வழியாக கை கழுவிய தண்ணீரை ஊற்றியுள்ளார். அந்த தண்ணீர் தாஸ் மீது பட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தாஸ், தண்ணீரை பார்த்து ஊற்ற முடியாதா? என்று டிரைவர் பாபுவிடம் கேட்டுள்ளார். மேலும் டீ கடையில் உள்ள ஜக்கில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பாபு மீது ஊற்றியுள்ளார். இதனால் 2 பேருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி அடிக்க தொடங்கினர்.

    இதையறிந்து அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஸ்சை எடுக்காமல் அப்படியே நிறுத்தினர். சுமார் அரை மணி நேரம் பஸ்சை எடுக்காமல் போராட்டம் நடத்தியதால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர். வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு டிரைவர்கள் பஸ்சை இயக்கினர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    ×