என் மலர்
நீங்கள் தேடியது "பிரம்மோற்சவம்"
- இன்று முதல் வருகிற 2-ந் தேதி வரை அனைத்து வி.ஐ.பி தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தினமும் 60 டன் பூக்களை கொண்டு சாமிக்கு மலர் அபிஷேகம் நடத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளார்.
பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்திற்கான கயிறு மற்றும் தர்ப்பை ஊர்வலமாக கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.43 மணி முதல் 6.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 16 வகையான சிறப்பு உணவுகள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மாட வீதிகளின் வாகன சேவையை காண காத்திருக்கும் 35 ஆயிரம் பக்தர்கள் 45 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்பட்டு அனைவரும் வாகன சேவையை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மாட வீதிகளுக்கு வெளியே உள்ள பக்தர்கள் வாகன சேவையை பார்க்கும் வகையில் 36 இடங்களில் பெரிய திரைகள் மூலம் ஒளிபரப்பப்படுகிறது.
இன்று முதல் வருகிற 2-ந் தேதி வரை அனைத்து வி.ஐ.பி தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 60 டன் பூக்களை கொண்டு சாமிக்கு மலர் அபிஷேகம் நடத்தப்படும். 29 மாநிலங்களை சேர்ந்த 229 கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
3500 தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து மலைக்கு செல்ல 4 நிமிடங்களுக்கு ஒரு அரசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்ற சம்பவங்களை கண்காணிக்க 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள், 4,700 போலீசார் மற்றும் 450 மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தினமும் 8 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
- நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
- பக்தர்கள் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் திருப்பதியில் பிரமோற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ளது. நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் 5 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 408 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக இந்த அளவுக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
நேற்று விரைவாக தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 67,408 பேர் சாமி தரிசனம் செய்தனர் 16,597 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் தொடங்க உள்ளதால் அங்குரார்ப்பணம் நாளை நடக்கிறது. 9 மண்பானைகளில் நவ தானியங்கள் தூவப்பட்டு அந்த விதைகளில் இருந்து வெளிவரும் முளைகள் மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
- முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
- பக்தர்கள் தங்களது வாகனங்களில் வருவதை தவிர்த்து அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 24 -ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில் ஏழுமலையான் தினமும் காலை, இரவு என 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு செப்டம்பர் 24-ந் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்றம் நடைபெறும் அன்று மாநில அரசு சார்பில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான செப்டம்பர் 28-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான அக்டோபர் 2-ந் தேதி அங்குள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெற உள்ளது.
பிரமோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் குறித்து நேற்று அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் வெங்காய சவுத்ரி, திருப்பதி கலெக்டர் வெங்கடேஷ் வரலு, போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷ வர்தன் மற்றும் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது, போலீசார் உடன் இணைந்து தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது பக்தர்களை நெறிமுறைபடுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்கள் தங்களது வாகனங்களில் மலைக்கு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் தங்களது வாகனங்களில் வருவதை தவிர்த்து அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டும். அலிபிரி வாகன சோதனை சாவடியில் வாகனங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
- வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உலக புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு மேற்கு பகுதிகளில் 2 ராஜ கோபுரங்களுடன், அனந்த சரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம், என இரு திருக்குளங்களுடன், வேணுகோபாலன் சன்னதி, பூவராகவர் சன்னதி, ரங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, நம்மாழ்வார் சன்னதி, மணவாள மாமுனிகள் சன்னதி, உடையவர் மற்றும் ஆழ்வார்கள் சன்னதி, வேதாந்த தேசிகர், தாத தேசிகன் சன்னதி, ராமர் சன்னதி, திருப்பனந்தாள்வான் சன்னதி, கரிய மாணிக்க பெருமாள் சன்னதி, பெருந்தேவி தாயார் சன்னதி, லட்சுமி நரசிம்ம சாமி சன்னதி, ஆண்டாள் சன்னதி, சேனை முதன்மையார் சன்னதி, தன்வந்திரி சன்னதி, வலம்புரி விநாயகர் சன்னதி, மலையாள நாச்சியார் சன்னதி, உள்ளிட்ட சன்னதிகளுடன் விளங்குகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது.
