என் மலர்
நீங்கள் தேடியது "Child abuse"
- குழந்தைகளிடம் இதமாகப் பேசி பிரச்சனையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
- தங்கள் பிரச்சனையைச் சூசகமாக வெளிப்படுத்துவார்கள்.
இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே ஒழியக் குறைந்தபாடில்லை. பச்சிளம் குழந்தை முதல் வளர்ந்த குழந்தைகள் வரை பலர் இந்த அத்துமீறல்களால் பெரிதும் பாதிப்படைகின்றனர். இனி பெற்றோர்கள் விழித்து உஷாராகிவிட வேண்டும். அந்த வகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று கீழே பார்க்கலாம்.
வீடு சார்ந்த இடத்தில் குழந்தைக்கு எந்த அநீதியும் நிகழாமல் பாதுகாப்பது பெற்றோர்களாகிய உங்கள் பொறுப்பு. அதே சமயத்தில் குழந்தைகள் எந்தெந்த இடத்திற்குத் தனியாகச் செல்கின்றார்களோ அங்கு எல்லாம் நம்பகத்துக்குரிய குறிப்பிட்ட நபரின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரியும்.
உற்சாகம் குறைந்து சோர்வாகக் காணப்படுவார்கள்.
யாருடனும் பேசிப் பழகி, சிரிக்க மாட்டார்கள்.
யாராவது குறிப்பிட்ட நபரைக் கண்டால் பயப்படுவார்கள்.
எப்போதும் தனிமையில் அமர்ந்து ஏதாவது யோசனையில் ஆழ்ந்து இருப்பார்கள்.
படிப்பில் முன்பு இருந்த கவனம் குறைந்து இருக்கும்.
விளையாட்டு,இசை ,நடனம் போன்ற எதிலுமே ஆர்வம் இருக்காது.
சில சமயம் பள்ளிக்குச் செல்ல மறுப்பார்கள்.
சரியாகத் தூங்க மாட்டார்கள். தேவையில்லாத கனவுகள் தோன்றும்.
அவர்கள் தங்கள் பிரச்சனையைச் சூசகமாக வெளிப்படுத்துவார்கள். நேரடியாகச் சொல்லத் தயங்குவார்கள்.உதாரணமாகப் படம் வரைந்து வெளிப்படுத்துவார்கள். இல்லை வேறு ஏதாவது குறிப்புத் தெரியும்.
இப்போது இந்த சூழலில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளிடம் இதமாகப் பேசி பிரச்சனையைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த நபர் இந்த தொல்லைக்கு காரணம் என்பதை அறிந்து, அந்த நபரைக் கண்டித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த நபரின் தொடர்பை முற்றிலுமாக துண்டிக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான கவுன்சிலிங் வழங்க வேண்டும். குழந்தையை மன பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீட்டெடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றைத் தேர்வு செய்து அந்த விசயத்தில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும் இது மாதிரியான சூழல் எந்த வகையிலும் இனிமேல் ஏற்படாதபடி எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நம் கண்மணிகளை நாம்தான் கண் போலப் பார்த்துக் கொள்ள வேண்டும். உயிருக்கு மேலான நம் குழந்தைகளின் வாழ்வு வளமாக இருக்க நாம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
- லாரி டிரைவர் மகேஷ் 7 வயது சிறுமி ஒருவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
- சிறுமி கத்தி கூச்சலிடவே மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள சீவலப்பேரி பொட்டல் நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது 31). லாரி டிரைவர். சம்பவத்தன்று மகேஷ் ஒரு 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கதினார் ஓடி வந்தனர்.
இதனைப் பார்த்த மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் சம்பவம் குறித்து சீவலப் பேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
கைது
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மகேசை பிடித்து கைது செய்தனர்.அவர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.
- குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது.
