search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IRCTC"

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலை 11 மணியில் இருந்து செயல்படவில்லை.
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படாததால் முன்பதிவு செய்யாமல் சிரமப்பட்டனர்.

    சென்னை:

    ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலை 11 மணியில் இருந்து செயல்படவில்லை. சாதாரண முன்பதிவு, தட்கல் முன் பதிவு செய்யக் கூடியவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

    நாடு முழுவதும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை பயன்படுத்தி தினமும் லட்சக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்கிறார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படாததால் முன்பதிவு செய்யாமல் சிரமப்பட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும் விரைவில் சரி செய்யப்பட்டு முன்பதிவு தொடங்கும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.ஆர்.சி.டி.சி அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை வழங்கியுள்ளது.
    • பல்வேறு வங்கிகளின் கடன் அட்டை மற்றும் டெபிட் கார்டு மூலம் புக்கிங் செய்தால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

    சென்னை:

    இந்தியன் ரெயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை வழங்கியுள்ளது.

    ஐ.ஆர்.சி.டி.சி.யின் www.air.irctc.co.in இணையம் வழியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் கிடையாது. பல்வேறு வங்கிகளின் கடன் அட்டை மற்றும் டெபிட் கார்டு மூலம் புக்கிங் செய்தால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

    வருகின்ற நாட்களில் வெளிநாடு பயணம், புத்தாண்டு கொண்டாட்டம் போன்றவற்றிற்காக புக்கிங் செய்பவர்களுக்கு டிக்கெட் தவிர கூடுதலாக எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. இந்த சலுகை இன்று முதல் 27-ந்தேதி வரை வழங்கப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலையில் சரிவர செயல்படவில்லை.
    • டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் ரெயிலில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்படுகிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

    முன்பதிவு மட்டுமின்றி தட்கல் டிக்கெட் பெறவும், முன்பதிவை ரத்து செய்யவும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலையில் சரிவர செயல்படவில்லை. அதன் வேகம் குறைந்ததால் முன்பதிவு மற்றும் தட்கல் டிக்கெட் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதளமும், செல்போன் செயலியும் முடங்கியது.

    டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை சரி செய்வதற்கு சில மணி நேரம் ஆகும். இணையதளம் செயல்பாடு சீராகும் வரையில் டிக்கெட் கவுண்டர்களில் சென்று முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறினர்.

    மேலும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆஸ்க் திஷா வாய்ப்பை பயன்படுத்தி டிக்கெட் பெறலாம். இ-வால்லெட் என்ற வசதியையும் பயன்படுத்தலாம். இதற்கு பயணிகள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை செலுத்தி உள்ளே நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணம் செய்கின்ற பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு, குடிநீர் வழங்க ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
    • பொதுப்பெட்டி பயணிகளுக்கான மலிவு விலை உணவு வழங்குவதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வசதி செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கு உணவு குறையாமல் அதற்கேற்ற விலையை ஐ.ஆர்.சி.டி.சி. நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது.

    டீ, காபி, டிபன், மதிய உணவு உள்ளிட்டவை வெளி இடங்களைவிட குறைவான விலைக்கு விற்கப்படுகிறது.

    மேலும் பயணம் செய்கின்ற ரெயில்களில் முன் பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு ஊழியர்கள் மூலம் உணவு, நொறுக்குத்தீனிகளும் விற்பனை செய்யப்படு கின்றன.

    இந்த நிலையில் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணம் செய்கின்ற பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு, குடிநீர் வழங்க ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதற்காக 2 வகை கட்டணத்தில் உணவு வழங்கப்பட உள்ளது.

    முதல் வகை உணவுக்கு ரூ.20 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில் 7 பூரிகள், உலர் பருப்பு கூட்டு, ஊறுகாய் இடம் பெறும். 2-வது வகை உணவுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். இவை தவிர தென் இந்திய உணவு வகைகளும் வழங்கப்படும்.