நாள்தோறும் வரதராஜ பெருமாள், காலை, மாலை, என இரு வேலைகளிலும் தங்க சப்பரம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை வாகனம், தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், யானை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம், புண்ணியகோட்டி விமானம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார்.
இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
7-வது நாள் விழாவை முன்னிட்டு 100 டன் எடையுள்ள 63 அடி உயரமும் 30 அடி அகலமும் 5 நிலைகளும் கொண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தார்.
பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம் செய்தனர்.
- 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
- 19-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணியும், 19-ந்தேதி மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழா வாகன சேவை விவரங்கள் வருமாறு:-
20-ந்தேதி காலை கொடியேற்றம், இரவு சிறிய சேஷ வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை பெரிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 22-ந்தேதி காலை முத்து பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமன் வாகன வீதிஉலா, 24 -ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா.
25-ந்தேதி காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வாகன வீதிஉலா, 28-ந்தேதி காலை பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகன வீதிஉலா தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கொரோனா பரவலால் கோவில் உள்ளே நடந்த வாகனச் சேவை, 2 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு மாடவீதிகளில் நடப்பதால் பக்தர்களிடையே அதிக எதிர்பார்ப்பாக உள்ளது.
- திருச்சானூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.
- பிரம்மோற்சவ விழா நிறைவு நாளில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. நிறைவு நாளில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது. அதற்காக நடந்து வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் உள்ள சுவேத பவனில் நடந்தது.
கூட்டத்துக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:-
திருச்சானூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவ விழா பாணியில் பிரமாண்டமாக நடத்தப்படும். வாகனச் சேவை நிகழ்ச்சிகள் அனைத்தும் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
பஞ்சமி தீர்த்தத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக, இந்த முறை பக்தர்களுக்கு சிறப்பு காம்பார்ட்மெண்டுகள் மற்றும் ஜெர்மன் ஷெட்டுகள் அமைத்துத்தரப்படும்.
கோவிலில் இருந்து திருச்சானூர் செல்லும் வழித்தடங்களில் தேவையான சாலைகளை சீரமைத்துக் கொள்ளலாம். போக்குவரத்துப் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராட செல்லும்போது, தள்ளு முள்ளு நடக்கக்கூடாது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பஞ்சமி தீர்த்தம் அன்று 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் இணை அதிகாரி வீரபிரம்மன், போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி, கமிஷனர் அனுபமாஅஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பரிவட்டம் கட்டப்பட்டு, கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது.
- கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவையொட்டி ஆந்திர மாநில அரசு சார்பில் தாயாருக்கு பட்டு வஸ்திரம், மங்கல பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரசு சார்பாக துணை முதல்-மந்திரி நாராயணசாமி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க பத்மாவதி தாயார் கோவிலுக்கு வந்தார். கோவிலுக்கு வந்த துணை முதல்-மந்திரியை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைபடி வரவேற்றனர்.
கோவில் வாசலில் துணை முதல்-மந்திரியின் தலையில் பரிவட்டம் கட்டப்பட்டு, கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரம், மங்கல பொருட்களை வைத்து துணை முதல்-மந்திரியின் தலைமீது வைத்தனர்.
அதைத்தொடர்ந்து மேளதாளம் மற்றும் மங்கல இசை முழங்க ஊர்வலமாகக் கோவிலுக்குச் சென்று மூலவர் பத்மாவதி தாயாரிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து, அம்பாளை தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவிலில் இருந்து வெளியே வந்ததும், துணை முதல்-மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பத்மாவதி தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தது தனது கடந்த பிறவிக்குக் கிடைத்த புண்ணியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவையொட்டி பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய திருச்சானூருக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் பசுமையாக இருக்கவும், மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டியும் தாயாரிடம் வேண்டி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடக்கிறது.
- கொடிமர பீடத்தில் விஷ்வக்சேனாராதனம் மற்றும் புண்யாஹவச்சனம் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 9.45 மணிக்கு மிதுன லக்னத்தில் கங்கணப்பட்டர் மணிகண்ட பட்டர் தலைமையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்கள் தங்கக் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர்.
