search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வெற்றி தரும் எலுமிச்சம்பழம்
    X

    வெற்றி தரும் எலுமிச்சம்பழம்

    • வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது.
    • சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது.

    மேல் மலையனூர் ஆலயத்தில் குவிந்து இருக்கும் எலுமிச்சம் பழங்கள் போல வேறு எந்த தலங்களிலும் பார்க்க இயலாது. அந்த அளவுக்கு இங்கு எலும்மிச்சம் பழம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அம்மனுக்கு மற்ற மலர் மாலைகளை விட எலுமிச்சம்பழ மாலையையே அதிகமாக பக்தர்கள் விரும்பி வாங்கி கொடுக்கிறார்கள். மேலும் அம்மனை வழிபட்ட பிறகு திருஷ்டிகளை விரட்ட கழிப்புக்காக சுற்றவும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துகிறார்கள்.

    ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய வழிபாடுகள் மற்றும் பூஜை பொருட்கள் எவை என்று விளக்கி கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என ஆகமங்கள் விளக்கி உள்ளன. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாகும்.

    பூக்களை தொடுத்து மாலையாக அணிவிப்பதை போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாக கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம். தீயவற்றை போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது.

    வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தும் பெண் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம்.

    எலுமிச்சம்பழத்தை மாலையாக கடவுளுக்கு அளிப்பதினால், அந்த பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றி அடையலாம் என்பது உறுதி. நமது பிரார்த்தனையை இறைவனிடம் தெரிவிக்க வேண்டுமெனில், நாமே நமது பிரார்த்தனைகளை சங்கல்பம் செய்ய வேண்டும்.

    பின்னர் பூ அல்லது பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளை பெற வேண்டும். முயன்றவரை நாமே நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைப்பது கூடுதல் பலன் அளிக்கும்.

    சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது.

    மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து கொண்டு திருஷ்டி, செய்வினை போன்றவற்றை பஸ்மம் செய்யும் ஆற்றல் கொண்டது.

    மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் போது அம்மன் பாதத்தில் வைத்து எடுக்கப்படும் எலும்மிச்சம் பழங்களை தருவார்கள்.

    அங்காளம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள் நிகரற்ற சக்திகள், சிறப்புகள் கொண்டது. எனவே அந்த எலுமிச்சம் பழங்களை வீணாக்கி விடாதீர்கள். வீட்டுக்கு எடுத்து வந்து உங்கள் திருஷ்டி தீர பல வகைகளில் அவற்றை பயன்படுத்தலாம்.

    * வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் இரண்டு அரை வட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும். எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.

    * எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்க விட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும்.

    * வண்டி வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இதனால் பார்வை திருஷ்டிகளை அறவே தடுக்கலாம்.

    * எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட வேண்டும். இப்படி பரிகாரம் செய்வதால் திருஷ்டி விலகும்.

    * அங்காளம்மன் பாதம்பட்ட எலுமிச்சம் பழங்களை வீடுகள், அலுவலகங்கள், வண்டி வாகனங்களில் வைத்துக் கொள்வன் மூலம் பல்வகையான திருஷ்டி மற்றும் தீய எதிர்வினை சக்திகளிடமிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.

    * 21, 54, 108 எண்ணிக்கையில் சார்த்தப்பட்ட எலுமிச்சம் பழ மாலைகளில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட எலுமிச்சம் பழங்கள் சிறந்த பாதுகாப்பு கவசமாக அமையும். இதை வெளியூர் பயணங்களின் போது கையில் வைத்துக் கொள்வது நல்லது. அது பயணத்தின் போது நமக்கு பாதுகாப்பு சக்தியை பெற்றுத்தரும்.

    Next Story
    ×