search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "information"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
    • எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம்.

    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

    இதனால் அவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியானது. அதன்பின் கேத் மிடில்டன், தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில் கேத் மிடில்டன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் கேத் மிடில்டன் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

    லண்டனில் ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் வயிற்று அறுவை சிகிச்சைக்கு நான் உட்படுத்தப்பட்டேன். அறுவை சிகிச்சை வெற்றி கரமாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்சுக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது. எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

    ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன். இதைதான் பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.

    இங்கிலாந்து மன்னரும், மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் தேதி அறிவிப்பு வராவிட்டாலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் விவரங்களை விரைவிலேயே முழுமையாக அறிவிக்க உள்ளன.

    திருவனந்தபுரம்:

    மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சில நாட்க ளுக்கும் வெளியிடும் என்று கருதப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வராவிட்டாலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கிவிட்டன. அந்த கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் விவரங்களை விரைவிலேயே முழுமையாக அறிவிக்க உள்ளன.

    இந்நிலையில் கேரள மாநில மக்களவை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுமா? என்பது சந்தேகமாக உள்ளது. தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் அந்த கட்சி மத்தியில் குழப்பம் நிலவுவதால் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் கட்சியின் புதிய தலைமை பொறுப்பேற்று சில மாதங்களே ஆகிறது. கேரளாவில் போட்டியிடுவது குறித்தும், தனது நிலைப்பாடு குறித்தும் இதுவரை எந்தமுவும் எடுக்கவில்லை என்று ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அப்படி தேர்தலில் போட்டியிடாவிட்டால் யாருக்கு ஆதரவளிக்கும் என்பதும் தெரியவில்லை. கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை ஆம்ஆத்மி கடைபிடிக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கேரளாவில் ஆம்ஆத்மி கட்சி கடந்த 2014-ம் ஆண்டு 11 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுவாக ஆண்டு தோறும் தைப்பொங்கலுக்கு பிந்தைய நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். இதையடுத்து, வருகிற 31-ந் தேதி வரை பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்கும்படி சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில், போதிய அளவில் தினசரி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 22-ந் தேதி, ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 21,004 பத்திரப் பதிவுகள் நடைபெற்று ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் (24-ந்தேதி) பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடைபெற்றதுடன், அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.

    தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள்
    • டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது.

    சென்னை:

    உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழர்கள் தங்களின் தோழமை மற்றும் ஒற்றுமை உணர்வை உணரக்கூடிய ஒரே தளமாக, 'மின்மினி' என்ற செயலி உருவாக்கப்பட்டு இன்று (ஜனவரி 22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் ஒருவருக்கொருவர் அரட்டையடிக்கலாம் (சாட் செய்யலாம்), தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம். மேலும் மற்ற செயலி பயனர்களுடனும் தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

    மின்மினி குழுவால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மல்டி-சேனல் நெட்வொர்க்குகளை கொண்ட மின்மினி செயலியானது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், சிட்டிசன் ஜர்னலிஸ்ட்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும்.

    சமூக ஊடகங்களை இதுவரை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த மின்மினி செயலியை மிகவும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய எளிய அம்சங்களுடன், டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை

    மின்மினியில், "அங்கீகாரம்" (Verified) என்ற நிலை பணம் கொடுத்து பெறப்படுவதில்லை. மாறாக கன்டென்ட்டின் தரம் மற்றும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அங்கீகாரமானது நிறுவனத்தால் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள், எனவே பயனர்கள் நம்பகமான கன்டென்ட்டுகளை படிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதை உணரலாம்.

    காலப்போக்கில், இந்த தளத்தில் மற்ற பயனர்களுடன் தகுதியான உள்ளடக்கத்தை (கன்டென்ட்டுகளை) பகிர்ந்து, அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் தனிப்பட்ட பயனர்கள் "அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்கள்" என மேம்படுத்தப்படுவார்கள்".