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் காணப்பட்டாலும் பெண்களுக்கான உரிமைகளும், தேவைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்களை கடவுளாக கருதும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான அநீதிகளும் அதிகரித்து வருவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. பெருகி வரும் பாலியல் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் நாட்டின் சமநிலையை சீர்குலைக்கிறது என்றே சொல்லலாம். பெண் குழந்தைகளும் இந்த நிகழ்வுகள் மூலம் பாதிக்கப்பட்டு வருவது வருந்தத்தக்கதே. இவ்வாறு பல சமூக சிக்கல்களுக்கு இடையேயும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நிலை வளர்ச்சி அடைய பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி போன்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். குறிப்பாக குழந்தை திருமணம் போன்ற நிகழ்வுகள் முற்றிலும் இல்லாமல் போக வேண்டும். இதற்காக அரசும் சட்டம் இயற்றி உள்ளது. அறியாத குழந்தை பருவத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு துணை புரியும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சட்டத்தின் பார்வையில் தண்டனைக்கு உரியவர்களே என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்பவர்களை போக்சோ சட்டத்தின் படி சிறையில் அடைக்கவும், 10 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளை கடத்தினால், அவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதபடி கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை பெண் குழந்தைகளுக்காக நிறைவேற்றினாலும், குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.
மாற்றங்கள் குடும்பங்களில் இருந்து வர வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தன் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது. இந்த நிலை மாறி, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, சம உரிமை, கல்வி என அனைத்தும் கிடைக்கப் பெறும் போது சமூகத்தில் பெண்களின் நிலை உயரும்.
இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 2008-ம் ஆண்டு இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜனவரி 24-ந் தேதியை (இன்று) தேசிய பெண் குழந்தைகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- `சைல்டு க்ரூமிங்' (child grooming) என்பது அதிகம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
- இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது.
தங்களது குழந்தைகளுக்கு, நேரடியாக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி எல்லா அம்மாக்களும் ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் இணையதள டிஜிட்டல் பிளாட்பாமில் பாலியல் வன்முறையாளர்கள் சிறுமிகளை எப்படி அணுகி வசீகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது பற்றி இந்தியாவில் பெரிய அளவில் விவாதங்களும் நடத்தப் படுவதில்லை. ஆனால் உலக அளவில் இது மிக முக்கியமான பிரச்சினையாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் `சைல்டு க்ரூமிங்' (child grooming) என்பது அதிகம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது. ஆனால் ஆன்லைனில் பாதுகாப்பாக செயல்படுவதற்கு தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கலாம். குழந்தைகள் எந்த விதமான ஆன்லைன் பிளாட்பாம்களில் இயங்குகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்திருக்கவேண்டும். முதிர்ந்தவர்கள் யாருடனாவது பழகுவதாக அறிந்தால் அதில் கவனம் செலுத்தி கண்காணிக்கவேண்டும். கிரிமினல்கள் `நடப்பது எதையும் பெற்றோரிடம் கூறக்கூடாது' என்று கூறியே க்ரூமிங் செய்வதால், பாதிக்கப்படும் சிறுமிகள் பெரும்பாலும் வாய்திறப்பதில்லை என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் சிறுமிகளை குறைசொல்லி குற்றவாளியாக்காமல், அதில் இருந்து அவர்களை மீட்கவே பெற்றோர் முன்வரவேண்டும்.
க்ரூமிங் செய்யப்பட்டு, மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமிகளிடம் காணப்படும் அறிகுறிகள்:
- பயம், பதற்றம், உறக்கமின்மை, விரக்தி, எரிச்சல் மற்றும் எல்லாவற்றையும் எதிர்த்தல்.
- விளையாட்டு மற்றும் பாடத்தில் திடீர் விருப்பக்குறைவு ஏற்படுதல்.
- இன்டர்நெட் மற்றும் இதர டிஜிட்டல் டிவைஸ்களின் பயன்பாட்டை திடீரென்று குறைத்தல் அல்லது அதிகரித்தல்.
- வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இன்டர்நெட், போன் மற்றும் இதர டிவைஸ்களை பயன்படுத்துதல்.
- தன்னைவிட முதிர்ந்தவரிடம் நட்பு பாராட்டுதல். ரகசிய முறையிலான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளுதல்.
- பொய் சொல்லிவிட்டு வெளியே செல்லுதல், இருக்கும் இடத்தை அறிவிக்காமல் திடீரென்று மறைந்துவிடுவது, சந்தித்தது யாரை? சென்றது எங்கே? என்பதை எல்லாம் மறைப்பது.
