புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்

அநேகமாக இந்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தவிடும்.
புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

நடப்பு ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால் அரசின் 5 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுவை சட்டசபை நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது.

நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபையை குறள் வாசித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படுகிறது.

இதையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மேலும் நடப்பு நிதி ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் பெறப்படுகிறது. இதையடுத்து சபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளான காங்கிரசும், தி.மு.க.வும் போலி மருந்து விவகாரம், ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்து வந்தது. இந்த அரசின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதனால் நாளை கூடும் சட்டசபையே என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசின் நிறைவு சட்டசபையாக அமையும். தேர்தலுக்கு பிறகுதான் புதுவை சட்டசபை மீண்டும் கூடும். அப்போதுதான் முழுமையான பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும்.

அநேகமாக இந்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தவிடும். அன்றைய நாளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கார்கள், சட்டசபை அறை ஆகியவற்றை சட்டசபை செயலரிடம் ஒப்படைத்துவிடுவர்.

தேர்தல் வரை காபந்து முதல்-அமைச்சராக ரங்கசாமி தொடர்வார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com