என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சு வெங்கடேசன்"

    • மும்பை ரெயில் நிலைய பணிகளால் புறநகர் ரெயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
    • தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு ரெயில்வே.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரெயில் சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதியுற்றுள்ளனர். இதுகுறித்து அரசியல் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தும், பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில், ரெயில் சேவையில் உடனடி மாற்றம் கொண்டுவரவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதற்கு ரெயில்வே துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று எம்.பி. சு. வெங்கடேசன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த பதிவில் அவர், "ரூ. 2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால் புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

    கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ரூ 734 கோடியில் புணரமைக்கபடும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு இரயில்வே.

    சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்க செய்திருக்கும் இந்த நிர்வாக கோழைத்தனத்திற்கு இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா மீண்டும் ரஷிய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல்
    • இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ட்ரம்புக்கு வழங்கினாரா பிரதமர் மோடி?

    ரஷிய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

    இந்தியா மீண்டும் ரஷிய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்தியா மீது 50%ஆக இருந்த வரி தற்போது 18% குறைக்கப்பட்டுள்ளது. இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை அமெரிக்கா சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டது.

    இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கையை விமர்சித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் விமர்சித்து தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க 18% வரிவிதிக்கும் என்றும் அமெரிக்கப் பொருட்கள் குறிப்பாக உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் பியுஷ் கோயல் தனது பதிவில் சோளம், கோதுமை, சோயா, அரிசி பால், சில இறைச்சி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

    ஆனால், கூட்டறிக்கையில் wide range of உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கான வரி நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது.

    அதேநேரத்தில் ரஷ்ய எண்ணெய்யை வாங்க மாட்டோம் என ஒப்புக்கொண்டதால்தான் 25% வரியை நீக்குகிறேன், எண்ணெய் வாங்குவது தெரியவந்தால் மீண்டும் வரிவிதிப்பேன் என தனது உத்தரவில் மிரட்டுகிறார் ட்ரம்ப். இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ட்ரம்புக்கு வழங்கினாரா பிரதமர் மோடி?

    இதை இந்தியாவுக்குச் சாதகமான ஒப்பந்தம் எனக் கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு
    • யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கும் பாராட்டு தெரிவிப்பார்கள்

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்கா - இந்தியா உறவை விமர்சித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தீபாவளிப் பண்டிகையை உலக பாரம்பரியங்களின் பட்டியலில் இனைத்ததற்காக யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு.

    அதே யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கானப் பாராட்டை இன்றைய பட்ஜெட் விவாத்தில் ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

    தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து! இதுதான் பாஜகவின் வெளியுறவுக் கொள்கை" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
    • அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்று தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.

    இந்த பதிவை பகிர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தார் என்பதை உறுதி செய்கிறார் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்.

    இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளைப் பட்டியலிடுகிறார் அமெரிக்க அதிகாரி.

    இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பா.ஜ.க.?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • எம்.எஸ்.தோனியை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சந்தித்து பேசியுள்ளார்.
    • எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படத்தை சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சந்தித்து பேசியுள்ளார்.

    எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படத்தை சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் காளை புகும் கணமும் , கிரிக்கெட் மைதானத்திற்குள் தோனி புகும் கணமும் ஆர்ப்பரிக்கும் …மதுரை ஜல்லிக்கட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மதுரை வரும் பயணத்தின் போது விமானநிலைய ஓய்வறையில்!" என்று பதிவிட்டுள்ளார்.

    • பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
    • இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    மதுரை:

    பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில் தேர்வு அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

    பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.

    இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் என என்னிடம் முறையீடுகள் வந்தன.

    பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்குமாறு இந்திய பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்தேறுகின்றன.
    • குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது மிகவும் சிரமமானதாக உள்ளது.

