search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry Assembly"

    • கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார்.
    • மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22-ந் தேதி இடைக்கால கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அரசு காரில் வந்து இறங்கினர்.

    ஆனால் திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் மட்டும் தனது உதவியாளரின் பைக்கில் வந்து கலந்து கொண்டார்.

    அரசு கொடுத்த கார் அடிக்கடி பழுதாகி விடுவதால் தனது வீடான செல்லிப்பட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தாக தெரிவித்தார்.

    மேலும் தனக்கு புதிய காரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனாலும், அவருக்கு புதிய கார் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் காரை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து கார் சாவியை கொடுத்து காரை ஒப்படைத்தார். கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார். இது குறித்த அங்காளன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-


    எனக்கு கொடுக்கப்பட்ட அரசு கார் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அந்த காரை பட்டி பார்த்து புதிய கார் போல் என்னிடம் வழங்கினர்.

    ஆனால் கார் எங்கு போனாலும் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது.

    இதேபோல் மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது. ஆனால் எனக்கு காருக்கு டீசல் போட பணம் தருவதில்லை. காரின் ஆவணங்களையும் வழங்கவில்லை. இதனால் எனக்கு காரே வேண்டாம் என்று சபாநாயகரை சந்தித்து சாவியுடன் ஒப்படைத்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மற்றவர்களுக்கு புதிய கார் தந்துள்ளனர். எனக்கு இயங்கும் காரைக்கூட சீரமைத்து தரவில்லை.
    • மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வர அவர் பின் சீட்டில் அமர்ந்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன்.

    இவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தது. இந்த கார் பழுதடைந்து விட்டது. இதனால் பழைய காரை மாற்றி, புதிய கார் வழங்கும்படி சட்டசபை செயலகத்திடம் ஒப்படைத்திருந்தார். ஆனால் அவருக்கு மாற்று காரோ, பழைய காரை பழுது நீக்கியோ தரப்படவில்லை.

    இதனால் அங்காளன் எம்.எல்.ஏ. தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் திருபுவனை தொகுதியிலிருந்தே மோட்டார் சைக்கிளில் சட்டசபைக்கு வந்தார். மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வர அவர் பின் சீட்டில் அமர்ந்து வந்தார்.

    இதுகுறித்து அங்காளன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    எம்.எல்.ஏ.வான எனக்கு அரசு தரப்பில் வழங்கிய கார் பழுதடைந்தது. பலமுறை காரை மாற்றித் தரக்கோரி அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றவர்களுக்கு புதிய கார் தந்துள்ளனர். எனக்கு இயங்கும் காரைக்கூட சீரமைத்து தரவில்லை. அதிருப்தியடைந்தாலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்தேன் என தெரிவித்தார்.

    • புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் ஆண்டறிக்கை நகலை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சபையில் சமர்பித்தார்.
    • பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

    சபையில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான மறைந்த விஜயகாந்த், விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மார்க்சிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, மறைந்த தலைவர்களுக்காக, சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் ஆண்டறிக்கை நகலை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சபையில் சமர்பித்தார்.

    தொடர்ந்து சட்ட முன்வரைவுகளுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்பட்டது. சட்டசபை குழு அறிக்கை, கூடுதல் செலவின அறிக்கை, பேரவை முன் வைக்கப்பட்டது.

    தொடர்ந்து அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சபையில் தாக்கல் செய்தார்.

    ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாத அரசு செலவினங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    இந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    காலை 9.45 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் 10.45 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    • 2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
    • மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    ஆனால் புதுச்சேரி சட்டசபையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ந்தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது. ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வருகிற 22-ந் தேதி காலை 9.45 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது.

    அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    சட்டசபை கூடும் தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    2024-25-ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

    2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
    • 2016-ம் ஆண்டுதான் புதுவை சட்டசபையில் அதிக பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர்.

    நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் நீண்டகால கோரிக்கையான சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லை. புதிய பாராளுமன்ற கட்டடத்தை திறந்து நடந்த சிறப்பு கூட்டத்தில் சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.

    இந்த மசோதா புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதனிடையே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்பதால் சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

    இதன்படி பாராளுமன்றத்தில் நேற்று புதுவை உள்ளிட்ட சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தம் மூலம் புதுவை சட்டமன்றத்தில் 30 எம்.எல்.ஏ.க்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு ஒதுக்கீடாக கிடைக்கும்.

    இதுதவிர 3 நியமன எம்.எல்.ஏ.க்களில் ஒரு பெண் எம்.எல்.ஏ. இடம் பெறுவார்.

    இதன் மூலம் புதுவை சட்டமன்றத்தில் வரும் காலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற புதுவையில் முதல்முறையாக 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. அன்று முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 15 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது.

