என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashwini Vaishnav"

    • மத்திய அமைச்சரவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
    • தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமைச்சரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்தன. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன.

    இந்த கார் வெடிவிபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். நள்ளிரவு வரை 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இது நேற்று 13 ஆக உயர்ந்தது.

    சம்பவ இடத்தில் துப்பாக்கிக் குண்டு கிடைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) ஆவார். இவரும் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்துள்ளார்.

    இந்நிலையில் கார் வெடிவிபத்து குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது.

    இந்நிலையில், டெல்லி செங்கோட்டை அருகே நடத்தப்பட்டது கொடூரமான பயங்கரவாத செயல் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மத்திய அமைச்சரவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமைச்சரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தேச விரோத சக்திகள் கார் மூலமாக வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள்" என்று மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உதவி அளிக்க ரூ.25,000 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    • தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்தார்.
    • எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.

    உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி கட்சி உள்ளது. இதன் தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் உடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. நேற்று மாலை முதல் அவரது பேஸ்புக் செயல்பாடு துண்டிக்கபட்டது. இதில் அவருக்கு 85 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

    தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்த நிலையில் இந்த முடக்கம் எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் இதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அகிலேஷ் வெளியிட்ட பதிவு காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவைடிக்கையை எடுத்ததாகவும் மத்திய ரெயில்வே மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

    இதற்கிடையே தற்போது அகிலேஷின் பேஸ்புக் கணக்கு மீட்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    • டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
    • டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

    சீன வீடியோ செயலியான டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.

    அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்ற நிலையில், டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. இதன் மீதான தடையை நீக்க இதுவரை எந்த பரிந்துரையும் வரவில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    • 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள நெறிமுறை விதிகளைப் பின்பற்றத் தவறியதே இதற்கு காரணம்
    • தடை செய்யப்பட்ட ஐந்து தளங்கள் புதிய Domain-களில் மீண்டும் செயல்படத்தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் விதிகளை மீறிய 43 OTT தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இந்த தளங்கள் 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள நெறிமுறை விதிகளைப் பின்பற்றத் தவறியதே இதற்கு காரணம் என்று அவர் மக்களவையில் கூறினார்.

    நிர்வாணம், பாலியல், வன்முறை தொடர்பான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உள்ளடக்கத்தை வகைப்படுத்துதல் மற்றும் குழந்தைகளுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கத்தைப் பார்ப்பதைத் தடுப்பதற்கான பாதுகாப்புகளை செயல்படுத்துதல் போன்ற விதிகளை இந்த தளங்கள் மீறியுள்ளன.

    அதன்படி, 2024 மார்ச்சில் 18 OTT தளங்களும், 2025 ஜூலை 23 அன்று 25 OTT தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே மார்ச் 2024 இல் தடை செய்யப்பட்ட ஐந்து தளங்கள் புதிய Domain-களில் மீண்டும் செயல்படத்தொடங்கி , ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடுவதை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
    • 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரெயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர்லாக் அமைப்புகள் நிறுவப்படும்.

    கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு குறித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஜூலை 10) ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

    இந்தக் கூட்டத்தில் ரயில்வே லெவல் கிராசிங்குகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பல புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

    இதுதொடர்பாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ரெயில்வே கேட் கீப்பர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல் பதிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அனைத்து ரெயில்வே கேட்டுகளிலும், கேட் கீப்பர் அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    ஒரு நாளைக்கு 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரெயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர்லாக் அமைப்புகள் நிறுவப்படும். அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து ரெயில் கேட்டுகளையும் ஆய்வு செய்ய ஒரு புதிய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • லால் வைஷ்ணவ் - சரஸ்வதி வைஷ்ணவ் இணையருக்கு மூத்த மகன் அஸ்வினி வைஷ்ணவ் ஆவார்.
    • ஜோத்பூரில் குடியேறி வழக்கறிஞராகவும், வரி ஆலோசகராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.

    ராஜஸ்தான்: மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை டவு லால் வைஷ்ணவ், வயது மூப்பு காரணமாக இன்று காலை (செவ்வாய்க்கிழமை) காலமானார்.

    அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 11:52 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    பாலி மாவட்டத்தில் உள்ள ஜீவன்ட் கலா கிராமத்தைச் சேர்ந்த டவு லால் வைஷ்ணவ், பின்னர் ஜோத்பூரில் குடியேறி வழக்கறிஞராகவும், வரி ஆலோசகராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.

    அவர் தனது சொந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றி உள்ளார். லால் வைஷ்ணவ் - சரஸ்வதி வைஷ்ணவ் இணையருக்கு மூத்த மகன் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இளைய மகன் ஆனந்த் வைஷ்ணவ் ஆவர்.

    இறுதிச் சடங்குகள் இன்று மாலை ஜோத்பூர், காகாவில் உள்ள வைஷ்ணவ் சமாஜ் மயானத்தில் நடைபெற்றன. இதன்பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் சபாநாயகர் வாசுதேவ் தேவ்நானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • தட்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.
    • 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.

    நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.

    பண்டிகை காலம், விசேஷ நாட்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்வதால் கவுண்டர்களில் வரிசையில் நின்று பெறுவது கடினமாக உள்ளது. தட்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.

    இந்நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக ரெயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.

    இதனையடுத்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.

