என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala temple"

    • கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.
    • சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை.

    ராஜபாளையம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக் கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது.

    அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்ம குமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னி கிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அதன்பின் கிருஷ்ணனிடம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாறு பகுதியில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீக ஊரான ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது இரிடியம் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கிருஷ்ணன் கூறுகையில், சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை. வீட்டில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. அதன்பின் போலீசார் அழைப்பின் பேரில் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். என்னிடம் 2 பேரின் பெயர்களை கூறி தெரியுமா? என கேட்டார்கள். நான் தெரியாது எனக்கூறினேன். அவர்கள் சபரிமலை குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எனக்கும் சபரிமலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. டிசம்பர் 30-ம் தேதி திருவனந்தபுரம் அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை குறித்து கையெழுத்திட்டு செல்லுமாறு கூறியுள்ளனர், என்றார். 

    • சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கை கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகுமாரை 12-ந் தேதி வரை காவலில் வைக்க திருவனந்தபுரம் சிறப்பு விஜிலென்சு கோர்ட்டு உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கை கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்தக்குழு வழக்கு தொடர்பாக பலரை கைது செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கைது செய்தது. முன்னாள் தலைவர் பத்மகுமாருடன் சேர்ந்து சதி செய்து ஆவணங்களை திருடியதாக அவர் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகுமாரை 12-ந் தேதி வரை காவலில் வைக்க திருவனந்தபுரம் சிறப்பு விஜிலென்சு கோர்ட்டு உத்தரவிட்டது. அவரது ஜாமின் மனு நாளை (31-ந் தேதி) விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சபரிமலை வந்து சென்றனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்வார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு வழிபாடு காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கி கடந்த 27-ந் தேதியோடு முடிவடைந்தது.

    இந்த காலத்தில் சபரிமலை கோவிலுக்கு 36.33 லட்சம் பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி பதிவு மூலம் இவர்கள் தரிசனம் பெற்றனர். கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சபரிமலை வந்து சென்றனர்.

    மண்டல பூஜை நிறைவை யொட்டி 27-ந் தேதி கோவில் நடை சாத்தப்பட்டது. நாளை (31-ந் தேதி) முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி நடையை திறப்பார். தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

    நாளை அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14-ந் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனம் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்வார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    இதற்கிடையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போதே சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

    • மறுநாள் 31-ந்தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
    • சபரிமலையில் நடப்பு மண்டல சீசனையொட்டி கடந்த 27-ந்தேதி வரை 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. கோவிலில் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மண்டல பூஜை நடைபெற்றது.

    மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    இதையடுத்து மறுநாள் 31-ந்தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும். சீசனையொட்டி 19-ந்தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். 20-ந்தேதி காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனம் செய்வார். அத்துடன் நடை அடைக்கப்பட்டு 2025-2026 மண்டல-மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.

    திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலையில் நடப்பு மண்டல சீசனையொட்டி கடந்த 27-ந்தேதி வரை 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசன் முடிவடைந்தபோது 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து இருந்தனர். அதாவது கடந்த சீசனை விட இந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 502 பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன.
    • வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்தனர்.

    ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்ட தங்க அங்கியை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பெற்றுக்கொண்ட காட்சி.

     

    மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்டு, நேற்று மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. அதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    இந்தநிலையில இன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன. நெய் அபிஷேகம் காலை 9 மணி வரை நடத்தப்பட்டது.

    பின்பு தங்க அங்கியுடன் ஜொலித்த ஐயப்பனுக்கு காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரையிலான நேரத்தில் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. பின்னர் மதியம் ஒரு மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை அடைக்கப்படும்.

    அதன்பிறகு மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். இன்று நாள் முழுவதும் ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலமாக 32 ஆயிரம் பேர் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று ஆன்லைன் முன்பதிவு முறையில் 35 ஆயிரம் பேர், உடனடி முன்பதிவு முறையில் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 37 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

    வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. அத்துடன் 41 நாட்கள் நடைபெற்று வந்த மண்டல பூஜை நிறைவுக்கு வருகிறது.

    இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் கடந்த 25-ந்தேதி வரை 30 லட்சத்து ஆயிரத்து 532 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு(2024) மண்டல பூஜை சீசனில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து டிசம்பர் 25-ந்தேதி வரை 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான பக்தர்களே சபரிமலைக்கு வந்துள்ளனர்.

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 2 நாட்களுக்கு பிறகு, அதாவது வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி கோவில் நடையை திறப்பார். மறுநாள்(31-ந்தேதி) மகர விளக்கு பூஜை வைபவம் தொடங்குகிறது.

    மரக ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். அதனை சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தரிசிப்பார்கள்.

