என் மலர்
நீங்கள் தேடியது "பரிகார பூஜை"
- கிரகணம் நேரம் முடியும் வரை உலக்கை செங்குத்தாக நின்றது.
- இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடு நடத்தப்பட்டன.
திண்டுக்கல்:
இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் நேற்று இரவு தென்பட்டது. பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இந்த நிகழ்வு நேற்று இரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை தென்பட்டது. பல்வேறு இடங்களில் இதனை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் மையத்தில் சந்திரகிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக தென்படவில்லை. இதனால் அங்கு திரண்டிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திண்டுக்கல் மற்றும் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தை முன்னிட்டு அரிய நிகழ்வை காண பொதுமக்கள் திரண்டனர். ஆனால் லேசான சாரல் மழை பெய்ததால் கிரகணம் தென்படவில்லை.
பொதுவாக கிரகணம் ஏற்படும் சமயங்களில் உலக்கையை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிறுத்தி சோதனை செய்வது வாடிக்கை. இதேபோல் திண்டுக்கல் நாகல்புதூர் 3-வது தெருவில் நாகரத்தினம் (73) என்ற மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாகவே இதனை பொதுமக்களிடம் செய்து காட்டி வருகிறார். அதேபோல் நேற்று இரவும் கிரகண நேரத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை வரவழைத்து உலக்கையை நிறுத்தி செய்து காட்டினார். கிரகணம் நேரம் முடியும் வரை அந்த உலக்கை செங்குத்தாக நின்றது.
இதேபோல் எரியோடு அருகே உள்ள ஒரு விவசாயி தனது வீட்டில் உலக்கையை செங்குத்தாக நிறுத்தி வைத்து அப்பகுதி மக்களிடம் கிரகணத்தை உறுதி செய்தார். கிரகணத்தை வானில் பார்க்க முடியவில்லை என்றாலும் அதனை இவ்வாறாக உணர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்படைந்தனர்.
கிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி, திண்டுக்கல் அபிராமி அம்மன், சவுந்தரராஜபெருமாள், நத்தம் மாரியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் நேற்று மாலை மூடப்பட்டன. இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடு நடத்தப்பட்டன.
- அசைவ உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நபர், நாங்கள் உள்ளூர் தான் என்று தெரிவித்தார்.
- அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் ராஜகோபுரம் அருகில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நேற்று கணவன், மனைவியான இருவர் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அசைவ உணவான முட்டை குஸ்காவை மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்து சாப்பிட்டனர்.
அவ்வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவில் ராஜகோபுரத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெண் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த அசைவ உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நபர், நாங்கள் உள்ளூர் தான். தினமும் தான் சாப்பாடு வாங்கி வந்து இங்கு சாப்பிடுவது எல்லாருக்கும் தான் தெரியும். தற்போது கையில் காசு இருந்ததால் முட்டை குஸ்கா வாங்கி வந்து சாப்பிட்டோம் என்று சாதாரணமாக பதில் அளித்தார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண் அசைவ சாப்பாடு இங்கு வந்து சாப்பிடலாமா என்று எச்சரித்தார். பின்னர் அவர்கள் கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கோவில் நிர்வாக அலுவலர்களால் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்களை மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தம்பதியை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை பரிகார பூஜை செய்யப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தம்பதி அசைவு உணவு சாப்பிட்ட இடம் உள்ளிட்ட கோவில் வளாகங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.
தம்பதியினர் கோவில் வளாகத்திற்குள் அமர்ந்து அசைவ உணவை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த சம்பவம் கோவிலில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
- பெருவாரியான குடும்பங்களுக்கு நாகங்கள் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது.
- இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறு பெற்ற தலங்கள் அநேகம் உள்ளது.
ஆனி மாதத்தில் ஸ்கந்த பஞ்சமி, ஆடியில் நாக பஞ்சமி, ஆவணியில் ரிஷி பஞ்சமி, கார்த்திகையில் நாக பஞ்சமி, தை மாதத்தில் வசந்த பஞ்சமி, மாசியில் ரங்க பஞ்சமி, பங்குனியில் ஸ்ரீபஞ்சமி என்று ஏழு பஞ்சமி விரதங்களை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது தமிழகத்தின் மரபாகும்.
பெருவாரியான குடும்பங்களுக்கு நாகங்கள் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது. ஆயில்யம் நட்சத்திர அதிதேவதை நாகராசாவாகும். நாகதோஷ நாக சாப பரிகார பூஜைகளுக்கு ஆயில்யம் நட்சத்திரமும், நாகங்களின் அனுக்கிரகம், அருள் நலம் வேண்டி பூஜித்திட பஞ்சமி திதியும் உத்தமமாகும்.

