என் மலர்
நீங்கள் தேடியது "திமுக தொண்டர்கள்"
- ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது.
- உடன்பிறப்புகள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ்க் கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் வெளிநாட்டிலிருந்து எழுதும் மடல்.
ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களை உடன்பிறப்புகள் அறிந்திருப்பீர்கள்.
ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்தி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஆகஸ்ட் 30 அன்று ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "2021 முதல் இதுவரை 10 இலட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன" என்பதையும், இதுவரை நான் பயணம் மேற்கொண்ட ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களையும் அவற்றில் முழுமையடைந்த திட்டங்கள், செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள் என அனைத்தையும் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்து, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தினரின் உள்ளன்பான வாழ்த்துகளையும் பெற்று விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்திற்கு வந்தேன்.
அங்கு எமிரேட்ஸ் விமான சேவையின் 25-ஆம் ஆண்டு விழா கேக் வெட்டும் நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது. மாண்புமிகு துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உடனிருந்தார். எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, நானும் என் துணைவியாரும், அரசு அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களுடன் விமானத்தில் துபாய் வழியாக ஆகஸ்ட் 30 சனிக்கிழமை இரவு ஜெர்மனியில் NRW எனப்படும் நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தலைநகரான டசெல்டோர்ஃப் விமான நிலையத்தில் தரையிறங்கினோம்.
தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக உங்களில் ஒருவனான என் வழிகாட்டுதலின்படி முன்கூட்டியே ஜெர்மனி நாட்டிற்கு வந்திருந்த மாண்புமிகு தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான தம்பி டி.ஆர்.பி.ராஜா விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றார். NRW மாநில அரசின் சார்பாகத் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசு முறை வரவேற்புப் பிரிவைச் சார்ந்த திருமிகு அன்யா டி வூஸ்ட், பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பாளர் திரு.அபிஷேக் துபே, ஃப்ராங்க்பர்ட் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் பொறுப்பில் உள்ள திரு.விபா காந்த் ஷர்மா ஆகியோர் மகிழ்வுடன் வரவேற்றனர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் நிலையில், ஜெர்மனி நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளின் வரவேற்பு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அந்த மகிழ்ச்சியுடன் டசெல்டோர்ஃப் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ஓர் இன்ப அதிர்ச்சி.
அந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர். குழந்தைகள் பதாகை ஏந்தி அன்பைப் பொழிந்தனர். அவர்களின் பாசம் மிகுந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுவிட்டு, கொலோன் நகரில் உள்ள 120 ஆண்டு பெருமையுள்ள எக்ஸல்ஸியர் ஹோட்டலுக்கு வந்தோம்.
புகழ்பெற்ற ரைன் நதியின் கரையோரமாக அது கட்டப்பட்டுள்ளது. கொலோன் நகரின் அந்த ரைன் நதிக்கரையில்தான் வடஐரோப்பாவின் பழமையானதும் உயரமானதுமான தேவாலயம் ஒன்று உள்ளது.
நாங்கள் ஹோட்டலுக்குச் சென்ற அன்றைய இரவு நேரத்திலும் ஹோட்டல் பகுதியிலும் தெருக்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தனர். என்ன விவரம் என்று கேட்டேன். லைட்ஷோ என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். கொலோன் நகரில் நடந்த வாணவேடிக்கைகளை ரசித்தபோது மனதெங்கும் தமிழ்நாட்டின் நினைவுகள் மத்தாப்பூகளாகச் சிதறின.
மறுநாள் காலையில் எழுந்ததும், அந்த இனிய வேளையில் ரைன் நதிக் கரையோரமாக நடைப்பயிற்சியை மேற்கொண்டேன். முந்தைய இரவுதான் அங்கே பெருங்கூட்டத்துடன் வாணவேடிக்கை நடந்தது. தின்பண்டங்களுடன் மக்கள் அதனை இரசித்தபடி இருந்தனர். ஆனால், அப்படியொன்று நடந்ததற்கான சுவடே தெரியாமல் அவ்வளவு தூய்மையாக அந்தப் பகுதி இருந்தது. கொலோன் நகர நிர்வாகத்தின் விரைவான -தூய்மையான பணியை வியந்தபடி நடைப்பயிற்சி சென்றேன். ஜெர்மனியர்கள் பலரும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். காலை நேரத்தில் நம் பணிகளுக்கான முதல் ஊக்கமாக அமைவது இத்தகைய பயிற்சிதான் என்ற விழிப்புணர்வுடன் அவர்கள் உடல் கட்டமைப்பை சீராக வைத்திருப்பதைப் பார்த்தேன்.
சென்னையில் இருந்தாலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தாலும், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு வந்தாலும் காலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதை உங்களில் ஒருவனான நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். பொதுவாழ்வுப் பணிகளில் ஏற்படும் களைப்பு - சலிப்பு எதுவும் என்னை நெருங்கவிடாமல் தொடர்ந்து உழைப்பதற்கு அது ஊக்கசக்தியாக உள்ளது. அன்பு உடன்பிறப்புகளும் நடைப்பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு, உடல்நலன் காத்து, உங்கள் குடும்பத்திற்கும் கழகத்திற்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
நடைப்பயிற்சியில் என்னுடன் வந்த தம்பி டி.ஆர்.பி.ராஜா ஜெர்மனியில் எந்தெந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றன, அந்த நிறுவனங்கள் என்ன உற்பத்தி செய்கின்றன, அவற்றின் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அவற்றைக் கவனமாகக் கேட்டுக்கொண்டதுடன், என்னுடைய செயலாளரிடம், தமிழ்நாட்டின் நிலவரங்கள் குறித்து கேட்டேன்.
சென்னையில் அன்றைய இரவு கடுமையான மழை பெய்த விவரம் அறிந்ததும், மாநகராட்சி கமிஷனருக்கு போன் செய்து கேட்டபோது, மணலியில் மட்டும் 27 செ.மீ. மழை பெய்தது என்றும், சென்னையின் பல இடங்களிலும் இரவில் கடும் மழை என்றும் தெரிவித்ததுடன், எந்தப் பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை என்பதையும், சுரங்கப்பாதை எதுவும் மூடப்படவில்லை என்பதையும் தெரிவித்தனர். அதிகாரிகள் குமரகுருபரன், கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் களத்தில் நின்று, மழை அதிகமாகப் பெய்த இடங்களில் தண்ணீரை உடனடியாக வெளியேற்றும் பணிகளை முழுமையாக நிறைவேற்றியதைத் தெரிவித்தனர்.
துணை முதலமைச்சர் தம்பி உதயநிதிக்கு போன் செய்து, சென்னையில் இரவு பெய்த கனமழை பற்றிய விவரம் கேட்டபோது, அவர் அனைத்துத் துறைகளுடனும் தொடர்புகொண்டு பணிகளை விரைவுபடுத்தியதையும், சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்பதையும் தெரிவித்தார். எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது.
அந்த நேரத்தில், மனதை பாரமாக்கும் வகையில் அண்ணன் வீரபாண்டியார் அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி.லீலா ஆறுமுகம் அவர்கள் மரணமடைந்த செய்தி வந்தது. உடனே, வீரபாண்டியாரின் மகன் தம்பி பிரபுவைத் தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்து, ஆறுதல் கூறினேன். நடைப்பயிற்சி முடித்து, ஒரு காபி சாப்பிட்டுவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பி, அன்றைய சந்திப்புகளைத் தொடர்ந்தேன்.
ஆகஸ்ட் 31 மாலையில் நம் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு நேரம். ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்களுடனான சந்திப்பு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஸ்வீடன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தனர். கழகத்தின் சார்பில் தம்பி டி.ஆர்.பி.ராஜா செயலாளராக இருந்து தொடங்கிய NRTIA எனும் வெளிநாடு வாழ் இந்தியத் தமிழ்ச் சங்கத்தைத் தற்போது அயலக அணிச் செயலாளர் தம்பி எம்.எம்.அப்துல்லா செயலாளராக இருந்து சிறப்பாக நடத்தி வருகிறார். ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள நமது NRTIA நிர்வாகிகள் நல்ல முறையில் ஒருங்கிணைத்திருந்தனர்.
ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்களைக் காண்பதற்கு உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றதால், நமது பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை, மேல் துண்டு அணிந்து அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டபோது அங்கிருந்த தமிழர்கள் மகிழ்ந்து வரவேற்றனர். நல்லதொரு வரவேற்புரையை வழங்கினார்கள். அவர்கள் முன், நான் பேச எழுந்தபோது, கடல் கடந்து வாழ்கின்ற தமிழ்ச் சொந்தங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது.
"நில எல்லைகளும், கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது. கண்டங்களைக் கடந்துவிட்டாலும் நம்முடைய தொப்புள் கொடி அறுந்துவிடவில்லை" என்பதை அவர்கள் முன் சொன்னபோது கைத்தட்டி வரவேற்றனர். "திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஓடோடி வந்து உதவுகிறோம் என்பதைத் சொல்லி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் வகையில் முதலீடு செய்ய வாருங்கள். ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வாருங்கள். உங்கள் உறவாக - உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்" என்ற உறுதியை அளித்தேன்.
