search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul"

    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுகக் கூட்டம் நடந்தது. அந்த மேடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

    அங்கு பேசிய முபாரக், "என்னுடைய அப்பா 2015-ல் தவறிப்போய்விட்டார். என்னுடைய தாயார் 2022-ல் இறந்துபோய்விட்டார். தாயும் தந்தையுமில்லாத எனக்கு தாயாக தந்தையாக எனக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தோடு நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஒரு அப்பா என்னுடைய திண்டுக்கல்லார் (திண்டுக்கல் சீனிவாசன்) இன்னொரு அப்பா நத்தம் ஐயா (நத்தம் விஸ்வநாதன்) இருக்கிறார், இதற்கு மேல், என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

    காலையில் போன் பண்ணும்போதுகூட, அப்பா (திண்டுக்கல் சீனிவாசன்) என்னுடைய பிள்ளையை மாதிரி உன்னை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சொன்னார். ஆயிரக் கணக்கான அப்பாக்கள், ஆயிரக் கணக்கான அம்மாக்கள், லட்சக் கணக்கான சகோதரர்கள், லட்சக் கணக்கான சகோதரிகள், லட்சக் கணக்கான மாமன்மார்கள், லட்சக் கணக்கான மாமிமார்கள் லட்சக் கணக்கான சித்தப்பா, சித்திக்களைக் கொண்டிருக்கிற நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

    இங்கே கிடைக்கிற வெற்றி என்பது வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன். ஒருபோதும் திண்டுக்கல்லையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்லுகிற ஒரு புனிதமான உறவு நம் இருவருக்கும் இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, திண்டுக்கல்லை விட்டு என்னைப் பிரிக்க முடியாது" என்று நெல்லை முபாரக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

    நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.

    • பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
    • ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நாம் வசிக்கும் பூமியில் மனித இனம் போல் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் மற்ற உயிரினங்களை விட பல மடங்கு உயரம் குறைவாக, உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்களும் உள்ளன. மினியேச்சர் எனப்படும் பிக்மி என்ற உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்கள் பல்வேறு நாடுகளில் கண்டறியபட்டு அதனை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இவைகள் தங்களது இனத்தை விட உருவில் மிகச் சிறிய அளவில் தோற்றம் அளிக்கிறது. ஆனால் அதே குணாதிசயம் கொண்டவையாக உள்ளது.

    குட்டை மாடு, ஆடு, சேவல் மற்றும் அங்குலம் அளவில் உள்ள அணில், கிளி, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள், பிராணிகள் ஆகியவற்றை விலங்கு நல ஆர்வலர்கள் பராமரித்து வளர்த்து வருகின்றனர். உருவத்தில் மிகச் சிறிய இந்த உயிரினங்களை வளர்க்க மிகக் குறைந்த இடவசதி போதும் என்பதால் அதிக ஆர்வம் காட்டி வளர்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் லியோ. இவர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 15 வருடங்களுக்கு மேலாக இந்த வகை உயிரினங்களை சேகரித்து பராமரித்து வளர்த்து வருகிறார்.

    இவர் 2½ அடி உயரம் கொண்ட 3 வயது குட்டை மாடு, ஒரு ஜான் அளவு கொண்ட 2 வயது மதிக்கத்தக்க ஜாபனிஸ் செரமா கோழி, 1½ அங்குலம் கொண்ட மைக்ரோ அணில், 3 அங்குலம் உயரம் கொண்ட கிளி, ஆடு, முள் எலி, புறா, நாய் என பல்வேறு மிகச் சிறிய உருவம் கொண்ட உயிரினங்களை வளர்த்து வருகிறார்.


    இது குறித்து லியோ கூறுகையில், 15 வருடமாக பிக்மி உயிரினங்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி வளர்த்து வருகிறேன். மற்ற உயிரினங்கள் போல் தான் இதுவும். உருவத்தில் மட்டுமே மிகச் சிறியதாக காணப்படும். குணாதிசயங்களில் மாற்றம் இருக்காது. இவற்றை வளர்க்க மிக குறைந்த இட வசதியே போதுமானது. அதேபோல் எளிமையான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். இதனை வளர்ப்பதால் மன அமைதி ஏற்படுகிறது. தேவையற்ற மன அழுத்தத்தை குறைப்பதுடன் புத்துணர்ச்சியை தருகிறது.

