என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Stailn"

    • கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • இந்த விவகாரம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
    • மாநில அரசின் பங்களிப்பு ரூ.1.80 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 புதிய தொழிற் பேட்டைகளை திறந்து வைத்தார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், காவேரி ராஜபுரம் கிராமத்தில் 29.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் 74 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு, தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 400 நபர்கள் நேரடியாகவும், 800 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

    தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் 33.36 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 91 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளது, இத்தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 24.37 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.58 கோடி மதிப்பீட்டில் 34 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

    தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கடம்பாடி கிராமத்தில் சிற்ப கலைஞர்களுக்காக 21.07 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.39 கோடி மதிப்பீட்டில் 111 தொழில்மனைகளுடன் புதிய சிற்பக்கலை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இச்சிற்பக்கலை பூங்காவில் முதற்கட்டமாக 11.73 ஏக்கரில் ரூ.4.44 கோடி மதிப்பீட்டில் 66 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு சிற்பக்கலை சார்ந்த தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இச்சிற்பக்கலை பூங்கா உருவாக்கத்தின் மூலம் சுமார் 600 நபர்கள் நேரடியாகவும், 1200 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

    தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொருக்கை கிராமத்தில் 15.44 ஏக்கர் பரப்பளவில் ரூ. 3.57 கோடி மதிப்பீட்டில் 58 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது, முதற்கட்டமாக 12.52 ஏக்கரில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் 47 தொழில் மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 300 நபர்கள் நேரடியாகவும், 600 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

    கடலூர் மாவட்டம், கடலூர் நகர்புறத்தில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் மருதாடு கிராமத்தில் 11.57 ஏக்கரில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் தனியார் தொழிற்பேட்டை அமைப்பதில் தற்போது ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் 105 தொழிற் மனைகளை உள்ளடக்கிய புதிய தனியார் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சுமார் 600 நபர்கள் நேரடியாகவும், 1200 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

    கிட்டாம்பாளையம் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் 316.04 ஏக்கரில் ரூ.24.61 கோடி மதிப்பில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை சார்ந்த மின்முலாம் பூசும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.2.60 கோடி மதிப்பில் 200 கே.எல்.டி. திறன்கொண்ட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1.80 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியினை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கருமாபுரம் கிராமத்தில் ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் அதன் மதிப்புக் கூட்டலுக்குத் தேவையான நவீன எந்திரங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் உள்ளடக்கிய உணவுப்பதப்படுத்துதல் குழுமத்திற்கான பொது வசதி மையம் நிறுவப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.6.56 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.1.64 கோடி ஆகும். ஆக மொத்தம் ரூ.67.34 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட 8 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் 17.95 ஏக்கரில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) மூலம் சுமார் ரூ.15.23 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் 47 தொழில்மனைகள் மேம்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவேர்கள் பயன் பெறுவதோடு சுமார் 300 நபர்கள் நேரடியாகவும், 600 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

    சிட்கோ நிறுவனத்தின் மூலம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் 1.36 ஏக்கரில் ரூ.29.27 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் சுமார் 688 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 100 அறைகளுடன் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது.

    தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் பராமரிக்கபட்டு வரும் 135 தொழிற்பேட்டைகளில், 18 தொழிற்பேட்டைகளின் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் தெரு விளக்கு போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.34.07 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது. ஆக மொத்தம் ரூ.78.57 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிட்கோ நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 10 மாதம் உள்ள நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக் ஆகியவை முன்கூட்டியே தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 17-7-2025 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அதில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார்.

    • தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது.
    • தற்போது முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்குவதில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்காத ஒரு போலி விவசாயிதான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு பயிர்க் காப்பீடாக சுமார் ரூ.12 ஆயிரம் கோடியை அ.தி.மு.க. அரசு வழங்கி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது.

    எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வழங்க சொன்னார்கள். ஆனால், முதலமைச்சர் ஆனவுடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 மட்டுமே வழங்கினார்.

    2021-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து, இன்றுவரை அதனை செயல்படுத்தவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்கள். ஆனால், தற்போது முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்குவதுமில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.

    தலைவாசலில் கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி என்பதை பெருமையாகக் கூறுவேன். இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன்.

    விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா?' நீங்கள்தான் போலி விவசாயி.

    அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும் தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

    • கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
    • ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    பொதுக்குழுவில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார். ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைதொடர்ந்து, மதுரை மெஜியரா கோட்ஸ் ஆலை முன்பு, மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

    • மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு இந்தத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாநிலங்களவை உறுப்பினர்களான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது.

    இதற்கிடையே, புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    2025, ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

    தி.மு.க. வேட்பாளர்களாக பி.வில்சன் பி.எஸ்சி, பி.எல்., எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.

    • இஸ்ரோ விஞ்ஞானிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
    • தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளைச் சந்தித்தார்.

    இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணனுடன் ஒரு முக்கிய சந்திப்பை மேற்கொண்டேன்.

    தமிழ்நாடு அரசுப் பள்ளியிலிருந்து சென்று இந்திய விண்வெளி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு வந்துள்ள வி.நாராயணனின் பயணமானது நிறையவே பேசக்கூடியது

    பொதுக் கல்வியால் எட்டக்கூடிய உயரங்களை அவர் உள்ளடக்கி உள்ளார். தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என பதிவிட்டுள்ளார்.

    • மாநில உரிமைகளைப் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா?
    • இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திற்கு பாடனா சென்ற போது மாநில உரிமைகள் பற்றி ஏதாவது பேசினாரா?