    குறிப்பாக அரிசி சாதம், சிவப்பு காராமணி உணவு, மசால்பூரி, கிச்சடி, பட்டுரே, பாவ் பாஜி, மசாலா தோசை ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ரெயில்வே மூலம் பொதுப்பெட்டிகள் வந்து நிற்கும் நடைமேடை பகுதியில் இதற்கான உணவு கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது. மேலும் மலிவு விலையில் 200 மில்லி குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது. இந்த உணவுகள் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் தயாரித்து வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பொதுப்பெட்டி பயணிகளுக்கான மலிவு விலை உணவு வழங்குவதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வசதி செய்யப்பட உள்ளது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ரெயில் நிலையங்களில் வந்து நிற்பதற்கு வசதியாக பிளாட்பாரங்கள் சீரமைக்கப்பட உள்ளது. இந்த உணவு கவுண்டர்கள் சோதனை அடிப்படையில் 6 மாதம் செயல்படும்.

    ரெயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி முதற்கட்டமாக நாடு முழுவதும் 51 நிலையங்களில் இந்த உணவு கவுண்டர்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மேலும் 13 ரெயில் நிலையங்களில் உணவு கவுண்டர்கள் திறக்கப்படும் என்று வாரியம் தெரிவித்து உள்ளது.

    • ஆடி அமாவாசை அன்றும் கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
    • கட்டணத்தில் தென்னிந்திய சைவ உணவு, பாதுகாவலர் வசதி, பயண காப்புறுதி, தங்குமிடம் போன்றவை அடங்கும்.

    சென்னை:

    இந்தியாவின் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவன சுற்றுலா பயணிகளுக்காக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள் உள்ளன.

    இந்த சுற்றுலா ரெயில் தென் மண்டலம் சார்பில் 'ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை' என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது. ஆடி அமாவாசை அன்றும் கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சுற்றுலா ரெயில் நெல்லையில் இருந்து தொடங்கி மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை வழியாக காசி திரிவேணி சங்கமம், (அலகாபாத்), உஜ்ஜைனில் உள்ள ஓம்காரேஷ்வரர், மகா காலேஷ்வர் ஜோதிர் லிங்கங்கள் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆகஸ்டு 7-ந்தேதி இந்த சுற்றுலா ரெயில் புறப்படுகிறது. 11 இரவுகள் 12 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவிற்கு ஒருவருக்கு 2-ம் வகுப்பு படுக்கை கட்டணம் ரூ.21,800, 3-ம் வகுப்பு ஏசி படுக்கை கட்ட்டணம் ரூ.39,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டணத்தில் தென்னிந்திய சைவ உணவு, பாதுகாவலர் வசதி, பயண காப்புறுதி, தங்குமிடம் போன்றவை அடங்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. பொது மேலாளர் கே.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    • ஐதராபாத், ஆக்ரா, மதுரா, அமிர்தசரஸ், டெல்லி ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
    • கோடைகாலத்தில் 2 ரெயில் திட்டங்களை சிறப்பாக நடத்தி முடித்தோம்.

    சென்னை:

    சென்னையில் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (சுற்றுலா பிரிவு) பொதுமேலாளர் கே.ரவிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறோம். தற்போது, பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா திட்டங்களை வழங்கி வருகிறோம். பாரத் கவுரவ் சுற்றுலா திட்டத்தின் கீழ், இதுவரை 2 சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். தற்போது, 3-வது சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அதன்படி, ஜூலை 1-ந்தேதி 'ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி யாத்திரை' என்ற பெயரில் சிறப்பு சுற்றுலா ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஐதராபாத், ஆக்ரா, மதுரா, அமிர்தசரஸ், டெல்லி ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். 14 பெட்டிகள் கொண்ட இந்த சுற்றுலா ரெயிலில் 750 பேர் வரையில் பயணம் செய்யலாம். 12 நாட்கள் பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.22 ஆயிரத்து 350 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்த, மேலும் விவரங்களுக்கு 9003140680, 9003140682 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மற்ற சுற்றுலா அமைப்புகளை விட எங்களுடையது மிகவும் சிறப்பானது. இந்திய ரெயில்வே சுற்றுலா ரெயில் திட்டங்களை ஊக்கப்படுத்துகிறது. பயணிகளிடமிருந்து எங்களுக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா ரெயில் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கோடைகாலத்தில் 2 ரெயில் திட்டங்களை சிறப்பாக நடத்தி முடித்தோம். தற்போது, இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடிவு செய்து இருக்கிறோம். கல்வி சுற்றுலாவுக்காக பள்ளி, கல்லூரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாரத் கவுரவ் திட்டத்தில், சுற்றுலா ரெயில் இயக்கத்தில் தனியாருடன் போட்டியிடும் சூழல் தான் இருக்கிறது. ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் பயணிகளின் எண்ணிக்கையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. வரும் மாதங்களில் வாரணாசி, அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் ரெயிலில் பயணம் செய்வதை பாதுகாப்பற்று உணர்வதால் முடிவு.
    • டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதிகரிக்கவில்லை. மாறாக, டிக்கெட் ரத்து குறைந்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சுமார் 900 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து மக்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் டிக்கெட்டுகளை ரத்து செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், மக்கள் ரெயிலில் பயணம் செய்வதை பாதுகாப்பற்று உணர்வதால் அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியது.

    இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "ஒடிசா ரெயில் விபத்துக்குப் பிறகு ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் கூறுவது முற்றிலும் தவறானது.

    டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதிகரிக்கவில்லை. மாறாக, 01.06.23 அன்று 7.7 லட்சமாக இருந்த டிக்கெட் ரத்து 03.06.23 அன்று 7.5 லட்சமாக குறைந்துள்ளது" என கூறியுள்ளது.

    • ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பயனர்கள் தப்பித்தவறியும் இவ்வாறு செய்தால், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதுகாப்பு கருதி ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் "irctcconnect.apk," என்ற பெயர் கொண்ட தரவுகளை தங்களது சாதனங்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தரவுகளை டவுன்லோட் செய்யும் பட்சத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களின் மூலம் இந்த தரவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதில் போலி வலைதளமான https://irctc.creditmobile.site முகவரியும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    ஐஆர்சிடிசி வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த தரவை டவுன்லோட் செய்தால், உங்களது ஸ்மார்ட்போனில் அது மால்வேரை இன்ஸ்டால் செய்துவிடும். https://irctc.creditmobile.site வலைதளம் தோற்றத்தில் ஐஆர்சிடிசி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. இதில் உங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டால், ஹேக்கர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

     

    இந்த தளத்தை உருவாக்கிய ஹேக்கர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு பயனர்களிடம் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை டவுன்லோட் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களான நெட் பேங்கிங் பெயர், கடவுச்சொல், யுபிஐ முகவரி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

    இந்த ஐஆர்சிடிசி முறைகேடில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    போலி செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதுபோன்ற முறைகேடில் சிக்காமல் இருக்க பயனர்கள் ஐஆர்சிடிசி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.

    மேலும் ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான (கடவுச்சொல்), கிரெடிட் கார்டு எண், ஒடிபி, வங்கி கணக்கு எண் அல்லது யுபிஐ உள்ளிட்டவைகளை மொபைல் போன் மூலம் கேட்கப்படாது. 

    • ஐஆர்சிடிசி நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவையான சூப் உணவு ஆர்டர் செய்ய வாட்ஸ்அப்-இல் புது வசதியை வழங்குகிறது.
    • இந்த வசதியை கொண்டு பயணத்தின் போது வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம்.

    இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவையான சூப் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயில்களில் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம். இதற்கு எந்த விதமான கூடுதல் செயலியையும் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    பயணத்தின் போது பயணிகள் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்தால், ரெயிலில் அமர்ந்து இருக்கும் இருக்கைக்கே ஆர்டர் செய்த உணவு வந்து சேரும். பயணிகள் தங்களின் பிஎன்ஆர் நம்பரை பதிவிட்டு, உணவை முன்பதிவு செய்யலாம். அதன் பின் ஆர்டர் செய்த உணவின் நிலை குறித்து ரியல்-டைம் டிராக்கிங் செய்யலாம். இது குறித்து ஹாப்டிக் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.


    ஐஆர்சிடிசி-இன் சூப் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயிலில் வாட்ஸ்அப் மூலம் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது. இந்த பிளாட்பார்ம் மூலம், ரெயில் பயணத்தின் போது பயணிகள் உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம். இதற்கு வாட்ஸ்அப் சாட்பாட் "சிவா" உடன் இணைய +91 7042062070 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின் தங்களின் பிஎன்ஆர் எண்ணை பதிவிட்டு உணவு ஆர்டர் செய்யலாம்.

