search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "melmalayanur"

    • உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
    • இன்று இரவு அம்மன் ஆண் பூதவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    விழாவின் 2-ம் நாளான இன்று காலை மயானக் கொள்ளைவிழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு பூஜைகள் நடை பெற்றவுடன் காலை 10.45 மணிக்கு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் உற்சவ அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்தார். 11 மணிக்கு பிரம்ம கபாலம் (கப்பரை முகம்) அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். தொடர்ந்து அம்மனும் மயானத்தில் எழுந்தருளினார். பின்பு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் பக்தர்கள் மயானத்தில் குவித்திருந்த சுண்டல் , நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள்,சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.

    • கார்த்திகை மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
    • ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு கார்த்திகை மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.இதை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு தர்பார் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 10.40 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விழுப்புரம், கடலூர், சேலம்,வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி,செல்வம் பூசாரி,சரவணன் பூசாரி , வடிவேல் பூசாரி சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவா சைக்கு மறுநாள் நவராத்திரி விழா தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பவுர்ணமி பூஜை நடை பெற்றது.
    • வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடை பெற்றது. இதை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெரு மானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்கா ரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க விளக்கு பூஜை செய்யும் இடத்தில் எழுந்தருளினார்.பின்பு பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபா ராதனை காண்பித்தவுடன் விளக்கு பூஜை முடிவடைந்தது. விழாவுக்கான ஏற்பா டுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவான ந்தம் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்திருந்தனர்.

    • அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தங்கி இருந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.
    • அர்த்தசாம பூஜையை கண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தை காண வருவது வழக்கம்.

    உலக ஜீவன்களுக்கு படி அளக்கும் சிவனுக்கே ஒரு தடவை பிரம்ம தோஷம் பிடிக்கிறது.

    சிவ ராத்திரி அடுத்த நாள் மயானக் கொள்ளை மூலம் அங்காள பரமேஸ்வரியால் சிவனுக்கு பிரம்ம தோஷம் நீங்குகிறது. ஆகையால் மேல்மலையனூர் சக்தி புராணங்களில் இடம் பிடித்தது.

    அமாவாசைக்கு முன்பு சிவராத்திரி தினமாகும். மறுநாள் அமாவாசை அன்று சுடுகாட்டில் அம்மனை சாந்தி படுத்த படையலிட்டு பொறி, கடலை, கொழுக்கட்டை போன்றவற்றை படையலிட்டு பிரம்மன் தலைக்கு இறைப்பது வழக்கம்.

    அன்று இரவு அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துவார்கள். அமாவாசை அன்று வழக்கமாகவே அம்மன் உக்கிரமாக இருப்பாள் என்றும் அம்மனை சாந்தி படுத்தவே ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. அதனால் அன்றைக்கு வரும் பக்தர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைக்கும்.

    ஏவல், பில்லி சூனியம் நீங்கும் நினைத்த காரியங்கள் நடை பெறும். பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு பிரம்ம கத்தி தோஷம் பிடித்த இந்த பிரம்ம கத்தி தோஷம் மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின் போது நிவர்த்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மனால் படைக்கப்பட்ட எந்த உயிரையும் கொன்றாலோ அல்லது அழித்தாலோ பிரம்ம கத்தி தோஷம் பிடிக்கும் என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ உயிர்களை கொன்று இருக்கலாம். இதனால் பிரம்மகத்தி தோஷம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    நீங்களும் சிவன் போல் பித்து பிடித்து அலைய வேண்டாம். இதற்கு பரிகாரம் மேல்மலையனூரில் அமாவாசை நாளில் சென்று இரவு தங்கினால் உங்களுடைய பாவங்கள் நீங்கும். பிரம்மகத்தி தோஷமும் நிவர்த்தியாகும்.

    1. மேல்மலையனூரில் அமாவாசை தினத்தன்று நடக்கும் அர்த்தசாம பூஜையை கண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    2. அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தங்கி இருந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

    3. தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, பசுவின் பால் முக்கால் பங்கு, தேன் அரைப்பங்கு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியத்துக்கு `திரிமதுரம்' என்று பெயர். இந்த நைவேத்தியம் அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியமாகும்.

