என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக்"

    • வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
    • ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டார்.

    கர்நாடக மாநிலம் வெங்களூருவில் வசிக்கும் 41 வயதான ரஜினி என்ற கன்னட-தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் நடிகை, பேஸ்புக்கில் ஒருவர் ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பி தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட நவீன் ஆரம்பத்தில் ஒரு ஐடியிலிருந்து நடிகைக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பிய நிலையில் நடிகை அதை நிராகரித்தார்.

    அந்த நபரை நடிகை ‛பிளாக்' செய்தாலும் வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.

    மூன்று மாதங்களாக தொடர்ந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், நடிகை நவம்பர் 1ஆம் தேதி நாகரபாவி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சந்திப்பதாகக் கூறி அவரை வரவழைத்து நேரடியாகக் கண்டித்தார்.

    ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டதைத் தொடர்ந்து, நடிகை உடனடியாக போலீஸாரை அழைத்துள்ளார். நடிகையின் புகாரை அடுத்து போலீசார் நவீனை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.  

    • தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்தார்.
    • எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.

    உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி கட்சி உள்ளது. இதன் தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் உடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. நேற்று மாலை முதல் அவரது பேஸ்புக் செயல்பாடு துண்டிக்கபட்டது. இதில் அவருக்கு 85 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

    தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்த நிலையில் இந்த முடக்கம் எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் இதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அகிலேஷ் வெளியிட்ட பதிவு காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவைடிக்கையை எடுத்ததாகவும் மத்திய ரெயில்வே மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

    இதற்கிடையே தற்போது அகிலேஷின் பேஸ்புக் கணக்கு மீட்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    • விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில், ஆப்களில் தனித்தனி ஆகும்.
    • Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா முறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

    முதலில் இங்கிலாந்தில் அடுத்த சில வாரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.

    சமீபத்திய இங்கிலாந்து ஒழுங்குமுறை வழிகாட்டுதலுக்கு இணைங்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

    விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில் மாதம் £2.99 மற்றும் iOS மற்றும் Android ஆப்களில் பயன்படுத்துவோருக்கு மாதம் £3.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் Account Center இல் சேர்க்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கணக்கிற்கும் இணையத்தில் £2 , iOS/Android-இல் £3 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

    இதன் மூலம் Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது. இந்த நடைமுறை வருங்காலங்களில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    • புகைப்படங்களை தம்பதியினர் பார்த்த போது மிஷேல் அதிர்ச்சி அடைந்தார்.
    • மணமக்களின் அருகே நின்ற ஒருவர் யாரென்றே மிஷேல்- ஜான் தம்பதிக்கு தெரியவில்லை.

    திருமண விழாக்களுக்கு மணமக்களின் குடும்பத்தினர், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். சில திருமணங்களில் அழையா விருந்தாளிகளாக முன்பின் தெரியாதவர்களும் கூட வந்து விருந்து சாப்பிட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.

    இந்நிலையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த மிஷேல் வைலி என்ற பெண்ணுக்கும் ஜான் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தம்பதியினர் பார்த்த போது மிஷேல் அதிர்ச்சி அடைந்தார். காரணம் மணமக்களின் அருகே நின்ற ஒருவர் யாரென்றே மிஷேல்- ஜான் தம்பதிக்கு தெரியவில்லை. அவர் யார் என்ற மர்மத்தை கண்டுபிடிக்க மிஷேல் முயற்சி செய்தார். ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மிஷேலின் இந்த மர்மத்துக்கு பேஸ்புக் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருந்தவர் அயர்ஷையரை சேர்ந்த ஓவியரான ஆண்ட்ரூ ஆவார். அவர் தனது மனைவியுடன் வேறு ஒரு திருமணத்திற்கு செல்ல இருந்த நிலையில், தவறுதலாக இடம் மாறி மிஷேல் திருமணத்திற்கு சென்று விட்டதாக பேஸ்புக்கில் வேறு ஒரு நண்பருடன் உரையாடியதை மிஷேல் பார்த்துள்ளார். அப்போது தான் அவரின் 4 வருட மர்மத்துக்கு விடை கிடைத்ததாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    • இந்திய மக்கள் ஏன் வெளிநாடுகளின் சமூக ஊடகங்களை நம்பியிருக்க வேண்டும்?
    • இந்தியர்களின் பணம் ஏன் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும்.

    இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

    செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியுடன் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு பூக்கள் தூவப்பட்டன.

    செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்திய மக்கள் ஏன் வெளிநாடுகளின் சமூக ஊடகங்களை நம்பியிருக்க வேண்டும்? இந்தியர்களின் பணம் ஏன் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும். இந்திய இளைஞர்கள் சொந்தமாக இந்திய மக்களுக்காக சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்களும் கசிந்தன.
    • கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.

    பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் அதிகமான பயனர்பெயர்கள் (Username) மற்றும் கடவுச்சொற்கள் (password) ஆன்லைனில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இவற்றின் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் மற்றும் அங்கீகார URL களைக் கொண்ட பாதுகாப்பற்ற தளம் ஆன்லைனில் கண்டறியப்பட்டது.

    இதுமட்டுமின்றி, வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இந்தத் தளத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இது சைபர் குற்றவாளிகளால் எளிதில் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை உருவாக்கி உள்ளது.

    அபைபர் குற்றவாளிகள், வணிக ஆவணங்களைத் திருடவும், பெருநிறுவனங்களை உளவு பார்க்கவும், ரான்சம்வேர்  தாக்குதல்களைத் நடத்தவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    இன்ஃபோஸ்டீலர் மால்வேர்:

    இந்தத் தரவு இன்ஃபோஸ்டீலிங் மால்வேர் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லம்மா ஸ்டீலர் போன்ற மால்வேர்களை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்யப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.

    மேலும் இத்தகைய மால்வேர் தனிப்பட்ட சாதனங்களைப் பாதித்து, பாதுகாக்கப்பட்ட கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள், குக்கீகளை திருடுகிறது

    பயனர்களுக்கு எச்சரிக்கை

    பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்ஃபிக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஒரே பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    சைபர் குற்றவாளிகள் கணக்குகளை அணுகினால், அவர்கள் ஆன்லைன் மோசடி, அடையாள திருட்டு மற்றும் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.

    எனவே தரவு மீறல்களிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வழி இல்லை என்றாலும், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    இந்தத் தரவு கசிவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பிரச்சனையை ஆராய்ந்து வருகின்றனர். 

    • பப்புவா நியூ கினியா நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது.
    • சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

    போர்ட் மோர்ஸ்பி:

    ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடாக பப்புவா நியூ கினியா உள்ளது. சுமார் 20 லட்சம் மக்கள் தொகை வசிக்கும் இந்த நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது.

    இங்குள்ள பொதுமக்கள் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இதற்கிடையே, பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது.

    இந்நிலையில், பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர்.

    இது மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    • செலவுகளைக் குறைக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
    • பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும்

    பிரபல சமூக வலைத்தளமன பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இத்தகவலை அறிவித்துள்ளது. வருவாய் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 11000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    'மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000-க்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன்' என பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

    குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

    பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார்.
    • டொனால்டு அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் புகார் செய்தார்.

    புதுடெல்லி :

    அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருப்பவர் டொனால்டு (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது.).

    இவர் இந்தியாவில் உள்ள ரோஷி என்ற பெண்ணுடன் (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது) 'பேஸ்புக்' மூலம் தொடர்பு கொண்டு அறிமுகமானார்.

    இருவரிடையே நட்பு மலர்ந்தது. அந்த நட்பு, அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்கிறவரை வளர்ந்தது. இவர்கள் அடிக்கடி 'வீடியோ சாட்' மூலம் ஆபாசமாக பேசிக்கொள்வதும், ஆபாசமாக தோன்றுவதும் தொடர்ந்துள்ளது.

    இதைத் தகவல் தொழில்நுட்ப வசதியால் மோப்பம் பிடித்த டெல்லி அசோலா பகுதியை சேர்ந்த ராகுல் குமார் என்பவர் பதிவு செய்தார். அதைத் தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்த முடிவு செய்தார்.