    அதிமுக யாருடன் கூட்டணி செல்ல வேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் னெ திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ? என அதிமுக தலைமை கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    அஇஅதிமுக யாருடன் கூட்டணி செல்லவேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பதில் திமுக தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலினுக்கு என்ன இவ்வளவு அக்கறை? ஆடு நனைகிறதே என இந்த ஓநாய் அழுவது ஏன்?

    முதலில், மாநில உரிமைகளைப் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா?

    இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திற்கு பாடனா சென்ற போது மாநில உரிமைகள் பற்றி ஏதாவது பேசினாரா?

    அல்லது, இரண்டாவது கூட்டத்திற்காக பெங்களுரு சென்றாரே- அப்போது காவிரி நீர் வராமல் இரண்டாம் போகம் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதியுற்றதை கருத்திற்கொண்டு, தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமை குறித்து பேசிவிட்டு வந்தாரா?

    அவ்வளவு ஏன், தென் தமிழ்நாடே வெள்ளத்தில் தத்தளித்த போது, தனக்கு வாக்களித்த மக்களைக் காக்க வக்கில்லாமல், இந்தியாவைக் காக்கப் போகிறேன் என்று டெல்லியில் நடைப்பெற்ற இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு சென்றாரே- அப்போதாவது தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் பற்றி எதாவது பேசினாரா? கண்டுகொண்டாரா?

    இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு தான் இருக்கிறது. "காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை வழங்கினால் மட்டும் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி" என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா மு.க.ஸ்டாலின் ?

    நீட் தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்திவிட்டு, அதை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியது எந்தக் கூட்டணி? அந்தக் கூட்டணியில் தானே இன்று வரை இவர்கள் அங்கம் வகித்துக் கொண்டு இருக்கிறார்கள்? இதை விட ஸ்டாலினும் திமுகவும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு செய்யக் கூடிய மாபெரும் துரோகம் என்று ஏதாவது உள்ளதா?

    மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பற்றியோ, அதிமுக

    பற்றியோ பேச என்ன அருகதை இருக்கிறது இவருக்கு?

    "ரகசியம் இருக்கிறது" என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்றுத் தெரியாதவர் அரங்கேற்றும் இந்த "ஊட்டி நாடகத்தை" மக்கள் யாரும் நம்பப் போவது இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 'தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது' என்று இருக்கிறார் இ.பி.எஸ்.
    • நீட் விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம் என்று முதுகெலும்போடு அறிவிப்பாரா?

    நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,

    'தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது' என்று கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், "#NEET விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம்" என முதுகெலும்போடு அறிவிப்பாரா? என்று கேட்டிருக்கிறேன்.

    விரைவில் விடை கிடைக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், மு.க.ஸ்டாலின் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம் என தெரிவித்தார்.

    சமீபத்தில் நடந்த த.வெ.க. பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே என காட்டமாகத் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சத்யராஜ் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என கருதப்படுகிறது.

    • எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவிற்கு சவால் விடுகிறார் விஜய்
    • திமுகவுடன் விஜய் மோதவில்லை, இபிஎஸ் உடன் விஜய் மோதுகிறார்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான். இதில் வேடிக்கை என்ன என்றால், அடுத்து நாங்கள் தான் ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தார் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

    இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக அவர் ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.

    எனவே, இப்போது இரண்டாவது இடத்திற்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நாம்தான் எப்போதும் முதல் இடத்திற்கு வரப்போகிறோம். நாம்தான் ஆளுங்கட்சி. நான் ஏதோ, மமதையில் அகங்காரத்தில் சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். மக்களிடத்தில் இருக்கும் ஆதரவு மக்கள் நம்மை வரவேற்கும் காட்சியை வைத்து நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.

    திமுக Vs தவெக என விஜய் பேசியதை மறைமுகமாக சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.

    இந்நிலையில், நடிகர் விஜயின் பேச்சை சுட்டிக்காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

    விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-

    * தேர்தலிலேயே நிற்காத ஒருவரை தலையில் தூக்கி வைத்து வருகிறார்கள். அவர் தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்.

    * எதோ ஒரு தனியார் சர்வேயில் அவர் 2ம் இடம் பிடித்துவிட்டாராம். அடுத்து அவர் தான் ஆட்சியை பிடிக்க போகிறாராம். பாவம் அவரை உசுப்பி விடுகிறார்கள்.

    * அவர் சொல்கிறார், 2026 தேர்தலில் 2 பேருக்கு மட்டும் தான் போட்டி. ஒருபக்கம் DMK இன்னொரு பக்கம் TVK.

    * அதிமுகவை விட தவெக பெரிய சக்தி என சவால் விடுகிறார் விஜய். எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவிற்கு சவால் விடுகிறார் விஜய்

    * 2ம் இடம் யாருக்கு என்பதில் தான் விஜய்க்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் போட்டி, 2ம் இடம் யார் என்பதில் தான் அண்ணாமலைக்கு விஜய்க்கும் போட்டி.

    * திமுகவுடன் விஜய் மோதவில்லை, இபிஎஸ் உடன் விஜய் மோதுகிறார்

    • வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதைத் திரும்பப் பெற வேண்டும்.
    • சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான்

    சென்னை பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் ரமலான் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் பெருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இஸ்லாமியர்களையும் திமுகவையும் யாரும் பிரிக்க முடியாது.

    வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதைத் திரும்பப் பெற வேண்டும்.

    வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற கூட சட்டப்பேரவைக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தீர்மனாத்திற்கு ஆதரவு கொடுக்க வராமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

    இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்துங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு கூறினேன். இருமொழிக் கொள்கை குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். மக்கள் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

    சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான்.

    இஃப்தார் விழாக்களை பலரும் நடத்துவார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை என்றால் வாயே திறக்கமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×