முன்னதாக கோவிலில் காலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாதம் நடந்தது. அதே சமயம் யாகசாலையில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அதையொட்டி ரக் ஷாபந்தனம், பிராணப்பிரதிஷ்டை, ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. கொடிமர பீடத்தில் விஷ்வக்சேனாராதனம் மற்றும் புண்யாஹவச்சனம் நடந்தது.
நெய், பால், தயிர், தேன், மஞ்சள்நீர் ஆகியவற்றை பாத்திரங்களில் வைத்து, பரவாசுதேவர், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசா, பத்மநாபன், தாமோதரன் ஆகிய தெய்வங்கள் ஆவாஹனம் செய்யப்பட்டது. சதுர் வேதங்கள் பாராயணம் நடந்தது. தங்கக்கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்த பின் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உற்சவர் பத்மாவதி தாயார் முன்னிலையில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் கொடியேற்றப்பட்டது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலின் நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய வரும் திரளான பக்தர்களுக்கு விரிவான வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை, இரவு வேளையில் நடக்கும் வாகனச் சேவையில் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்யலாம், என்றார்.
- தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.
- ஊஞ்சல்சேவை நடைபெற்றது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை நடந்த இந்த வீதி உலாவின் போது பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். வாகன வீதி உலாவின் முன்பு பெண்கள் நடனம், கோலாட்டம் மற்றும் பஜனை நிகழ்த்தியபடி சென்றனர்.
சித்தூர் மாவட்டம் நிம்மனப்பள்ளியை சேர்ந்த வெங்கடரமண பஜனை குழுவினர் கிராமிய பாரம்பரிய பில்லனகுரோவி பஜனைகளை நடத்தினர்கள். இதேபோல் ராஜமுந்திரியை சேர்ந்த சிவகேசவ கோலாட்ட பஜனை மண்டலி கலைஞர்களின் பாரம்பரிய நடனம், திருப்பதியை சேர்ந்த சதானந்த நிலையவாச பஜனை கலைஞர்கள், திருப்பதியை சேர்ந்த வைபவ வெங்கடேஸ்வரா கோலாட்ட குழுவினர்களின் கோலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை கிருஷ்ணசுவாமி மண்டபத்தில் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல்சேவை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.
- இன்று பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கல்ப விருட்ச வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணியில் இருந்து 1.30 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.
பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் அனுமன் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.
- இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது.
- இன்று தங்கத்தேரோட்டம் நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட காளைகள், குதிரைகள், யானைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோலாட்டம், நடனம் நடந்தது.
அதைத்தொடர்ந்து காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
வாகனச் சேவையில் பங்கேற்று சோர்வடைந்த உற்சவர் பத்மாவதி தாயாருக்கு நிவாரணம் வழங்க நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வசந்தோற்சவம் நடந்தது. நான்கு மாட வீதிகளில் உற்சவர் பத்மாவதி தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிஉலாவில் பங்கேற்ற பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தனநீரை தெளித்துக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
- இன்று இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
- 28-ந்தேதி பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று தங்க யானை வாகன வீதிஉலா நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
நேற்றும், இன்றும் வாகனங்களில் எழுந்தருளும் உற்சவர் பத்மாவதி தாயாருக்கும், மூலவருக்கும் அலங்காரம் செய்வதற்காக, திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி காசு மாலை பலத்த பாதுகாப்போடு திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டது. காசு மாலைைய திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு பெட்டியில் வைத்து வழியனுப்பி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் நிறைவுநாளான 28-ந்தேதி பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
தாயாருக்கு விருப்பமான கஜ வாகனச் சேவைக்காக திருமலையில் சிறப்புப்பூஜைகள் செய்து தங்கக் காசு மாலையை திருமலையில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து திருச்சானூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமலையில் நடந்த நிகழ்ச்சியில் பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, பேஷ்கார் ஸ்ரீஹரி ஆகியோர் பங்கேற்றனர்.
திருச்சானூரை அடைந்த காசு மாலை அங்குள்ள மஞ்சள் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தங்க காசுமாலையை இணை அதிகாரி வீரபிரம்மனிடம் வழங்கினார்.
அங்கு தங்கக் காசு மாலைக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மூலவர் பத்மாவதி தாயாருக்கும், தங்க யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.