உரகம், ர, அ, பணா, கவ்வை, அரவு, நாகம், பாம்பு, சர்ப, ஆஷ்லேஷா, கட்செவி, போகி, சுகி, அரி, வியாளம், பன்னகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம் எனும் 21 பெயர்களால் அழைக்கப்படுவது ஆயில்யம் நட்சத்திரம்.
பஞ்ச பிரம்மாக்களில் ஒருவரான கசியபமுனிவர் முதலில் கத்துரு முனி பத்னி மூலம் ஆயிரம் சர்ப்பங்களையும், இரண்டவதாக சுவரசை முனி பத்னி மூலம் ஆயிரம் பாம்புகளையும் தோற்றுவித்தார்.
முதன் முதலில் பிறந்தவர் சேஷன் அதனால் ஆதிசேஷன் என்ற பெயருடன் நாகராசாவாக முடி சூட்டப்பட்டார். சாத்வீக குணமும், பொறுமையும், நல்ல சிந்தனையும், கொண்ட ஆதிசேஷனுக்கு சர்ப்பங்களின் பழிவாங்கும் குணமும், கோபமும், முரட்டு சுபாவமும் பிடிக்காமல் அரச பதவியில் இருந்து விலகி தவம் மேற்கொண்டார். தவத்தின் பயனாக இறைவனிடம் வேண்டிய வரத்தின் மூலம் ஆயிரம் தலைகளுடன் பூமியைத் தாங்கும் வர பலத்தை பெற்று வணங்கத்தக்கவரானார்.
பின்னர் சர்பங்களுக்கு அரசனாக அனந்தனும் பாம்புகளுக்கு அரசனாக வாசுகியும் ஆனார்கள், ஆதிசேஷனின் தம்பியர்களான அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், பத்மன், சங்கபாலன், குளிகன், மகாபத்மன் எண்மரும் அண்ணனைப்போல தவமிருந்து அண்ணனுக்கு துணையாக இந்த பூமியை 8 திக்கில் இருந்தும் காக்கும் வரத்தைப் பெற்று அஷ்டதிக் நாகர்கள் ஆனார்கள்.

இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறு பெற்ற தலங்கள் அநேகம் உள்ளது. நாகர்கோவில், அனந்தமங்கலம். கார்கோடகநல்லூர், வாசுதேவநல்லூர், தச்சநல்லூர், பத்மநேரி, சங்க பாலபுரம் என்று பலவுள்ளன. நாகராசாவான அனந்தின் பெயரால் அனந்த விரதம் திருவனந்தபுரம், அனந்த பத்மநாபன், நாகநாதர், நாகேஸ்வரர்,நாகவல்லி, நாகம்மன், சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர் என்ற திருப்பெயர்களும், தெய்வங்களுக்கு குடையாக படுக்கையாக, அணிகலன்கலாக, கச்சைகளாகவும் நாகங்கள் தனி இடத்தைப் பெற்றுள்ளன. புன்னாக மரம் என்ற புன்னை மரமும், புன்னாகவராளி என்ற ராகமும் விசேஷமாக உள்ளது.
- விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வந்த வித்யா, கடுமையான சாப தோஷம் இருப்பதால் வீட்டில் வைத்து தொடர்ந்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
- விஸ்வாம்பரனின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த 55 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை கொடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பரன் (வயது 65). இவருடைய குடும்பத்தில் சிலர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் விஸ்வாம்பரன் மனமுடைந்த நிலையில் இருந்தார்.
இதனால் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது சில பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார். மேலும் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள தெற்றியோடு தேவி என அழைக்கப்படும் வித்யா என்ற பெண் மந்திரவாதி இருக்கிறார். அவர் பரிகார பூஜை நடத்துவார் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு விஸ்வாம்பரன் களியக்காவிளை சென்று பெண் மந்திரவாதி வித்யாவை சந்தித்தார். அப்போது நான் நேரடியாக வீட்டுக்கு வந்து பரிகார பூஜை நடத்துகிறேன் என்று வித்யா கூறியுள்ளார். அதன்படி சில நாட்கள் கழித்து விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வந்த வித்யா, கடுமையான சாப தோஷம் இருப்பதால் வீட்டில் வைத்து தொடர்ந்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர் வீட்டிலேயே ஒரு அறை பூஜை அறையாக மாற்றப்பட்டது. ஒரு வாரத்திற்கு மேல் வித்யாவும், அவருடன் வந்தவர்களும் சேர்ந்து பூஜை நடத்தினர். ஒரு கட்டத்தில் தேவியின் சாபம் குறையவில்லை என கூறிய வித்யா, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை வைத்து பூஜை நடத்த வேண்டும் என்றார்.