    4. அங்காள பரமேசுவரிக்கு செம்பருத்திப்பூ மாலை அணிவித்து 48 நாட்கள் வணங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    5. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் ஒரு மண்டலம் புற்றுக்கு பால் ஊற்றி கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் தோஷம் விலகும்.

    6. அங்காள பரமேஸ்வரி அருளால் குழந்தைபாக்கியம் பெறுபவர்கள், பிறகு அந்த குழந்தை எடைக்கு எடை நாணயம் வழங்குவது வழக்கமாக உள்ளது.

    7. தடைகள் விலகி திருமணமாகும் பெண்கள் மாங்கல்யத்தை கழற்றி உண்டியலில் போடுவதை திருப்பதியில் பார்திருப்பீர்கள். அதே போன்று இத்தலத்திலும் மாங்கல்யத்தை காணிக்கையாக வழங்குகிறார்கள்.

    8. மாவிளக்கில் தீபம் ஏற்றி வழிபடுபவர்களில் பலர் அதை பிரசாதமாக வினியோகிப்பார்கள். சிலர் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அடை மாதிரி மாற்றி சாப்பிடுவார்கள்.

    9. இத்தலத்து கொடி மரம் பலி பீடம் அருகில் இல்லாமல், கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளது.

    10. ஆடி அமாவாசை தினத்தன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை முழுவதும் திறந்து இருக்கும்.

    • வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது.
    • சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது.

    மேல் மலையனூர் ஆலயத்தில் குவிந்து இருக்கும் எலுமிச்சம் பழங்கள் போல வேறு எந்த தலங்களிலும் பார்க்க இயலாது. அந்த அளவுக்கு இங்கு எலும்மிச்சம் பழம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அம்மனுக்கு மற்ற மலர் மாலைகளை விட எலுமிச்சம்பழ மாலையையே அதிகமாக பக்தர்கள் விரும்பி வாங்கி கொடுக்கிறார்கள். மேலும் அம்மனை வழிபட்ட பிறகு திருஷ்டிகளை விரட்ட கழிப்புக்காக சுற்றவும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துகிறார்கள்.

    ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய வழிபாடுகள் மற்றும் பூஜை பொருட்கள் எவை என்று விளக்கி கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என ஆகமங்கள் விளக்கி உள்ளன. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாகும்.

    பூக்களை தொடுத்து மாலையாக அணிவிப்பதை போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாக கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம். தீயவற்றை போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது.

    வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தும் பெண் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம்.

    எலுமிச்சம்பழத்தை மாலையாக கடவுளுக்கு அளிப்பதினால், அந்த பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றி அடையலாம் என்பது உறுதி. நமது பிரார்த்தனையை இறைவனிடம் தெரிவிக்க வேண்டுமெனில், நாமே நமது பிரார்த்தனைகளை சங்கல்பம் செய்ய வேண்டும்.

    பின்னர் பூ அல்லது பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளை பெற வேண்டும். முயன்றவரை நாமே நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைப்பது கூடுதல் பலன் அளிக்கும்.

    சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது.

    மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து கொண்டு திருஷ்டி, செய்வினை போன்றவற்றை பஸ்மம் செய்யும் ஆற்றல் கொண்டது.

    மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் போது அம்மன் பாதத்தில் வைத்து எடுக்கப்படும் எலும்மிச்சம் பழங்களை தருவார்கள்.

    அங்காளம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள் நிகரற்ற சக்திகள், சிறப்புகள் கொண்டது. எனவே அந்த எலுமிச்சம் பழங்களை வீணாக்கி விடாதீர்கள். வீட்டுக்கு எடுத்து வந்து உங்கள் திருஷ்டி தீர பல வகைகளில் அவற்றை பயன்படுத்தலாம்.

    * வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் இரண்டு அரை வட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும். எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.

    * எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்க விட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும்.

    * வண்டி வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இதனால் பார்வை திருஷ்டிகளை அறவே தடுக்கலாம்.

    * எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட வேண்டும். இப்படி பரிகாரம் செய்வதால் திருஷ்டி விலகும்.