    சாட்பாட் உங்களின் பயண விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு உணவு எந்த ரெயில் நிலையத்தில் டெலிவரி செய்யப்பட வேண்டும் என கேட்கும். இதன் பின் ஆர்டர் செய்த உணவுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரொக்கம் மூலமாகவோ பணம் செலுத்த முடியும். 

    • போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்
    • உணவை முன்பதிவு செய்யாமல், பயணத்தின்போது வாங்கினால் ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என விளக்கம்

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஓடும் தொலை தூர ரெயில்களில் பயணிகளுக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் இந்த உணவகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அவர்கள் மூலம் அமர்த்தப்படும் கேண்டீன் உரிமையாளர்களுக்கே, ரெயில்களில் உணவு சமைத்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், ரெயில் பயணத்தின் போது ஒரு கப் டீ குடிப்பதற்கு ஒரு பயணி 70 ரூபாய் செலுத்திய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சதாப்தி ரெயிலில்தான் இந்த அளவுக்கு காஸ்ட்லியான டீ விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 28ம் தேதி டெல்லி-போபால் இடையே இயக்கப்படும் போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, டீ வாங்கி அருந்தி உள்ளார். டீ விலை 20 ரூபாய், சேவை வரி 50 ரூபாய் என மொத்தம் 70 ரூபாய்க்கு பில் கொடுத்துள்ளனர். அந்த தொகையை செலுத்திய பயணி, தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், '20 ரூபாய் மதிப்புள்ள தேநீருக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி. மொத்தத்தில் ஒரு டீ விலை 70 ரூபாய். இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?" என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த பதிவு வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். சிலர் அந்த பயணி வெளியிட்ட தகவலில் ஜிஎஸ்டி என்ற தகவல் தவறு என்றும், அது சேவை வரி என்றும் திருத்தினர். எனினும், ஒரு கப் டீக்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்பது அதிகம் என்று பலர் பதிவிட்டனர். ஆனால் அதிக கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஒரு கப் டீக்கு 70 ரூபாய் வசூலித்ததற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    வாடிக்கையாளரிடமிருந்து கூடுதல் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இந்திய ரெயில்வேயால் 2018இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள், முன்கூட்டியே உணவை முன்பதிவு செய்யாமல், பயணத்தின்போது டீ, காபி அல்லது உணவை ஆர்டர் செய்து வாங்கினால் ஒவ்வொரு உணவுக்கும் ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரு கப் டீயாக இருந்தாலும் சரி.

    இதற்கு முன்பு ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரெயில்களில் உணவு சேவை கட்டாயமாக இருந்தது, ஆனால் பின்னர் அது விருப்ப தேர்வாக மாற்றப்பட்டது. அதாவது, பயணிகள் விரும்பினால், அந்த ரெயில்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்க மறுக்கலாம். டிக்கெட்டுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும், உணவு சேவைக்கு வழங்கவேண்டியதில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பயணிகள் தாங்கள் புறப்பட வேண்டிய ரெயில் நிலையத்தில் ரெயிலை பிடிக்க முடியாமல் போகும்போது இந்த வசதி அவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.
    • குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் பயணி ஏறாமல் விட்டு விட்டால் அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழங்கப்படமாட்டாது.

    சென்னை:

    ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தங்களது புறப்படும் இடத்தை மாற்றி கொள்ளும் வசதி இருந்தது.

    ரெயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது ரெயிலில் 'சார்ட்' தயாரிப்பதற்கு முன்பு தாங்கள் ரெயில் ஏறும் ரெயில் நிலையத்தை ஐ.ஆர்.சி.டி.சி. வெப்சைட் அல்லது 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மாற்றி கொள்ளும் வசதி இருக்கிறது.

    இந்த வசதி பொது மற்றும் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பொருந்தும்.

    பயணிகள் தாங்கள் புறப்பட வேண்டிய ரெயில் நிலையத்தில் ரெயிலை பிடிக்க முடியாமல் போகும் போது இந்த வசதி அவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களது 2019-ம் ஆண்டு மே 1-ந்தேதி இந்த வசதி இருந்தது.