- சாக்லெட் முதல் செல்போன் வரை பல்வேறு வகையான பரிசுகள் அவ்வப்போது புழங்குவது.
- வயதுக்கு மீறி பாலியல் ரீதியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது, அதை பற்றி அதிகமாக பேசுவது.
- மதுவோ, போதைப் பொருட்களோ பயன்படுத்துவது.
.. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கவனியுங்கள். அவர்களுக்கு தேவையான நம்பிக்கையை அளித்து, மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
கிரிமினல்கள், யாரை எல்லாம் எளிதாக க்ரூமிங் செய்து தன்வசப்படுத்துவார்கள் என்பது தெரியுமா?
சிறுமிகள் மட்டுமல்ல இளம்பெண்களும் க்ரூமிங் செய்யப்படலாம். புறக்கணிக்கப்படும் சிறுமிகள், சண்டையிடும் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் போன்றோர் எளிதாக இவர்களது வலையில் சிக்கிக்கொள்வார்கள். வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க விரும்பும் பெண்களும், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுக்கு அதிகமாக ஆசைப்படும் சிறுமிகளும் இவர்களது வசீகரிப்பு வலையில் வீழ்ந்துவிடுகிறார்களாம்.
இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது. ஆனால் ஆன்லைனில் பாதுகாப்பாக செயல்படுவதற்கு தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கலாம்.
- ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
- பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரிக்க வேண்டும்.
தாராபுரம் :
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புகார்களின் எண்ணிக்கையும்அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பது தான் போக்சோ சட்டம். குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை என அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்தான்.
குழந்தைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, குழந்தை மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் கடும் குற்றமாக பார்க்கப்படுகிறது. அது பெற்றோர், உறவினர், ஆசிரியர், மருத்துவர், காவலர் என அனைவருக்கும் பொருந்தும்.போக்சோ சட்டம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இரு பாலினருக்கும் பொருந்தும். திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குறித்தான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய நபர்கள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரிக்க வேண்டும். வழக்கு பதிவு செய்ய தாமதம் கூடாது என போலீஸ் உயர் அதிகாரிகள் போலீசாருக்கு தகுந்த அறிவுரை வழங்கி வருகின்றனர். கணவன், மனைவி பிரிந்த நிலையில் கவனிக்க, வளர்க்க ஆளில்லாத சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.பெரும்பாலான வழக்குகளில் இரண்டாவது தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.
குழந்தை வன்முறை குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியுள்ளதாவது :- குழந்தைகளை தவறான வார்த்தைகளால் பேசுதல், குழந்தைகளை பாதிக்கும் கேலி, கிண்டல் செய்தல், ஆபாச படங்கள் காண்பிப்பது, பேசுவது, குழந்தை விரும்பத்தகாதவாறு உடல் பாகங்களை தொடுதல், குழந்தையின் தன்னம்பிக்கையை இழக்க செய்தல், தன் கோபத்தை தணிக்க குழந்தை மீது தீங்கிழைத்தல், குழந்தையை தன் வயப்படுத்தல், வேலையாளாக பயன்படுத்துவது, கருத்துக்கு செவி சாய்க்காமல் இருப்பது, உணர்வுகளை புறக்கணித்தல், பள்ளியில் உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளாக்குவது, மருத்துவ தேவைகளை புறக்கணித்தல், கல்வியின் அவசியத்தை புறக்கணித்தல், கண்காணிப்பு இல்லாமல் விட்டு விடுதல் ஆகியவை குழந்தை வன்முறை என வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீசார் கூறுகையில், ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் படி தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சென்று போக்சோ சட்டம் குறித்தும், அது தொடர்பான விழிப்புணர்வு குறித்தும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் விழிப்புணர்வு ஏற்பட்டு இது தொடர்பான புகார்கள் அதிகம் வருகின்றன. அதை உடனடியாக பதிவு செய்து, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு குழந்தைகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. போக்சோ உதவி பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன என்றனர்.
- 2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 8,501 வழக்குகள் பதிவாகியுள்ளது.
- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6,064 வழக்குகள் பதிவாகிவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிடும். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 8,501 வழக்குகளும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6,064 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1,377 வழக்குகளும், பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 39 வழக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும் 1,788 வழக்குகளில் சிறார்கள் தொடர்பு உள்ளது. 1,076 சைபர்கிரைம் வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இந்தநிலையில் தற்போது, இந்தியாவில் உள்ள மாவட்ட வாரியான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி காவல் சரகம் மற்றும் திருச்சி மாநகரம், திருச்சி ரெயில்வே போலீஸ் ஆகியவற்றில் கடந்த 2021-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் 144 வழக்குகளும், கரூர் மாவட்டத்தில் 96 வழக்குகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 86 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 187 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 258 வழக்குகளும், திருச்சி மாநகரில் 104 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரியலூரில் 67 வழக்குகளும், கரூரில் 85 வழக்குகளும், பெரம்பலூரில் 60 வழக்குகளும், புதுக்கோட்டையில் 212 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 214 வழக்குகளும், திருச்சி மாநகரில் 87 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது புதுக்கோட்டை மாவட்டம் தவிர மற்ற 4 மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.
இதேபோல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு அரியலூரில் 121 வழக்குகளும், கரூரில் 149 வழக்குகளும், பெரம்பலூரில் 81 வழக்குகளும், புதுக்கோட்டையில் 74 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 126 வழக்குகளும், திருச்சி மாநகரில் 78 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரியலூரில் 49 வழக்குகளும், கரூரில் 33 வழக்குகளும், பெரம்பலூரில் 69 வழக்குகளும், புதுக்கோட்டையில் 56 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 158 வழக்குகளும், திருச்சி மாநகரில் 46 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
- குழந்தைகள் மத்தியில் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
- இந்த சட்டத்தில் உள்ள தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.
நமது நாட்டில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் மீது யாரும் புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க கொண்டு வந்த சட்டம்தான் போக்சோ. இதன் முழு விரிவாக்கம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் என்பது ஆகும். இந்த சட்டம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளி படித்து வரும் குழந்தைகள் மத்தியில் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தாலே இந்த சட்டத்தின் கீழ் வருவதால், பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
விழிப்புணர்வு
குறிப்பாக கோவை மாவட்டத்தில் போக்சோ சட்டம் தொடர்பாக மாணவிகள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, சைல்டு லைன் ஆகியோருடன் போலீசார் இணைந்து பள்ளி குழந்தைகள், கிராமப்புறங்களில் போக்சோ சட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதனால் பாலியல் சீண்டல்கள் செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு மாணவிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்படும் மாணவிகள் தங்களின் பெற்றோரிடமோ, அல்லது ஆசிரியரிடமோ தெரிவிப்பதால், அவர்கள் போலீசில் புகார் செய்து குற்றங்கள் செய்யும் நபர்களை கைது செய்து வருகிறார்கள். மேலும் போக்சோ தொடர்பாக விழிப்புணர்வை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தி, இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
பயம் இல்லை
சசிகலா (ஆசிரியை, அன்னூர்):- போக்சோ சட்டம் தொடர்பாக 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனவே மாணவிகள் தைரியமாக இருக்கிறார்கள். இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தது. அத்துடன் வெளியே சொன்னால் தங்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவார்களோ என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மாணவிகளிடம் அந்த பயம் இல்லை.