அதை நம்பிய விஸ்வாம்பரனின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த 55 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை கொடுத்துள்ளனர். அவற்றை பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்து விட்டு செல்லும்படி வித்யா கூறியுள்ளார். பூஜையை முடித்ததும் 2 வாரம் கழித்து தன்னிடம் தெரிவித்து விட்டு பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வித்யா அங்கிருந்து சென்றார்.
2 வாரங்கள் கழிந்ததும் வித்யாவை விஸ்வாம்பரன் தொடர்புகொண்டு பீரோவை திறக்கலாமா? எனறு கேட்டுள்ளார். தேவியின் சாபம் இன்னும் குறைவில்லை என்றும், 3 மாதம் கழித்து தான் பீரோவை திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி 3 மாதமும் கழிந்தது. பின்னர் கேட்டபோது ஒரு வருடம் கழித்து திறக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் விஸ்வாம்பரனுக்கு சந்தேகம் உருவானது.
உடனே அவர் பூஜை அறைக்கு சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வாம்பரன் உடனடியாக வித்யாவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அப்போது போலீசில் புகார் செய்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என்று வித்யா மிரட்டியுள்ளார். எனினும் மிரட்டலுக்கு பயப்படாத விஸ்வாம்பரன் இது குறித்து திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் மந்திரவாதி வித்யா மற்றும் அவருடன் வந்தவர்களை தேடி வருகின்றனர்.
- பகலில் வீடுகளை பூட்டிவிட்டு விவசாய நிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர்.
- கிராமத்தில் சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டலத்தில் கொத்தாசனம்பட்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருகின்றனர்.
மேலும் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு அருகில் வைக்கோல்களை தனியாக அடுக்கி வைத்துள்ளனர்.
பகலில் வீடுகளை பூட்டிவிட்டு விவசாய நிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்ட வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
மேலும் விவசாய நிலத்தில் இருந்த வைக்கோல்களும் பற்றி எரிந்தன. ஆனால் இவற்றிற்கு யாரும் தீ வைத்ததாக தெரியவில்லை. திடீர் திடீரென வீடுகளில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கிராமத்தில் சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்குள்ள கோவிலில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விளக்கேற்றி பரிகார பூஜை செய்தனர்.
அதற்கு பிறகும் பூட்டிய வீடுகள் தீ பிடித்து எரிந்தது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து நேரடியாக ஆய்வு செய்தனர்.
அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வகத்தின் அறிக்கை வந்தவுடன் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவரும் என திருப்பதி கலெக்டர் கூறினார்.
இதுகுறித்து சந்திரகிரி செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி எம்.எல்.ஏ கூறுகையில், தீ விபத்துகளின் மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம். காரணம் விரைவில் தெரியவரும். அடுத்து என்ன செய்வது என்று பார்ப்போம். ஆங்காங்கே எரியும் தீ பற்றி வரும் கட்டுக்கதைகள், வதந்திகளை நம்பாதீர்கள், அதற்கான காரணங்கள் விரைவில் தெரிய வரும், வேறு கிராமத்தில் இப்படி நடக்காமல் கவனமாக இருப்போம்.
மாவட்ட வருவாய் அலுவலர் கனக நரசா ரெட்டி, சுற்றுச்சூழல் பேராசிரியர் தாமோதர், தீயணைப்பு அலுவலர் ரமணய்யா, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி தீ விபத்து எரிவது குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பரிகார பூசை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் உண்டாகும்.
- ஆலயத்தில் உள்ள பாம்புப் புற்றுக்கு காணிக்கை செலுத்தலாம்.
ராகு தோஷம் என்பது பல வகைகளில் காணப்படும். ராகுபகவான் ரிஷபத்தில் உங்கள் ஜாதகத்தில் நீசம் பெற்று இருந்தாலும், பகை பெற்று இருந்தாலும், 7, 8-ல் இருந்தாலும், ராகு தோஷமாகும். புத்திர தோஷம், களத்திதிர தோஷம், காலசர்ப்ப யோகம், மாங்கல்ய தோஷம் போன்ற தோஷங்களுடன் கூடிய அமைப்புகளில் இருந்தாலும், ராகு தோஷம் தான்.
