என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் முகூர்த்தக்கால் நட்ட போது எடுத்த படம்.
திருச்சியில் வருகிற 11-ந்தேதி பிரதமர் மோடி-அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம்
- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பஞ்சப்பூர் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது.
- கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி:
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்த தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தமிழகம் வருகை தந்து கூட்டணியை பலப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி தி.மு.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே மக்களுக்கான நல்லாட்சியை தரமுடியும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி கட்சிகளுக்கான இடஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ள நிலையில் மேலும் ஒருசில கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகை தரவுள்ளார். அந்த வகையில் வருகிற 11-ந்தேதி திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேச இருக்கிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்தன.
அதன்படி திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பஞ்சப்பூர் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெறும் இந்த பிரமாண்ட கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவும் பங்கேற்க இருப்பதாகவும், அதற்குள் கூட்டணியை இறுதி செய்யவும் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது.