கந்தசாமி (பொள்ளாச்சி):- கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில்தான் போக்சோ சட்டம் அதிகளவில் பதிவாகி வருகிறது. அதுபோன்று அங்குதான் குழந்தை திருமணமும் அதிகமாக நடந்து வருகிறது. போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதுதான் இதன் வெளிப்பாடு. எனவே இந்த பகுதிகளில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி அனைத்து குக்கிராமங்களுக்கும் அதிகாரிகள் நேரடியாக சென்று, பள்ளி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெற்றோர் ஒத்துழைப்பு
முத்துகிருஷ்ணன் (தொண்டாமுத்தூர்):- தற்போது அனைத்து பள்ளிகளிலும் நல்ல தொடுதல், (குட் டச்) தீய தொடுதல் (பேட் டச்) என்று குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்து வருகிறார்கள். இதனால் மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால் குக்கிராமங்கள், மலைவாழ் பகுதியில் உள்ள மாணவிகளுக்கு சரியாக விழிப்புணர்வு சென்று சேரவில்லை. எனவே இந்த விஷயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து மாணவிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தாரணி (பள்ளி மேலாண்மை குழு தலைவர்) :- சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துகளை சொல்ல நாங்கள் முயற்சி செய்து, அதில் பெற்றோரும் பங்கேற்க கூறினால், பெற்றோர் யாரும் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. அத்துடன் இதுபோன்ற நிகழ்ச்சிக்கும் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுக்கிறார்கள். இதனால் போக்சோ தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை மாணவிகளிடம் எடுத்துச்சொல்ல முடியாமல் போய்விடுகிறது. என்னதான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அதற்கு மாணவிகளின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக மாணவிகள் மத்தியில் சென்றடையும்.
தைரியம் கிடைத்து உள்ளது
கல்லூரி மாணவி:- நான் பள்ளியில் படிக்கும்போது போக்சோ சட்டம் குறித்து எங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனால் என்னைப்போன்ற மாணவிகளுக்கு தைரியம் ஏற்பட்டது. அத்துடன் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொட்டாலே இந்த சட்டம் பாய்வதால், பலர் பயந்து வருகிறார்கள். எனவே குழந்தைகளின் நலன் கருதி, குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், இந்த சட்டத்தில் உள்ள தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.
பள்ளி மாணவிகள்:- பள்ளிகளில் எங்களுக்கு போக்சோ தொடர்பாக ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது பெற்றோரிடம் சொல்ல பயமாக இருக்கும். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், யாராவது தவறான எண்ணத்தில் எங்களிடம் பேசினாலோ, அல்லது தொட்டாலோ நாங்கள் உடனே எவ்வித பயமும் இல்லாமல் ஆசிரியைகளிடம் சொல்லலாம் என்ற தைரியம் எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு
சந்தோஷ்குமார்:- போக்சோ என்றால் சிறுமிகளிடம் தவறாக நடந்தால் மட்டும்தான் நடவடிக்கை என்று இல்லை. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் போக்சோ சட்டம் பாயும். எனவே மாணவர்களிடமும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தவறாக தொட்டால் நமது வாழ்க்கையே வீணாக போய்விடும் என்று இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ராஜேஸ்வரி (காரமடை):- காலையில் இருந்து மாலை வரை குழந்தைகள் பள்ளிகளில்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோரிடம் மனம்விட்டு பேசுவதை விட ஆசிரியைகளிடம்தான் நன்றாக பேசுவார்கள். பெற்றோர் சொன்னால் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர்கள் கூறினால் அதை கேட்பார்கள். எனவே பள்ளி குழந்தைகளிடம் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்று தெளிவாக சொல்லிக்கொடுக்க வேண்டும். முக்கியமாக போக்சோ தொடர்பாக முழு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி காரணமாகஒரே பள்ளியில் 12 மாணவிகள் புகார்
போக்சோ சட்டம் தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக ஒரு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோதே 12 மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இதுதான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பயன் ஆகும். ஆனால் சில பகுதிகளில் மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்தாலும், அவர்களின் பெற்றோர் ஒத்துழைப்பு
தண்டனையை கடுமையாக்க வேண்டும்
போக்சோ தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சராசரியாக கோவை மாவட்டத்தில் மாதத்துக்கு 13 முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளில் 5 பேர் கர்ப்பம் அடைந்துதான் வருகிறார்கள். இதில் உறவினர்களால் பாதிக்கப்படும் சிறுமிகள்தான் அதிகம். சிலர் இந்த குற்ற வழக்கில் கைதாகி இருந்தாலும் போதிய ஆதாரம் இல்லாமல் எளிதாக வெளியே வந்து விடுகிறார்கள். எனவே சிறுமிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சட்டம் சொல்வது என்ன?
