என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திகை மாதம்"

    • பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
    • சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ஆந்திர மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து வந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் கேரள பக்தர்களின் வருகை அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சாரல் மழை தொடங்கியுள்ள நிலையில் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பழனி மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களின் களைப்பை போக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாலை 4.30 மணி முதல் சுடச்சுட சுக்கு காபி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடும் குளிருடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் சுக்கு காபி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காபி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு சேர்த்து சுக்கு காபி தயாரிக்கப்படுகிறது.

    சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    • சிவனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி என்பது நெருப்பை குறிப்பது.
    • கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. அந்த வகையில் கார்த்திகை மாத பௌர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது. சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். அதற்கு ஏழாம் ராசியான ரிஷபத்தில் சந்திரன் உச்சநிலையில் இருப்பார்.சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் சந்திக்கும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளே திருக்கார்த்திகை யாகும்.சிவன் ஜோதி மயமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்ற நாள். சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தெறித்து விழுந்த 6 தீப்பொறிகளே கந்தனாகும்.

    சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறியும் ஆறு ஆண் குழந்தையாக மாறியது.

    அந்த ஆறு ஆண் குழந்தையும் கிருத்திகைகள் என்று அழைக்கப்பட்ட பெண்களால் வளர்க்கப்பட்டனர். அவரே முருகப்பெருமான் ஆவார்.

    சிவனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி என்பது நெருப்பை குறிப்பது. எனவேதான் திருக்கார்த்திகை அன்று அனைத்து வீடுகளிலும் வழிபாட்டு ஸ்தலங்களிலும் அகல் விளக்கு ஏற்றும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஏனெனில் விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும், தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் வாசம் செய்வதாக ஐதீகம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபடுவது மேலும் சிறப்பை தரும்.

    • பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார்.
    • மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான்.

    மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்ற வரம் பெற்றான். முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்ற அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர். மகிஷாசுரனின் சகோதரி மகிஷி தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு பரிகாரம் காண்பதற்காக கடும் தவம் இருந்தாள். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு அழிவு வரவேண்டும் என்ற வரத்தை பெற்றாள்.

    மகிஷியை அழிப்பதற்காக ஐயப்ப அவதாரத்தை சிவ பெருமான் உண்டாக்கினார். பாற்கடலை கடைந்த போது அசுரர்களை மயக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அவர் அழகை கண்டு பரவசம் அடைந்த சிவன் அவளை தழுவினார். இதனால் சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.

    பந்தள மன்னர் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். அவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று சிவனிடம் தினமும் மனம் உருக வேண்டினார்.

    மார்கழி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று பந்தள மன்னர் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது அங்கு கிடந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவந்தார். வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தை கழுத்தில் கனகமணி மாலை அணிவித்து மணிகண்டன் என்ற பெயரை சூட்டினார்.

    குழந்தையை ராணியிடம் பந்தள மன்னர் கொடுத்தார். ராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்த்தாள். அந்த குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பொற்றான். குருவின் வாய் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான்.

    இந்த நிலையில் ராணிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜன் என பொயர் சூட்டினர். என்றாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை மந்திரி ஒருவர் விரும்பவில்லை. ராணி மனதை மாற்றி மணிகண்டனை விரட்ட முடிவு செய்தனர்.

    மந்திரி திட்டப்படி ராணி தலைவலி வந்தது போல் நடித்தாள். புலி பால் கொண்டு வந்தால் தான் ராணி தலைவலியை சரிப்படுத்த முடியும் என்று மருத்துவர்களை அந்த மந்திரி சொல்ல வைத்தான். புலி பாலை யார் கொண்டு வரமுடியும் என அரசவையில் உள்ள எல்லோரும் திகைத்து நின்றனர். அப்போது மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான். காட்டுக்குள் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் கடும் போர் ஏற்பட்டது. மகிஷியை அம்பு ஏய்தி மணிகண்டன் வீழ்த்தினார். தன்னை வீழ்த்தியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவன் என்பதை உணர்ந்த மகிஷி மறுஉருவம் பெற்று எழுந்தாள்.

    ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் இந்த அவதாரத்தில் பிரம்மச்சாரியாக வாழப்போவதாக கூறிய அய்யப்பன் அவளை தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே மஞ்சமாதா என்று அழைக்கப்படுகிறாள். அதன்பிறகு புலி மீது ஏறி பந்தள நாட்டு அரண் மனைக்கு ஐயப்பன் திரும்பி வந்தார். அவரை கண்டு அனைவரும் பயபக்தியுடன் வணங்கினார்கள். 12 வயது முடிந்ததும் தான் ஒரு தெய்வ பிறவி என்பதை பந்தள மன்னர் ராஜசேகரனுக்கு ஐயப்பன் உணர்த்தினார். தனக்கு சபரிமலையில் ஆலயம் எடுக்க உத்தரவிட்டார்.