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடி தீரும் வரை வராக்கடன்களாக அறிவிப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அமெரிக்கா விதித்த கூடுதல் இறக்குமதி வரியின் காரணமாக பல சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) கடுமையான இன்னல்களுக்குள்ளாகியுள்ளன; இதன் விளைவாக வங்கிக் கடன்களைச் செலுத்த முடியாமல், அவை வராக்கடன்களாக (NPAs) ஆக மாறும் அபாயமும் உள்ளது என எனது கவனத்திற்கு தொழில் முனைவோர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி குறு சிறு நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்தேறுகின்றன. ஜவுளி, கடல் உணவு, நகைகள் ஆகிய துறைகள்—அமெரிக்காவுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25% பங்கைக் கொண்டுள்ள இவை - மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்தத் துறைகளில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 70% க்கும் அதிக பங்கு உள்ளது. இரசாயன துறையும் கடும் பாதிப்பை எதிர்கொள்கிறது; அந்தத் துறையின் ஏற்றுமதியில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 40% பங்கு உண்டு.

    தமிழ்நாட்டில் இத்தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது, ஏனெனில் இது ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய மாநிலமாகும்; இவற்றில் பெரும்பாலான அலகுகள் குறு சிறு நடுத்தர தொழில்களை சேர்ந்தவையே. வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் அறிவுறுத்தலின்படி, விநியோகங்கள் ஒத்திவைக்கப்பட்டதால் திடீரெனக் கையிருப்புகள் அதிகமாகக் குவிந்து வருகின்றன. நூற்பு முதல் உடை தயாரிப்பு வரை உள்ள முழு வழங்கல் சங்கிலியும், இந்த வரிப் போரின் காரணமாக கடந்த மாதத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது மிகவும் சிரமமானதாக உள்ளது.

    இந்த நிலைமை குறு சிறு நடுத்தர தொழில்கள், வங்கிகளின் கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதை கடினமாக்கி கடன் செலுத்த தவறும் கடன்களை வராக்கடன் வகைக்கு தள்ளக்கூடும்; இதன் விளைவாக அந்நிறுவனங்களின் எதிர்காலக் கடன் பெறும் தகுதியும் பாதிக்கப்படும்.

    இந்தச் சூழலில், ஒன்றிய நிதியமைச்சரின் உடனடி தலையீட்டை நாடுகிறேன். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) விதிமுறைகளை தளர்த்தவும், இந்த நெருக்கடியின் போது குறு சிறு நடுத்தர தொழில்களின் கடன் கணக்கை, வராக்கடனாக வகைப்படுத்தாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த செய்யுமாறும் வேண்டுகிறேன். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு மேற்கண்ட இறக்குமதி வரி உயர்வு பிரச்சினையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை இந்த நிவாரணம் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல...
    • பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

    உலகின் முதல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்றும் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்தான் எனவும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,

    பா.ஜ.க.வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.

    நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். 

    • ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்?
    • அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஏற்கனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென இராஜினாமா செய்தார்.

    அதன் பிறகு அவர் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்தான். அக்கட்சியால்தான் அந்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார்.

    அவ்வளவு பெரிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டுப் போனவர் என்னவானார் என்று இதுவரை நாட்டுக்குத் தெரியவில்லை.

    இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க டில்லி விமான நிலையத்திற்கு நான்கு ஒன்றிய அமைச்சர்கள் சென்றுள்ளனர்.

    ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்? எங்கே அனுப்பிவைத்தீர்கள்?

    அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?

    பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து குடியரசு துணைத்தலைவரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது.

    ஆளையே காணோம் என்ற பதட்டத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
    • மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.

    சென்னை:

    மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    *தமிழ் புறக்கணிப்பு*

    *இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரெயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்?*

    மத்திய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.

    ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

    இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.

    ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன். 



    • இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
    • நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.

    சென்னை:

    மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது. இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளுக்கு மாறாக சூழல் கூருணர்வு மிக்க பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.

    காலநிலை மாற்றம் கொண்டு வரும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.




    • ஜெகதீப் தன்கர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது.
    • அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்.

    அவர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?

    பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×