ராகு திசை, ராகு புத்தி நடந்தாலும், ராகு காலத்தில் பிறந்திருந்தாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தாலும், தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 4 வந்தாலும், அவை ராகு தோஷமாக கருதப்படும். சதயம், சுவாதி, திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும், ராகு தோஷ பாதிப்பு ஏற்படக் கூடும்.
இத்தகைய அமைப்பு- பெற்றவர்கள் பரிகார பூஜை செய்வது நல்லது. திருநாகேஸ்வரம் சென்று, ராகு பகவானை, ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து, பரிகார பூசை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் உண்டாகும்.
ராகு கிரகம், ஞானம், பாட்டனார் வம்சம், சேவகத் தொழில், கைத்தொழில், வித்தை, நீர்க்கண்டம், உடல் அங்ககீனம், வாயு, வலிப்பு நோய், பித்த நோய், இறைவாசம், கட்டிகள், வயிற்றுக் கோளாறு, விஷக்கடி போன்றவற்றுக்குக் காரணகர்த்தாவாக இருக்கிறது. அவர் கடுமையான களத்திர, புத்திர தோஷம் கொடுப்பத்துடன் சூரியன், செவ்வாய், சனியை விட மிகக் சொடியவர் ராகு.எனவே திருநாகேஸ்வர பரிகார வழிபாடு ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
ராகுக்கிரக பரிகாரங்கள்
ராகு பகவானுக்கு உரிய நாளாகிய ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து, கருப்பு அல்லது நீல வண்ண ஆடை அணிந்து, கோமேதம் அணிந்து, ராகு பகவானுக்கும் நீல நிறம் அல்லது கருப்புநிற ஆடை அணிவித்து, நீல மந்தார மலராலும், இலுப்பைக் பூவாலும் அலங்கரித்து, அருகு சமித்து கொண்டு தூபம் காட்டி, நெய் விளக்கு ஏற்றி, உளுத்தம் பருப்புப் பொடி சாதம் நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் அளித்திட வேண்டும்.
ராகுபவானை ராகப் பிரியா ராகத்தில் ராகுபகவானின் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனையும் செய்து கொள்ளலாம். அருகம்புல் மாலை போட்டு, அருகம் புல்லால் விநாயகருக்குப் பூசை செய்யலாம். ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் துர்க்ககைக்கு நெய் விளக்கு 11 வாரங்கள் போட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழி பட்டு வர வேண்டும்.
ஆலயத்தில் உள்ள பாம்புப் புற்றுக்கு காணிக்கை செலுத்தலாம். உளுந்து, சுருட்டி, நீல நிறத் துணிகளையும் தானம் செய்யலாம். ராகுபகவானின் அதி தேவதைகளான காளி, பசு, பாம்பு இவைகளைப் பூசிக்க ராகு பகவான் மிகவும் மன மகிழ்ச்சி கொள்வார்.
வழிபாடுக்கு ஏற்ற நாள், நேரம்
திருநாகேஸ்வரம் ராகு பகவானை வழிபட, ராகு பகவான் உச்சம் பெறும் கார்த்திகை மாதத்தில் அவர் நட்சத்திரம் ஆகிய சதயம், சுவாதி, திருவாதிரை வரும் நாட்களில், வழிபாடு செய்வது நல்லது. அதுவும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, ராகு காலத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை ராகுபவானுக்குப் பால் அபிஷேகம் செய்து, பரிகார பூசை செய்வது மிக மிகச் சிறப்பாகும்.
மற்றபடி தினசரி ராகு காலத்தில் பால் அபிஷேகம், பரிகார பூசை செய்யலாம். ஞாயிற்றுக்கிழமையில் செய்வது மிகவும் சிறப்பபுடையதாகும்.
- பரிகாரங்கள் செய்ய ராகுகாலமே உகந்த காலமாகும்.
- துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு வழிபட வேண்டும்.
பொதுவாக சித்தயோகம், அமிர்தயோகம் போன்ற யோக காலங்களை சிறந்த காலங்களாக கருதும் நம்மனதில் ராகுகாலம் என்றாலே ஒருவித பயம் உண்டாகிறது. ஆனால் உண்மையில் இருட்டில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும், வருத்தப்படுபவர்களுக்கு வளம்தரும் கற்பகமாகவும் ராகு காலமே திகழ்கிறது. எனவே பரிகாரங்கள் செய்ய ராகுகாலமே உகந்த காலமாகும்.