    சபரிமலையில் தான் ஒரு அம்பை எய்வதாகவும் அந்த அம்பு எந்த இடத்தில் போய் விழுகிறதோ அங்கு கோவில் கட்டும்படி அருள்பாலித்தார்.

    அதன்படி பந்தள ராஜா ஐயப்பன் கோவிலை கட்டினார். பரசுராமர் உதவியுடன் மகரசங்கர நாளில் சனிக்கிழமையன்று கோவில் கட்டி திறக்கப்பட்டது.

    இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

    • ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம்.
    • சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் சார்பாக அரவணை பாயசமும், அப்பமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்கிறார்கள்.

    கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பத்தனம்திட்டா என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது, சபரிமலை. இந்த மலை மீது மிகவும் பிரசித்திப் பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் 1-ந் தேதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கச் செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் ஆலயம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கிறது.

    அகிலத்தைக் காக்கும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக, அன்னை லலிதா திரிபுரசுந்தரி இருக்கிறார். இவரை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தவம் இருந்து வழிபட்டனர். அவர்கள் முன் தோன்றிய அம்பாளிடம், "விஸ்வரூப தரிசனம் காட்டியருள வேண்டும்" என்று வேண்டினர். அதன்படியே தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அம்பாள் காட்டினார். அப்போது அந்த தேவியின் இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தி இருப்பதை மும்மூர்த்திகளும் கண்டனர். அந்த சக்தியே, 'மகா சாஸ்தா'. அந்த சக்தி தனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனதிற்குள் நினைத்தனர். அதன்படியே சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக ஐயப்பன் என்ற பெயரில் அவதரித்தார், சாஸ்தா.

    தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி வந்த மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு, சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே 'சபரிமலை' என போற்றப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும், மாளிகைப்புறத்தம்மன், கன்னிமூல கணபதி, வாவர் சுவாமி, கடுத்தசுவாமி ஆகிய துணை தெய்வங்களும் உள்ளன.

    மலை மீதுள்ள இந்த ஆலயத்தை அடைவதற்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன. எரிமேலி என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக 61 கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டும். மற்றொன்று பம்பை ஆற்றில் இருந்து ஐந்து கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டும். சபரிமலையானது, சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. இங்கு சிவனைப் போல தியான கோலத்திலும் (முக்தி அளிப்பது), விஷ்ணுவைப் போல விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.

    ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம். பக்தர்கள் இருமுடிகட்டி கொண்டுவரும் தேங்காய்க்குள் இருக்கும் நெய்யைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இறைவனுக்கு அபிஷேகத்துக்கு பக்தர்கள் அளித்த நெய் (ஜீவ ஆத்மா), பரமாத்மாவுடன் (இறைவன்) இணையும் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சபரிமலை ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், 108 ஒரு ரூபாய் நாணயம் ஆகிய எட்டு பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகம் 'அஷ்டாபிஷேகம்' என்று வழங்கப்படுகிறது.

    இந்த ஆலயத்திற்குள் வரும் பக்தர்கள், அங்கு எழுதப்பட்டிருக்கும் 'தத்வமஸி' என்ற வார்த்தையைப் பார்த்திருப்பார்கள். அதற்கு 'நீயும் கடவுள்' என்று பொருள். மகரசங்கராந்தி (தைப்பொங்கல்) அன்று, இத்தல இறைவனான ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார். இந்த ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து தரிசிக்க முடியும்.

    சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்குப் பின்புறம், மாளிகை புறத்தம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இங்கு தேங்காயை உடைத்து வழிபடக்கூடாது. மாறாக உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். அதோடு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து வழிபாடு செய்யலாம். ஐயப்பனை புகழ்ந்து பாடும் பாடல்கள், பல பக்தர்களால் பாடப்பட்டிருந்தாலும், சபரிமலை ஆலயத்தில் நடைசாத்தப்படும் நேரத்தில் இசைக்கப்படும் 'ஹரிவராசனம்' பாடல், மிகவும் முக்கியமானது. இது ஐயப்பனுக்கான தாலாட்டு பாடலாகும்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் சார்பாக அரவணை பாயசமும், அப்பமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து செய்யப்படும் அரவணை பாயசம் பலரது விருப்பமானதும், சுவைக்கு புகழ்பெற்றதும் ஆகும். சபரிமலை ஆலயத்தின் நிர்வாக உரிமை, திருவாங்கூர் தேவஸ்தானக் குழுவிடம் உள்ளது. ஆலயத்திற்குள் பூஜை செய்யும் அதிகாரம் பெற்றவர்கள், தந்திரிகள் ஆவர். திருவாங்கூர் தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன் கோவிலை, சுமார் ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன வேறுபாடின்றி, ஒரே மனதுடன், ஒரே மந்திரத்தை உச்சரித்தப்படி சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்பதே இந்த ஆலயத்தின் அடிப்படை.

    • கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
    • சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

    மதுரை

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். கார்த்திகை மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    சாத்தூர் ஓடைப்பட்டி வேட்டுவநாதர் கோவிலில் அய்ப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.

    மதுரையில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த அய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அங்கு சிறப்பு பூசுகள் நடந்தன. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதூர் மற்றும் விளாச்சேரியில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். மேலும் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். பழமுதிர்சோலை முருகன் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள், முன்னதாக அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோவிலில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடினர்.

    இதே போன்று மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவில்,அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில், மேலமாசி வீதி நேரு ஆலால விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

    கார்த்திகை மாதம் முதல் நாளான இன்றே பலர் மாலை அணிய கோவில்களில் திரண்டதால் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்களாக காட்சி அளித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். விருதுநகரில் சொக்கநாதர் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ராமர் கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.

    சிவகாசியில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் பலர் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூரில் சிவன் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னிதானம், வெள்ளகரைப் பிள்ளையார் கோவில், ஓடைப்பட்டி வெற்றி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். குருசாமி தளபதி முருகன் கன்னிச்சாமி களுக்கு மாலை அணிவித்து அய்யப்ப சாமிக்கு விரதம் மற்றும் வழிபாடு செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.


    மானாமதுரை தர்ம சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

     மானாமதுரை வைகை ஆற்று கரையில் பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் திறக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. அதைதொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த துளசிமணி மாலைகளை சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து மாலையணிந்து சபரிமலை செல்ல 48 நாள் விரதத்தை தொடங்கினார்கள்.

    சபரிமலை மலையில் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மானாமதுரையில் இருந்து சபரிமலை செல்ல ஏராளமான பக்தர்கள் மாலையிட்டனர்.

    • கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெறும்.
    • ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலாக உள்ள இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆங்கில புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விழா காலங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ காலங்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். ஆண்டுதோறும் வரும் கார்த்திகை மாதம் மற்றும் தைப்பூச காலங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் தமிழகம் முழுவதும் இருந்து இங்கு வருவது வழக்கம். இதற்காக கார்த்திகை மாதம் தொடக்கம் முதல் தைப்பூசம் வரை பகல் நேரங்களில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடை திறந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

    இந்நிலையில் இன்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள். இதேபோல் தை பூச திருவிழாவும் நெருங்கி வருவதையொட்டி பழனி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவிக்க தொடங்குவார்கள்.

    பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று முதல் பிள்ளையார்பட்டி கோவில் பகல் முழுவதும் நடை திறக்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் என். கருப்பஞ்செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சி.சுப்பிரமணியன்செட்டியார் ஆகியோர் கூறியதாவது:-

    பக்தர்கள் விரதம் தொடங்கும் காலங்களில் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அவர்களின் பயணம் தாமதமின்றி தொடரவும், கூட்ட நெரிசல் இல்லாமல் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்காகவும் இன்று முதல் கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை சாத்தப்படாமல் பகல் முழுவதும் கோவில் திறந்து இருக்கும். அதேபோல் கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெறும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதி மற்றும் கார் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இந்த ஆண்டு வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
    • கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. காசி, கங்கை, கயா போன்ற புண்ணிய தலங்களுக்குச் சமமாக இத்தலம் போற்றப்படுகிறது.

    வருடத்தில் 11 மாதம் யோகநிலையில் இருக்கும் யோக லட்சுமிநரசிம்மர் கார்த்திகை ஒரு மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இதனால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து பெரிய மலையில் எழுந்தருளியிருக்கும் யோகலட்சுமி நரசிம்மரை 1,305 படிக்கட்டுகளில் நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர்.

    கார்த்திகை பெருவிழாவின் முதல் வெள்ளிக்கிழமை இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் 900 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்பட்டனர்.2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் கோவிலில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    வேண்டும் வரம் அனைத்தையும் அள்ளித் தருவார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் பில்லி சூனியத்தில் இருந்து விடுபடுவதாகவும், குடும்பம் செழிக்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்று பக்தர்கள் யோக நரசிம்மர் தரிசிக்கின்றனர்.

