திண்டுக்கல் அருகே கோர்ட்டு அனுமதித்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற ஒரு தரப்பினர் எதிர்ப்பு- 144 தடை உத்தரவு

அந்த பகுதியை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு தயார்படுத்தும் பணியில் சிலர் வந்தனர். அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே கோர்ட்டு அனுமதித்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற ஒரு தரப்பினர் எதிர்ப்பு- 144 தடை உத்தரவு
Published on

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந்த பல வருடங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

இதனால் இப்பகுதியில் திருவிழாக்கள் நடத்த 10 வருடங்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திருவிழாக்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்தவர்கள் இங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு மண்டு கோவில் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் அனுமதி கேட்டு இருந்தனர். அதன்படி இன்று கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு தயார்படுத்தும் பணியில் சிலர் வந்தனர். அப்போது மற்றொரு தரப்பினர் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது. பொதுவான இந்த இடத்தில் வழிபாடு நடத்தினால் பின்னர் இந்த இடம் அவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விடும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் வரவே ஏ.டி.எஸ்.பி. தெய்வம், ரூரல் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. மேலும் ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனால் கோர்ட்டு அனுமதித்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என்றும், யாரும் இப்பகுதியில் அமைதியை குலைக்கும் வகையில் பிரச்சனை செய்யக்கூடாது என தெரிவித்து 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்படுவதாக தாசில்தார் முத்துமுருகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

2 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அது வரை அமைதி காக்க வேண்டும் எனவும் தாசில்தார் முத்துமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com