போக்சோ சட்டத்தில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? அதில் கிடைக்கும் தண்டனை விவரங்கள் எவை என்பது குறித்து வக்கீல் ஒருவர் கூறும்போது, போக்சோ சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். அபராதமும் உண்டு. குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, கட்டாயப்படுத்தி தொட வைப்பது பாலியல் சீண்டல் ஆகும். இதில் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, ஆபாசமாக பேசுவதும் போக்சோ சட்டத்தில்தான் வருகிறது. இதற்கு 5 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும் என்றார்.
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக் குழுமம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்தும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் www.ncpcr.gov.in என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் மின்னணு புகார் பெட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான சம்பவம் நடைபெற்ற இடம், குற்றம் செய்த நபர், தொடர்பு எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் அல்லது பொதுமக்கள் இந்த இணையதளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றால் அது குறித்த புகார் போலீசாரிடம் அளிக்கப்பட வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக தகவல் தெரிந்து அது குறித்த புகார்களை அளிக்க தவறும் பொதுமக்கள் மற்றும் புகாரினை பதிவு செய்ய மறுக்கும் அல்லது தவறும் அலுவலர்கள், அரசு பணியாளர்கள், தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோர் மீது 2012 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 பிரிவு 21-ன் கீழ் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாய்ப்புகள்-வசதிகள் பெருகி சமுதாயத்தில் வாழ்க்கை தரம் முன்னேற முன்னேற குற்றங்களும் அதிகரிக்கின்றன.
எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் கட்டுப்பாடுடன் இருந்த மனிதன், நாகரிக வாழ்க்கையின் சுவையை அறிந்த பின்னர் தான் குற்றங்களை செய்ய ஆரம்பித்தான்.
நம் வீட்டில் இருக்கும் தாத்தா-பாட்டிகளிடம் கேட்டால் தெரியும்.. “நாடே ரொம்ப கெட்டுப்போய்விட்டது” என்று அங்கலாய்ப்பார்கள். “எங்கள் காலத்தில் எல்லாம் இப்படி வெட்டு, குத்து, கொலைகள், பாலியல் வன்முறைகள் நடந்தது கிடையாது. ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும். இப்போது யாருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது” என்று ஆதங்கப்படுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் இந்த வருத்தம் நாட்டு நடப்பை படம்பிடித்து காட்டுவதாக அமைந்து இருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கவலை அளிக்கக்கூடிய வகையில் உயர்ந்து இருக்கிறது.
நம் நாட்டில் 15 நிமிடத்துக்கு ஒரு சிறுமி கற்பழிக்கப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டு 18 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவாயின. 2016-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 ஆக அதிகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை மட்டும் இந்த குற்றங்கள் 14 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
பாலியல் வன்முறை குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் என்ற அதிர்ச்சி தகவலை அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் நடக்கும் பாலியல் பலாத்கார குற்றங்களில் 50 சதவீத குற்றங்கள் தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், மராட்டியம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 38 ஆயிரத்து 947 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 4,882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 4,816 வழக்குகளும், மராட்டியத்தில் 4,189 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பொறுத்தமட்டில் உத்தரபிரதேசம் (14 சதவீதம்), மராட்டியம் மற்றும் மத்திபிரதேசம் (13 சதவீதம்), மேற்கு வங்காளம் (6 சதவீதம்), ஒடிசா (5 சதவீதம்) ஆகிய 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
2016-ம் ஆண்டில் நாடு முழுவதும் 2,167 கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 682 சம்பவங்கள் நடந்துள்ளன. ராஜஸ்தான் 365 சம்பவங்களுடன் 2-வது இடத்திலும், மத்தியபிரதேசம் 226 சம்பவங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
பாலியல் பலாத்கார குற்றங்கள் பெருகியதற்கு மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுவும் ஒரு காரணம்தான் என்ற போதிலும், மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் குற்றங்களை கல்வி அறிவை மேம்படுத்துவதன் மூலமும், கடுமையான சட்டங்கள்-தண்டனைகள் மூலமும் குறைக்க முடியும்.
ஏனெனில், நம் நாட்டை விட பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு சீனா. இந்தியாவுடன் ஒப்பிடும் போது அங்கு குற்றங்கள், வன்முறைகள், ஊழல்கள் எல்லாமே குறைவாகவே உள்ளன.
