search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unchal Utsavam"

    • ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சர்வ லோகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காள பரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.

    இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மேல் மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.

    புதுச்சேரி:

    தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிக சிறப்பை பெற்றது. அதன் நினைவை போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திர பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமானது, தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்ததாக முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக முருங்கப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பக்தருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) 108 சங்காபிஷேகமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமிக்கு சந்தனக்காப்பு அரங்கமும் நடக்கிறது.

    புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் காலை முருகப்பெருமானுக்கு பால் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணமும், அம்பாள் உள்புறப்பாடும் நடந்தது.

    காராமணிக்குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயக சிவசுப்ரமணிய சாமி கோவிலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்சைசாற்றி அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    புதுவை சஞ்சய்காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய கோவிலில் காலை 8 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதேபோல் புதுச்சேரி கதிர்வேல் சுவாமி கோவில், லாஸ்பேட்டை முருகன் கோவில், பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    காலாந்தோட்டம் சிவசுப்பிரமணியர் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிவசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    • அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தங்கி இருந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.
    • அர்த்தசாம பூஜையை கண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தை காண வருவது வழக்கம்.

    உலக ஜீவன்களுக்கு படி அளக்கும் சிவனுக்கே ஒரு தடவை பிரம்ம தோஷம் பிடிக்கிறது.

    சிவ ராத்திரி அடுத்த நாள் மயானக் கொள்ளை மூலம் அங்காள பரமேஸ்வரியால் சிவனுக்கு பிரம்ம தோஷம் நீங்குகிறது. ஆகையால் மேல்மலையனூர் சக்தி புராணங்களில் இடம் பிடித்தது.

    அமாவாசைக்கு முன்பு சிவராத்திரி தினமாகும். மறுநாள் அமாவாசை அன்று சுடுகாட்டில் அம்மனை சாந்தி படுத்த படையலிட்டு பொறி, கடலை, கொழுக்கட்டை போன்றவற்றை படையலிட்டு பிரம்மன் தலைக்கு இறைப்பது வழக்கம்.

    அன்று இரவு அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துவார்கள். அமாவாசை அன்று வழக்கமாகவே அம்மன் உக்கிரமாக இருப்பாள் என்றும் அம்மனை சாந்தி படுத்தவே ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. அதனால் அன்றைக்கு வரும் பக்தர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைக்கும்.

    ஏவல், பில்லி சூனியம் நீங்கும் நினைத்த காரியங்கள் நடை பெறும். பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு பிரம்ம கத்தி தோஷம் பிடித்த இந்த பிரம்ம கத்தி தோஷம் மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின் போது நிவர்த்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மனால் படைக்கப்பட்ட எந்த உயிரையும் கொன்றாலோ அல்லது அழித்தாலோ பிரம்ம கத்தி தோஷம் பிடிக்கும் என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ உயிர்களை கொன்று இருக்கலாம். இதனால் பிரம்மகத்தி தோஷம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    நீங்களும் சிவன் போல் பித்து பிடித்து அலைய வேண்டாம். இதற்கு பரிகாரம் மேல்மலையனூரில் அமாவாசை நாளில் சென்று இரவு தங்கினால் உங்களுடைய பாவங்கள் நீங்கும். பிரம்மகத்தி தோஷமும் நிவர்த்தியாகும்.

    1. மேல்மலையனூரில் அமாவாசை தினத்தன்று நடக்கும் அர்த்தசாம பூஜையை கண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    2. அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் தங்கி இருந்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

    3. தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, பசுவின் பால் முக்கால் பங்கு, தேன் அரைப்பங்கு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியத்துக்கு `திரிமதுரம்' என்று பெயர். இந்த நைவேத்தியம் அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியமாகும்.

    4. அங்காள பரமேசுவரிக்கு செம்பருத்திப்பூ மாலை அணிவித்து 48 நாட்கள் வணங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    5. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் ஒரு மண்டலம் புற்றுக்கு பால் ஊற்றி கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் தோஷம் விலகும்.

    6. அங்காள பரமேஸ்வரி அருளால் குழந்தைபாக்கியம் பெறுபவர்கள், பிறகு அந்த குழந்தை எடைக்கு எடை நாணயம் வழங்குவது வழக்கமாக உள்ளது.

