என் மலர்
நீங்கள் தேடியது "Ayyappan"
- மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம்.
- நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது.
நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் தோன்றிய மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம். மயிலையில் நீங்கள் எந்ததெருவுக்குள் சென்றாலும் நிச்சயம் ஏதாவது ஒரு ஆலயத்தை காண்பீர்கள்.
இந்த சிறப்பின் ஒரு அம்சமாக மயிலையில் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் இருந்து மிக, மிக எளிதாக இந்த ஆலயத்தை சென்று அடையலாம்.
லஸ்சில் இருந்து சாந்தோம் செல்லும் அந்த சாலையில் சென்றால் இடதுபுறம் பெரிய ஆர்ச் நம்மை வரவேற்கும். அந்த வழியில் சென்றால் அது கோவில் அருகில் நம்மை கொண்டு போய் சேர்த்துவிடும்.
முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிக, மிக சிறிய கோவில். கிழக்குதிசை நோக்கிய இத்தலத்தில் பெரிய பெரிய பிரகாரங்களோ, பிரமாண்ட கோபுரங்களோ, விமானங்களோ இல்லை. சாலையோரத்தில் உள்ள இத்தலத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. அந்த கோபுரத்தில் மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரியின் சுதை வடிவங்கள் எழில்மிகு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
கோபுர தரிசனம் செய்து விட்டு உள்ளே நுழைந்தால் இடது பக்கம் 2 பெரிய அரச மரங்கள் நிற்பதை காணலாம். அதன் கீழ் விநாயகரும், நாகர் சிலைகளும் உள்ளன.
விநாயகரை வணங்கி முண்டகக்கண்ணியம்மனை வழிபட செல்லலாம். அம்மன் ஓலைக்குடிசையில் இருக்கிறாள். அவளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மகாமண்டபத்தில் வரிசையில் நின்று முண்டகக்கண்ணி தாயை பொறுமையாக, கண்குளிர கண்டு நன்றாக தரிசனம் செய்யலாம். காலையில் சென்றால் அபிஷேகத்தையும் மாலையில் சென்றால் அலங்காரத்தையும் பார்க்கலாம்.
வேப்பிலை பாவாடை உடுத்தி, வெள்ளி கைபொருத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மனை தரிசிக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். அவள் தரும் பிரசாதமே அம்மை நோய், விஷக்கடி, பில்லி, சூனியம், கடும் காய்ச்சல் போன்றவற்றுக்கு மருந்தாக உள்ளது.
முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்ட பிறகு பிரகாரத்தை சுற்றி வரலாம். ஒரே ஒரு பிரகாரம் தான். பிரகாரத்தை சுற்றத் தொடங்கியதும் அருகில் தனி அறை போல உள்ள அமைப்பினுள் சில சன்னதிகள் இருப்பதை காணலாம்.
ஞானஜோதி நர்த்தன விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், அன்னபூரணி, அய்யப்பன், வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி, ஆஞ்சநேயர், வள்ளலார் தனி தனி சன்னதிகளில் உள்ளனர். அந்த அறையின் ஒரு பகுதி சுவரில் சித்த புருஷர்களும், மகான்களும் படங்களில் உள்ளனர்.
இதையடுத்து வெளியில் வந்து மீண்டும் பிரகாரத்தை தொடர்ந்தால், முண்டகக்கண்ணி அம்மன் கருவறையின் பின்பகுதி வரும். அங்கு தான் ஆதியில் அம்மன் தோன்றிய அரச மரம் உள்ளது. அதனுள் தான் நாகம் குடிகொண்டுள்ள புற்று உள்ளது.
இந்த புற்று பகுதிக்கு பெண்கள் அதிக அளவில் முட்டைகளை சமர்ப்பித்து பால் அபிஷேகம் செய்கிறார்கள்.
அருகிலேயே நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது. அங்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். இந்த பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டால் அம்மனின் அருள்பார்வை கிட்டும் என்று பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. எனவே இந்த இடத்தில் பொங்கல் வைக்க பெண்கள் போட்டி போடுவது உண்டு. இந்த பகுதியை பொங்கல் மண்டபம் என்று அழைக்கிறார்கள்.