எந்த வெளிநாடுகளுக்கு நான் சென்றாலும் அங்கே உள்ள தமிழ்க் குழந்தைகள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல வகை நடனங்கள், பாடல்கள், பறை இசை, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவது வழக்கம். அவற்றைக் கண்டு ரசிக்கும்போது உள்ளூரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. புதுப்புது கலை வடிவங்களை நாம் இரசித்தாலும் நம் பாரம்பரிய கலைகளை நம் குழந்தைகள் கற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்தும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படுவது இயற்கை. உடன்பிறப்புகள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ்க் கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெர்மனியில் தமிழர்களுடனான சந்திப்பை நடத்துவதில் ஒத்துழைப்பு வழங்கியதுடன் ஐரோப்பாவில் தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தமிழ்ச் சங்கங்களின் சேவைகளைக் கேட்டு மகிழ்ந்து, அந்த சங்கங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினேன்.
என்னையும் தங்களில் ஒருவனாகக் கருதிய ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பா வாழ் தமிழர்கள், என்னிடமும் அருகில் இருந்த என் துணைவியாரிடமும் குடும்பம் குடும்பமாக வந்து படம் எடுத்து அன்பை வெளிப்படுத்தினர். அந்தப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.
தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த NRTIA நிர்வாகிகளான துணை அமைப்பாளர்கள் இளந்தென்றல், ஜோசப்பைன் ரம்யா, அபிராமி, கல்வியாளர் நாககுமார் கங்கேஸ்வரன், டசல்டர்ஃப் ஜே.பி.செந்தில்குமார், மியூனிக் சத்தியமூர்த்தி, சாமிநாதன், மேன்ஹெய்ம் மோகன்ராஜ், டூயிஸ்பெர்க் சிஜூ, கொலோன் நிஷாந்த், விசாகர், டுட்லின்கன் டாக்டர் ஆதித்யா, லீப்சிக் கோபிநாத் பாலசுப்பிரமணியன், பசேல் ரேகா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
சந்திப்பு நிகழ்வு அரங்கிலும் மனதிலும் நிறைவடைந்த நிலையில், புகழ்பெற்ற கொலோன் தேவாலயத்திற்குச் சென்று அதன் பிரம்மாண்டக் கட்டமைப்பைக் கண்டேன். யுனெஸ்கோ அமைப்பினால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த தேவாலயம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதைப் பார்த்தபோது நம் தமிழ் மண்ணின் பழங்காலக் கலைப்படைப்புகள் நினைவுக்கு வந்தன. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தஞ்சை பெரியகோயில் கோபுரமும், ஆழிப்பேரலையை எதிர்கொண்டு குமுரி முனையில் நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மனதில் உயர்ந்து நின்றன.
தேவாலயத்தின் பழமையையும் பெருமையையும் பார்த்தபிறகு அறிவாலயமாகத் திகழும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்திற்குச் சென்றேன். பழந்தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகள், அண்ணாவின் ஓர் இரவு உள்ளிட்ட பல தமிழ்ப் புத்தகங்களின் முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் நூல்கள் - ஆவணங்களைக் கொண்ட அந்தத் தமிழ்த்துறை மற்றும் நூலகத்தைக் காப்பாற்றும் வகையில் அதன் வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு 2021-இல் ரூ. 1.25 கோடியும், கடந்த ஜூலையில் ரூ. 1 கோடியே 64 ஆயிரமும் என இரண்டு முறை நிதி அளித்துள்ளது. அந்த நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, ஜெர்மனியில் தமிழ்ப் பணி தொடர்கிறது என மகிழும் வகையில் தமிழ்த்துறை நூலகத்தில் பொறுப்பில் உள்ள Dr.Sven Wortmann, Mr.Sharon Nathan, Mrs.Daria Lambercht ஆகியோரின் தமிழார்வம் அமைந்திருந்தது. தமிழில் எங்களுக்கு வரவேற்பளித்து, ஓலைச்சுவடிகளைப் பராமரிப்பதில் தங்களுக்குள்ள சிரமங்களை அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டு, சிலவற்றைத் தமிழ்நாட்டில் பாதுகாக்குமாறு சொல்லி வழங்கினர். அவற்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைத்துப் பாதுகாக்கும் எண்ணத்துடன் பெற்றுக் கொண்டேன்.
தமிழ் மணம் வீசிய கொலோன் பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் போனதே தெரியவில்லை. உலகின் எந்த மூலையிலிருந்தோ தமிழ் மீது ஆர்வம் கொண்டு ஆய்வில் ஈடுபடும் மொழியியல் அறிஞர்களுக்கு இந்த நூலகம் துணை நிற்பதையும், நூலகங்களின் பயனையும் தேவையையும் கருதி, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் சென்னையில் அமைத்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல, திராவிட மாடல் ஆட்சியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டிருப்பதுடன் திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும் உலகத் தரத்திலான நூலகங்கள் அமைக்கப்பட்டு வருவதை எண்ணி மகிழ்ந்தபடியே கொலோன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியே வந்தேன்.
ஜெர்மனியில் இரவு 8 மணிக்கு மேல்தான் இருட்டுகிறது. அதுவரை சூரியன் ஒளி வீசுகிறான். இருட்டும் நேரத்தில் ஹோட்டலுக்குத் திரும்பியபோது இரவு நேரத் தமிழ்நாட்டு உணவு ஏ2பி உணவத்திலிருந்து வந்திருந்ததுடன், கடலூர் தொ.மு.ச.வின் மூத்த நிர்வாகியின் மகளான திருமதி. அகிலா நாராயணன் அவர்கள் நடத்தும் மெட்ராஸ் கபேவிலிருந்தும் சுவையான உணவு வந்திருந்தது. தமிழ்நாட்டின் கைப்பக்குவத்துடனான இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றேன்.
செப்டம்பர் 1 - திராவிட மாதத்தின் முதல் நாள். கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரான தம்பி டி.ஆர்.பி.ராஜா ஆண்டுதோறும் அணியின் சார்பில் முன்னெடுக்கும் திராவிட மாதம் நிகழ்ச்சிகளைப் பற்றிய முன்னோட்டக் காணொளியை அனுப்பியிருந்தார். திராவிட மாதத்தின் முதல் நாள், ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு முக்கியமான நாள். முதலீடுகளை ஈர்க்கும் நாள். கொலோன் நகரத்திலிருந்து புறப்பட்டு, டசல்டோர்ஃப் நோக்கிப் பயணித்தோம். ஒரு மணி நேர கார் பயணத்தில், நிறுவனங்கள் குறித்தும், எந்தெந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும், அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா, எனது செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ். ஆகியோருடன் ஆலோசித்தபடியே சென்றேன்.
டசல்டோர்ஃப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, பி.எம்.டபிள்யூ காரில் கையெழுத்திட்ட படத்தை அந்த நிறுவனத்தினர் எனக்குப் பரிசாக அளித்தபோது நெகிழ்ந்தேன். பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அவர்களிடம் நான், சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு 2024-இல் ஒப்பந்தம் போடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டி, ஒன்றரை ஆண்டுக்குள் உற்பத்தியைத் தொடங்கிய வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அரசு தரப்பிலான ஒத்துழைப்பு, அவர்களின் மின்வாகன உற்பத்திக்கேற்ற திறன்மிகு பணியாளர்களைச் சொந்த மாவட்டத்திலேயே உருவாக்கித் தந்தது, முதல் கார் விற்பனையை நானே நேரில் சென்று தொடங்கி வைத்தது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முழுமையான ஒத்துழைப்புகளை விளக்கினேன். மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் முதலீடு செய்ய முன்வந்தனர். தமிழ்நாட்டிற்கு 3,201 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
மதிய உணவு நேரம் நெருங்கியிருந்தது. தொழில் நிறுவனங்களுடன் சந்திப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் ஒரு கார் மியூசியம் இருப்பதை அறிந்ததும் எனக்கு ஆர்வம் அதிகமானது. பழைய கார்களின் அருங்காட்சியகம் அது. எனக்கு பழைய நாட்களின் நினைவுகள் வந்தன. இளைஞரணி தொடங்கப்பட்டு அதன் கிளைகளை மாநிலம் முழுவதும் தொடங்கியபோது, ஒவ்வொரு ஊராக கார்ப்பயணம்தான். அப்போதைய இளைஞரணி மாநில நிர்வாகிகள் அனைவரும் ஒரே காரில்தான் நெருக்கியடித்து உட்கார்ந்து பயணிப்போம். கார் ஓட்டுவது நான்தான். இரவு நேரத்தில் மற்ற நிர்வாகிகள் காரிலேயே தூங்கிவிடுவார்கள். எனக்குக் காரில் ஏறினால் அப்போதும் இப்போதும் தூக்கம் வராது. அதனால் விடிய விடிய கார் ஓட்டிச் செல்வேன். அப்போதிருந்த கார்களைவிட இப்போது அதிநவீன கார்கள் வந்துவிட்டாலும், பழைய கார்கள் என்றால் இளமையான நினைவுகள்தான்.