    இந்த நிலையில் இனி ரெயில் நிலையத்தில் எடுத்த டிக்கெட்டிலும் புறப்படும் இடத்தை மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக இணையதளமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    ரெயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பு ஐ.ஆர்.டி.சி. (www.irctc.co.in) இணையதளத்தில் சென்று அங்கே மெயின் மெனுவுக்கு கீழே இருக்கும் மோர் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் தற்போது புதிதாக இணைக்கப்பட்டு இருக்கும் கவுண்டர் டிக்கெட் போர்டிங் பாயிண்ட் சேஞ்ச் என்ற வாய்ப்பை கிளிக் செய்யவும்.

    அதில் டிக்கெட் முன்பதிவு செய்ய அளிக்கப்பட்ட செல்போன் எண்ணை அதில் வரும் ஓ.டி.பி.யை பதிவிட்டால் டிக்கெட்டில் குறிப்பிட்ட புறப்படும் இடத்தை மாற்றும் வாய்ப்பு ஏற்படும்.

    இதனால் குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் பயணி ஏறாமல் விட்டு விட்டால் அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழங்கப்படமாட்டாது.

    இதனால் முன்பு ரெயில் ஏறுபவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஐ.ஆர்.டி.சி. இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ரெயில் நிலையத்துக்கு நேரில் எழுதி கொடுத்தால் தான் ஏறும் ரெயில் நிலையத்தை மாற்ற முடியும் என்ற சிரமம் இருந்ததால் தற்போது அது எளிதாக்கப்பட்டுள்ளது.

    ரெயில் பயணிகளுக்கான டிக்கெட்களில் தற்போது 65 சதவீதம் ஆன்லைன் மூலம் தான் பதிவு செய்யப்படுகிறது என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளம் பயன்படுத்துவோருக்கு எழும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்பாட் உடனுக்குடன் பதில் சொல்லும். #irctc #chatbot



    ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்லைன் சேவை ஆரம்பத்தில் இருந்ததை விட தற்சமயம் அதிகளவு மேம்பட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் ஆன்லைன் சேவை பலமுறை மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு புது வசதிகள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

    சமீபத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளம் மேம்படுத்தப்பட்டு புது இன்டர்ஃபேஸ் மற்றும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டன. புது இன்டர்ஃபேஸ் மற்றும் அம்சங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. சேவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



    ஆஸ்க்திஷா (AskDisha) என அழைக்கப்படும் இந்த சேவை ஐ.ஆர்.சி.டி.சி.யின் வாடிக்கையாளர் சேவை மைய உதவியாள் போன்று செயல்படும். ஆஸ்க்திஷா மூலம் பயனர்கள் எந்நேரமும் தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு அதற்கு உடனடியாக பதில் பெற்றுக் கொள்ளலாம்.

    பொதுவாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் வாடிக்கையாளர் சேவை மையம் பற்றி அதிகளவு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், இந்த சாட்பாட் ஐ.ஆர்.சி.டி.சி. வாடிக்கையாளர் சேவை மைய அனுபவத்தை மேம்படுத்தும். வாடிக்கைாயளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏ.ஐ. சாட்பாட் உடனடியாக பதில் அளிக்கிறது.



    தற்சமயம் குறுந்தகவல் வகையில் பதில் அளிக்கும் ஆஸ்க்திஷா சாட்பாட் விரைவில் குரல் வடிவில் பதில் அளிக்கும் என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்து இருக்கிறது. ஆஸ்க்திஷா குரல் வடிவம் ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்ட்ராய்டு செயலியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோரோவர் எனும் நிறுவனம் மூலம் இயங்கும் சாட்பாட், முடிந்த வரை பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. இத்துடன் பயனர்கள் பொதுவாக கேட்க நினைத்து டைப் செய்ய துவங்கும் கேள்விகளை சரியாக பரிந்துரை செய்யும். பயனர்கள் வித்தியாசமான கேள்வியை கேட்கும் போது வாடிக்கையாளர் சேவை மைய மின்னஞ்சல் அல்லது தொடர்பு எண் வழங்கும்.

    ஐ.ஆர்.சி.டி.சி.யின் ஆஸ்க்திஷா சாட்பாட் சேவையை பயன்படுத்துவோர், தங்களின் சேவை அனுபவத்தை எமோஜி வடிவில் மதிப்பீடு செய்யவும் முடியும். #irctc #chatbot
    ×