    இது தொடர்பாக அவர் அமெரிக்க பேராசிரியர் டொனால்டுடன் தொடர்பு கொண்டார். " நீங்கள் அந்தப் பெண்ணுடன் ஆபாசமாகப்பேசியது, நடந்து கொண்டது தொடர்பான அனைத்தையும் நான் பதிவு செய்து வைத்துள்ளேன்.

    நீங்கள் எனக்கு இந்தத் தொகையை பேபால் கணக்கின் (ஜி பே போன்றது) வழியாக அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பாவிட்டால் சமூக ஊடகங்களில் உங்கள் லீலைகள் அடங்கிய வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவேன்" என இ-மெயில் வாயிலாக மிரட்டி உள்ளார்.

    இப்படி அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார். 48 ஆயிரம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.39 லட்சம்) இப்படி மிரட்டியே ராகுல்குமார் கறந்துள்ளார்.

    ஆனாலும் அவர் பேராசிரியர் டொனால்டுவை மிரட்டுவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் 'பொறுத்தது போதும், பொங்கியெழு' என்ற நிலைக்கு பேராசிரியர் டொனால்டு போனார்.

    அவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் (எப்.பி.ஐ.), இந்தியர் ஒருவரால் தான் மிரட்டி பணம் பறிக்கப்படும் பிரச்சினை பற்றி புகார் செய்தார். அந்த அமைப்பினர், புகாரை டெல்லி சி.பி.ஐ.யின் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து ராகுல் குமார் வீடடில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய தடயங்களை கைப்பற்றினர். மேலும் ராகுல் குமாரை கைது செய்தனர்.

    அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி டெல்லி ரவுஸ் அவினியு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது.
    • அபராத தொகையை செலுத்தி இருந்தாலும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

    சான்பிரான்சிஸ்கோ:

    உலகம் முழுவதும் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க பேஸ்புக் பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    அபராத தொகையை செலுத்தி இருந்தாலும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பயனர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன் கருதியே இந்த அபராத தொகையை அளிக்க சம்மதித்து உள்ளோம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது.
    • டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தோல்வியை ஏற்க மறுத்தார்.

    இதனால் டிரம்பின் ஆதரவாளர்கள் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு டிரம்ப் டுவிட்டர் கணக்கு மீதான தடையை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

    இந்த நிலையில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் திளெக் கூறும் போது, வரும் வாரங்களில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் மீட்டெடுப்போம். குற்றங்களை தடுக்க புதிய பாதுகாப்பு தடுப்புகளுடன் மீண்டும் நிலை நிறுத்தப்படும்.

    நிறுவனத்தின் கொள்கைகளின் ஒவ்வொரு மீறலுக்கும் 2 ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம் என்றார். 2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    • ஏராளமான டுவிட்டர் பயனாளிகள் தங்களால் புதிய பதிவுகளை பதிவிட முடியவில்லை என ஆதங்கப்படுகின்றனர்.
    • பதிவு அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டி விட்டீர்கள் என தவறான தகவல் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    சமூக ஊடக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி தங்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனாளிகளை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக அமெரிக்காவில் அதிகபட்சமாக செயல் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏராளமான டுவிட்டர் பயனாளிகள் தங்களால் புதிய பதிவுகளை பதிவிட முடியவில்லை என ஆதங்கப்படுகின்றனர்.

    இதற்கு காரணம் நீங்கள் பதிவு அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டி விட்டீர்கள் என தவறான தகவல் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    எலான் மஸ்க் என்பவர் அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பின்னர் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களை குறைத்தார். இதனால் தான் இந்த குறைபாடுகள் வருவதாக டுவிட்டரை பயன்படுத்துபவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் டுவிட்டர் நிறுவனம் இந்த சிக்கலை அறிந்து இருப்பதாகவும், அதனை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    உங்களில் சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். சிக்கலுக்கு மன்னிக்கவும். இதனை சரி செய்வதற்கு நாங்கள் விழிப்புணர்வுடன் செயலபட்டு வருவதாகவும் டுவிட்டர் ஆதரவு தெரிவித்துள்ளது.

    12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனாளிகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். 7 ஆயிரம் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×