    * அங்காளம்மன் பாதம்பட்ட எலுமிச்சம் பழங்களை வீடுகள், அலுவலகங்கள், வண்டி வாகனங்களில் வைத்துக் கொள்வன் மூலம் பல்வகையான திருஷ்டி மற்றும் தீய எதிர்வினை சக்திகளிடமிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.

    * 21, 54, 108 எண்ணிக்கையில் சார்த்தப்பட்ட எலுமிச்சம் பழ மாலைகளில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட எலுமிச்சம் பழங்கள் சிறந்த பாதுகாப்பு கவசமாக அமையும். இதை வெளியூர் பயணங்களின் போது கையில் வைத்துக் கொள்வது நல்லது. அது பயணத்தின் போது நமக்கு பாதுகாப்பு சக்தியை பெற்றுத்தரும்.

    • ஆன்மாக்களுக்கு அதிதேவதை அங்காளி ஆகும்.
    • அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே அவள் வந்து துன்பத்தை தீர்த்து வைப்பாள்.

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் அதாவது சனி ஓரையில், 18 எலுமிச்சம்பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம்பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால், தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடி விடும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.

    இந்த பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று!' என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.

    தோஷம் போக்கும் அங்கபிரதட்சணம்

    குடும்பத்தில் குழப்பம், நோய், நொடிகள், பேய் பிசாசு, பில்லி,சூன்யம், வைப்பு, ஏவல், காட்டேரி போன்ற பிணிகள் பிடித்து இருந்தால் மேல்மலையனூர் அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே போதும், அவள் வந்து துன்பத்தைத் தீர்த்து வைப்பாள். பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை எல்லாம் விலக்கி விடு என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

    அங்கப்பிரதட்சணம் செய்வது அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்த நேர்த்திக் கடனாகும். இந்த உலகில் உள்ள ஆன்மாக்களுக்கு எல்லாம் அதி தேவதையாக விளங்கும் தலைமைத் தாய் அங்காளி ஆகும். அந்த அங்காளி மனிதப் பிறவிகள் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களைப் பற்றிக் கொண்டு ஆட்டுதாகவும் கருதப்படுகிறது.

    ஆன்மாவானது பற்றிக் கொண்ட மனிதன் என்ற பூத உடலை விட்டு விலகி மீண்டும் அம்மனுடைய கோவிலில் அம்மனுடைய சக்தி சொரூபத்தை சென்று அடைய வேண்டும் என்பதை கருதியே அங்கபிரதட்சணம் என்ற பிரார்த்தனை செய்யப்படுகிறது.

    மனிதன் செய்த பாவ எண்ணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக்கூடும். இந்த பாவச்சுமையை பக்தர்கள் உடனுக்குடன் இறக்கி வைத்து விட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அங்க பிரதட்சணமாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டு கோயிலையும் சுற்றி வருவதால் அப்பாவ செயல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிடும். மேலும் கோவிலை சுற்றி வலம் வரும் போது அந்த பாவங்கள் அனைத்தும் அறவே நீங்கி விடுவதாக கருதப்படுகிறது.

    அங்க அவயம் என்பது எட்டு உறுப்புகள் கொண்ட தொகுப்பாகும். தலை, நெற்றி, கரங்கள், தோள்பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் ஆகியவை அங்க அவயங்களாகும். இவையாவுமே அம்மன் திருக்கோயில் வளாகத்தில் பூமியில் படும்படியாக நமஸ்காரம் செய்வதே அங்க பிரதட்சணம் என்பதாகும்.

    பலி பீடத்திற்கு எதிராக உடலை தூய்மையாக்கி குளித்து ஈரத்துணியுடன் கிழக்கு நோக்கி தரையில் உருண்ட வண்ணம், மீண்டும் மேற்குப் பக்கமாக வந்து பலி பீடத்தின் முன்பாகவே பிரார்த்தனையை முடித்து எழுந்து மீண்டும் குளித்து தூய ஆடை உடுத்தி அம்மன் கோவில் உள்ளே சென்று அம்மன் புற்றை வலம் வந்த வண்ணம் மூலவரை தரிசிக்க வேண்டும் பிறகு காணிக்கையை உண்டியலில் செலுத்தி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

    அங்க பிரதட்சனை வழிபாடு செய்வதால் ஜீவ ஆத்மாக்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோஷங்கள், பில்லி, ஏவல், வைப்பு, காட்டேரி, சூன்யங்கள் யாவும் அம்மன் அருளால் தானாக விலகிச் செல்வதாக கருதப்படுகிறது.