    புதுவை சட்டப்பேரவை தேர்தலில் பெண் உறுப்பினர்களை குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பு தந்தன. முதல் சட்டப் பேரவையில் (1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திரசேகரன், அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4-வது, 5-வது சட்டப் பேரவைக்கு பெண்கள் யாரும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரவையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சராகவும் இருந்தார்.

    7-வது சட்டப்பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சட்டப்பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்டார். 8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 9-வது சட்டப் பேரவைக்கு 1991-ல் கேபக்கிரி அம்மாளும், 10-வது சட்டப்பேரவைக்கு 1996-ல் அரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    11-வது சட்டப் பேரவைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை.

    இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 1, காங்கிரஸ் சார்பில் 1, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 2, தி.மு.க. சார்பில் 1, பா.ஜ.க., பா.ம.க., ஐ.ஜே.க. என பல்வேறு கட்சிகள் சார்பில் மொத்தம் 12-க்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

    காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வி.விஜயவேணி, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்ட கோபிகா, நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா, தி.மு.க. சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஆனந்தன், உள்ளிட்ட 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

    2016-ம் ஆண்டுதான் புதுவை சட்டசபையில் அதிக பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர். 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்ற சந்திரபிரியங்கா அமைச்சராக பதவியேற்றார். இவரும் கடந்த அக்டோபர் மாதம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக தற்போதுள்ள சட்டசபை யில் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ. மட்டும்தான் உள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் பெண்களை சட்டசபை தேர்தலில் நிறுத்த முன்வராததுதான் காரணம்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளான தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. காங்கிரசில் ஒரே ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவரும் நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    என்.ஆர். காங்கிரசில் 2 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் ஒருவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஆனால் வருங்காலத்தில் இந்த நிலை முற்றிலும் மாறும். சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு வாய்ப்பளித்தே தீர வேண்டும் என்ற நிலை உருவாகும்.

    • தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் ஏற்றிய வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
    • இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் காலாப்பட்டு ரசாயன தொழிற்சாலை மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுப்புற சூழலையும், சுனாமி குடியிருப்பு மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் காப்பாற்றிட வலியுறுத்தி புதுவை சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் வடசென்னை தெற்கு, (கிழக்கு) மாவட்ட செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை அ.தி.முக. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் ஏற்றிய வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்துக்கு காரணமான அந்த வாகன காண்ட்ராக்டர் யார்? அவர் திட்டமிட்டு அந்த விபத்தை ஏற்படுத்தினாரா? என்பது குறித்தும், அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக விபத்தை ஏற்படுத்தி அதற்குரிய இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே அவர்களின் உடல் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் இங்கிருந்து 4 மணி நேரம் மரண அவஸ்தையுடன் நோயாளிகளை சிகிச்சைக்கு அரசின் அனுமதியோடு கொண்டு சென்றனரா? அவ்வாறு கொண்டு செல்ல அதிகாரம் அளித்தது யார்? போகும் வழியிலேயே ஒரு நோயாளி மரணமடைந்திருந்தால் அதற்கு பொறுப்பு யார்?

    ஜிப்மர் டாக்டர்கள் மறுத்தும் சென்னைக்கு கொண்டு சென்றது சம்பந்தமாக மருத்துவ புலனாய்வு நிபுணர்களை கொண்டு உயர்மட்ட விசாரணைக்கு முதலமைச்சர், கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி வருகிறார்.
    • பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகளை அனைத்து எம்.எல்.ஏ.க்களோடு முதல்-அமைச்சர் தலைமையில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஏற்கனவே 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    புதுவையில் பா.ஜனதா-என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களோடு இணக்கமான ஆட்சி புதுவையில் நடந்து வருவதால் இந்த காலக்கட்டத்தில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலிலும் மாநில அந்தஸ்து பெறுவோம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளித்தன.

    கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு 14-வது முறையாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் கடந்த ஜூலை மாதம் கவர்னர் தமிழிசை ஒப்புதலோடு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை அரசின் தீர்மானத்திற்கு மத்திய அரசு கடிதம் மூலம் பதிலளித்துள்ளது.

    இந்த கடிதத்தில் தற்போதைய நிலையே புதுவையில் தொடரும் என குறிப்பிட்டுள்ளது. இதனால் யூனியன் பிரதேசமாகவே புதுவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதுவை அரசியல் கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையே தொடரும் என தெரிவித்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அனுப்பப்பட்ட தீர்மானங்களை பற்றி மத்திய அரசு தெரிவிக்கவில்லை. 2022-23-ம் ஆண்டில் புதுவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்தை வலியுறுத்திய அரசு தீர்மானத்தின் மீது மத்திய அரசு பதிலளித்துள்ளது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி வருகிறார். மீண்டும் சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் கொண்டு வரப்படும். பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகளை அனைத்து எம்.எல்.ஏ.க்களோடு முதல்-அமைச்சர் தலைமையில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.