    பக்தர்களின் அதிக அளவில் வருவார்கள் என்பதால் திருக்கோவில் நிர்வாகம் இரண்டு மலைகளிலும் குடிநீர் வசதி மின்வசதி கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பக்தர்களிள் நடவடிக்கைகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டுகிறது.

    பக்தர்களை சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

    சோளிங்கர் நரசிம்ம சாமி பெரிய மலைக்கோவிலை 1305 படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். இந்த மலைக்கு நேர் எதிரில் யோக ஆஞ்சநேயர் அருளும் சிறிய மலை உள்ளது. அனுமன் கோவிலை அடைய 406 படிகள் ஏறவேண்டும்.

    பெரிய மலை அடிவாரத்திலிருந்து ஆலய நுழைவாயில் ராஜகோபுரம் வரை இளைப்பாற்றிக் கொள்ள 7 மண்டபங்கள் உள்ளன.

    நரசிம்ம சாமி கோவில் அமைந்துள்ள பெரிய மலையில் ஏராளமான குரங்குகள் உள்ளன. படிக்கட்டுகளில் ஒவ்வொரு வளைவிலும் கூட்டம் கூட்டமாக குரங்குகள் காத்திருக்கும்.அவை பக்தர்களை சோதனை செய்யாமல் மேலே விடுவதே கிடையாது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் தலைவர் போன்ற பெரிய குரங்கு ஒன்று படுத்தபடி கண்காணித்து கொண்டிருக்கும். பக்தர்கள் அருகில் வந்ததும் அனைத்து குரங்குகளும் பயமுறுத்தி பக்தர்களை முழுமையாக சோதனை செய்யும் அளவிற்கு தொல்லைகள் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குரங்கு தொல்லை இருந்தாலும் சோளிங்கர் கோவிலில் உள்ள குரங்குகள் தான் அடாவடியில் பிரசித்தி பெற்றவை. எனவே கோவில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் குச்சி, கம்பு போன்றவை வழங்கப்படுகிறது.அதன் உதவியுடன் தான் பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.

    சோளிங்கர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ரெயில் மூலம் அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் எளிதில் சென்றடையலாம்.

    • கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வழிபாடு நடந்தது.
    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் நடந்தது.

    மதுரை

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமவார வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான கார்த்திகை முதல் சோம வார தினமான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுந்தரேசு வரர் சன்னதி முன்பு 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மாலை சுந்தரேசுவர ருக்கு 1,008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை கொண்டு சிறப்பு அபி ஷேகம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் மதுரை இம்மையிலும் நன்மை தருவார்- கோவிலில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சோம வார வழிபாடுகள் நடைபெற்றது.

    இைதயொட்டி 1,008 வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை சிவலிங்கத்திற்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெறுகிறது. அதன்பின் அலங்காரம், மகாதீபாராதனை நடக்கிறது.

    அபிஷேக பிரியரான சிவபெருமானை கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து வழிபடுவதும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இன்று பல பக்தர்கள் விரதம் கடைபிடித்து சோம வார வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.

    இேதபோல் கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், உத்தர கோசமங்கை சிவன் கோவில், திருவாதவூர் சிவன் கோவில், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சோம வார சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை.
    • ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரத்தில் (வெள்ளாலமரம்) வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும். மற்ற நாட்களில் பகலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள்.

    ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை சோமவார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து பொது ஆவுடையார் கோவில் செயல் அலுவலர் வடிவேல்துரை கூறுகையில், 'பொது ஆவுடையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சோமவார திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று முன்தினம் கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் வருகிற 28-ந் தேதி, அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி, 12-ந் தேதி ஆகிய 3 நாட்களும் சோமவார திருவிழா நடக்கிறது.

    சோமவாரத்தில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக அனைத்து பகுதிகளில் இருந்தும் பரக்கலக்கோட்டை கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு சோமவாரத்தின் போதும் காணிக்கையாக வருகிற நவதானியங்கள், ஆடு, கோழிகள் மற்றும் பலவகை பொருட்களும் அன்றைய தினமே மாலை 6 மணி அளவில் அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்படும்' என்றார்.

    • வஞ்சிரம், வவ்வால், சங்கரா, கானாங்கெழுத்தி, கிழங்கன், பாறை உள்ளிட்ட மீன்களின் விலை வழக்கத்தை விட குறைந்து இருந்தது.
    • கோழி இறைச்சி கிலோ சராசரியாக ரூ.260ஆக உள்ளது.

