ஐயப்பன் வரலாறு

பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார்.மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான்.
ஐயப்பன் வரலாறு
Published on

மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்ற வரம் பெற்றான். முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்ற அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர். மகிஷாசுரனின் சகோதரி மகிஷி தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு பரிகாரம் காண்பதற்காக கடும் தவம் இருந்தாள். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு அழிவு வரவேண்டும் என்ற வரத்தை பெற்றாள்.

மகிஷியை அழிப்பதற்காக ஐயப்ப அவதாரத்தை சிவ பெருமான் உண்டாக்கினார். பாற்கடலை கடைந்த போது அசுரர்களை மயக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அவர் அழகை கண்டு பரவசம் அடைந்த சிவன் அவளை தழுவினார். இதனால் சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.

பந்தள மன்னர் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். அவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று சிவனிடம் தினமும் மனம் உருக வேண்டினார்.

மார்கழி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று பந்தள மன்னர் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது அங்கு கிடந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவந்தார். வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தை கழுத்தில் கனகமணி மாலை அணிவித்து மணிகண்டன் என்ற பெயரை சூட்டினார்.

குழந்தையை ராணியிடம் பந்தள மன்னர் கொடுத்தார். ராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்த்தாள். அந்த குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பொற்றான். குருவின் வாய் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான்.

இந்த நிலையில் ராணிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜன் என பொயர் சூட்டினர். என்றாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை மந்திரி ஒருவர் விரும்பவில்லை. ராணி மனதை மாற்றி மணிகண்டனை விரட்ட முடிவு செய்தனர்.

மந்திரி திட்டப்படி ராணி தலைவலி வந்தது போல் நடித்தாள். புலி பால் கொண்டு வந்தால் தான் ராணி தலைவலியை சரிப்படுத்த முடியும் என்று மருத்துவர்களை அந்த மந்திரி சொல்ல வைத்தான். புலி பாலை யார் கொண்டு வரமுடியும் என அரசவையில் உள்ள எல்லோரும் திகைத்து நின்றனர். அப்போது மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான். காட்டுக்குள் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் கடும் போர் ஏற்பட்டது. மகிஷியை அம்பு ஏய்தி மணிகண்டன் வீழ்த்தினார். தன்னை வீழ்த்தியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவன் என்பதை உணர்ந்த மகிஷி மறுஉருவம் பெற்று எழுந்தாள்.

ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் இந்த அவதாரத்தில் பிரம்மச்சாரியாக வாழப்போவதாக கூறிய அய்யப்பன் அவளை தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே மஞ்சமாதா என்று அழைக்கப்படுகிறாள். அதன்பிறகு புலி மீது ஏறி பந்தள நாட்டு அரண் மனைக்கு ஐயப்பன் திரும்பி வந்தார். அவரை கண்டு அனைவரும் பயபக்தியுடன் வணங்கினார்கள். 12 வயது முடிந்ததும் தான் ஒரு தெய்வ பிறவி என்பதை பந்தள மன்னர் ராஜசேகரனுக்கு ஐயப்பன் உணர்த்தினார். தனக்கு சபரிமலையில் ஆலயம் எடுக்க உத்தரவிட்டார்.

சபரிமலையில் தான் ஒரு அம்பை எய்வதாகவும் அந்த அம்பு எந்த இடத்தில் போய் விழுகிறதோ அங்கு கோவில் கட்டும்படி அருள்பாலித்தார்.

அதன்படி பந்தள ராஜா ஐயப்பன் கோவிலை கட்டினார். பரசுராமர் உதவியுடன் மகரசங்கர நாளில் சனிக்கிழமையன்று கோவில் கட்டி திறக்கப்பட்டது.

இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com