கார் மியூசியத்தில் பென்ஸ் கம்பெனியின் உலகின் முதல் கார் இருந்தது. மூன்று வீல்களை மட்டுமே கொண்ட அந்த காரை இயக்கிப் பார்த்தேன். இங்கிலாந்து அரசர் பயன்படுத்திய கார், இளவரசர் பயன்படுத்திய முதல் ரேஸ் கார், ரஷ்ய அதிபர் பயன்படுத்திய கார், உள்ளிட்ட பல நிறுவனங்களின் பலவகைக் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், வாழ்க்கை விரைந்து பயணிப்பதையும் நினைவுபடுத்தும் சிறப்பான அந்த மியூசியத்தைப் பார்த்துவிட்டு, மதிய உணவுக்குப்பிறகு முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் புறப்பட்டேன்.
NRW மாநில அரசின் சார்பில் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை செயலாளர் அருண் ராய் ஐ.ஏ.எஸ் பேசும்போது, இந்தியாவில் தமிழ்நாடு எந்தளவு பொருளாதாரத் துறையில் வளர்ந்துள்ளது என்பதையும், தேசிய சராசரியைவிடத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதன் காரணம், தொழில் வளர்ச்சிக்கேற்ற தமிழ்நாட்டில் உள்ள கட்டமைப்புகள் ஆகியவை பற்றி சிறப்பாக விளக்கி, முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்து, உற்பத்தியைத் தொடங்கியுள்ள நிறுவனங்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது, அங்கு வந்திருந்த முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.
தொழில் – உற்பத்தி - வர்த்தகம் மூன்றின் நுணுக்கங்களையும் நன்கறிந்திருக்கும் தொழில்துறை அமைச்சரான தம்பி டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, "ஐரோப்பாவின் இதயத்துடிப்பாக ஜெர்மனி உள்ளது. அதுபோல இந்தியாவின் இதயத்துடிப்பு தமிழ்நாடு. இரண்டுமே உற்பத்தித் துறையை வளர்த்தெடுக்கும் அரசுகள். தமிழ்நாட்டில் நீங்கள் நம்பிக்கையுடன் முதலீடுகளை செய்யலாம்'' என்று சொல்லி, கடந்த நான்காண்டுகால திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சியை சிறப்பாக விளக்கினார்.
என்னுடைய முதல் ஜெர்மனி பயணத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டு உரையைத் தொடங்கும்போது, இந்தியா எனும் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இருக்கிற தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராகப் பங்கெடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துகொண்டு, நான் வெறும் முதலீட்டுக்காக இங்கு வரவில்லை என்பதையும், ஜெர்மனி - தமிழ்நாடு எனும் இரண்டு பொருளாதார அரசுகளுக்கிடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என்பதையும் சுட்டிக்காட்டினேன். ஜெர்மனியைப் போலவே தமிழ்நாட்டிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதையும், நிறுவனங்களுக்கேற்ற திறனை ஊக்குவிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதையும் எடுத்துக்கூறி, தொழில்வளர்ச்சிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் உங்களுடனான ஒரு பார்ட்னர் போல அரசு செய்து தரும் என்ற உறுதியை அளித்து, இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது என்ற நம்பிக்கையை விதைத்தேன்.
இந்தியாவில் பல மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஜெர்மனியில் முயற்சித்ததையும், நாம் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்கட்டமைப்பை அறிந்துகொள்ள முடிந்தது என்றும் அங்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
எந்த நாட்டில் முதலீடுகளை ஈர்க்கிறோமோ அந்த நாட்டிற்கு, முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதலமைச்சரே நேரில் வந்து முதலீட்டாளர்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது, அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதற்கு NRW மாநிலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.
காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
செப்டம்பர் 2 அன்று காலையில் NRW மாநிலத்தின் மினிஸ்டர்-பிரசிடென்ட்டை சந்திக்கும் நிகழ்வு. NRW-வின் மினிஸ்டர் பிரசிடென்ட் திரு. ஹென்ரிக் வுஸ்ட் என் மீது அன்புகொண்டு, நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் தனது அரசின் உயரதிகாரிகளுடன் தனது கான்வாயையும் அனுப்பியிருந்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சரான உங்களில் ஒருவனான எனக்கு ஜெர்மனி நாட்டின் ஒரு மாநிலத் தலைமை அமைச்சர் முழு மரியாதை அளித்து தன் இடத்திற்கு அழைத்ததை, தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட மரியாதையாகவே கருதுகிறேன்.
பயண நேரத்தில், சென்னையில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில், அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பையும் அதில் நான்காண்டு காலத் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள், வாக்குறுதி தராமலேயே நிறைவேற்றப்பட்ட முன்னோடித் திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டதையும் கேட்டறிந்தேன். அதுபோல, இந்தியா மீது அமெரிக்க அதிபர் விதித்த வரிச்சுமையால் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்படுவதைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் திருப்பூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய விவரங்களையும் கேட்டேன். ஜெர்மனி சாலைகளிலும் தமிழ்நாட்டு நினைவுகளே எனக்குள் பயணித்தன.
ஒன்றரை மணி நேரம் கழித்து, NRW மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை அடைந்தோம். வாசலிலேயே காத்திருந்து வரவேற்றார் மினிஸ்டர்-பிரசிடென்ட் ஹென்ரிக் வுஸ்ட். கற்களால் பழமையாகக் கட்டப்பட்டிருந்த தலைமைச் செயலகக் கட்டடத்தின் உள்ளே சென்றால் அதிநவீனமாக இருந்தது. அங்கிருந்த விசிட்டர் புத்தகத்தில், "NRW - தமிழ்நாடு இணைந்து வெற்றிபெறுவோம்" என எழுதிக் கையெழுத்திட்டேன்.
முதலீட்டாளர் மாநாட்டை டசல்டோர்ஃப்பில் நடத்தியது பற்றியும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து அறிந்ததையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஹென்ரிக் வுஸ்ட். தமிழ்நாட்டுடன் எந்தெந்த வகையில் NRW இணைந்து செயல்படுவது என்பது குறித்து அவர் என்னிடம் ஆலோசித்தார். திறன் மிகுந்த பணியாளர்கள் பற்றி பேசும்போது, "நான் முதல்வன் திட்டம் என்பது எனது கனவுத் திட்டம். அதன் மூலம் பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் நிறுவனங்களுக்கேற்ற திறன் பயிற்சி அளிக்கிறோம். உங்கள் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன் பயிற்சியை நான் முதல்வன் மூலம் அளித்து, அதற்கேற்ற பணியாளர்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்றேன்.
தமிழ்நாட்டின் பாரம்பரியப்படி ஹென்ரிக் வுஸ்ட் அவர்களுக்குப் பட்டுத்துண்டு அணிவித்துச் சிறப்பித்தேன். பாரம்பரிய ஓவியம் ஒன்றையும் பரிசளித்தேன். அவரும் அவர்கள் மாநிலத்தின் பாரம்பரியப் பொருட்கள் அடங்கிய பரிசுக்கூடையை அன்புடன் வழங்கினார். அவரிடம் விடைபெற்று, திரும்பி வரும்போது வழியில் ஒரு தமிழர் நடத்தும் உணவகத்தில் சாப்பிட்டோம்.
ஏறத்தாழ தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், NRW மாநிலத்தின் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடல் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன்.
அங்கே உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளரான நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றுகிறேன். லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
- ஆலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் தி.மு.க.வில் மாநில துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் இவரது வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு இன்று காலை 3 கார்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறையினர் சோதனைக்கு வந்தனர். அப்போது வீட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி இருந்தனர். சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தெரிவித்து விட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில்குமார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சீலப்பாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கும் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா தனது கணவர் துவாரகநாதன் மற்றும் குழந்தைகளுடன் கோவிந்தாபுரம் வள்ளலார் நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கும் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமாக ஆத்தூர் தொகுதி சிங்காரக்கோட்டையில் ஏற்றுமதி தரம் கொண்ட நூற்பாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளை அவரது மருமகன் துவாரகநாதன் கவனித்து வருகிறார். தற்போது அந்த ஆலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் நிறுத்தப்பட்டனர். சோதனை குறித்து அறிந்ததும் அமைச்சர் ஐ.பெரியசாமி, செந்தில்குமார் வீடுகள் முன்பு ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
அமைச்சர் ஐ.பெரியசாமி மீது ஏற்கனவே வீட்டு வசதி துறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளருக்கு வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுதலை பெற்ற நிலையில் மீண்டும் அந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே தற்போது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து முதல் முறையாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது சோதனை நடைபெற்று வருகிறது.
- என் கட்சி, என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் தொண்டர்கள்.
- உங்களில் ஒருவனான என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
நம் இதயமெல்லாம் நிறைந்து, நம்மை எந்நாளும் வழிநடத்தும் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாளைச் செம்மொழிநாளாக ஒவ்வொரு உடன்பிறப்பும் தங்கள் இல்லத்து விழாவைவிடவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் கொண்டாடி மகிழவுள்ள தருணத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, கழக வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது. மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் மதுரை மண்ணுக்கேயுரிய கோலாகலத்துடன் 'பொதுக்குழுவா கழக மாநாடா!' என்று பிரமிக்கத்தக்க வகையில் எழுச்சிமிக்க கொள்கை நிகழ்வாகச் சிறப்பாக நடத்திக் காட்டிவிட்டார்.
