என் மலர்
நீங்கள் தேடியது "உடல் உறுப்புகள் தானம்"
- வெண்பாவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
- சிறுமியின் மூளை செயல் இழந்து அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.
ரத்தினபுரி:
கோவை மாநகராட்சி 73-வது வார்டு கவுன்சிலரும், நகரமைப்பு குழு தலைவருமாக இருப்பவர் சந்தோஷ் என்ற சோமு.
இவருக்கு 8 வயதில் வெண்பா என்ற மகள் இருந்தார். கடந்த திங்கட்கிழமை வெண்பாவிற்கு திடீரென தலைவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியின் தந்தை, மகளை கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள், மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கவுன்சிலர் சந்தோஷ் என்ற சோமு தனது மகள் வெண்பாவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், இதற்காக ஆப்ரேஷன் செய்வது என்பது பெரும் சிக்கலான விஷயம் என்று கூறினர். இருப்பினும் ஆபரேஷன் செய்து பாருங்கள் என சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கவே, சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுமியின் மூளை செயல் இழந்து அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.
இதனை டாக்டர்கள் கவுன்சிலர் சந்தோஷ் என்ற சோமுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் தங்களது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். மாணவியிடம் இருந்து சிறுநீரகம், கல்லீரல், தோள், கண் உள்ளிட்ட 4 உறுப்புகள் எடுக்கப்பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
8 வயதில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் தற்போது 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
- மகேசின் சிறுநீரகம், கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளை தானம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 23). கபடி வீரரான இவருக்கும், குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் (16-ந்தேதி) மதியம் மகேஷ் காவல்கிணறு பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்தார். மகேசின் சிறுநீரகம், கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளை தானம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கான நடவடிக்கையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் ஈடுபட்டனர். இன்று காலையில் மகேசின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அவற்றை 5 பேருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சுகள் மூலமாக அவற்றை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். மகேசன் ஒரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் காரைக்குடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் கல்லீரலும் திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்கள் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மகேசின் உடல் உறுப்புகளுடன் ஆம்புலன்சுகள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகரில் போக்குவரத்தை சரி செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்காக நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஆம்புலன்சுகள் வந்தபோது மற்ற வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
இதனால் உடல் உறுப்புகளை கொண்டு சென்ற ஆம்புலன்சுகள், எந்தவொரு நெரிசலிலும் சிக்காமல் நாகர்கோவில் நகரை சில நிமிடங்களில் கடந்து சென்றது. பின்பு சிறிது நேரத்தில் மகேசின் உடல், அவர்களது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
அவர்கள் கூறுகையில், "மகேஷ் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். அவரது உறுப்புகளை கொண்டு சிலர் உயிர் வாழ்வார்கள் என்ற நல்லெண்ணத்துடன் இந்த முடிவை எடுத்தோம். அதன் அடிப்படையில் அவரது கிட்னி, கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது" என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.
- நாகராஜ் ஜவுளிக்கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.
- இறந்தவர்களின் உடலில் இருந்து தோல் தானத்தின் மூலம் தோல் எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம் நடூரை சேர்ந்தவர் வீரசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களது மகன் நாகராஜ்(31). இவர் ஜவுளிக்கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.
இதனிடையே இவர் தீராத வயிற்று வலியால் அவதியுற்று வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் இறந்தை கண்டு கதறி அழுதனர்.
இதையடுத்து நாகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். சோதனையில் உடலில் தோல், கண் ஆகியவையின் செல்கள் உயிருடன் இருந்ததை பார்த்தனர். இதையடுத்து நாகராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கண் மற்றும் தோலினை தானமாக வழங்க முடியுமா என கேட்டனர்.
அதற்கு நாகராஜின் தாயாரும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து நாகராஜின் கண், தோல் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.
மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரி தொடங்கி 138 ஆண்டுகளில் இதுதான் முதன் முறையாக இறந்தவரின் உடலில் இருந்து கண், தோல் அறுவை சிசிச்சை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டாக்டர் ஜெயராமன் கூறுகையில், இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோல் தீ மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவர்களுக்கு பொறுத்தப்படும். எச்.ஐ,வி மற்றும் டி.பி நோயினால் பாதிக்கப்படுவர்கள் தோல் தானம் செய்ய முடியாது. மாவட்டத்தில் மற்ற மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலில் இருந்து தோல் தானத்தின் மூலம் தோல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இது முதன்முறை என தெரிவித்தார்.
- விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்
- கல்லீரல், கிட்னி வேலூர் சி.எம்சி. ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 39) ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை போளூர் ஆரணி ரோட்டில் உள்ள எட்டி வாடி அருகே பைக்கில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சரவணன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சரவணனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
அவருடைய இதயம் ஒரு கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும்.கல்லீரல், ஒரு கிட்னி, ஆகியவை வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.
