என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நான் போலி விவசாயி அல்ல: முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
    X

    நான் போலி விவசாயி அல்ல: முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

    • தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது.
    • தற்போது முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்குவதில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்காத ஒரு போலி விவசாயிதான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு பயிர்க் காப்பீடாக சுமார் ரூ.12 ஆயிரம் கோடியை அ.தி.மு.க. அரசு வழங்கி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது.

    எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வழங்க சொன்னார்கள். ஆனால், முதலமைச்சர் ஆனவுடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 மட்டுமே வழங்கினார்.

    2021-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து, இன்றுவரை அதனை செயல்படுத்தவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்கள். ஆனால், தற்போது முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்குவதுமில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.

    தலைவாசலில் கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி என்பதை பெருமையாகக் கூறுவேன். இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன்.

    விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா?' நீங்கள்தான் போலி விவசாயி.

    அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும் தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×