அதற்கு காரணம் கடுமையான சட்டங்கள். அங்கெல்லாம் குற்றம் செய்து விட்டு பணத்தாலோ, அதிகார பலத்தாலோ அல்லது சட்டங்களில் உள்ள ஓட்டைகளின் வழியாக புகுந்தோ யாரும் தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தண்டனை நிச்சயம். அப்படி இருப்பதால் அங்கு சாமானிய மக்களில் இருந்து அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரை தவறு செய்ய அஞ்சுகிறார்கள்.
ஆனால் இதற்கு நேர் மாறாக நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இங்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பல சட்டங்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவும், ஓட்டைகள் நிறைந்தாகவும் உள்ளன.
அதனால் தவறுகள் செய்ய பலர் அஞ்சுவதில்லை. பணபலம், அதிகார பலம் இருந்தால் எந்த குற்றங்களை செய்தாலும் சமுதாயத்தில் பயமின்றி சுதந்திரமாக நடமாடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.
எந்த நாட்டில் தண்டனைகள் கடுமையாக இருக்கிறதோ, அங்குதான் குற்றங்கள் குறைவாக இருக்கும் என்பதற்கு சீனா மற்றும் அரபு நாடுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
குறிப்பாக அரபு நாடுகளில் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருப்பதால்தான் அங்கு குற்றங்கள் மிகவும் குறைவு. அங்கு குற்றவாளிகள் பொது இடங்களில் தண்டிக்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். கொலை செய்தாலோ, பாலியல் பலாத்காரம் செய்தாலோ நமக்கும் அதே கதிதான் ஏற்படும் என்ற பயமே பலரை குற்றம் செய்யவிடாமல் தடுக்கிறது. பொது இடத்தில் குற்றவாளி ஒருவனின் தலை துண்டிக்கப்படுவதை பார்க்கும் ஒருவனுக்கு குற்றம் செய்யக்கூடிய துணிச்சல் எங்கிருந்து வரும்? ஆக கடுமையான தண்டனைகள், மற்றவர்களை குற்றம் செய்வதில் இருந்து தடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.
இதில் மனித உரிமை என்ற பிரச்சினையே எழ வாய்ப்பு இல்லை என்றும், குற்றவாளிகளை தண்டிக்காமல் நடமாடவிட்டால், நாட்டில் நல்லவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்றும் சமூக நல விரும்பிகள் கூறுகிறார்கள்.

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பது போல் தப்பு செய்தவன் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்றும், தண்டனை வழங்குவதில் காலம் தாழ்த்தக்கூடாது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ சட்டம் (2012)’ ஏற்கனவே அமலில் இருந்தபோதிலும், நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் மத்திய அரசை வற்புறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் மத்திய அரசு கடந்த மாதம் சில திருத்தங்களை செய்து அவசர சட்டம் பிறப்பித்தது.
இந்த அவசர சட்டத்தின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும். கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ விதிக்கப்படும்.
16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு சிறை தண்டனைக்கு பதில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும்.
16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது.
மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை 2 மாதங்களுக்குள்ளும், மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதங்களுக்குள்ளும் விசாரித்து முடிக்கவும் இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.
இந்த அவசர சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் மசோதா கொண்டு வரப்பட்டு நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நடந்த குற்றத்தின் வீரியம் காலப்போக்கில் படிப்படியாக நீர்த்துப்போவதுடன், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒருவித அனுதாப போக்கும் உருவாக்கப்படுகிறது. சாதி, மதம், இனம், அரசியல் ரீதியாக குற்றவாளிகளுக்கு ஆதரவான குரல்களும் எழத்தொடங்குகின்றன.
இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும், அப்படி குரல் கொடுப்பவர்கள், அந்த நபரால் சீரழிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தை பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் வேதனை பற்றியும் சிந்தித்து பார்ப்பது இல்லை என்பதும் சமூக நலனில் அக்கறை கொண்ட பலரும் கூறுகிறார்கள்.
எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம், நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.