    இந்நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு விரைவில் இ-ஆதார் பயன்படுத்தப்படும் என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

    • அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி தனது நண்பர்களுக்கு விற்கிறது.
    • அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

    நாட்டின் உயிர்நாடியான ரெயில்வே துறை 'வென்டிலேட்டரில்' இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ரெயில்வே துறையை தங்களின் நண்பர்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

    மக்களவையில் ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், 'வந்தே பாரத்' ரெயிலைக் காட்டி ரெயில்வேயின் மோசமான நிலையை மறைக்க முடியாது.

    ரெயில்வே நாட்டின் உயிர்நாடி. இந்த உயிர்நாடி தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் உள்ளது. இந்தப் பணியை இந்த அரசு செய்துள்ளது.

    ரெயில்வே நிதி நிலை குறித்து மிகுந்த கவலைப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி, பின்னர் அவற்றை தனது "நண்பர்களுக்கு" விற்று வருகிறது. வரும் நாட்களில் ரெயில்வேயும் நண்பர்களின் கைகளுக்குச் செல்லுமா?. அப்படி ஏதாவது சதி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்த அவர், மற்ற நேரங்களில் அவர்கள் இன்ஸ்ட்டாகிராம் ரீலிஸ் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விபத்து நடக்கும்போது, அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

    விபத்துகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட 'கவாச்' பாதுகாப்பு அமைப்பை, பயணிகளின் பாதுகாப்பை விட, தனது பிம்பப்பத்தை பாதுகாத்துக்கொள்ள அமைச்சர் அதை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் என்று விமர்சித்தார்.

    முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லி ரெயில் நிலையத்தில் மகா கும்பமேளா செல்ல அதிகளவில் மக்கள் நடைமேடையில் காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.

    அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார்.
    • தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இன்று(15.03.2025) திருப்பெரும்புதூர் விழா ஒன்றில் பேசிய ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது என்பது இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் புரியும்.

    தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது, வரிவருவாயில் குறைந்த அளவு நிதிஒதுக்குவது, தமிழ்மொழிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது, சென்னை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் உள்ள முன்பதிவில்லாத பெட்டிகளை ஒன்றிய ரயில்வே துறை குறைக்க நடவடிக்கை எடுத்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    தற்போது ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான முதற்கட்ட தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6315 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாம் நிலைத்தேர்வுக்கு இவர்களில் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்துள்ளதாக தகவல் வருகிறது.

    தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தேர்வு எழுதி ஒன்றிய அரசு பணிகளுக்கு வராமல் தடுப்பதே இவர்களின் நோக்கம் என்று புரிகிறது. ஒன்றிய ரயில்வே துறையின் இச்செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்து தமிழ்நாட்டில் அவர்களை தேர்வு எழுத ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை வலுப்படுத்தும்.
    • வாரணாசி ரெயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மறுசீரமைக்கப்படுகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புத் திட்டப் பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது என்றும், உலகிலேயே சிறந்த ரெயில் நிலையங்களில் ஒன்றாக இதை மாற்றும் வகையில் சுமார் 7000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். பின்னர் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் மந்திரி வைஷ்ணவ் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அவருடன் பகிர்ந்து கொண்டனர்.

    காசி தமிழ் சங்கமம் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக குழுவினரின் முயற்சிகளை மந்திரி பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் வாரணாசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார். இதுபோன்ற பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • தற்போது ஒரு நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் வழங்கும் திறன் உள்ளது.
    • நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் ‘ஜன சுவிதா’ கடைகள் நிறுவப்படும்.

    புதுடெல்லி :

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது 2023-24-ம் நிதியாண்டில் ரெயில்வேயில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பயணிகள் முன்பதிவு முறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் இணையதள வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் கிட்டத்தட்ட 10 மடங்கு வேகம் இருக்கும்.

    தற்போது ஒரு நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் வழங்கும் திறன் உள்ளது. இதை நிமிடத்திற்கு 2.25 லட்சமாக மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    இதைப்போல பயணிகளின் விசாரணை அழைப்புகளை எதிர்கொள்ளும் திறனையும் நிமிடத்துக்கு 40 ஆயிரம் என்ற இலக்கில் இருந்து 4 லட்சமாக அதிகரிக்கும் திட்டம் உள்ளது.

    2022-23-ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த 4,500 கி.மீ. புதிய ரெயில் பாதை இலக்கு எட்டப்பட்டு உள்ளது. இது நாளொன்றுக்கு 12 கி.மீ. ஆகும். அதேநேரம் 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை நாளுக்கு 4 கி.மீ.யாக இருந்தது.

    2023-24-ம் நிதியாண்டில் 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் புதிய பாதைகள், இரட்டைமயமாக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

    நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 'ஜன சுவிதா' கடைகள் நிறுவப்படும். இவை 24 மணி நேரமும் திறந்து இருக்கும். இந்த கடைகளில் தினசரி உபயோகப் பொருட்கள் அனைத்தும் இருக்கும்.

    ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கிழ் 550 ரெயில் நிலையங்களில் 594 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையங்களின் எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்படும்.

    2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2.40 லட்சம் கோடியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சிறிய தயாரிப்பான வந்தே மெட்ரோ உருவாக்கப்படும். இது பெரிய நகரங்களில் பணியாற்றும் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    • விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
    • சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும்.

    ராயபுரம்:

    வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

    ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன்.

    இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன். வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர்.

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக்குழு வினருக்கு, ரயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×