    அங்கப்பிரதட்சனம் சுற்றி வரும் பக்தர்கள் அம்மன் நினைவை தவிர வேறு சிந்தனையை மனதில் வைக்கக்கூடாது. அங்காள பரமேசுவரி மீது பாரத்தை போட்டு விட்டு பிரதட்சணம் செய்ய வேண்டும். அங்க பிரதட்சணத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் மேல்மலையனூர் தலத்தில் அதை செய்ய தவறுவதில்லை.

    • கர்ப்பகிரகத்துக்குள் அங்காள பரமேசுவரி சிவபெருமானுடன் அமர்ந்துள்ளாள்.
    • அங்காளம்மனின் உருவம் சிவபெருமான் உருவ அமைப்பை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது.

    மேல்மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள். ஆங்காரமாகவும அகோரமாகவும் இருந்த அன்னை திருவண்ணாமலை சென்று புனித நீராடி தன் சுயஉருவம் பெற்று மீண்டும் மேல்மலையனூர் வந்து அமர்ந்தாள் என்பது புராண வரலாறாகும்.

    அதனால் தானோ என்னவோ தமிழ்நாட்டில் உள்ள மற்ற சக்தி தலங்களை விட இத்தலத்தில் அங்காள பரமேஸ்வரி சற்று வித்தியாசமாக காணப்படுகிறாள். அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக பார்த்தால் அவள் ஆவேசத்துடன் இருப்பது போல தோன்றும்.

    பொதுவாக வடக்கு திசை நோக்கி இருக்கும் கடவுள்கள் ஆவேசத்துடன் காணப்படுவார்கள் என்று சொல்வார்கள். அதை உறுதிப்படுத்துவது போல அங்காள பரமேசுவரி தோற்றம் அமைந்துள்ளது.

    நாம் மகிழ்ச்சியுடன் பார்த்தால் அவளும் நம்மை மகிழ்ச்சியுடன் பார்ப்பது போல இருக்கும் என்றார். அது உண்மை தான் என்பதை கருவறை அருகில் சென்று வரும் ஒவ்வொரு பக்தரின் அனுபவமாக உள்ளது.

    கர்ப்பகிரகத்துக்குள் அங்காள பரமேசுவரி சிவபெருமானுடன் அமர்ந்துள்ளாள். பொதுவாக சிவசக்தி ஒருங்கே காணப்படும் போது அம்பாள் அருகில் ஈசனை லிங்க வடிவில் தான் வைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் அம்பிகை அருகில் ஈசன் மானிட உருவில் இருக்கிறார்.

    இத்தகைய சிவசக்தி அமைப்பு தமிழ்நாட்டில் மேல்மலையனூரில் மட்டுமே இருப்பதாக சொல்கிறார்கள். இத்தலத்தின் சிறப்புகளில் இந்த கருவறை அம்சம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

    அம்மன் சிம்ம வாகனத்தில் சற்று பின்னோக்கி மல்லாந்த நிலையிலும் ஈசன் ரிஷப வாகனத்திலும் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒரே பீடத்தில் அமர்ந்துள்ளனர். அங்காள பரமேசுவரி இந்த அமைப்பில் மல்லார்ந்த பார்வையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

    அங்காள பரமேஸ்வரி தன் இடது காலை மடித்து வலது காலை பிரம்மன் தலை மீது வைத்திருப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் காலடியில் மேலும் 4 தலைகள் உள்ளது. அரக்கர்களை அங்காளம்மன் தன் காலில் மிதித்து வைத்திருப்பதாக இது உணர்த்துகிறது.

    அங்காள பரமேஸ்வரிக்கு முழுமையான மலர் மாலை அலங்காரம் செய்து விடுவதால் பக்தர்களுக்கு இந்த வடிவ அமைப்பு தெரிய வாய்ப்பில்லை.