    இந்த உயிரினங்களை வளர்க்க பர்வேஷ் பதிவு அவசியம். இந்த சான்றிதழ் பெற்று வளர்த்து வருகிறேன். 1½ வயதுடைய 5 அங்குலம் உயரமுடைய முள் எலி, குட்டை மாடு, காளை கிடா, புறா உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறேன். இவைகளிடம் பழகும் போது மகிழ்ச்சியை உணர்வதாக தெரிவித்தார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். குட்டை மனிதர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே போல் விலங்கு, பறவையினங்களில் இது போன்ற குட்டை இனம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் உயிருள்ள பல ஜீவராசிகள் அதிசயமாக தென்படுவது மக்களை பரவசப்படுத்தி வருகிறது.

    • காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்.
    • வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்தியபிரதேச பதிவெண் கொண்ட இந்த காரில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதா ராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.

    காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை பணிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன் பேரில் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் வந்த அழைப்புகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர் காமராஜர் அணை முழுமையாக வறண்டதால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.
    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது காமராஜர் அணை. இந்த அணைமூலம் ஆத்தூர், சின்னாளபட்டி, செம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் திண்டுக்கல் மாநகராட்சிக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே மழை ஏமாற்றி வருவதால் ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இதனால் திண்டுக்கல் நகர் குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால் பெரும்பாலும் காமராஜர் அணை நீரையே திண்டுக்கல் நகர் பகுதி மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.

    கொடைக்கானல் பகுதியில் மழை பெய்தபோதும் கீழ்மலை பகுதியில் மழை இல்லாததால் காமராஜர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இருக்கும் தண்ணீரும் குறைந்தது.

    தற்போது அணையின் நீர்மட்டம் பூஜ்ஜியம் அளவில் உள்ளது. இதனால் திண்டுக்கல் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீரை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக 11 எம்.எல்.டி வரை நீரை பெற முடியும். ஆனால் திண்டுக்கல் நகருக்கு அதுபோதாது. தற்போதே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நகர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடை மழை கீழ்மலை பகுதியில் பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் 12,937 மாணவர்களும், 12,673 மாணவிகளும் என மொத்தம் 25,610 பேர் தேர்வு எழுதினர். இதில் 11,598 மாணவர்களும், 12,066 மாணவிகளும் என மொத்தம் 23,664 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    89.65 சதவீத மாணவர்களும், 95.221 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 92.40 ஆகும்.

    மாநில அளவில் திண்டுக்கல் மாவட்டம் 32-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 94.4 சதவீதமும், 2018-ம் ஆண்டு 91.60 சதவீதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள போதிலும் 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 150 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9,470 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

    இதில் 8,188 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.46 சதவீதம் ஆகும். 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணை பொதுத் தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SSLC #SSLCResult

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வந்தனர். மேலும் நீர் நிலைகள் வறண்டு போகத் தொடங்கின.

    மேலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குடிநீருக்காக பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டங்களில் ஈடுபடும் அளவுக்கு வறட்சி தாண்டவம் ஆடியது. எனவே பொதுமக்கள் மழை எப்போது பெய்யும் என வானத்தை வெறித்து பார்த்த படி இருந்தனர்.

    தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை கொட்டத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதனால் முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி வராக நதி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. பெரியகுளம், தேனி, கம்பம், கூடலூர், தேவாரம், போடி, ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது.

    நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 7 மணி முதல் சாரல் மழை பெய்தது. செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 2 மாதமாக வறட்சி அதிகரித்ததால் பூ சாகுபடி குறைந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மழை காரணமாக செம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் வருவதும், தடைபடுவதும் என தொடர்ந்து இருந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

    இதே போல் மாவட்டத்தில் பழனி, கொடைக்கானல், நத்தம், வத்தலக்குண்டு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுட்டெரித்த கொடைக்கானலில் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கள்ளழகர் வைகை ஆற்றியில் இறங்கிய முதல் நாளே மழை பெய்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கியதால் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெயர் வைக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தைக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலினை பெயர் வைக்கும்படி கூறிய பெண்ணால், பிரசார கூட்டத்தில் சிரிப்பலை உண்டானது. #LokSabhaElections2019 #UdhayanidhiStalin
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் பிரசார வாகனத்தில் நின்றபடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் தனது 2 வயது பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கூறி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வாகனத்தின் மேல் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