மே 31 மாலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து 22 கி.மீ. தூரத்திற்கான ரோடுஷோவில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று அன்பை வெளிப்படுத்தினர். சிறுவர் -சிறுமியர், பள்ளி - கல்லூரி மாணவர்கள், பெண்கள், வயதில் மூத்தவர்கள் என எல்லா வயதினரும் கையசைத்தும், கை கொடுத்தும், செல்ஃபி எடுத்தும், இருவண்ணக் கொடியை அசைத்தும் வரவேற்பளித்தனர். ஏறத்தாழ 5 மணிநேரத்திற்கு மேல் மக்கள் வெள்ளத்தில் நீந்தி, மதுரையில் கழகத்திற்கு அடித்தளமிட்ட மாவீரரும் - மதுரை மாநகராட்சியின் முதல் மேயருமான மதுரை முத்து அவர்களின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து சேர்ந்து, தலைவர் கலைஞருடன் இணைந்து கழகம் வளர்த்தவருடைய சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
ரோடுஷோ வழியில் பந்தல்குடி எனுமிடத்தில் பகுதியை முதலமைச்சரான என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அந்த இடத்திற்கு மாலை சென்றபோது, என் வாகனத்தை விட்டு இறங்கி, அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தையும் கேட்டு, அதனை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டேன்.
துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ.க. மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, கழகத்தை விமர்சிப்பதையே முழுநேர - பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்.
இரவு, மதுரையில் அண்ணன் அழகிரி அவர்களையும் சந்தித்து நலன் விசாரித்தேன். தங்கும் விடுதிக்கு வந்து சேர இரவு 11 மணி ஆனபோதும், பந்தல் அமைந்த இடத்துக்கு நேரே சென்றேன். மறுநாள் நடைபெறும் பொதுக்குழு குறித்த ஆலோசனைகளை அமைச்சர் மூர்த்தியிடம் நடத்திவிட்டு, அதன்பிறகே உறங்கச் சென்றேன்.
ஜூன் மாதம் என்பது, நமக்குத் தலைவர் கலைஞர் மாதம். அதன் முதன் நாளில், கலைஞர் அவர்களால் எனக்குப் பொறுப்பு வழங்கப்பட்ட இளைஞரணி தொடங்கி வைக்கப்பட்ட மதுரையில் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுவுக்குக் காலையில் புறப்பட்டுச் சென்றபோது, வழியெங்கும் பொதுமக்களும் தொண்டர்களும் திரண்டிருந்து வரவேற்பளித்து, வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.
கழகத்தின் இரத்தநாளங்களாக இருக்கும் இந்த உண்மைத் தொண்டர்களின் பிரதிநிதிகளாகத்தான் கழகத்தின் இதயமான பொதுக்குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் இருக்கிறார்கள். இதயமும் இரத்தநாளங்களும் எப்போதும் இணைந்து சீராகச் செயல்பட்டால்தான் கழகம் எனும் நம் உயிர் வலிவோடு நீடித்திருக்கும் என்பதை எண்ணியபடியே பொதுக்குழு நடைபெற்ற உத்தங்குடி கலைஞர் திடலுக்கு வந்து சேர்ந்தேன்.
வந்திருப்பது மதுரையா, சென்னையா என்று யோசிக்கின்ற அளவுக்குக் கழகத் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை அப்படியே கொண்டு வந்து மதுரையில் வைத்தது போன்ற அமைப்புடன் பொதுக்குழு அரங்கத்தைச் சிறப்பாக அமைத்திருந்தார் மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி. அவருடன் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேடபட்டி மணிமாறன் மற்றும் மதுரை கழக நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து, பொதுக்குழு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். உணவு ஏற்பாடுகளும் மதுரைக்கேயுரிய மணத்துடன் சுவையாக அமைந்திருந்தது.
ஏறத்தாழ 7000 பேர் திரண்டிருந்த பொதுக்குழுவில், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியின் வழியே நடந்து சென்று, அவர்களின் வாழ்த்துகளைப் பெற்று, வணக்கத்தைத் தெரிவித்து மேடைக்குச் சென்றேன். கழகப் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. இராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் தலைமைக் கழக நிர்வாகிகளும் பங்கேற்கப் பொதுக்குழு எழுச்சியுடன் தொடங்கியது. துணைப் பொதுச்செயலாளர் தங்கை கனிமொழி எம்.பி., இந்தியாவின் பாதுகாப்பு குறித்து ரஷியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் குழுவிற்குத் தலைமையேற்றுச் சென்றிருப்பதால் அவரால் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்க முடியவில்லை.
வரவேற்புரையை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்க, இரங்கல் தீர்மானங்களைக் கழகச் செய்தித் தொடர்புத்துறைத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் வாசிக்க, அதனைத் தொடர்ந்து தீர்மானக்குழுத் தலைவர் வழக்கறிஞர் தமிழ்தாசன் அவர்களும் மற்றவர்களும் ஒவ்வொரு தீர்மானமாகப் படிக்க, அவற்றைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலியால் நிறைவேற்றித் தந்தனர். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு கழகம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் தொடர்பான 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகத்தில் தற்போது 23 சார்பு அணிகள் உள்ள நிலையில், புதிதாகக் கல்வியாளர் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி என இரண்டு அணிகள் தொடங்கப்படவிருப்பதையும், அதற்குரிய சட்டத்திருத்தங்களையும் கிரிராஜன் எம்.பி. வாசித்தார். கழகத் தணிக்கைக் குழு அறிக்கையைச் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அளித்தார்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பிறந்தநாளைச் செம்மொழி நாளாக நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதில் தொடங்கி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வையும் அதனுடன் கூட்டணி வைத்துத் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.க.வையும் மக்களின் ஆதரவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி, திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது வரையிலான 27 தீர்மானங்களும் உடன்பிறப்புகளாம் உங்கள் மீது உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சிறப்புத் தீர்மானமாக, 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை கழகத் தலைவர் என்ற முறையில் நானே பொதுக்குழுவில் அறிவித்து, அதனை முழுமையாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடைமுறையைக் கழகச் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. காணொலித் திரை வாயிலாக விளக்கினார். இன்றைய அரசியல்களத்தில் சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருப்பதால், அதனை நாம் எப்படி கையாளவேண்டும் – அதற்கான கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் - அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா விளக்கினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை பொதுக்குழுவில் கழகத் தொண்டர்களாம் உங்களின் குரலாக மண்டலத்திற்கு ஒருவர் என்ற முறையில் இளைய நிர்வாகிகளும் - மூத்த நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைப் பொதுக்குழு மேடையில் பதிவு செய்தனர். பொதுக்குழு இதயம் என்றால், அதில் உடன்பிறப்புகளின் குரல்தான் இதயத்துடிப்பு. அந்தத் துடிப்பின் ஓசை எப்படி இருக்கிறது என்பதைக் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.
துணைப் பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி, ஆ.இராசா எம்.பி., கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் ஆகியோர் உரையாற்றியபிறகு, நான் தலைமையுரையாற்ற எழுந்தபோது, எதிரில் இருப்பவர்கள் ஏழாயிரம் பேராகத் தெரியவில்லை. இரண்டு கோடி உறுப்பினர்களான உடன்பிறப்புகள் அத்தனை பேரையும் மனக்கண்ணால் பார்த்தபடிதான் பேச்சைத் தொடங்கினேன். மக்கள் பாராட்டுகின்ற - இது தொடர வேண்டும் என விரும்புகிற திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்திட, ஏழாவது முறையாக தி.மு.க. அரியணை ஏறிட உடன்பிறப்புகளான உங்களின் உழைப்புதான் முதன்மையானது.
எந்தப் பதவியையும் பெறாத, எந்தப் பொறுப்புக்கும் வராத, அறிவாலய வாசலைக் கூடி மிதிக்காத, கழகமே உயிர்மூச்சு, கருப்பு - சிவப்புக் கொடியே தன் சொத்து என நினைக்கிற உண்மைத் தொண்டர்களால் 75 ஆண்டுகாலமாக வலிமையுடன் நிலைத்திருக்கும் கழகம், தொடர்ந்து வெற்றிநடை போடுவதற்கு, தொண்டர்களை நிர்வாகிகள் மதித்து, அரவணைத்து, அவர்களின் கோரிக்கைகளை அறிந்து செயல்படவேண்டும் என்பதே என் தலைமையுரையின் முக்கியப் பகுதியாகும்.
என் கட்சி, என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் தொண்டர்கள். நானும் என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை நம் தொண்டர்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிற வகையில் ஓர் முக்கியமான அறிவிப்பையும் உங்களில் ஒருவனான நான் வெளியிட்டேன்.
கழக உறுப்பினர்கள் யாரேனும் எதிர்பாராத விதமாகச் சாலை விபத்தில் இறக்க நேரிட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்குத் தலைமைக் கழகத்தின் சார்பில் 10 இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும் என்பதுதான் உங்களில் ஒருவனான நான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.