    அங்காளம்மனின் உருவம் சிவபெருமான் உருவ அமைப்பை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது. அவளது 4 கரங்களில் முன் கரங்களில் கத்தி, கபாலம் வைத்துள்ளாள். பின் கரங்களில் உடுக்கையும் சூலமும் தரித்துள்ளாள். தலையில் நாக மகுடம் சூடி இருக்கிறாள். இவற்றையெல்லாம் கண்டு உள்ளம் உருக வழிபட்டால் மனதில் உள்ள கவலைகள் நீங்கி மனம் லேசாகி விடும்.

    திருமணம் கைக்கூடும்

    நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்பெண்ணெய் இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சம அளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல வேண்டும். அது முடிந்ததும் அங்காள பரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

    • கருவறையில் இருந்து எடுத்து தரப்படும் குங்குமத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.
    • பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம்.

    மேல்மலையனூர் அங்காள பரமேசுவரியை பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்களது குலதெய்வமாக போற்றி வழிபடுகிறார்கள். அவர்கள் அடிக்கடி இத்தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றாலும் ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிபடுவதையே சிறப்பாகவும் புண்ணியம் தருவதாகவும் கருகிறார்கள்.

    குறிப்பாக ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் இத்தலத்துக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர். இதனால் ஆடி மாதம் முழுவதும் மேல்மலையனூரில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே உள்ளன. கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வருகிறார்கள்.

    ஆலய வளாகத்துக்குள் நுழைவு வாயிலின் அருகே பொங்கல் வைப்பதற்கு என்றே பிரத்தியேகமாக ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அங்கு பெண்கள் பொங்கலிடுகிறார்கள்.

    பொங்கல் தயாரானதும் அதன்மீது மூடியில் பச்சரிசி மாவை பிசைத்து மாவிளக்கில் தீபம் ஏற்றி உள்ளே எடுத்துச் செல்வார்கள். அந்த பொங்கலை அப்படியே அங்களம்மனுக்கு தீபாராதனையாக காட்டி வழிபடுகிறார்கள். ஆடி மாதம் முழுவதும் இந்த காட்சியை அதிகமாக இத்தலத்தில் காணலாம்.

    மங்கலம் தரும் குங்குமம்

    அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் கருவறையில் இருந்து எடுத்து தரப்படும் குங்குமம் பிரசாதத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.

    ஆத்மார்த்தமாக யார் ஒருவர் அந்த குங்குமத்தை தம் நெற்றியில் பூசிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அங்காளம்மனின் மகத்துவம் புரியும். பொதுவாகவே குங்குமம் என்பது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் மங்கலத்தை தரக்கூடியது.

    பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம். அதில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு மங்கலத்தை உண்டாக்கும்.

    மேல்மலையனூரில் குங்கும பிரசாதம் பெறும்போது மிகவும் பணிவாக பவ்வியமாகப் பெற வேண்டும். பிறகு அதை வலது கை மோதிர விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். இது எல்லா வித நன்மைகளையும் தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    கட்டை விரலால் குங்குமம் அணிந்தால் தைரியம் பிறக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் பூசினால் நிர்வாகத்திறமை மேம்படும். நடுவிரலால் குங்குமம் வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

    அங்காளம்மன் காயத்ரி

    ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி தன்னோ அங்காளி ப்ரசோதயாத்

    என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.

    • அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி நல்லுறவு ஏற்படும்.
    • பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக அவதாரம் எடுத்தாள்.

    சில கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன் மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும்.

    இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    மேல் மலையனூர் தலத்தில் உள்ள பெரியாயீ அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்தி கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    3 வகை பிரசாதம்

    மேல் மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும்.

    தட்சனின் யாகத்தை அழிக்க புறப்பட்ட தாட்சாயினி அகோரமாக பெரிய உருவம் எடுத்து தீயில் விழுந்து யாகத்தை அழித்தாள். அவளது உருவமற்ற அவதாரமே "அங்காளி" என்று அழைக்கப்படுகிறது. அதுதான் மருவி "அங்காள பரமேஸ்வரி" என்றானது.

    அங்காளம்மன் யாக குண்டத்தில் விழுந்து சாம்பலான இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் இங்கு பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

    தாட்சாயினி தன்னை அழித்துக் கொண்ட தகவல் அறிந்ததும் சிவன் அவளை தூக்கி ஆவேசமாக ஆடினார். அப்போது தாட்சாயினியின் கை துண்டாகி இத்தலத்தில் விழுந்தது. எனவே இத்தலம் தண்ட காருண்யம் என்ற சக்தி பீடமாக மாறியது. இதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் கொடுக்கிறார்கள்.