    இன்று நடைபெற்ற மின்மினியின் அறிமுக விழாவில் அதன் நிர்வாக துணைத்தலைவர் எஸ்.ஸ்ரீராம், தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "உலகளாவிய தமிழ்ச் சகோதரத்துவத்தை மட்டுமே மையமாக வைத்து மின்மினியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் பயனர்கள் செயலியின் தனித்துவமான பயன்பாட்டு அனுபவம் மற்றும் படைப்பாளர்களுக்கான பிற வருவாய் வாய்ப்புகளின் மூலம் நாங்கள் வழங்கும் பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை பயனர்கள் பெறுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்".

    "ஹைப்பர்லோக்கல் கன்டென்ட் மற்றும் எங்கள் செயலியின் மூலம் நாங்கள் உருவாக்கும் இணைப்பைக் கருத்தில் கொண்டு மின்மினி மூலம் விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று அவர் மேலும் கூறினார்..

    தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய கடைகள், எங்கள் ஏஜெண்டுகள் மற்றும் ஊழியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு, 'மின்மினி கடைகள்', என்ற அங்கீகாரம் அக்கடைகளுக்கு வழங்கப்படும். அக்கடைகள், டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது. அந்த கடைக்கு வழங்கப்பட்ட பிரத்யேக கியூ ஆர் கோடுகள் (QR Code) மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களை மின்மினி பயனர்களாக மாற்றும் பொழுது கடை உரிமையாளர்கள் வருமானம் பெறுவர். மின்மினி கடைகள் மூலம் பயனர்களும் எளிதாக விளம்பரங்களை புக் செய்யலாம் (தாங்கள் செய்யும் தொழில் வாடிக்கையாளர்களை சென்றடைய, விளம்பரம் பெற விரும்பும் சேவை, பிறந்தநாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி என பல்வேறு விளம்பரங்களை புக் செய்யலாம்) ஹைப்பர் லோக்கல் விளம்பரங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கே எளிதாக சென்றடையலாம்.

    இந்த செயலியானது தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கார்பெண்டர்கள் போன்ற ஆயிரக்கணக்கான சேவை வழங்குபவர்களைக் காலப்போக்கில் கொண்டிருக்கும். எனவே பயனர்கள் அத்தகைய பணியாளர்களை உடனடியாக தேடலாம். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான அதன் தனித்துவமான விளம்பரத் தொகுப்புகளுடன், மின்மினி பயனர்களை சென்றடையும் வழியையும் வழங்கும்.

    "தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான கடைக்காரர்கள், சேவை வழங்குபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அவர்களில் பலரை, மின்மினி செயலி மூலம் லிஸ்ட் செய்து அவர்களையும் டிஜிட்டல் பிசினஸிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்", என்றார்.

    "விளம்பரதாரர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு, எங்களின் தனித்துவமான பின்-கோடு மூலம், தமிழ்நாட்டின் கடைசி தாலுகா வரை கடைசி மைல் தூரத்தை சென்றடையும் வழியை மின்மினி வழங்கும்", என்று ஸ்ரீராம் கூறினார்.

    மின்மினி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும்.
    • தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிக்காக 93 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தேர்தலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இதில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்டு, எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அரசின் வழக்கமான ஊதியத்தை வழங்கலாம் என்று தேர்தல் துறை அனுமதித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் தேர்தல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தலின்போது பல் வேறு வகையான பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும். அதிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை வேலைகள் மிக அதிகமாகிவிடும்.

    இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக 93 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில பணியிடங்களுக்கு அரசின் ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன.

    செங்குன்றம்:

    சென்னைக்கு குடிநீர்வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வைத்து சென்னையில் சுமார் 3 1/2 மாதங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்கமுடியும்.

    புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், நீர்பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு சி.எம்.டி.ஏ.விடம் ஐ.ஐ.டி.,யின் நகர்ப்புற வளர்ச்சி, கட்டடங்கள், சுற்றுச்சூழல் மையமான 'கியூப்'அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

    இதில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் 3 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த கட்டுமான பணி தற்போது 24 சதவிதமாக உயர்ந்து இருக்கிறது.

    புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன. இதில் கட்டுமான நடவடி க்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும் நகரம் விரிவாக்கத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்து இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் 1991-ம் ஆண்டு மொத்த நில பரப்பில் 55 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள், 2023-ல் 33 சதவீதமாக குறைந்துள்ளன.

    இதேபோல் புழல் ஏரியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மண்ணில் பேரியம், கோபால்ட், குரோமியம், தாமிரம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாகவும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்பரப்பு மண் மாதிரிகளில் ஈயம் மற்றும் ப்ளூரைடு சற்று அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும் ஏரியில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வின் முடிவை வைத்து புழல் ஏரியில் நீர்பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன.
    • மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும்.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது எண்ணூரில் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வெளியேறி எண்ணெய் கழிவு கடல் மற்றும் முகத்துவார பகுதியில் கலந்தது. இதனால் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதம் அடைந்தன. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத அளவுக்கு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதை த்தெடர்ந்து எண்ணூரை சுற்றி உள்ள மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கிடையே கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் ஜனவரிமாதத்தில் கரைக்கு கூடுகட்ட வரும் ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? ஆமைகள் கூடுகட்ட வரும் கரையில் பாதிப்பு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வனத்துறையினர் கடந்த 12-ந்தேதி சிறப்பு குழுவை நியமித்தது.

    இந்த குழுவினர் எண்ணெய் கழிவு படர்ந்த எண்ணூர் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தது. இதில் எண்ணெய் கழிவுகளால் ஆமைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,

    எண்ணூர் கடல்பகுதியில் பரவிய எண்ணெய் கழிவால் ஆமைகளுக்கு பாதிப்பு இல்லை. அவை ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கூடு கட்டி முட்டையிட கடற்கரைக்கு வரும். எண்ணூர் முகத்துவாரத்தில் கசிவு ஏற்பட்டதாலும், எண்ணெய் கழிவு கடலில் அதிகம் பரவாததாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேலும், எண்ணூர் அருகே உள்ள கடற்கரையில் கற்கள்தான் அதிகஅளவில் உள்ளன. மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும். இதனால் ஆமைகள் முட்டையிட கடற்கரைக்கு வருதில் எந்த பாதிப்பும் இருக்காது. எண்ணெய் கழிவால் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் மற்றும் சதுப்புநிலங்களுக்கு மட்டும் பாதிப்பு உள்ளது என்றார்.

    • தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும்.
    • கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை நம்பி சுற்றி உள்ள ஏராளமான மீனவ கிராமமக்கள் மீன்பிடித்து வருகிறார்கள். பழவேற்காட்டில் கடலும் ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள், இறால், நண்டுகள் கிடைத்து வருகின்றன.

    தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். அப்போது கடல் வாழ் உயிரினங்கள் நீர் ஏற்றத்தின் போது ஏரிக்குள் நுழைவதும் இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வு ஆகும். இந்நிலையில் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது .இதனால் கடல் நீர் ஏரிக்கும் ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைபட்டதோடு ஏரியின் ஆழம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் மத்திய வனவிலங்கு துறை அனுமதி கொடுக்காததால் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் தற்போது முகத்துவார பகுதி முழுவதும் மணலால் அடைபட்டு மீனவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு முகத்துவார பகுதியில் கற்கள் கொட்டி முகத்துவார சுவர் கட்ட மத்திய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முகத்துவாரத்தின் இருபுறமும் தலா 160 மீட்டர் மற்றும் 150 மீட்டர் என 2 சுவர்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    எனவே விரைவில் பழவேற்காடு முகத்துவார பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, முகத்துவாரத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. நீர் பரிமாற்றம் இல்லாததால், கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது. முகத்து வார பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்றார்.