    மண்டல பூஜை காலத்தை போன்றே மகரவிளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    • எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர்.
    • பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    திண்டுக்கல்:

    கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் புதிதாக தங்கத்தகடுகள் பதிக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது கிலோ கணக்கில் தங்கநகை மாயமானது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ண போற்றி என்பவர் முதல் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலும் சிலைகள் மாயமாகின. இதுதொடர்பாக கேரள மாநிலம் எஸ்.ஐ.டி. என்ற அமைப்பின் டி.ஒய்.எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அப்போது பதவியில் இருந்த சபரிமலை தேவஸ்தான அதிகாரிகள் உட்பட பலர் சிக்கியுள்ளனர்.

    இந்த நகை திருட்டு வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு தொடர்பு இருப்பது தெரியவரவே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் சபரிமலை நம்பூதிரி, திண்டுக்கல் ராம்நகரை சேர்ந்த மணி (எ) பாலசுப்பிரமணி உட்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    அதன் பேரில் எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர். அவர்களுடன் திண்டுக்கல் போலீசாரும் விசாரணைக்கு சென்றனர். பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். பாலசுப்பிரமணிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் வைத்து கேரள போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நகை திருட்டு வழக்கில் திண்டுக்கல் வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது.
    • சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.

    மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த ஊர்வலம் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு நாளைமறுநாள்(26-ந்தேதி) நண்பகல் பம்பா திரிவேணி சங்கமத்துக்கு வந்து சேருகிறது.

    அன்று மாலை 3 மணிக்கு பிறகு பம்பா கணபதி கோவிலில் இருந்து புறப்படும் தங்க அங்கி, நீலிமலை மற்றும் அப்பாச்சி மேடு, சரங்குத்தியை கடந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அதன்பிறகு தங்க அங்கி ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். மறுநாள் (27-ந்தேதி) மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் முழுவதும் ஐயப்பன் தங்க அங்கியில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டது.

    ஆன்லைன் முன்பதிவு மூலம் 26-ந்தேதி 30ஆயிரம் பேருக்கும், மண்டல பூஜை நடைபெறக்கூடிய 27-ந்தேதி 35 ஆயிரம் பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு நாட்களும் உடனடி முன்பதிவு(ஸ்பாட் புக்கிங்) 2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

    அது மட்டுமின்றி தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய, 26-ந்தேதி காலை 9 மணிக்கு பிறகு நிலக்கல்லில் இருந்தும், 10 மணிக்கு பிறகு பம்பாவில் இருந்தும் பக்தர்கள் சன்னதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்க அங்கி ஊர்வலம் சரங்குத்தியை அடைந்தபிறகே, பம்பாவிற்கு வர பக்தரகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முறையான முன் ஏற்பாடுகள் மூலம் அனைவருக்கும் சீரான தரிசனம் கிடைத்து வருகிறது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை 21 லட்சம் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.

    சபரிமலை:

    நடப்பு சீசனில் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 4 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாக சபரிமலை பாதுகாப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்களின் வருகை முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகவே உள்ளது. முறையான முன் ஏற்பாடுகள் மூலம் அனைவருக்கும் சீரான தரிசனம் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை 21 லட்சம் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அதே கால அளவில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதாவது, 4 லட்சம் பேர் கூடுதலாக வந்துள்ளனர்.

    பக்தர்கள் முன்பதிவு செய்த நாளில் தரிசனத்திற்கு வர வேண்டும். மேலும் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிக்கான உடனடி தரிசன முன்பதிவுக்கான எண்ணிக்கை கேரள ஐகோர்ட்டின் அனுமதியின் பேரில் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.
    • கடந்த 8-ந்தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர்.

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.

    இந்தநிலையில் பக்தர்களின் வருகை குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 8-ந்தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடப்பு சீசனில் மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.
    • தரிசன முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசன ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. இதையடுத்து உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நடப்பு சீசனில் மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது. மண்டல பூஜையையொட்டி வருகிற 26, 27-ந் தேதிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த 2 நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் மாலையில் தொடங்கியது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படும் 26-ந் தேதி 30 ஆயிரம் பக்தர்களுக்கும், மண்டல பூஜை தினமான 27-ந் தேதி 35 ஆயிரம் பக்தர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் முடிவடைந்தது. இதனால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த 2 நாட்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மண்டல பூஜை நெருங்கி வரும் நிலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், உடனடி தரிசனத்திற்கான எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

    • கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • தற்போதைய சீசனில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவை நாடுவதில் ஆர்வம் காட்டினர்.

    மண்டல, மகர விளக்கு சீசன் காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவொரு முன்பதிவும் இன்றி நேரடியாக வந்து பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    தற்போது கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சீசனில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவை நாடுவதில் ஆர்வம் காட்டினர். எனவே சீசனில் தொடக்கத்திலேயே பெரும்பாலான நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்தது.

    மண்டல பூஜைக்கு பிறகு நடைபெற உள்ள மகரவிளக்கு சீசனுக்கான முன்பதிவும் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை முன்பதிவு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் “ஸ்பாட் புக்கிங்” எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
    • கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக கூட்ட நெரிசல் இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

    ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 70 பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    ஐகோர்ட் உத்தரவின் பேரில், கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் தற்போது பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் தினமும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் 45 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மதியம் ஒரு மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 45 நிமிடங்கள் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    ×