ராகுகாலம் 1 மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 - 6.00, திங்கள் 7.30 -9.00, செவ்வாய் 3- 4.30, புதன் 12- 1.30, வியாழன் 1.30 - 3.00, வெள்ளி 10.30 - 12, சனி 9-10.30 ஆகும்.
ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேஷ காலமாகும். இந்தநேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும்.
இந்க நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோசங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.
சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை
15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)
மங்களவார(செவ்வாய்க்கிழமை) பூஜை
ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00- 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப்பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
கிரக சர்ப்ப சாந்தி
பாம்பினை அடிப்பதால் வரும் தோசம், முன்னோர்களினால் வந்த நாக தோசம் நீங்க வேண்டுமானால் செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்தல் வேண்டும். வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் நாக உருவை வைத்து கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும்.
எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
1. ராகு கால பௌர்ணமி பூஜை - பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
2. ராகு கால கிருத்திகை பூஜை - புகழ் தரும்.
3. ராகு கால சஷ்டி பூஜை - புத்திரப்பேறு கிடைக்கும்.
4. ராகு கால ஏகாதசி பூஜை - பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
5. ராகு கால சதுர்த்தி பூஜை - துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.
- ஆன்மாக்களுக்கு அதிதேவதை அங்காளி ஆகும்.
- அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே அவள் வந்து துன்பத்தை தீர்த்து வைப்பாள்.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் அதாவது சனி ஓரையில், 18 எலுமிச்சம்பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம்பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால், தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடி விடும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.
இந்த பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று!' என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.
தோஷம் போக்கும் அங்கபிரதட்சணம்
குடும்பத்தில் குழப்பம், நோய், நொடிகள், பேய் பிசாசு, பில்லி,சூன்யம், வைப்பு, ஏவல், காட்டேரி போன்ற பிணிகள் பிடித்து இருந்தால் மேல்மலையனூர் அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே போதும், அவள் வந்து துன்பத்தைத் தீர்த்து வைப்பாள். பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை எல்லாம் விலக்கி விடு என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
அங்கப்பிரதட்சணம் செய்வது அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்த நேர்த்திக் கடனாகும். இந்த உலகில் உள்ள ஆன்மாக்களுக்கு எல்லாம் அதி தேவதையாக விளங்கும் தலைமைத் தாய் அங்காளி ஆகும். அந்த அங்காளி மனிதப் பிறவிகள் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களைப் பற்றிக் கொண்டு ஆட்டுதாகவும் கருதப்படுகிறது.
ஆன்மாவானது பற்றிக் கொண்ட மனிதன் என்ற பூத உடலை விட்டு விலகி மீண்டும் அம்மனுடைய கோவிலில் அம்மனுடைய சக்தி சொரூபத்தை சென்று அடைய வேண்டும் என்பதை கருதியே அங்கபிரதட்சணம் என்ற பிரார்த்தனை செய்யப்படுகிறது.
மனிதன் செய்த பாவ எண்ணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக்கூடும். இந்த பாவச்சுமையை பக்தர்கள் உடனுக்குடன் இறக்கி வைத்து விட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அங்க பிரதட்சணமாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டு கோயிலையும் சுற்றி வருவதால் அப்பாவ செயல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிடும். மேலும் கோவிலை சுற்றி வலம் வரும் போது அந்த பாவங்கள் அனைத்தும் அறவே நீங்கி விடுவதாக கருதப்படுகிறது.
அங்க அவயம் என்பது எட்டு உறுப்புகள் கொண்ட தொகுப்பாகும். தலை, நெற்றி, கரங்கள், தோள்பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் ஆகியவை அங்க அவயங்களாகும். இவையாவுமே அம்மன் திருக்கோயில் வளாகத்தில் பூமியில் படும்படியாக நமஸ்காரம் செய்வதே அங்க பிரதட்சணம் என்பதாகும்.
பலி பீடத்திற்கு எதிராக உடலை தூய்மையாக்கி குளித்து ஈரத்துணியுடன் கிழக்கு நோக்கி தரையில் உருண்ட வண்ணம், மீண்டும் மேற்குப் பக்கமாக வந்து பலி பீடத்தின் முன்பாகவே பிரார்த்தனையை முடித்து எழுந்து மீண்டும் குளித்து தூய ஆடை உடுத்தி அம்மன் கோவில் உள்ளே சென்று அம்மன் புற்றை வலம் வந்த வண்ணம் மூலவரை தரிசிக்க வேண்டும் பிறகு காணிக்கையை உண்டியலில் செலுத்தி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
அங்க பிரதட்சனை வழிபாடு செய்வதால் ஜீவ ஆத்மாக்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோஷங்கள், பில்லி, ஏவல், வைப்பு, காட்டேரி, சூன்யங்கள் யாவும் அம்மன் அருளால் தானாக விலகிச் செல்வதாக கருதப்படுகிறது.