    அன்னை பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூரில் அவதாரம் எடுத்தார். இதனால் அந்த புற்று மகத்துவம் மிகுந்ததாக மாறியது. அந்த புற்று மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதங்களை செய்வதால் மேல்மலையனூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் மற்ற பிரசாதங்களை விட புற்றுமண் பிரசாதத்தை மிகவும் விரும்பி வேண்டி கேட்டு வாங்கி செல்வதை காணலாம்.

    மக்கள் கூட்டம்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் எத்தனையோ விழாக்கள் நடந்தாலும் மாதம் தோறும் வரும் அமாவாசை தின வழிபாடுதான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அமாவாசை தினத்தன்று அங்காள பரமேஸ்வரியின் ஊஞ்சல் உற்சவத்தை நேரில் கண்டு வழிபட்டால் மன துயரங்கள் எல்லாம் மாயமாகி விடும் என்பது நம்பிக்கையாகும்.

    பக்தர்களிடையே இந்த நம்பிக்கை அதிகரித்து பரவி வருவதால் அமாவாசை நாட்களில் மேல் மலையனூருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அமாவாசைக்கு அமாவாசை அதிகரித்தப்படி உள்ளது.

    சாதாரண அமாவாசை நாட்களில் சராசரியாக 5 லட்சம் பேர் மேல்மலையனூர் வருவதாக கணித்துள்ளனர். ஆடி அமாவாசை தின வழிபாடு கூடுதல் பலன்கள் தர வல்லது என்பதால் அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் 7 லட்சம் பக்தர்கள் மேல் மலையனூருக்கு வருவார்கள்.

    பவுர்ணமியையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் மேல்மலையனூர், அவலூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணேசன், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறுநாள் மயானக்கொள்ளை விழாவும், 5-ம் நாள் தீமிதி விழாவும் நடைபெற்றது. விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து இரவு யானை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    7-ம் நாள் விழாவான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். விழாவையொட்டி பனை, காட்டுவாகை, புளி உள்ளிட்ட மரங்களை கொண்டு மேற்கு வாயிலின் எதிரே புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தேர் பூமாலைகள், வாழை குலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேர் கோவிலின் வடக்கு வாயில் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, கோவில் உட்பிரகாரத்தில் இருந்து உற்சவ அம்மனை பம்பை- உடுக்கை, மேளதாளங்களுடன் அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு பூசாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் உற்சவ அம்மனுக்கு மாலை அணிவித்தவுடன், தேரில் எழுந்தருளினார். பின்னர் முக்கியஸ்தர்களுக்கு கோவில் அறங்காவலர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடந்து அம்மனுக்கும், தேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும் ஓம் சக்தி அங்காளம்மனே என்றும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த திருநங்கைகள் அம்மன் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் மாலை 6.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அதன்பிறகு நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரில் எழுந்தருள்வதற்காக அங்காளம்மன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டபோது எடுத்த படம்.

    தேரோட்டத்தின் போது பக்தர்கள் பலர் கரகம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். அம்மன் வேடமணிந்து வந்தவர்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். மேலும் மேல்மலையனூர் வள்ளலார் திருச்சபை சார்பில் நீர்மோர், கஞ்சி, கூழ் ஆகியன பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, பெங்களூருவில் இருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், மாவட்ட தலைமை நீதிபதி சரோஜினிதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், வெங்கடேசன், தாசில்தார் செந்தில்குமார், இந்தியன் வங்கி கிளை மேலாளர் பிரகாஷ் உள்பட லட்சக்கணக் கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சுகா தாரத்துறையினர் கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் கிடந்த குப்பை களை உடனுக் குடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக் கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீ சார் தீவிரமாக கண்காணித் தனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள் மேல் மலையனூர் பிரகாஷ், விழுப் புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகன சுந்தரம், கண் காணிப்பாளர் வேலு, ஆய் வாளர் அன்பழகன் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர், கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர். முன்னதாக தேரோட்டத் தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். விழாவின் 8-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யில் யானை வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    ×