    நிதி கமிஷனில் புதுவையை சேர்க்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. நிதி கமிஷனில் முதலில் புதுவை சேர்க்கப்படும். பின்னர் மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்பெறும். சிலவற்றில் மட்டும்தான் மத்திய அரசு புதுவையை யூனியன் பிரதேசமாக கருதுகிறது. மற்ற அனைத்து விஷயங்களிலும் மாநிலமாகவே கருதுகிறது. அதன்படி புதுவையிலேயே உள்ள அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ள மத்திய உள்துறை தெரிவிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திராயன், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார்.
    • சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. இரங்கல் குறிப்புக்கு பிறகு எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து பேசினர்.

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா, மகளிருக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்தாதது, தொகுதியளவில் நடைபெற வேண்டிய பணிகள், மக்கள் நல பணிகளை செயல்படுத்தாதது ஆகியவை குறித்து சபையில் விவாதிக்க வேண்டும்.

    அனைத்து பிரச்சனைகளுக்கும் தலைமை செயலாளரும், அதிகாரிகளும்தான் காரணம் என கூறுகின்றனர். அதுகுறித்தும் விவாதிக்க வேண்டும் என கூறினார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, அலுவல் முடிந்தவுடன் பேச அனுமதிப்பதாகவும், உறுப்பினர்கள் அனைவரும் அமரும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

    9.45 மணியளவில், சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி எதிர்கட்சித்தலைவர் சிவா வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திராயன், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார்.

    அப்போது மீண்டும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிவா தலைமையில் சபைக்கு வந்தனர். அவர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று, அலுவல் பட்டியலில் இல்லாததை எப்படி பேசலாம்? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சபாநாயகர், நன்றி அறிவிப்பு அலுவல் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்தார். இதனால் சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார்.
    • சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மைய மண்டப படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சமாதானப்படுத்தி தன் அறைக்கு அழைத்து சென்றார். இதனால் சட்டசபை நிகழ்வுகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    9.37 மணிக்கு சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது. முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி20 மாநாடை வெற்றிகரமாக நடத்தியுள்ளதற்கும் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஆகியவற்றுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

    தொடர்ந்து சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

    தொடர்ந்து 2023-ம் ஆண்டு புதுவை எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழத்தலை தடுத்தல் திருத்த சட்ட முன்வரைவை அமைச்சர் லட்சுமிநாராயணனும், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த முன்வரைவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் தாக்கல் செய்தனர்.

    இந்த மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சபையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    புதுவை சட்டசபை 23 நிமிடத்தில் முடிவடைந்தது.

    • சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியின் அடிப்படையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூடுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    பின்னர், சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

    புதுவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசு, பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசுக்கு எதிராக சட்டசபையில் உண்ணாவிரதம் இருப்பேன் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் அறிவித்துள்ளார். சட்டசபை கூடும் நாளை அவர் உண்ணாவிரதம் இருப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அதோடு, என்.ஆர்.காங்கிரஸ் அரசு அமைந்து 2 ஆண்டுகளை கடந்தும் ரேஷன் கடைகளை திறக்கவில்லை, அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தாதது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவற்றை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது.

    இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் நாளை காலை சட்டமன்றம் கூடுகிறது.

    • சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
    • கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 9-ந் தேதி கவர்னர் தமிழிசை உரையுடன் தொடங்கியது.

    13-ந்தேதி நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 14 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

    சட்டசபையை 6 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி இந்த மாதத்தில் சட்டசபையை கூட்ட வேண்டும். இதற்காக வருகிற 20-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது. இதை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஆனால் அன்றைய தினம் ஒரு நாள் மட்டுமே சட்டசபை நடைபெறும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    அதேநேரத்தில் எதிர்கட்சிகள் தரப்பில் பேனர் கலாச்சாரம், சிலிண்டருக்கு மானியம் வழங்காதது, ரேஷன்கடைகளை திறக்காதது, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமரை சந்திக்காதது குறித்து பிரச்சனையை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார்.
    • சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் சத்யராஜ் (வயது 29).

    பிளஸ்-2 வரை படித்துள்ள அவர், வலு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். அவர் புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார்.

    இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சத்யராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் சட்ட சபைக்கு வந்தார். சட்டசபை நுழை வாயிலில் நின்று கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை வேலை வழங்கப்படவில்லை என்று கூச்சலிட்டார்.

    அப்போது சட்டசபை காவலர்கள் அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர் தனது சான்றிதழ்களை சட்டசபை நுழை வாயிலில் தூக்கி வீசினார். உடனே சபை காவலர்கள் அதனை எடுத்துக்கொடுத்து அங்கிருந்து செல்லும் படி கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து அரசுக்கு எதிராக கூச்சலிட்டார்.

    இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×