சரவணனுக்கு ரேகா என்ற மனைவியும் ஹயந்திகா என்ற மகளும், துஷ்யந்த் என்ற மகனும் உள்ளனர்.
- மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறவினர்கள் சம்மதம் வழங்கினர்
- கண்ணமங்கலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதுப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா, தனது மகள்கள் லத்திகா (13),கோபிகா (10) ஆகியோர் படிப்புக்காக திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சத்யா சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சத்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.இதனால் அவரது உடல் உறுப்புகளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர்.
அவரது சத்யாவின் உடல் கண்ணமங்கலம் கொண்டு வந்து நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
- தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
- மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.
கோவை:
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தபோது அவினாசிசாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு கடந்த 9-ந் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையறிந்த சீனிவாசனின் பெற்றோர் இளமுருகன், கனகவல்லி ஆகியோர் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.
இதில் கல்லீரல், ஒரு சிறுநீரகம், இதயம், ஒரு சிறுநீரகம், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், நுரையீரல் சென்னையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- உயிரிழந்த சிறுவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
- மகனை இழந்து வாடும் தந்தை தண்டபாணி கண்ணீர் மல்க கூறும்போது குழந்தைகளை பெற்றோர் பத்திரமாகவும் அரவணைப்போடும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சென்னை:
சென்னை சூளைமேடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் பிரசன்னா. 13 வயது சிறுவனான இவன் நேற்று மாலை தனது நண்பர்களோடு வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது எங்கிருந்தோ காற்றாடி ஒன்று பறந்து வந்தது. அதனை பார்த்ததும் பிரசன்னாவும் அவனது நண்பர்களும் காற்றாடியை பிடிக்க ஓடினார்கள். அப்போது காற்றாடி மாடி ஒன்றில் போய் விழுவது போல சென்றது. இதையடுத்து பிரசன்னாவும் மற்ற சிறுவர்களும் மாடியில் ஏறிச்சென்று காற்றாடியை எடுக்க ஓடினார்கள். மாடிகளில் ஏறிச்சென்று காற்றாடியை எடுப்பதற்காக பிரசன்னா அப்பகுதியில் 2- வது மாடிக்கு சென்றான்.
அப்போது பக்கத்து மாடியில் பறந்து கொண்டிருந்த காற்றாடியை சிறுவன் பிரசன்னா எடுக்க முற்பட்டான். இதில் அவன் எதிர்பாராத விதமாக 2- வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்த பிரசன்னாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தான்.
இது பற்றி சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிரிழந்த சிறுவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதன்படி அவனது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
மகனை இழந்து வாடும் தந்தை தண்டபாணி கண்ணீர் மல்க கூறும்போது குழந்தைகளை பெற்றோர் பத்திரமாகவும் அரவணைப்போடும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற இழப்புகளை தவிர்க்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
- குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
- தீபாஞ்சியின் மூளை 95 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தீப்பாஞ்சி (வயது40). ஐடிஐ படித்து முடித்து விட்டு பெயிண்டிங் தொழில் செய்து வந்தார்.
கடந்த 15 ஆம் தேதி அன்று இவர் நல்லம்பள்ளியில், சேலம்-தருமபுரி சாலையில் ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீபாஞ்சி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மூளை சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் உடல் உறுப்புகள் தானம் குறித்து தீப்பாஞ்சி குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் கூறிய போது அவரது சகோதரர் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உத்தரவின் பெயரில் மயக்கவியல் தலைமை மருத்துவர் முருகேசன் தலைமையில் மருத்துவ குழுவினர் மூளைச்சாவில் இறந்து போன தீப்பாஞ்சின் இருதயம், கணையம், கல்லீரல், கிட்னி ஆகிய நான்கு உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து சேலம், ஈரோடு, ஆகிய மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்தில் மரணம் அடைந்த தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மயக்கவியல் தலைமை மருத்துவர் முருகேசன் கூறும்போது:-
விபத்தில் காயம் அடைந்த தீபாஞ்சியின் மூளை 95 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. மூளை செயல் இழந்து விட்டது. தொடர்ந்து செயற்கை வாசம் மூலமாக அவரது உடல் உறுப்புகள் இயங்கும் வகையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ள பல உயிர்களுக்கு மறுவாழ்வு கொடுத்ததாக இருக்கும் என்று இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனையை தீபாஞ்சியின் குடும்பத்தார் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு நாம் அனைவரும் நன்றி கூற வேண்டும். இறந்தவரின் உடலில் இருந்து பல உறுப்புகள் எடுக்கப்பட்டது. இந்த உடல் உறுப்புகளை பெறும் நபர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு போராடிக் கொண்ட நபர்கள்தான் அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்ததாக இருக்கும். மூளைச்சாவில் இறந்த தீபாஞ்சியின் மூலமாக இவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என தெரிவித்தார்.
- அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக தெரிவித்தார்.
