என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
- மாநில அரசின் பங்களிப்பு ரூ.1.80 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 புதிய தொழிற் பேட்டைகளை திறந்து வைத்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், காவேரி ராஜபுரம் கிராமத்தில் 29.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் 74 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு, தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 400 நபர்கள் நேரடியாகவும், 800 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் 33.36 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 91 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளது, இத்தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 24.37 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.58 கோடி மதிப்பீட்டில் 34 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கடம்பாடி கிராமத்தில் சிற்ப கலைஞர்களுக்காக 21.07 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.39 கோடி மதிப்பீட்டில் 111 தொழில்மனைகளுடன் புதிய சிற்பக்கலை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இச்சிற்பக்கலை பூங்காவில் முதற்கட்டமாக 11.73 ஏக்கரில் ரூ.4.44 கோடி மதிப்பீட்டில் 66 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு சிற்பக்கலை சார்ந்த தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இச்சிற்பக்கலை பூங்கா உருவாக்கத்தின் மூலம் சுமார் 600 நபர்கள் நேரடியாகவும், 1200 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொருக்கை கிராமத்தில் 15.44 ஏக்கர் பரப்பளவில் ரூ. 3.57 கோடி மதிப்பீட்டில் 58 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது, முதற்கட்டமாக 12.52 ஏக்கரில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் 47 தொழில் மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 300 நபர்கள் நேரடியாகவும், 600 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
கடலூர் மாவட்டம், கடலூர் நகர்புறத்தில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் மருதாடு கிராமத்தில் 11.57 ஏக்கரில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் தனியார் தொழிற்பேட்டை அமைப்பதில் தற்போது ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் 105 தொழிற் மனைகளை உள்ளடக்கிய புதிய தனியார் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சுமார் 600 நபர்கள் நேரடியாகவும், 1200 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
கிட்டாம்பாளையம் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் 316.04 ஏக்கரில் ரூ.24.61 கோடி மதிப்பில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை சார்ந்த மின்முலாம் பூசும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.2.60 கோடி மதிப்பில் 200 கே.எல்.டி. திறன்கொண்ட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1.80 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியினை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கருமாபுரம் கிராமத்தில் ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் அதன் மதிப்புக் கூட்டலுக்குத் தேவையான நவீன எந்திரங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் உள்ளடக்கிய உணவுப்பதப்படுத்துதல் குழுமத்திற்கான பொது வசதி மையம் நிறுவப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.6.56 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.1.64 கோடி ஆகும். ஆக மொத்தம் ரூ.67.34 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட 8 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் 17.95 ஏக்கரில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) மூலம் சுமார் ரூ.15.23 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் 47 தொழில்மனைகள் மேம்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவேர்கள் பயன் பெறுவதோடு சுமார் 300 நபர்கள் நேரடியாகவும், 600 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
சிட்கோ நிறுவனத்தின் மூலம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் 1.36 ஏக்கரில் ரூ.29.27 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் சுமார் 688 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 100 அறைகளுடன் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் பராமரிக்கபட்டு வரும் 135 தொழிற்பேட்டைகளில், 18 தொழிற்பேட்டைகளின் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் தெரு விளக்கு போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.34.07 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது. ஆக மொத்தம் ரூ.78.57 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிட்கோ நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.