தொண்டனாகத்தான் என் கழகப் பணி தொடங்கியது. தொண்டர்களுடன்தான் என் கழகப் பணி தொடர்ந்தது. தொண்டர்களால்தான் கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன். இப்போதும் கழகத்தின் முதன்மைத் தொண்டன் என்பதில்தான் நான் பெருமை கொள்கிறேன். என் மீது அன்பைப் பொழியும் கோடிக்கணக்கான தொண்டர்கள் மீதுதான் நான் நம்பிக்கை வைத்துப் பொதுக்குழுத் தீர்மானங்களைச் செயல்படுத்த நினைக்கிறேன்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்றிட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன் பெற்றிருக்கும். அவர்கள் கழக அரசு தொடர வேண்டும் என விரும்புவார்கள். அப்படி விரும்புகிறவர்களை உறுப்பினர்களாக்கி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு வாக்காளர்களாவது கழக உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். உடன்பிறப்புகளான உங்களை நம்பித்தான் 'ஓரணியில் தமிழ்நாடு' என்கிற இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன். உங்கள் உழைப்பால் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்.
உங்களில் ஒருவனான என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான். உங்களின் நலன், உங்கள் செயல்பாடு, கழகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்துகொள்ளத் தொகுவாரியாக நிர்வாகிகள் சந்திப்பைத் தொடங்கவிருக்கிறேன். தொடர்ச்சியான பயணங்களில் உங்கள் ஊருக்கு வரும்போது உடன்பிறப்புகளின் முகம் கண்டு மகிழ்வேன் என்று கூறியுள்ளார்.
- கழகப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்.
- கழக நிர்வாகிகளையும் வாக்காளர்களையும் இணைக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுக்களில் ஒவ்வொருவரும் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
சென்னை:
'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்!' என்ற தலைப்பில் தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ஆம் நாளுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு. நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.
2021-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிச்சான்றிதழை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் அண்ணன் அருகே நிரந்தர ஓய்வெடுக்கும் இடத்தில் காணிக்கையாக்கிவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே! என்று நினைக்கக்கூடிய அளவிலான ஆட்சியை வழங்கிடுவோம்" என்று அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றும் வகையில் திராவிட மாடல் அரசு, 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலட்சியத்துடனான அனைவருக்குமான அரசாகத் திகழ்கிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களும் - கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக - முதன்மையான அரசாகத் தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம். நலன் தரும் திட்டங்கள் -நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திராவிட மாடல் அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை காட்டுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்களுக்காகப் பணியாற்றுகிற இயக்கம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பேரறிஞர் அண்ணா தலைமையில் நெசவாளர்களின் துயர் துடைத்த இயக்கம் இது. முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் புயல் - வெள்ள நிவாரண உதவிகளைச் செய்தது நம் கழகம். உங்களில் ஒருவனான என் தலைமையில் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கொரோனா பேரிடர் காலத்தில், 'ஒன்றிணைவோம் வா' என உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவிகள் செய்தோம். 6 முறை ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில் தமிழ்நாட்டின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்து, ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தது கழக அரசு. ஏழாவது முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திடக் களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நம் தி.மு.க. இது சுயமரியாதை இயக்கம். தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம். இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்.
மே 3-ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ''நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு' என்ற தலைப்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என 1244 இடங்களில் 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 கழகப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தப் பேச்சாளர்களுக்குக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., அவர்கள் இன்று மாலை ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார். சொல்லித் தீராத அளவுக்குச் சாதனைகள் நிறைந்திருப்பதால்தான் இத்தனை இடங்களில் பெருமிதத்துடன் நம்மால் பொதுக்கூட்டங்களை நடத்திட முடிகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன். அதற்கு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும், உங்களில் ஒருவனான எனக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இனி ஓராண்டு காலம் நமக்குத் தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்கும். அதற்கான செயல்திட்டங்கள் என் தலைமையில் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். கழகத்தின் பவள விழாப் பொதுக்குழு ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறவிருப்பதைக் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதில், தேர்தல் பணிகள் குறித்து இன்னும் விரிவான செயல்திட்டங்கள் முன்வைக்கப்படும்.
அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் 1,244 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் ஆட்சியின் சாதனைகளையும்; அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் ஒவ்வொரு இடத்திலும் எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற முத்திரைத் திட்டங்களால் மக்கள் பெற்றுள்ள நன்மைகளைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைப்பது அவசியமாகும். நீண்ட நேரம் உரையாற்ற வேண்டிய கட்டாயமில்லை. எளிமையாக – இனிமையாக – சுருக்கமாக – கேட்பவரைக் கவர்கின்ற வகையில் எடுத்துரைத்தாலே திராவிட மாடல் அரசின் திட்டத்தால் பயன் பெற்றுள்ள தமிழ்நாட்டு மக்கள் அதனைப் புரிந்துகொள்வார்கள்.
கழகப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக – மோசமாக – ஆபாசமாக - அருவருப்பாகப் பேசினாலும், நமது பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்திடக் கூடாது என்பதை அறிவுறுத்தலாகவும் கட்டளையாகவும் தெரிவிக்கிறேன். ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் சொன்னதைச் செய்தது மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து காட்டியிருக்கிறோம். அவற்றை எடுத்துச் சொன்னாலே போதும். குறைகுடங்கள் கூத்தாடுவது போல, நிறைகுடமான நாம் இருந்திட வேண்டியதில்லை.
பல வேலைச் சூழல்களுக்கிடையதான் பொதுக்கூட்டங்களில் பேசப்படுவதைப் பொதுமக்கள் உற்று கவனிக்கிறார்கள். அவர்களின் மனதில் பதியக்கூடிய வகையில், நிமிட நேரத்தில் செய்தியின் சாரத்தைச் சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்களாக நம் சொற்பொழிவாளர்கள் இருந்திடுவது அவசியம். பொதுக்கூட்டங்களுக்குக் கழகத்தின் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் கட்டாயம் வருகின்ற வரையில் மாவட்ட – ஒன்றிய -நகர - பகுதிக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்கள்தான் சொற்பொழிவாளர்களின் கருத்துகளை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்கக் கூடியவர்கள்.
பொதுக்கூட்டங்கள் என்பவை தேர்தல் களத்திற்கு உத்வேகம் தரக்கூடியவை. அத்துடன், இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புகின்ற - அவர்களின் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகவே ஆகிவிட்ட சமூக வலைத்தளங்களிலும் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும், கழகத்தின் மற்ற நிர்வாகிகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும். கழக நிர்வாகிகளையும் வாக்காளர்களையும் இணைக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுக்களில் ஒவ்வொருவரும் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். தலைமைக் கழகம் சார்பிலும், கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பிலும் மற்ற அணிகளை ஒருங்கிணைத்தும் அனுப்பப்படும் செய்திகளை அவரவர் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர வேண்டும். கழக அரசின் சாதனைகளும் அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும்.
ஒரு மணி நேரப் பேச்சைவிட, ஒரு நிமிட - அரை நிமிடக் காணொலிகள், ரீல்ஸ்கள்தான் இலட்சக்கணக்கானவர்களிடம் உடனடியாகப் போய்ச் சேர்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட பொறுப்பினை ஏற்று, கழக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு பெற்றுள்ள இளம்பேச்சாளர்கள் பலருடைய உரைகளை ஒரு நிமிடக் காணொலியாகப் பார்க்கிறேன். அவர்களின் ஆர்வத்தை, உத்வேகத்தை, கொள்கையுணர்வைக் கண்டு மகிழ்கிறேன். கழக நிர்வாகிகளும், பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் இத்தகைய உரைகளைக் கேட்டு அவற்றைப் பகிர்வதுடன், அவரவர் பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் சமூக வலைத்தளங்கள் - வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும். நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காகக் கழக அரசு செய்ததைச் சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம். கழக சொற்பொழிவாளர்களின் கருத்துகளை உள்வாங்கி, கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- பாராளுமன்றத் தேர்தலில், பாசிச சக்திகளை வீழ்த்தி, மகத்தான வெற்றி காணப் போகிற இந்தியா.
- அடுத்தகட்டமாக, தென் மாவட்டங்களுக்கான பயிற்சிக் களம், இராமநாதபுரத்தில் அமையவிருக்கிறது.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மலைக்கோட்டை மாநகரில் காவிரிதான் கரை மீறிப் புரள்கிறதோ, கடல்தான் தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் புகுந்துவிட்டதோ என்று மலைக்கின்ற அளவுக்கு தீரர் கோட்டமாம் திருச்சியில் நேற்று (ஜூலை 26) நடந்த டெல்டா மண்டலத்து வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில், 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா (I.N.D.I.A)வின் வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் கழகத்தினர் திரண்டிருந்தனர்.