அங்கப்பிரதட்சனம் சுற்றி வரும் பக்தர்கள் அம்மன் நினைவை தவிர வேறு சிந்தனையை மனதில் வைக்கக்கூடாது. அங்காள பரமேசுவரி மீது பாரத்தை போட்டு விட்டு பிரதட்சணம் செய்ய வேண்டும். அங்க பிரதட்சணத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் மேல்மலையனூர் தலத்தில் அதை செய்ய தவறுவதில்லை.
- மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
- விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் 2.23 மணி வரை நீடித்தது. இதையொட்டி பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் நேற்று இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலசபூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெற்றது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதைகளில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் தென்பட்டது.
மேலும் மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நேற்று மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்த பின்னர் பரிகார பூஜை செய்யப்பட்டு மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதேபோல் அபிராமி அம்மன் கோவில், தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களும் பரிகார பூஜைக்குப் பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டது.
- சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, சிறப்பு அபிஷேகம்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூரில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மிகச்சிறந்த பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆடி மாதம் வரும் சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சனிபகவான் இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில்இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
இதற்காக நேற்று காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சணை தொடங்கியது. இன்று காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, நவக்கிரஹ பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை தொடர்ந்து 5.20 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கோவில் முன்பு உள்ள சுரபி நதியில் நீராடி தங்கள் பரிகார பூஜைகளை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.
- கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
பவானி:
பவானி நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவேரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
இந்த கோவிலுக்கு தினசரி உள்ளூர் வெளியூர் வெளிமாநில பக்தர்கள் என பல வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல், செவ்வாய் தோஷம் நீக்குதல், ராகு கேது பரிகார தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்று வருகின்றனர்.
அதேபோல் பரிகார பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தாங்கள் அணிந்து கொண்ட பழைய துணிகளை காவிரி ஆற்றில் கழற்றி விட்டு செல்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த துணிகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு ஏலதாரர்கள் அதை சுத்தம் செய்வது வழக்கமாக உள்ளது.

தற்போது காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் தினசரி 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் காவிரி ஆறு பார்க்கும் இடமெல்லாம் பாறைகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் விடும் துணிகள் ஆங்காங்கே காவிரி ஆற்றின் பாறைகள் உட்பட படித்துறைகள் என பல்வேறு இடங்களில் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது.
துணிகளை அப்புறபடுத்த ஏலம் எடுத்தவர்கள் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த துணிகளை மட்டும் எடுத்துக் கொள்வதாகவும், மீதமுள்ள துணிகளை ஆங்காங்கே விட்டு விடுவதாகவும் பக்தர்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதனால் பார்க்கும் இடமெல்லாம் பழைய துணிகளாகவும், குவிந்து கிடக்கும் குப்பைகளும், பார்க்கவே முகம் சுளிக்கும் வகையில் கூடுதுறை கோவில் பின்பகுதி அமைந்துள்ளது என பக்தர்கள் பலரும் வேதனையுடன் தெரிவித்து கொண்டனர்.
இதனால் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் பக்தர்கள் அந்த துணிகளை ஆற்றில் விடுவதை தடுத்தோ அல்லது துணிகள் தண்ணீர் ஓடும் இடங்களில் போட வலியுறுத்தி பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி காவிரி ஆற்றையும், சங்கமேஸ்வரர் கோவில் படித்துறை பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது.
- பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
பவானி:
தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கிவருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.
இதனால் கூடுதுறை தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனால் கூடுதுறைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.
இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுவார்கள். மேலும் திருமண தடை தோஷம், செவ்வாய் தோஷம் உள்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தை அமாவாசையை யொட்டி இன்று ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையொ ட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர். மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷ்னி தலைமையில் பவானி, சித்தோடு, அந்தியர், அம்மாபேட்டை, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் முக்கிய 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை பகுதியில் அதிகாலை முதலே பொது மக்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் மற்றும் திதி கொடுத்தனர். இதனால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் காலை முதலே பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் கோபி சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், சென்னிமலை முருகன் கோவில் உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.