    7. தடைகள் விலகி திருமணமாகும் பெண்கள் மாங்கல்யத்தை கழற்றி உண்டியலில் போடுவதை திருப்பதியில் பார்திருப்பீர்கள். அதே போன்று இத்தலத்திலும் மாங்கல்யத்தை காணிக்கையாக வழங்குகிறார்கள்.

    8. மாவிளக்கில் தீபம் ஏற்றி வழிபடுபவர்களில் பலர் அதை பிரசாதமாக வினியோகிப்பார்கள். சிலர் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அடை மாதிரி மாற்றி சாப்பிடுவார்கள்.

    9. இத்தலத்து கொடி மரம் பலி பீடம் அருகில் இல்லாமல், கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளது.

    10. ஆடி அமாவாசை தினத்தன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை முழுவதும் திறந்து இருக்கும்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியா பகடல், தாச சாகித்யா புராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை வேதபாரதி பாரத பண்பாட்டு அமைப்பு சார்பில் சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் தேவி, பூதேவி சமேத திருமலை திருப்பதி பெருமாளின் ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு ஊஞ்சல் சேவை தொடங்கியது. சகஸ்ரநாம பாராயணம், திவ்யநாம சங்கீர்த்தனம், கீர்த்தனைகள் நடந்தது. தொடர்ந்து வேதகோஷம், புஷ்பயாகம், சாற்றுமுறை, நாதஸ்வர சேவையும், பிற்பகல் 12 மணிக்கு மகா ஆரத்தியும் நடந்தது.

    ஊஞ்சல் சேவையில் புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் சாமியை தரிசித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியா பகடல், தாச சாகித்யா புராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர்.

    ஊஞ்சல் உற்சவ ஏற்பாடு களை புதுவை வேதபாரதி, பஜ னோத்ஷவ கமிட்டி தலைவரும், உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான சிவசங்கரன், தமிழ்நாடு வேதபாரதி செயலாளர் வெங்கட்ராமன், தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் பட்டாபிராமன், பொருளாளர் வரதராஜன், துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், வேதராமன், உறுப்பினர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை
    • வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம்

    காளிகாம்பாள் கோவிலில் ஒவ்வொரு மாதமும் விழாக் காலங்களே.

    சித்திரையில் சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது.

    வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் முந்தைய நாள் மூஞ்சுறு வாகனத்தில் ஸ்ரீ விநாயகபெருமான் வீதி உலா நடைபெற்று, இத்திருக்கோவிலின் அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று புதுமண் கொண்டு வந்து மறுநாள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் ஆரம்பமாகிறது.

    முதல் நாள் இரவு அம்பாள் வீதி உலாவும், 2-ம் நாள் இரவு காமதேனு வாகனத்திலும், மூன்றாம் நாள் காலை பூதகி வாகனத்திலும், நான்காம் நாள் இரவு ரிஷப வாகனத்திலும், ஐந்தாம் நாள் இரவு சிம்ம வாகனத்திலும், ஆறாம் நாள் இரவு யானை வாகனத்திலும், ஏழாம் நாள் காலை தேரோட்டமும், எட்டாம் நாள் இரவு குதிரை வாகனத்திலும், ஒன்பதாம் நாள் இரவு கிண்ணித் தேர் என வழங்கும் ஸ்ரீ சக்ர ரதாரோஹனத்தில் ஸ்ரீ அம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    பத்தாம் நாள் காலை ஸ்ரீ நடராஜர் உற்சவமும், பின்பு தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு விசாகத்தை முன்னிட்டு ஆறுமுக சாமி உற்சவமும், கொடி இறக்கமும் நடைபெறுகின்றது. அடுத்து பந்தம்பறி உற்சவமும், அதற்கு மறுநாள் ஸ்ரீ உற்சவமூர்த்தி ஸ்ரீ அம்பாளுக்கும் மற்றுமுள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் நடைபெறுகின்றது.

    பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு அலங்கார ஸ்ரீ நடராஜர் மண்டபத்திற்கு வருகை புரிந்த உற்சவமூர்த்தி அம்பாள் அமாவாசை அன்று தன் ஆஸ்தானத்திற்கு செல்லும் ஆஸ்தான பிரவேச உற்சவமும் நடைபெறும். அதற்கு மறுநாள் அம்பாளின் விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகின்றது.