இதையடுத்து அம்மனின் இடதுபுற பக்கவாட்டில் தனி சன்னதியில் உற்சவர் அம்மன் இருப்பதை காணலாம். சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் உள்ளாள்.
ஆலய கிணறு, மடப்பள்ளியை கடந்து சென்றால் தான் உற்சவரை கண்டு வழிபட முடியும். உற்சவர் சன்னதி இடதுபுறம் சப்த கன்னியர்கள் உள்ளனர். அந்த சன்னதி அமைப்பின் இருபுறமும் ஜமத்கனி முனிவரும் அவரது மகன் பரசுராமரும் உள்ளனர்.
இவர்களை வழிபட்டால் அத்துடன் வழிபாடு முடிந்தது. அந்த அளவுக்கு இந்த ஆலயம் மிக சிறிய ஆலயமாக உள்ளது. முண்டகக்கண்ணி அம்மன், நாகர் இருவரையும் தான் மக்கள் அதிகமாக வழிபடுகிறார்கள்.
வழிபாடுகள் முடிந்ததும் ஆலயத்தின் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமரலாம். பிறகு மற்றொரு வாயில் வழியாக வெளியேறலாம். மயிலை பக்கம் போகும் போது அவசியம் முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு அருள் பெறுங்கள்.
- சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது.
- மழை பெய்து வருவதால் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லும் கன்வேயர் நிறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடிமாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
நேற்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பக்தர்களுக்கு வசதியாக நிலக்கல் மற்றும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் மையங்களும் செயல்பட்டன. இந்நிலையில் சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் நனைந்தது.
பழைய காணிக்கை பெட்டியில் இருந்து காணிக்கை பணத்தை கொண்டு செல்லும் கன்வேயர் மழைநீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தில் ஏராளமானவை, தண்ணீரில் நனைந்து நாசமானதாக தெரிகிறது.
ஆனால் எவ்வளவு பணம் தண்ணீரில் நனைந்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் தண்ணீரின் நனைந்த பணத்தை உலர வைக்கும் பணியும், பணம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர் மோட்டார் பம்ப் மூலம் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லும் கன்வேயர் நிறுத்தப்பட்டுள்ளது.
- குருசாமிகள் கன்னிசாமியிடம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்க கூடாது.
- சுயநலங்களுக்கு உட்படாமல் அய்யப்பனுக்கும், அய்யப்பக்தர்களுக்கும் குருசாமிகள் சேவை செய்ய வேண்டும்.
சபரிமலைக்கு 18 வருடங்களாக செல்லும் பக்தர்கள் குருசாமியாக இருப்பார்கள். அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இதோ:
*குருசாமிகள் ஆண்டுதோறும் குறைந்தது 10 கன்னி சாமிகளை முறையாக 41 நாட்கள் விரதம் கடைபிடிக்கவைத்து சபரிமலைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
*குருசாமிகள் கன்னிசாமியிடம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்க கூடாது.
*குருசாமிகள் மிக சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து மற்ற அய்யப்ப பக்தர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும்.
*சுயநலங்களுக்கு உட்படாமல் அய்யப்பனுக்கும், அய்யப்பக்தர்களுக்கும் குருசாமிகள் சேவை செய்ய வேண்டும்.
*கன்னிசாமிகளுக்கும், மற்ற சீடர்களுக்கும் அய்யப்பனின் பெருமை, சபரிமலை யாத்திரையின் உயர்வ விரத நெறி முறைகள் பற்றி குருசாமிகள் எடுத்துக்கூறி அவர்களை நல்லவழியில் நடத்தி செல்வது அவசியமாகும்.
- 41 நாள் மண்டல காலத்தின் நிறைவு பூஜைதான் மண்டல பூஜையாக கொண்டாடப்படுகிறது.
- சபரிமலை செல்ல முடியாத பெண்கள் தங்க அங்கியை வரவேற்று தரிசனம் செய்கிறார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடக்கும் பூஜைகளில் மண்டல, மகரவிளக்கு பூஜை முக்கியமானது. 41 நாள் மண்டல காலத்தின் நிறைவு பூஜைதான் மண்டல பூஜையாக கொண்டாடப்படுகிறது. இதையட்டி அன்று அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இது கண்கொள்ளாக் காட்சியாகும்.
அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியின் எடை 420 பவுன் ஆகும். இது திருவிதாங்கூர் மகாராஜாவினால் அய்யப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டதாகும். இந்த அங்கி மண்டல பூஜைக்காக 2 நாட்களுக்கு முன்பு ஆரன் முழா அருள்மிகு பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
சபரிமலை கோவில் மாதிரி வடிவில் தயாரிக்கப்பட்ட விசேஷ அலங்காரத்துடன் இதை சந்நிதானத்துக்கு கொண்டு வருகிறார்கள். சபரிமலை செல்ல முடியாத பெண்கள் தங்க அங்கியை வரவேற்று தரிசனம் செய்கிறார்கள்.
- சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் விண்ணை அதிர செய்யும்.
- காந்தமலை பொன்னம்பல மேட்டில் மிகப் பிரகாசமாக ஒளியாக மகரஜோதி தென்படுகிறது.
சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் மகர சங்கராந்தி தினத்தன்று (தை மாதாம் 1-ந் தேதி) பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பல லட்சம் மதிப்புள்ள கற்பூரம் கொளுத்தப்படும். மாலை 6.40 மணியில் இருந்து 6.50 மணிக்குள் சபரிமலை கோவிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள காந்தமலை பொன்னம்பல மேட்டில் மிகப் பிரகாசமாக ஒளியாக மகரஜோதி தென்படுகிறது. இந்த ஜோதியை தரிசனம் செய்யும் லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பும் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் விண்ணை அதிர செய்யும்.
பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ அய்யப்பன் அன்று காந்தமலையில் இருந்து சபரிமலைக்கு வருவதாக ஐதீகம்.
- விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.
- ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.
சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீஅய்யப்பனை தரிசனம் செய்யச் செல்லும் பக்கர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி மனது, உடல் ஆகிய இரண்டையும் தூய்மையாக்கி அய்யப்பனை நினைத்து மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள்.
இவ்வாறு விரதம் மேற்கொள்ளுபவர்கள் விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்து நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரணகோஷங்கள் முழங்க வேண்டும்.
விரதகாலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரதகாலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.
விரதத்தின்போது வீட்டு விலக்கான பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும்.
விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக்கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சர்ய விரதம்.
மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம்.
- பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார்.
- இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார்.
அய்யப்பனின் தரிசனத்தைப்போல அவரின் அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம். சுவாமி அய்யப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும்.
காலவ மகிஷியின் மகளான லீலாவதி, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள்.
பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். இதன் விளைவாக அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர்.
காட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான் இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள் மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்குகிறாள்.
சதி திட்டம் தீட்டப்படுகிறது. ராணி தலைவலியால் துடித்தாள் ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.
பம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் இடையே கடும்யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். அய்யப்பனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள்.
அய்யப்பன் தான் நித்ய பிரம்மச்சாரி என்றைக்கு தன்னைத்தேடி கன்னி அய்யப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக கூறி தமது இடப்பக்கத்தில் மாளிகைப்புறத்து மஞ்சள்மாதாவாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.
இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதை கண்டு மிரண்டராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அய்யப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டுகிறார். ராஜசேகர மன்னன் கலங்குகிறான்.
பம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் பந்தளமன்னன் கோவில் கட்டினான். பரசுராமர் அங்கு அய்யப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகினியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று அய்யப்பன் ஜோதிவடிவில் அருள்பாலிக்கிறார்.
- அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துபுழா, பந்தளம், சபரிமலை என 5 இடங்களில் அய்யப்பன் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
- ஆரியங்காவு அய்யப்பனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.
செங்கோட்டை:
அண்டை மாநிலமான கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சாஸ்தாவான அய்யப்பன் ஐந்துமலைக்கு அதிபதியாவர். அவர் அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துபுழா, பந்தளம், சபரிமலை என 5 இடங்களில் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருக்கல்யாணம்
இதில் ஆரியங்காவு கோவிலில் குடி கொண்டுள்ள அய்யப் பனுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மகோற்சவ விழா கூடுதல் தனிசிறப்பாகும். இந்த விழா முடிவில் பகவதி அம்மனுடன் திருமணம் நடைபெறுவது ஐதீகம்.