    சென்னை:

    கார்த்திகை மாதம் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இந்த மாதத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள் பெரும்பாலானோர் விரதம் இருப்பது வழக்கம். இதனால் மீன், இறைச்சி விலை சற்று குறைந்து உள்ளது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம், வவ்வால், சங்கரா, கானாங்கெழுத்தி, கிழங்கன், பாறை உள்ளிட்ட மீன்களின் விலை வழக்கத்தை விட குறைந்து இருந்தது.

    கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தற்போது ரூ.100 முதல் ரூ.200 வரை விலை குறைந்து இருந்தது. ரூ.1000-க்கு விற்ற வஞ்சிரம் ரூ.800-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் கோழி இறைச்சி விலையும் சற்று குறைந்து உள்ளது. கோழி இறைச்சி கிலோ சராசரியாக ரூ.260ஆக உள்ளது. நாட்டுக்கோழி கிலோ ரூ.500க்கு விற்கப்படுகிறது. பண்ணை கோழி கிலோ ரூ.300க்கு விற்பனையானது. ஆனால், ஆட்டு இறைச்சியின் விலை குறையவில்லை. ஒரு கிலோ ரூ.900-க்கு விற்கப்படுகிறது.

    இதுகுறித்து இறைச்சி வியாபாரிகள் கூறும்போது, 'கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை செல்கிறார்கள். இதனால் இறைச்சி தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக இறைச்சி வியாபாரமும் பாதித்து உள்ளது.

    மீன், கோழி இறைச்சியின் விலையை குறைத்து உள்ளோம். ஆனால் ஆட்டு இறைச்சி விலையில் மாற்றம் இல்லை. கார்த்திகை மாதம் முழுவதும் இது நீடிக்கும்' என்றார்.

    • சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
    • சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து துளசி தளைகளால் மகா விஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

    கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம்.

    விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

    நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர்.

    கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, விரதம் இருந்து சிவவிஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உரியது.
    • சிவத்தலங்களை தரிசிப்பதும் கோடிப்புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

    சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்து சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

    உலகம் முழுவதும் ஒளி வீசச்செய்யக்கூடிய சந்திரனின் சாபத்தை சிவபெருமான் நிவர்த்தி செய்த தினம் ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமை ஆகும். 'க்ஷயரோகம்' என்னும் உடல் தேயும் நோய்க்கு ஆளான சந்திரன் சிவனைச் சரணடைந்து மீண்டும் வளர ஆரம்பித்த தினமே கார்த்திகை சோமவாரமாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்வர். இத்தகைய கார்த்திகை சோமவாரத்தில் நாம் சிவபெருமானை ஆராதித்து விரதம் இருந்து வழிபடுவதால் நம் வாழ்வின் கஷ்டங்கள் விலகி இஷ்டங்கள் பூர்த்தியாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    கார்த்திகை மாதம் இந்துக்களிடையே புனிதமான ஒரு மாதமாகவும் பலவிரதங்களை அனுஷ்டிக்கும் மாதமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதத்தில் பல விரதங்கள் இருப்பினும் கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உரியது. துன்பங்களை விலக்கி இன்பங்களை வழங்கக்கூடிய விரதமாக சோமவார விரதம் அமைகிறது.

    சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

    கார்த்திகை சோமாவார திருநாள்களில் சிவத்தலங்களை தரிசிப்பதும் கோடிப்புண்ணியத்தைப் பெற்றுத் தரும். கார்த்திகை சோம வார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி அன்றாட அனுஷ்டானங்களை முடித்து சிவ பூஜை செய்ய வேண்டும்.

    ஒரு வயதுமுதிர்ந்த தம்பதியினரை அழைத்து வந்து உபசாரங்கள் செய்து அவர்களுக்குத் தங்களால் இயன்ற அளவு தானங்கள் அளித்து ஆசி பெறுதல் வேண்டும். அன்று பகல்பொழுது உண்ணாமல் இருந்து மாலையில் சிவதரிசனம் செய்து முன்னிரவில் சிறு உணவு உண்டு உபவாசம் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு செய்ய முடியாதவர்கள் அன்று நீராடி சிவ ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற அபிஷேக திரவியங்களை சமர்ப்பித்து வழிபடுதல் வேண்டும்.

    கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவ-சக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்தத் தம்பதி கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.

    கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர், ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள்வதாக ஐதிகம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள் என்கிறார்கள் பக்தர்கள்.

    கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சிப்பவர்கள், வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைவர். கார்த்திகை சோம வார நாளில், சங்காபிஷேக தரிசனம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து மீள்வர் என்பது நம்பிக்கை.

    ×