search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டர் உடல் உறுப்புகள் தானம்
    X

    சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டர் உடல் உறுப்புகள் தானம்

    • குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
    • தீபாஞ்சியின் மூளை 95 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தீப்பாஞ்சி (வயது40). ஐடிஐ படித்து முடித்து விட்டு பெயிண்டிங் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 15 ஆம் தேதி அன்று இவர் நல்லம்பள்ளியில், சேலம்-தருமபுரி சாலையில் ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீபாஞ்சி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மூளை சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் உடல் உறுப்புகள் தானம் குறித்து தீப்பாஞ்சி குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் கூறிய போது அவரது சகோதரர் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உத்தரவின் பெயரில் மயக்கவியல் தலைமை மருத்துவர் முருகேசன் தலைமையில் மருத்துவ குழுவினர் மூளைச்சாவில் இறந்து போன தீப்பாஞ்சின் இருதயம், கணையம், கல்லீரல், கிட்னி ஆகிய நான்கு உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து சேலம், ஈரோடு, ஆகிய மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்தில் மரணம் அடைந்த தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மயக்கவியல் தலைமை மருத்துவர் முருகேசன் கூறும்போது:-

    விபத்தில் காயம் அடைந்த தீபாஞ்சியின் மூளை 95 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. மூளை செயல் இழந்து விட்டது. தொடர்ந்து செயற்கை வாசம் மூலமாக அவரது உடல் உறுப்புகள் இயங்கும் வகையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ள பல உயிர்களுக்கு மறுவாழ்வு கொடுத்ததாக இருக்கும் என்று இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த ஆலோசனையை தீபாஞ்சியின் குடும்பத்தார் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு நாம் அனைவரும் நன்றி கூற வேண்டும். இறந்தவரின் உடலில் இருந்து பல உறுப்புகள் எடுக்கப்பட்டது. இந்த உடல் உறுப்புகளை பெறும் நபர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு போராடிக் கொண்ட நபர்கள்தான் அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்ததாக இருக்கும். மூளைச்சாவில் இறந்த தீபாஞ்சியின் மூலமாக இவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என தெரிவித்தார்.

    Next Story
    ×