என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பல்லவன் இல்லம் பணிமனையில் மின்சார பஸ்களுக்கான ‘சார்ஜர் யூனிட்’ அமைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
சென்னையில் மேலும் 245 மின்சார பஸ்கள் இந்த மாத இறுதிக்குள் இயக்க தயார்
- மின்சார பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
- தினமும் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.
சென்னை:
சென்னையில் மின்சார பஸ் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. முதன் முதலாக வியாசர்பாடி பணிமனையில் இருந்து பாஸ்கள் இயக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பணிமனையில் இருந்து மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 625 மின்சார பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இதுவரையில் 380 மின்சார பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 225 ஏ.சி. பஸ்கள் விடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக பல்லவன் இல்லம் பணிமனையில் இருந்து 145 மின்சார பஸ்கள் இயக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை பணிமனையில் இருந்து 100 மின் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மின்சார பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தினமும் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.
இதுவரையில் 225 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 குளு குளு சொகுசு பஸ்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3000 ஏசி வசதி அல்லாத பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக 1000 மின்சார ஏ.சி. பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் படிப்படியாக ஏ.சி. சொகுசு பஸ்கள் விடப்பட்டு உள்ளது.
டபுள் டக்கர் 20 ஏ.சி. பஸ் விடுவதற்கான டெண்டர் இறுதி செய்யப்படுகிறது. ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் இந்த பஸ்கள் பயன்பாட்டுக்கு வரும்.
முதல் கட்ட மின்சார பஸ் வசதி இந்த மாத இறுதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பின்னர் 2-வது கட்டமாக 600 மின்சார பஸ்கள் கொண்டு வரப்படும். பொதுமக்கள் தங்கள் பயணத்தை மாற்றி வருகிறார்கள். நெரிசலில் பயணம் செய்வதை தவிர்த்து, வசதியாக அமர்ந்து செல்லவே விரும்புகிறார்கள். அதனால் ஏ.சி. மின்சார பஸ்களில் இனி வரும் காலங்களில் அதிக பயன்பாடு உள்ளதாக இருக்கும் என்றார்.