பயிற்சிக் கூட்டப் பந்தலில் மட்டுமா கூட்டம், திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி, பயிற்சிக் கூட்டம் நடைபெற்ற ராம்ஜி நகர் வரை கழகத் தொண்டர்களும் பொதுமக்களும், காவிரியில் புதுவெள்ளம் பாய்ந்தது போன்ற உற்சாகத்துடன் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். அவர்களின் வாழ்த்தொலியில் உள்ளம் மகிழ்ந்தேன். பொன்னாடையும், புத்தகமும் வழங்கி அன்பை வெளிப்படுத்திய மக்களுக்கு நடுவே, கோரிக்கை மனுக்களுடன் இருந்தவர்களும் உண்டு. அவற்றை அக்கறையுடன் பெற்றுக்கொண்டேன்.
திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரைப் பயண வழியில்கூட, வாகனத்தை மறித்து சந்தித்து கோரிக்கை மனுவைத் தர முடியும் என்றும், உரிய வகையில் அது நிறைவேற்றப்படும் என்றும் தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ள நம்பிக்கையை செல்லும் இடங்களில் எல்லாம் காண்கிறேன். திருச்சியிலும் அதனைக் கண்டேன். மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடவே அல்லும் பகலும் உழைத்து வருகிறேன்.
ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கின்ற ஆட்சியாக, ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை வழங்குகின்ற ஆட்சியாக, ஒவ்வொரு நாளும் அந்தத் திட்டங்கள் சரியான முறையில் போய்ச் சேர்கின்றனவா என்று கண்காணித்துச் செயல்படுத்தக் கூடிய ஆட்சியாக திராவிட மாடல் அரசின் ஆட்சி நிர்வாகம் கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் செயலாற்றி வருகிறது.
ஆட்சியின் திட்டங்களால் பயன்பெற்றவர்கள் வழிநெடுக நின்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். கோரிக்கை வைத்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மனுக்களை அளித்தார்கள். இவையெல்லாம், வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டத்தின் நோக்கம் என்ன என்பதை பொதுமக்களே நமக்குத் தெரிவிப்பது போல இருந்தது.
கழகத்தின் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பலன் தந்து வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு திட்டமாவது அவர்களின் மாதச் செலவை மிச்சப்படுத்தும் வகையில் இருக்கிறது.
பட்டா, சிட்டா, வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்காக நீண்ட காலமாக அல்லாடிக் கொண்டிருந்தவர்கள் இரண்டாண்டுகளில் ஒரே ஒரு மனுவை "முதல்வரின் முகவரி"க்கு அனுப்பிவிட்டு சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார்கள்.
தங்கள் கோரிக்கை விரைந்து நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பவர்களும் உண்டு. பயன் அடைந்தவர்களிடம் கழக அரசின் திட்டங்களின் நன்மையை எடுத்துச் சொல்வதும், கோரிக்கை மனு வழங்கியவர்களுக்கு உரிய முறையில் அதனை நிறைவேற்றித் தருவதும் கழகத்தின் சார்பிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கும் உள்ள கடமையாகும். அதனை நினைவூட்டி, களப்பணியாற்றிட அவர்களை ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக தீரர் கோட்டமாம் திருச்சி அமைந்திருந்தது.
கழகத்தின் முதன்மைச் செயலாளர் - உறுதிமிக்க உழைப்பாளர் கே.என்.நேருவின் முன்னெடுப்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராசன், வைரமணி ஆகியோரும், காவிரி டெல்டா மாவட்ட - ஒன்றிய - நகர - மாநகர - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பயிற்சிக் கூட்டத்தை நேர்த்தியாகவும் வெற்றிகரமாகவும் நடத்திக் காட்டி, திருச்சியில் கழகம் எதைத் தொடங்கினாலும் வெற்றிதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
முதன்மைச் செயலாளர் நேருவுக்கு துணை நின்றவர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
15 கழக மாவட்டங்களைச் சேர்ந்த, ஏறத்தாழ 12ஆயிரத்து 645 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்ற பயிற்சிக் கூட்டத்தில் கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் துரைமுருகன் கழக அரசின் சாதனைகள் மக்களிடம் எந்தளவுக்குச் சென்று சேர்ந்து, நன்மை விளைவித்திருக்கிறது என்பதை எடுத்துக்கூறினார்.
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா. எம்.பி. அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டையும், அது இந்தியாவுக்கே முன்னோடியாக இருப்பதையும் எடுத்துரைத்தார்.
அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் ஒவ்வொரு துறை சார்ந்த திட்டங்களையும் அதன் பயன்களையும் விரிவாகவும் விரைவாகவும் எடுத்துக் கூறினார்கள்.
கழக சட்டத்துறைச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாக்குச்சாவடி முகவர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்களும் எப்படிச் செயல்பட வேண்டும், எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை பவர் பாயிண்ட் வாயிலாகத் திறம்பட விளக்கினார்.
கழக மாணவரணித் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி வாக்குச் சாவடி முகவர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக கழகப் பணிகளை எப்படி ஒருங்கிணைத்து செயல்பட்டு, ஒவ்வொரு வாக்காளரையும் அணுக வேண்டிய முறைகளை விளக்கினார்.
கழகத் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள், அவற்றின் பயன்கள் குறித்த கையேடு மின்னிதழாக ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவருக்கும் 'வாட்ஸ்அப்' வாயிலாகப் பகிரப்பட்டது. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தால் தேர்தல் நேரத்தில் நேரடிக் களத்தில் செலுத்த வேண்டிய அக்கறையைப் போல, சமூக வலைத்தளத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நம் அரசியல் எதிரிகள் பொய்களை மட்டுமே பரப்பக் கூடியவர்கள். அவர்களின் அவதூறுகளும் வதந்திகளும் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
பொய்கள் புற்றீசல் போன்றவை. அவை வேகமாகப் பரவினாலும் அவற்றுக்கு ஆயுள் குறைவு. உண்மைக்கு யானையின் பலம் உண்டு. அதற்குத் தனது தும்பிக்கையால் அமைதியாக ஆசீர்வதிக்கவும் தெரியும், ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும்.
திராவிட இயக்கத்திடம் உண்மை வரலாறு இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பும் இருக்கிறது. அதனால் அமைதியான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறோம். சீண்ட நினைக்கும் அரசியல் எதிரிகளுக்கு யானை தன் பலம் என்ன என்பதைக் காட்டும்.
மாநாட்டிற்கு இணையாகத் திருச்சியில் நடந்த பயிற்சிக் கூட்டத்திற்கு சென்னையில் இருந்து புறப்பட்ட போது, கழகத் தீர்மானக் குழுத் தலைவர் கவிஞர் தமிழ்தாசன் ஒரு குறிப்பினைத் தாளில் எழுதித் தந்தார். வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும் கவிஞர் தமிழ்தாசன், அவ்வப்போது என்னிடம் கழகம் குறித்த தகவல்களைத் தருவது வழக்கம். காரில் வரும்போது அவர் தந்த தாளினைப் படிக்கத் தொடங்கினேன்.
"வணக்கம் அண்ணா.. நாளைய நாள் தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் (27-7-1969).
என் வாழ்நாளில் நான் கண்டுபிடித்த - கடைப்பிடித்த ஒரே தலைவர் அவர்தான்.
அறிவூட்டிய தந்தையாக, அரவணைத்துப் பாராட்டிய தாயாக, என் உயிரில் இன்று வரை, ஏன் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவரே.
12 வயது சிறுவனான என்னை, ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து அழைத்து வந்த என் தந்தை, அண்ணா சாலையில் இருந்த முரசொலி அலுவலகத்தில் ஓர் இரவு நேரத்தில் அறிமுகப்படுத்திய அந்த நாளிலிருந்து என் இதயச் சிம்மாசனம் அந்த மாமனிதரைச் சுமந்து, சுமந்து சுகம் கண்டு கொண்டிருக்கிறது.
மிகமிகச் சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து, தன் உழைப்பால் உயர்ந்து, உன்னதமான தன்னலமற்ற தொண்டால், பெரியார் - அண்ணா ஆகிய பெருமக்களை அடைந்து, தமது பல்வேறு பன்முகத்தன்மைத் திறமையால் இத்தமிழ் உலகத்தில் மட்டுமில்லாது, மனித குலத்திற்காகத் தம்மை ஆழமாக அர்ப்பணித்துக் கொண்ட திராவிட இயக்க ஆணிவேர்களில் ஒருவரான அவர் மாபெரும் தலைவரானார்.
அவர் பெரியாரைப் போல வசதிக்காரர் அல்லர், அண்ணாவைப் போல் கல்லூரிப் படிக்கட்டுகள் ஏறியவரும் அல்லர், மேற்கண்ட அவர்களால் அடையாளம் காணப்பட்ட அரிய மனிதர். காரணம், அவரின் உழைப்பு, உறுதி, திறமை, தியாகம், தகுதி, தன்னறிவு என்பனவற்றால் உயர்ந்தவர். அவரால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் உருவாக்கப்பட்டு, பகுத்தறிவுப் பாசறை கூர்வாள் - வேல்களாக இருக்கிறார்கள். அதனால், அண்ணா அறிவாலயம் ஆலமரம் போல் தழைத்து, கிளைத்து நிற்கிறது.