    • அண்ணா பஸ் நிலைய பகுதியில் 25-ந் தேதி மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை வடக்கு செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 25-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்து வக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி அரசு ராசாசி மருத்துவ மனை, வைகை வடகரை, கோரிப்பளையம், ஐம்பு ரோபுரம், மாரியம்மன் கோவில்தேரு, சின்னக் கண்மாய் தெரு, ஓ.சி.பி.எம். பள்ளி, கான்சாபுரம், தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, இஸ்மாயிஸ்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50அடி ரோடு, குலமங்கலம் ரோடு, மீனாட்சிபுரம், சத்திய மூர்த்தி 1,2,3,4,5,6,7-வது தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், நரிமேடு மெயின்ரோடு. சாலை முதலியார் ரோடு, நேரு பள்ளி பகுதிகள்.

    அன்னைநகர், எல்ஐஜி காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தேரு கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா அண்ணாநகர், 80அடி ரோடு, அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள், சுந்தரம் தியேட்டர் ரோடு, மானகிரி, சதா சிவநகர், அழகர் கோவில் மெயின்ரோடு, கற்பகநகர், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யா நகர், மின்நகர், கொடிக்குளம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், அன்பு நகர், தாசில்தார் நகர், மருது பாண்டியர் தெரு, எல்.கே.டி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை வடக்கு செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

    போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 2222 காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு 7.1.2024 நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும். மேலும், டெட் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 17.11.2023 அன்று முதல் நடைபெற்று வருகிறது.இப்பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனுபவமிக்க சிறந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பு எடுக்கும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 ஆகும். இப்பயிற்சி வகுப்பிற்கு மாதிரி வினாத்தாட்கள் தயார் செய்து தர வேண்டும்.

    போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும். பயிற்றுநர்கள் நேர்காணலுக்கு அழைக்கும் போது தயார் செய்த பாடக்குறிப்பு, மாதிரி வினா மற்றும் தொடர்புடைய பாடத்தின் உடன் எடுத்து வர வேண்டும். மேலும், 10-15 நிமிடங்கள் வரை தொடர்புடைய பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் மாதிரி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.மேற்கண்ட நிபந்தனை களுக்குட்பட்டு, விருப்பமும் தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிவரகுறிப்பு மற்றும் கல்விசான்று நகல்களுடன் 22.11.2023 மற்றும் 23.11.2023 ஆகிய 2 நாட்களில் அலுவலக நேரத்தில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவனத்தில் நேரடி ஆய்வு
    • கோவை பிரஸ் காலனி பகுதியில் மேலும் ஒரு ஆய்வகம் அமைக்க 30 ஏக்கர் நிலம் வாங்க திட்டம்

     அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் ஆரம்பத்தில் ரேபிஸ் எனும் வெறிநாய்கடிக்கான தடுப்பூசி மற்றும் கக்குவான், ரண ஜன்னி உள்ளிட்ட முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் இடமாக இருந்தது.

    இந்நிலையில் இங்கு மத்திய அரசின் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்க 137 கோடி ரூபாயில் உலக தர கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பர்வீன் பவார் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அங்கு மருந்துகள் தயாரிக்கப்படும், இடங்களை பார்வையிட்டு ஆய்வக விவரங்களை கேட்டறிந்தார். பின்பு அவர் கூறியதாவது:-

    குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் 137 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட் 19 தடுப்பூசி ஆய்வகமாக செயல்பட்டது. இந்த ஆய்வகம் பல உயிர்காக்கும் மருந்துகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வகத்தை பலப்படுத்தும் வகையில் மற்றுமொரு ஆய்வகம் கோவையில் பிரஸ் காலனி பகுதியில் அமைக்க 30 ஏக்கர் நிலத்தை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதனால் மேலும் பல அரியவகை உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும்.

    இப்பணிகளுக்காக பல ஆண்டுகளாக பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது. அவர்களை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து குன்னூர் உப்பாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி பாரதி பர்வீன் பவார், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 27 கோடி பேருக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 27 ஆயிரம் மருத்துவமனைகளிலும் இதனை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 53 லட்சம் பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். 

    ×