ஜூலை-1 முதல் அதிரடி மாற்றம்: ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்தால் இனி ரூ.500 அபராதம்!

ரயில்வேயின் வருவாய் இழப்பைத் தடுக்கவும், பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Travelling on Trains Without a Ticket Will Now Cost a ₹500 Fine
Published on

இந்திய ரயில்களில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகையை ரயில்வே நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.250 ஆக இருந்த இந்த குறைந்தபட்ச அபராதத் தொகை, தற்போது ரூ.500 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வருகிற ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.

மத்திய அரசின் 'ஜான் விஸ்வாஸ் சட்டம் 2026'-இன் கீழ், ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவுகள் 137 மற்றும் 138-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய விதிமுறைகள்:

டிக்கெட் இல்லாத பயணம்:

ரயில்களில் உரிய டிக்கெட் இன்றி பயணிப்போருக்கு, பயணக் கட்டணத்துடன் கூடுதலாக குறைந்தபட்சம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட நபர் மீது நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்தவர் பெயரில் பயணம்:

வேறொருவரின் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பயணிப்பவர்களின் டிக்கெட் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவருக்கும் ரூ.500 குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்படும்.

பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணிப்பது:

பெண்கள் பயணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் அல்லது இருக்கைகளில் அத்துமீறி பயணிக்கும் ஆண்களுக்கு ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் உடனடியாக ரயிலில் இருந்து இறக்கி விடப்படுவார்கள்.

ரயில்களில் அத்துமீறல் மற்றும் ஆபாச நடத்தை:

ரயிலிலோ அல்லது ரயில் நிலைய வளாகத்திலோ மது அருந்திவிட்டு ரகளை செய்பவர்கள், சக பயணிகளுக்கு இடையூறு தருபவர்கள் மற்றும் ஆபாசமாக பேசுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

அனுமதியின்றி வியாபாரம் மற்றும் பிச்சை எடுத்தல்:

ரயில் பெட்டிகள் மற்றும் நிலையங்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் இதே குற்றத்தைச் செய்தால் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதைக் குறைக்கவும், ரயில்வேயின் வருவாய் இழப்பைத் தடுக்கவும் மற்றும் முறையான பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் இந்த கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் உரிய பயணச்சீட்டுடன், விதிமுறைகளைப் பின்பற்றி பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com