search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளிடம் பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகள்
    X

    குழந்தைகளிடம் பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகள்

    • பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன.
    • கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    விழிப்புணர்வு பிரசாரங்கள் எவ்வளவோ மேற்கொண்ட பின்பும், பாலியல் வன்முறைகள் கட்டுக்குள் அடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதை கெடுக்கும் பலாத்கார விளையாட்டுகளே அதற்கு காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை. பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகளை இருட்டில் இருந்து தனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுகிறவர்கள், அப்படியே மதிமயங்கிப்போய் பின்பு அதை வெளிச்சத்தில் நிஜமாக நிறைவேற்ற விரும்பும்போதுதான் அந்த ஆபத்தின் கொடூரம் வெளியே தெரியவருகிறது.

    பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன. அவை இப்படித்தான் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. முதலில் ஸ்கிரீனில் இளைஞன் ஒருவன் தோன்றுவான். பின்பு சில பெண்கள் திரைக்கு வருவார்கள். அதில் யாரேனும் ஒரு பெண்ணை தேர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. சரியாக அந்த எண்ணை 'க்ளிக்' செய்தால் அந்த ஆடை நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆடையாக களைந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக்குவதுதான் விளையாட்டின் இறுதிக்கட்டம்.

    இந்த விளையாட்டு பெண்களை ஆடையை நீக்கிவிட்டு பார்த்து ரசிக்கவேண்டிய போகப்பொருள் என்ற எண்ணத்தை, அதை விளையாடுபவர்களின் சிந்தனையில் உருவாக்கிவிடுகிறது. அடுத்து இன்னொரு விளையாட்டு அதைவிட கொடூரம். கம்ப்யூட்டர் திரையில் தலைதெறிக்க ஓடும் பெண்ணை துரத்திப் பிடித்து, மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்வது போன்ற விளையாட்டுகள் பெருகி வருகின்றன. அதனால் பல்வேறு உலக நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஆனாலும் தடையை மீறி இவை உலாவருகின்றன.

    பாலியல் வன்முறை என்பது மிக மோசமான சமூகவிரோத செயல். அதைக்கூட விளையாட்டாக்கி பார்க்கும் மனோபாவம் மனித சமூகத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த பயம் இன்று ஒவ்வொரு குடும்பத்தையும் தாக்கத் தொடங்கி யிருக்கிறது.

    டெல்லியை சேர்ந்த பிரபலம் ஒருவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன்னாலே செலவிட்டான். மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு, அவன் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நண்பர்களுடன் அதிகம் பேசுவதில்லை. வெளியே விளையாடவும் செல்வதில்லை. படிப்பிலும் கவனக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் தனிமையில் இருக்க விரும்பினான். பெண்களை முரண்பாடான நிலையில் உற்றுப்பார்க்கத் தொடங்கியிருக்கிறான். அவனது மாற்றங் களால் கவலை அடைந்த தந்தை, அன்று அவனை கண்காணித்திருக்கிறார். கம்ப்யூட்டரில் அவன் விளையாடிக் கொண்டிருந்த 'ரேப் கேம்'மை பார்த்தவுடன் அவருக்கு இதயமே நின்று விட்டது போல் ஆகியிருக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு விளையாட்டு இருக்க முடியுமா என்று அதிர்ச்சியடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை அவரால் மகனிடம் காட்டமுடியவில்லை. காட்டினால் அவன் குணாதிசயங்கள் மேலும் மோசமாகிவிடும் என்பதை அறிந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் பெறவைத்திருக்கிறார். அதன்பின்புதான் அவனது 'அந்த விளையாட்டில்' மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    கம்ப்யூட்டரில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர், அவர்கள் எந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்று கண்காணிப்பது கஷ்டம்தான். ஆனாலும் கண்காணிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் எல்லா பெற்றோருக்கும் புரிவதில்லை. ஆனால் பிள்ளைகள் அதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத பெற்றோரால், பிள்ளைகளின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

    மனநல ஆலோசகர் அஸ்வந்த் இதுபற்றி தெரிவிக்கும் கருத்து:

    "மூடிவைப்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேகம் இளைஞர்களிடம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்திற்கு வழிகாட்டுவதுபோல், அவர்களை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் வேலையை இத்தகைய விளையாட்டுகள் உருவாக்குகின்றன. இத்தகைய போக்கை கண்டறிந்து திருத்துவது கடினம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறவேண்டும். இன்றைய கால சூழலைப்பார்த்தால் சிறுவர்களுக்குகூட அந்த விழிப்புணர்வு அவசியம் என்று நினைக்கிறோம். பொதுவான நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொண்டால், கம்ப்யூட்டரை எல்லோரும் இருக்கும் அறையில் வைக்கவேண்டும். அப்போதுதான் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமுடியும். அவர்கள் தனிமையில் அதிக நேரத்தை செலவிடும்போது அதற்கு என்ன காரணம் என்பதை உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனம் குறைந்தாலோ, நண்பர்களோடு பேசுவதை - விளையாடுவதை நிறுத்தினாலோ அதற்கான காரணத்தை கண்டறிய முன்வரவேண்டும்" என்கிறார்.

    கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர் கன்ஷிகா கூறுகிறார்:

    "ஒரு முறை இதுபோன்ற விளையாட்டுகளை டவுன்லோடு செய்துவிட்டால் மறுபடியும் அதை அழிக்க முடியாது. இது போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் சீனா, ஜப்பானில் தான் தயாரா கிறது. இதை தடுக்கவும் வழியில்லை, அழிக்கவும் முடியாது. போன் இருக்கும்வரை எல்லாமே இருக்கும். இந்நிலையில் நாம் நமது பிள்ளைகளைத்தான் பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். நமது பிள்ளைகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு அதில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு சந்தோஷப்படாமல், பெற்றோரும் அதை தெரிந்துகொண்டு கண்காணிக்கவேண்டும். அதோடு பெண்களை பெருமையாக நினைக்கவும் கற்றுத்தரவேண்டும். பாலியல் வன்முறை விளையாட்டுகள் போன்று துப்பாக்கியால் சுடும் வன்முறை விளையாட்டுகளும் நிறைய உள்ளன. அதில் ஆழ்ந்து போகிறவர்கள்தான் மேலை நாடுகளில் அவ்வப்போது துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொல்லும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

    Next Story
    ×