    அந்த குழந்தையை வாங்கி பார்த்த உதயநிதி ஸ்டாலின் என்னம்மா இன்னுமா இந்த குழந்தைக்கு பெயர் வைக்கல? என கேட்டபடியே குழந்தையிடம் உனது பெயர் என்னம்மா? என்று கேட்டார். அப்போது அந்த குழந்தை தனது பெயர் ‘சோபிகா’ என கூறியது. குழந்தையின் மழலைக்குரல் உதயநிதி ஸ்டாலின் கையில் வைத்திருந்த ‘மைக்’ மூலம் ஒலிப்பெருக்கியில் எதிரொலித்தது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. உதயநிதி ஸ்டாலினும் சிரித்தபடியே குழந்தைக்கு இந்த பெயரே நன்றாக தான் உள்ளது என கூறி தாயிடம் குழந்தையை ஒப்படைத்தார். #LokSabhaElections2019 #UdhayanidhiStalin
    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.3.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Parliamentelection #LSPolls

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 516 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 74 ஆயிரத்து 717 பெண் வாக்காளர்களும் 152 இதரர் என மொத்தம் 15 லட்சத்து 18 ஆயிரத்து 385 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    இதே போல் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 508 ஆண்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 204 பெண்கள், இதரர் 4 என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 716 வாக்காளர்கள் உள்ளனர்.

    மாவட்டத்தில் இது வரையில் 13 ஆயிரத்து 620 மாற்று திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 26 பறக்கும்படைகள், 8 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என 34 குழுக்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இக்குழுக்கள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.3 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 20 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்பித்த பிறகு ரூ. 52 லட்சத்து 81 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.50 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு குழுக்களால் பணமோ, பொருளோ கைப்பற்றப்பட்டதில் ஆட்சேபணை இருந்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

    வாக்காளர்களின் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் மீறல் தொடர்பான புகார்களை ஆதாரங்களுடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கலாம். இதில் புகார் அளிப்பவர் தனது பெயர் விபரங்களை விரும்பினால் அளிக்கலாம். இல்லையென்றாலும் புகார் பதிவு செய்து கொள்ள இந்த செயலியில் வசதி உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு 1,829 வாக்குச்சாவடிகளும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 265 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் மாற்று திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Parliamentelection #LSPolls

    திண்டுக்கல் அருகே புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் மர்மமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் லோகேஸ்வரன் (வயது 32). இவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள தம்பிதோட்டம் காந்தி கிராம குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பிறகு மறு வீடு சம்பிரதாயத்துக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரன் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். இன்று காலை குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    திண்டுக்கல் அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 60). இவர் திண்டுக்கல் கிழக்கு ரத வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியில் இருந்த அவர் இன்று காலையில் கேட் அருகே சுயநினைவின்றி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூர் லெட்சுமண புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 34). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீர் பாட்டிலால் மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சித்ரா வேறு ஒருவருடன் ஓடி விட்டார்.

    சிறையில் இருந்த செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் நகர் வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். இன்று காலை லெட்சுமணபுரம் அருகே தனது தாய் வீட்டு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் எவ்வாறு இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே தனியார் மில்லில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    ஒடிசா மாநிலம் பாலிமோரி மாவட்டம் செம்பூரைச் சேர்ந்தவர் அனிஸ்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சோனி (வயது 19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் திண்டுக்கல் அருகே மினுக்கம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

    மில் நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். இன்று காலை சோனி தனது அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் இளம்பெண் எவ்வாறு இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 95 சதவீத பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். #JactoGeo
    திண்டுக்கல்:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வந்தனர்.

    அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் பிப்ரவரி 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பங்கேற்கவில்லை.

    திண்டுக்கல்லில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 160 பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களை கைது செய்து போலீசார் தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    நேற்று 80 சதவீத பள்ளிகள் இயங்கிய நிலையில் இன்றும் வழக்கமாக பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 3,497 ஆசிரியர்களில் 2894 பேர் பணிக்கு வந்தனர். 553 ஆசிரியர்கள் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1486 ஆசிரியர்கள் முழுமையாக பணிக்கு திரும்பினர்.

    அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 3567 பேரில் 2847 பேர் பணிக்கு வந்தனர். 484 ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1614 ஆசிரியர்களில் 5 பேர் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதே போல் தேனி மாவட்டத்தில் 6092 ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். ஒரு வாரத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று வகுப்புகளில் பங்கேற்றனர்.  #JactoGeo
    ×