நிறைவு நாளுக்கு முன்பு அய்யப்பன் கோவிலில் நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் சுவாமி- அம்பாள் தனித்தனியாக அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் கோவிலை வலம் வந்து வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.
பாண்டி முடிப்பு
அதன்படி கடந்த 16-ந் தேதி மகோற்சவம் விழா தொடங்கியதையடுத்து ஆரியங்காவு அய்யப்பனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் பாண்டி முடிப்பும் நடைபெற்றது.பெண் அழைப்பு நிகழ்ச்சியானது ஆரியங்காவு அருகே மாம்பழத்துறை பகவதி அம்மன் கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக நடந்தது.
தொடர்ந்து மணப் பெண்ணிற்கு பட்டு, மாலை வழங்குதல், சீர்வரிசை செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறியது.நேற்றிரவு அய்யப்பனும், அம்பாளும் அலங்கரிக்கபட்ட தனி சப்பரத்தில் கோவில் வெளிபிரகாரத்தை வலம் வந்து பின் வசந்த மண்டபத்தில் கல்யாண வைபோகம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்று அய்யப் பனின் திருமண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். முடிவில் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கபட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
- ஐயப்ப சாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது.
- ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
திண்டுக்கல் அருகே குட்டியப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த ஸ்ரீஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழுவினர், ஆண்டுதோறும் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி மண்டல பூஜை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மதியம் 1.30 மணிக்கு ஸ்ரீஹரிஹரசுதன் மணிமண்டபத்தில் எழுந்தருளிய ஐயப்ப சாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது.
அதன்பின்னர் மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக சாலை சந்தன கருப்பணசாமி கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டு, மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக மகா காளியம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு மகா காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியை சுற்றிலும் பூக்களை வைத்திருந்தனர். மேலும் எங்க கருப்பணசாமி எனும் பக்தி பாடல் ஒலித்து கொண்டிருக்க, காளி மற்றும் கருப்பணசாமி வேடம் அணிந்தவர்கள் ஆக்ரோஷமாக ஆடி கொண்டிருந்தனர்.
அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்த மஞ்சள் நிற சேலையை ஐயப்ப பக்தர்கள் எடுத்து வந்தனர். பின்னர் தகதகவென காணப்பட்ட பூக்குழியில் அந்த மஞ்சள் சேலையை விரித்தனர்.
அடுத்த நொடியே மஞ்சள் சேலை தீப்பிடித்து எரிந்தது. அவ்வாறு தீப்பிடித்து எரிந்த சேலை மேலே எழும்பி வானத்தில் பறந்து சென்றது. அது வானில் நெருப்பு பிழம்பு பறப்பது போன்று இருந்தது. இதனை ஐயப்ப பக்தர்கள் உள்பட ஏராளமான பொதுமக்களும் அதிசயத்துடன் பார்த்தனர்.
மேலும் காணிக்கையாக செலுத்திய மஞ்சள் சேலையை மாரியம்மன் ஏற்று கொண்டதாக பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். பூக்குழியில் போர்த்திய மஞ்சள் சேலை தீப்பற்றி வானில் பறந்த சம்பவம் அனைவரையும் பரவசமடைய செய்ததது. இதைத்தொடர்ந்து பூக்குழி கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அண்ணா நகர் செந்தூர் முருகன் கோவிலில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சார்பில், திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பஜனை வழிபாடு மூலம் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சூண்டி திருக்கல்யாண மலையை அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெரிய சூண்டி சித்தி விநாயகர் கோவிலை இரவு 11 மணிக்கு அடைந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அய்யப்பன் அவதார நட்சத்திர தின விழா நடந்தது.
- அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தின் சார்பில் கலியுக வரதன் சபரிமலை அய்யப்பன் அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு விசேஷ பூஜை நடந்தது. சங்கத் தலைவர் முத்து இருளாண்டி தலைமை தாங்கினார்.
செயலாளர் முத்துராஜ், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் படத்திற்கு சிறப்பு பூஜை-தீபாராதனை நடந்தது. அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர். அன்னதானம் நடந்தது.