- விடிய, விடிய செந்தில்குமாரின் உடலில் உள்ள உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45). தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீ நிகேஷ் (14), கவின் நிலவன் (8), இரண்டு மகன்களும் உள்ளனர்.
செந்தில்குமார் கடந்த புதன்கிழமை பள்ளி முடித்து விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது விபத்தில் இருசக்கர வாகன மோதி படுகாயம் அடைந்துள்ளார்.
அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மருத்துவர்கள் செந்தில்குமார் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவர் உறவினர்களிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து தெரிவித்தனர். இதனால் அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவ குழுவினர் நேற்று இரவு 9 மணி முதல் இன்று விடியற்காலை இரண்டு மணி வரை விடிய, விடிய செந்தில்குமாரின் உடலில் நல்ல நிலையில் உள்ள இருதயம், நுரையீரல், லிவர், கிட்னி, கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கண் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கூறும் போது என் கணவர் தான் எங்களுடைய வாழ்க்கை என்று இருந்தோம். அவர் இல்லாத இந்த வாழ்க்கையை நானும் என் இரண்டு பிள்ளைகளும் எப்படி வாழ்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இதனால் தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை ஒன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
- சாம்பசிவன் இ.சி.ஆர். சாலையை கடக்கும்போது எதிரில் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.
- தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய மாணவனின் பெற்றோர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்பேட்டை யை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 42). இவருடைய மனைவி சத்யா (38). இந்த தம்பதியினரின் மகன் சாம்பசிவன் (வயது 12). இவர் அனுமந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த 14-ந் தேதி தனது வீட்டிலிருந்து சைக்கிளில் சென்றார். சாம்பசிவன் இ.சி.ஆர். சாலையை கடக்கும்போது எதிரில் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவன் சாம்பசிவனை அவரது பெற்றோர் மரக்காணத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவருக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மாணவன் சாம்பசிவனின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவர் மூளைச்சாவு அடைந்து விட்டார். இதனால் இவர் உயிர் பிழைக்க முடியாது எனக் கூறினர். இதனால் மனமுடைந்த அவரின் பெற்றோர் தனது மகன் உயிரிழந்தாலும், அவரது உடல் உறுப்புகளை பெற்று பலர் உயிர் பிழைக்கலாம் என கருதி தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மூளை சாவடைந்த மாணவன் சாம்பசிவனை ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சைகள் செய்து தேவையான உடல் உறுப்புகளை எடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 9 பேருக்கு பொருத்தப்படுவதாகவும் கூறி உள்ளனர்.
இதனை கேட்ட மாணவனின் பெற்றோர் தனது மகன் உயிர் இழந்து அவரது உடல் மறைந்தாலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக பெற்று உயிர் பிழைத்தவர்களை பார்க்கும்பொழுது தன் மகன் உயிரோடு இருக்கும் நினைவு உண்டாகும் என கூறுகின்றனர். தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய மாணவனின் பெற்றோர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார். பின்னால் சந்தோஷ் அமர்ந்திருந்தார்.
- காயம் அடைந்த சந்தோசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் சந்தோஷ் (23), லேத் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் ரஞ்சித். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார். பின்னால் சந்தோஷ் அமர்ந்திருந்தார். பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ்சாலை, பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ரஞ்சித் ஓட்டி சென்ற வாகனம் மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் சந்தோசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காயம் அடைந்த சந்தோசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் நேற்று இரவு மூளை சாவு அடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் சந்தோசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த நிலையில் இறந்து போன சந்தோசின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
- விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கண்தானம் செய்த 30 குடும்பங்களுக்கு பாரட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் கண்தானத்திற்கு சிறப்பாக செயல்பட்ட தற்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணிக்கு, பார்வை யிழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்டமேலாளர் பொன்னுசாமி, கண் மருத்துவத்துறைத்தலைவர் பாரதிராஜன், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் சீதாலட்சுமி ஆகிேயாருக்கு நினைவு நினைவு பரிசு வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.
பின்னர் அவர் பேசிய தாவது:-
கருவிழி கண் தானம் மட்டுமல்லாமல் நம் உடலின் மிகமுக்கியமான பகுதிக ளான சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல்கள் போன்ற உறுப்புகளையும் தானம் அளிக்கலாம். இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வைக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கண்கள் போன்ற உடல் உறுப்புகளை சரியான நேரத்தில் தேவைப்படு வோருக்கு மாற்றம் செய்யும் போது, அவரது வாழ்க்கை யையும், உயிரையும் காப்பாற்ற முடிகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து வதன் மூலமாக ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடல் உறுப்புகளை தான மாக வழங்குவது பல உயிர்களை காப்பாற்று வதற்கான வாய்ப்பாக அமைகிறது என்பதை அறிந்து கொள்ள செய்ய முடியும்.
இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் வெங்கடேஷ் பிரஜ்னா, அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி மேலாளர் சரவணன், அரசு மருத்துவர்கள், கண் தானம் செய்த குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






