என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரெயில் சேவை பாதிப்பு: நிர்வாக கோழைத்தனத்திற்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் - சு வெங்கடேசன் எம்.பி.
- மும்பை ரெயில் நிலைய பணிகளால் புறநகர் ரெயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
- தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு ரெயில்வே.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரெயில் சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதியுற்றுள்ளனர். இதுகுறித்து அரசியல் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தும், பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில், ரெயில் சேவையில் உடனடி மாற்றம் கொண்டுவரவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதற்கு ரெயில்வே துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று எம்.பி. சு. வெங்கடேசன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த பதிவில் அவர், "ரூ. 2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால் புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ரூ 734 கோடியில் புணரமைக்கபடும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு இரயில்வே.
சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்க செய்திருக்கும் இந்த நிர்வாக கோழைத்தனத்திற்கு இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.