வேருக்கு விழுதாக - தலைமைக்கு வலுவாக பல்லாயிரக்கணக்கான கழகக் கிளைகளை உருவாக்கியவரும் அவரே. இந்திய அரசியலில் எந்நேரமும் இயங்கிய ஓர் எந்திர மனிதர்.
இலக்கிய உலகத்தில் ஈடு, இணையில்லாத வகையில் தமிழ் மொழியையும், இனத்தையும் தலை நிமிர்த்திக் காட்டிய தண்டமிழ் ஆசான். அந்த மாபெரும் தலைவரைத் தலை தாழ்ந்து வணங்குகிறேன். வாழ்க தலைவர் கலைஞர் - வளர்க அவர் புகழ்"
- என்று தன் உள்ளத்து உணர்வுகளை காகிதத்தில் காவியமாக்கி இருந்தார் கவிஞர் தமிழ்தாசன்.
கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் உள்ளத்து உணர்வும் கவிஞரின் வரிகளில் வெளிப்பட்டிருந்தது.
உடன்பிறப்புகளாம் உங்களில் ஒருவன்தானே நானும்! என் உள்ளத்திலும் எத்தனையோ உணர்வலைகள்!!
பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய போது, கழகத்தில் தலைவர் பொறுப்பு கிடையாது. அண்ணா அவர்கள் பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்றார். "தான் கண்ட - கொண்ட ஒரே தலைவர் பெரியார்" என்பதால், தலைவர் நாற்காலியைப் பெரியாருக்காகவே விட்டு வைத்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அன்புமிகு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழகத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் தோளில் ஏறியபோது, தந்தை பெரியார் அவர்களே, முன்னேற்றக் கழகத்திற்குத் தலைமைப் பொறுப்பு வேண்டும் என்பதையும் அதைக் கலைஞர் ஏற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் என்பது வரலாறு. பெரும்பாலான கழகத் தொண்டர்களின் விருப்பமும் அதுதான் என்பதால், கழகத்தின் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பொதுக்குழுவின் பேராதரவுடன் கழகத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் முத்தமிழறிஞர் கலைஞர். நாவலர் பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்றார். அந்த நாள்தான், இன்றைய நாள்.
1969-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரிக்கும் வரை கழகத்தின் தலைவராக இருந்த பெருமைக்குரியவர். அரை நூற்றாண்டு காலம் கழகத்தைத் தன் நெஞ்சிலும் தோளிலும் சுமந்து, நெருக்கடி நெருப்பாறுகளைக் கடந்து, உயிரனைய உடன்பிறப்புகளைக் காத்து, இயக்கத்தை வளர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
தன் ஆட்சிக்காலத்தில் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டியமைத்ததுடன், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடும் பணியில் மூத்த தலைவராக இருந்து வழிகாட்டினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்தினார். அவர் அளித்த பயிற்சிகளைப் பெற்று, உங்களில் ஒருவனான நான் கழகத்தின் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி வழங்க வேண்டிய பொறுப்பை கழகத்தினரும் பொதுமக்களும் என்னிடம் அளித்திருக்கிறார்கள்.
ஒன்றியத்தை ஆளுகின்ற ஜனநாயக விரோத - மதவாத பா.ஜ.க. ஆட்சி நீடித்தால் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து இருக்கிறது என்பதை திருச்சியில் நடந்த கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.
கழக அரசு செய்து வரும் சாதனைகள் தொடர வேண்டுமானால், மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டுமானால், இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்துவிடாமல் காக்க வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாகவும் முனைப்புடனும் இருந்திட வேண்டும்.
இந்தியாவைக் காத்திட இந்தியா (I.N.D.I.A) உருவாகியிருக்கிறது. இது உண்மையான - ஒன்றுபட்ட இந்தியா. பாராளுமன்றத் தேர்தலில், பாசிச சக்திகளை வீழ்த்தி, மகத்தான வெற்றி காணப் போகிற இந்தியா. இந்தியாவின் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கக்கூடிய இந்தியா. இவற்றை மனதில்கொண்டு இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெற இணைந்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இந்தியா முழுமையான வெற்றி பெற, கலைஞரை நெஞ்சில் ஏந்தும் ஒவ்வொரு உடன்பிறப்பும் ஓயாது உழைத்திட வேண்டும். அதற்குரிய முதற்கட்டப் பயிற்சி காவிரி டெல்டா மண்டலத்தில் நிறைவேறியுள்ளது.
கழகப் படை வீரர்களாக உடன்பிறப்புகள் அணிவகுத்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, தென் மாவட்டங்களுக்கான பயிற்சிக் களம், இராமநாதபுரத்தில் அமையவிருக்கிறது.
உடன்பிறப்புகளே உங்களோடு நான் இருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். வெற்றி நம்முடன் இருக்கும்.. என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல்.
- குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது.
தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல.
இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க. அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி.
கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற காணொலி வாயிலான மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் என்னென்ன பொறுப்பு, அந்தப் பொறுப்பினை எந்த முறையில் நிறைவேற்றிட வேண்டும் என்று விரிவாகவும் தெளிவாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
கழகத்தின் சார்பு அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை உணர்ந்து, மாவட்டக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு அணியும் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை மாவட்ட ஒன்றிய நகர-பேரூர் கழக அமைப்புகள் நெறிப்படுத்திட வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் இந்த நிகழ்வுகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
கலைஞர் என்பது வெறும் பெயர்ச் சொல் அல்ல! தமிழ் இனம் மொழி-நிலம் காத்து நிற்கும் வினைச்சொல். நமக்கு உரிமையுள்ள உரிச்சொல். அரசியல் எதிரிகளை அடையாளம் காட்டி 'உரி'க்கின்ற சொல். எந்நாளும் நமக்கு ஊக்கத்தையும், இன எதிரிகளுக்கு அச்சத்தையும் தருகின்ற சொல். இந்தியா முழுமையும் உள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சொல். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல். குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
- மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
- நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.
அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 18, 2023
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள்,… pic.twitter.com/FIvNhf52ce
- நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
- திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில் தி.மு.க.வில் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி வாரியாக பணியாற்ற கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு முழுவதும் பாக முகவர்கள் கூட்டத்தை மண்டல அளவில் கூட்டி அவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வந்தார்.
இதைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப அணியினர் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை மிகப்பிரமாண்டமாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் அரங்கில் இளைஞரணி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சுமார் 50 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ள நிலையில் இதை மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார். இந்த கையெழுத்து பட்டியல் அதன் பிறகு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தை பிறந்தாள் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கி உள்ளோம்.
தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும். அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்.
"நான்தான் எல்லாம்" என்ற சர்வாதிகாரப் போக்கு அகல, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஆட்சி ஒன்றிய அளவில் அமைய வேண்டும். அதற்கு தி.மு.க. இளைஞர் அணியின் சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும்.
கவனச் சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல் மாநாட்டின் மைய நோக்கத்தை முன்னெடுப்போம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு பொங்கல்-தமிழர் திருநாள் வாழ்த்து கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு எதிர்கொண்ட மிச்சாங் மழை-வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் டெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள், தொழில் முடங்கிய வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு.
முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் இந்தப் பணிகளை மேற்கொண்ட வேளையில், தி.மு.க.வின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் துயர் துடைக்கும் கைகளாகச் செயல்பட்டீர்கள்.
பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த தமிழ்நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடு பட்டுச் சமதளத்திற்குக் கொண்டு வந்து, சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.
மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.
எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்துவதே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும்.
திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.
எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொது மக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண் டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.
அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார்.
- தொண்டர்கள், பிரமுகர்கள் ஒவ்வொருவரும் மாலைகள், புத்தகங்கள், பழக்கூடைகள் மற்றும் நினைவு பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயத்திலும் அவரது வீட்டு முன்பும் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்திருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்த கலைஞரின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு குடும்பத்தாருடன் 'கேக்' வெட்டினார்.

அவருக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை மற்றும் குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரைக்கு சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேளதாளம் முழங்க அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சக்கர பாணி, அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா, பரந்தாமன், புழல் நாராயணன், மதன் மோகன் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் உடன் வந்திருந்தனர். கலைஞர் நினைவிடத்தில் அவரது உதவியாளர் கே.நித்யா நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன் மற்றும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதன் பிறகு தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துரை முருகன், காஜா உள்ளிட்டோர் வாசலில் நின்று வரவேற்றனர்.
சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் 'கேக்' கொண்டு வரப்பட்டது. அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டி வழங்கினார். அதன் பிறகு கலைஞர் அரங்கிற்கு சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்,நடிகர் விஜய் ஆகியோரும் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்தியவர்கள் வருமாறு:-
அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தியாகராய நகர் எம்.எல்.ஏ.ஜெ.கருணாநிதி, ஐட்ரீம் மூர்த்தி, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, எழும்பூர் பரந்தாமன் மற்றும் படப்பை மனோகரன், வி.எஸ்.ராஜ், ஐ.கென்னடி, மா.பா.அன்பு துரை, தாயகம் கவி எம்.எல்.ஏ, பாலவாக்கம் விசுவநாதன், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி மாவட்ட அமைப்பாளர் துபாய் வி.ஆர்.விஜய், முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா, துணைத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள், வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள், பிரமுகர்கள் ஒவ்வொருவரும் மாலைகள், புத்தகங்கள், பழக்கூடைகள் மற்றும் நினைவு பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாற்காலியில் அமர்ந்தபடி தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றார். நீண்ட கியூ வரிசையில் நின்று தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
- தொண்டர்கள் ஒவ்வொருவரும் நீண்ட வரிசையில் நின்று பரிசுப் பொருட்கள் வழங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
- பல்வேறு பரிசுப்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் குடும்பத்தார் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களது முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
அப்போது மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக்குழந்தைகள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர். அங்கு வந்திருந்த மூத்த அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன் பிறகு கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி வணங்கினார்.

அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவசங்கர், ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மு.பெ.சாமிநாதன், கணேசன், ஆவடி நாசர், வாரிய தலைவர் ப.ரங்கநாதன், எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், விருகம்பாக்கம் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தமிழச்சி தங்கபாண்டின், புழல் நாராயணன், சேப்பாக்கம் மதன்மோகன், சென்னை மேயர் பிரியா, படப்பை மனோகரன், கலாநிதி வீராசாமி, கலைஞரின் உதவியாளர் நித்யா, பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு. ரஞ்சன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் உதயசூரியன் வடிவில் வண்ண வண்ண பூக்கள் அலங்காரத்துடன் மக்கள் முதலமைச்சரின் மனித நேய நாள் என்று வாசகம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதன் பிறகு பெரியார் திடலுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பெரியார் திடலில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து கோபாலபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அங்கிருந்து சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு சென்று கருணாநிதி படத்திற்கு மலர் தூவி வணங்கினார். அங்கு ராஜாத்தி அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கனிமொழி உடன் இருந்தார்.
அதன் பிறகு 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் வாசலில் நின்று வரவேற்றனர்.
அதன் பிறகு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் பிரமாண்ட 'கேக்' கொண்டு வரப்பட்டது. அப்போது தலைமை கழக முன்னணி நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டினார்.
அதை பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வழங்கினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
அதன் பிறகு கலைஞர் அரங்கம் சென்றார். அங்கு கூடி இருந்த தொண்டர்கள் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் விண்ணதிர பிறந்தநாள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
அப்போது அங்கு வந்திருந்த அமைச்சர்கள், தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசித்தார். அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
* தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்.
* தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம்.
* தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இதுதான் ஒரே இலக்கு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் ஒவ்வொருவரும் நீண்ட வரிசையில் நின்று பரிசுப் பொருட்கள் வழங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாலைகள், புத்தகங்கள், வீரவாள்கள், பழங்கள், பூக்கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.
- கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அவை மிகச்சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுகின்றன.
- அதன் நோக்கம், மக்களை சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஓராண்டு காலத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ள கழக ஆட்சி, ஓய்வின்றித் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது நமது அரசு. அதன் பணிகளும், பயன்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரை சென்று சேர்ந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான எனது நோக்கம். அதனை உறுதிசெய்வதற்காகத்தான் மாவட்டந்தோறும் பயணித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுப் பணிகளை மேற்கொண்டும் வருகிறேன்.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்த்து 342.24 கோடி ரூபாய் மதிப்பிலான 69 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன். 68.74 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 61 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். மொத்தமாக, 1,18,346 பயனாளிகளுக்கு 731 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்.
ஜூலை 1-ம் நாள் அன்று மாலை திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து கரூருக்குச் சாலைவழிப் பயணத்தை மேற்கொண்டேன்.
கரூர் நிகழ்வில் ஏறத்தாழ 80 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். கரூர் மாவட்ட நலத்திட்டப் பணிகள், அடிக்கல் நாட்டிய திட்டங்கள், தொடங்கி வைத்த திட்டங்களின் மதிப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பு 1,100 கோடி ரூபாய்.
சிறப்பான வரவேற்புடன் நாமக்கல்லுக்குச் சென்று, மதிய உணவுக்குப் பின் சிறிது ஓய்வெடுத்த நிலையில், என் மனதில் அருந்ததியின மக்களைப் பற்றிய நினைவாகவே இருந்தது. அதனால், எனது தனிச்செயலாளரிடம், "இங்கே அருந்ததியர் சமுதாயத்து மக்கள் வாழும் இடம் எது?" என்று கேட்டு தெரிவிக்கச்சொன்னேன். அவரும் விசாரித்து, சிலுவம்பட்டி என்ற பகுதியில் அருந்ததியர் சமூகத்தவர் அதிகம் வசிக்கிறார்கள் என்கிற விவரத்தை, தேநீர் நேரத்தில் என்னிடம் தெரிவித்தார்.
வேறு யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி சிலுவம்பட்டிக்குச் சென்றேன்.
சிலுவம்பட்டியில் வசிக்கின்ற ஓர் இளைஞர், "தலைவர் கலைஞரின் ஆட்சியில் வழங்கப்பட்ட 3 சதவீதம் உள்ஒதுக்கீட்டால் ஹோமியோபதி மருத்துவம் படித்தேன்" என்றார் நன்றியுணர்வுடன். அவர் வீட்டுக்குச் சென்றேன். "டீ சாப்பிடுறீங்களா?" என்று அவரும் அவரது துணைவியாரும் அன்புடன் கேட்டார்கள். அங்கே டீ சாப்பிட்டேன். அந்த இளைஞரின் துணைவியார் எம்.ஏ., பி.எட். படித்திருக்கிறார். அதே தெருவில் ஓர் இளைஞர் கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜில் எம்.பி..பி.எஸ் படிக்கிறார் என்று அறிந்தேன். கல்லூரியில் படிக்கும் இன்னும் இரண்டு மூன்று மாணவியரும் வந்தனர். எல்லோரும் ஆர்வத்துடன் வந்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டினால்தான் இந்த அளவிற்கு உயர்படிப்புகளைப் படிக்கும் தலைமுறையாகியிருக்கிறோம் என்பதைத் தலைநிமிர்ந்து சொல்லும் நிலையில் இருந்தனர்.
அந்தப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினை இருப்பதை மக்கள் தெரிவித்தனர். அதனையும் சாலை வசதியையும் உடனடியாக செய்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். அதன்பின், நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு நடக்கும் பந்தலுக்கு சென்றேன்.
உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, 'மக்களோடு நில்-மக்களோடு வாழ்' என்ற தலைப்பில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் சிறப்பாக உரையாற்றினார். மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்களிடம் பழகி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றித் தருவது தொடர்பாக ஒரு வழிகாட்டு நெறிமுறை கையேடு வழங்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி மா.சு. விரிவாகவும் அனுபவ அறிவுடனும் எடுத்துரைத்தார்.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு உரையாற்றும்போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நகர்ப்புறத்தில் வாழ்கிற மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர்-நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளாட்சி அமைப்பில் தனக்கு பெரிய அனுபவம் இல்லையென்றாலும், மக்கள் நலன் காக்கும் சேவகர்களாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சுருக்கமாகவும் மனதில் பதியும் வகையிலும் எடுத்துரைத்தார்.
அவரைத் தொடர்ந்து விழாத் தலைமையுரையாற்றிய உங்களில் ஒருவனான நான், மக்களாட்சியின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்பில் உள்ள பிரதிநிதிகளின் ஒரு கையெழுத்து எத்தகைய வலிமை வாய்ந்தது என்பதையும் விளக்கினேன்.
ஆட்சிக்குப் பெருகி வரும் நல்ல பெயரைத் தக்க வைப்பது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைகளில் தான் உள்ளது என்பதால், ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்ற கண்டிப்பையும் நாமக்கல் மாநாட்டில் வெளிப்படுத்தினேன். கழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்னை சர்வாதிகாரியாக்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையுடன்தான் அதனைத் தெரிவித்தேன்.
தி.மு.க. அரசு வழங்கும் நல்லாட்சியின் அடையாளமாக உள்ளாட்சிகள் திகழட்டும். அந்த நம்பிக்கையுடன், முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றபின் பங்கேற்ற முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்வுடன் சேலத்திற்கு வந்து, சென்னைக்குத் திரும்பினேன். அடுத்த நாள், ஜூலை-4 அன்று முதலீட்டாளர்கள் மாநாடு.
உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் ஆடம்பரக் கூத்துகளை அரங்கேற்றிய முந்தைய ஆட்சியைப் போல இல்லாமல், மாநாட்டுக்கு அத்தியாவசியமான-நேர்த்தியான ஏற்பாடுகளுடன் கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட 6 முதலீட்டாளர் மாநாடுகளின் வாயிலாக 2 லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வரப்பெற்றுள்ளன.
ஒவ்வொரு செயல்பாடும் தமிழ்நாட்டை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு. அக்கப்போர் விமர்சனங்களைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணியைத் தொடர்ந்திட வேண்டியது நமது கடமை.
கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அவை மிகச்சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுகின்றன. அதன் நோக்கம், மக்களை சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.