    ஆனி மாதம் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த உற்சவமும் ஆடியில் ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் இரவு வெள்ளி தொட்டிலில் ஊஞ்சல் உற்சவமும் பத்து ஞாயிற்றுக்கிழமைகள் பகல் 11 மணியளவில் முறையே 108 குடம் பாலபிஷேகம், 108 குடம் இளநீர் அபிஷேகம், 108 குடம் தயிர் அபிஷேகம், 108 குடம் மஞ்சள் அபிஷேகம், 108 குடம் சந்தன அபிஷேகம், 108 குடம் விபூதி அபிஷேகம், 108 குடம் பன்னீர் அபிஷேகம், 108 குடும் பஞ்சாமிர்த அபிஷேகம், 108 பூக்கூடையால் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகின்றது.

    மேலும் ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகையில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகமும, மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது. ஆடிப்பூரத்தன்று ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகின்றது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் நடைபெறுகின்றது. புரட்டாசியில் பத்து நாட்கள் சாரதா நவராத்திரி விழா நடைபெறுகின்றது.

    நவராத்திரியில் முதல் மூன்று தினங்கள் துன்பங்களை நீக்கும் துர்க்கா பரமேஸ்வரியாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ மகாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் ஞானபாக்கியத்தைத் தரும் ஸ்ரீ சரஸ்வதியாகவும் அருள்பாளிக்கிறாள்.

    இந்த நவராத்திரியின் ஏழாம் நாளன்று ஸ்ரீ அம்பாளுக்கு நவவர்ண பூஜை நடைபெறுகின்றது. மேலும் இந்த நவராத்திரி தினங்களில் குழந்தைகளை அம்பாளாக பாவித்து பூஜை செய்வது சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த நவராத்திரி தினங்களில் மாலையில் இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    ஐப்பசி பவுர்ணமியில் அருள்மிகு கமடேஸ்வரர் அருள்மிகு அருணாச்சலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி உற்சவமும், லட்சார்ச்சனையும், சூரசம்ஹார உற்சவமும் நடைபெறுகின்றது.

    சூரசம்ஹாரத்தின் மறுநாள் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றன. ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவத்தின் போது பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் திருமாங்கல்ய சரடுகள் வழங்கப்படுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் சோம வாரங்களில் ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் இரவு வெள்ளித் தொட்டியில் ஸ்ரீ அம்பாள் அலங்காரத்துடன் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வருவாள்.

    கார்த்திகை தீபத்தன்று ஒன்பது பெரிய அகலில் தீபமேற்றி அம்பாள் எதிரில் மஹா தீபாராதனை நடைபெற்று ஒவ்வொரு சன்னதியில் மேற்படி அகல் தீபம் ஏற்றப்பட்டு ராஜகோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்படும். பின்பு, அலங்காரம் செய்யப்பட்ட அம்பாள் கோவிலில் வெளியில் வந்து நிற்க சொக்கப்பனை கொளுத்தப்படும்.

    சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் தினசரி விடியற்காலை 4.30 மணியளவில் கோவில் திறக்கப்படுகிறது. சிறுவர், சிறுமியர் உள்பட பக்தர்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து பக்தி பரவசத்துடன் திருக்கோவிலுக்கு வருகை தந்து கூட்டு வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாகும்.

    மார்கழி மாதத்தில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவமும் பத்து நாட்கள் நடைபெறுகின்றது. பத்தாம் நாள் ஸ்ரீ நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றது.

    தை மாதத்தில் பொங்கல் திருநாள் மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி விழாவும், தை மாதம் வெள்ளிக்கிழமை மாலையில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவமும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு மகுடாபிஷேகமும் நடைபெறுகின்றது. அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு ஸ்ரீ அம்பாள் தெப்ப உற்சவத்திற்காக எழுந்தருளுவார்.

    மாசி மாதம் மாசி மகத்தன்று ஸ்ரீ அம்பாள் சென்னை கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்று மாசி மக உற்சவம் நடைபெறுகின்றது. மாசி கிருத்திகையன்று ஸ்ரீ முருகபெருமானுக்கு விசேஷ அபிஷேகமும், இரவு மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகபெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது.

    பங்குனி மாதத்தில் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த நவராத்திரி விழாவும் குங்கும லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுகின்றது.

    ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் சுதந்திர தினத்தன்று இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பொதுவாக இத்திருக்கோவிலில் நாள் தோறும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    ×