search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hamas militants"

    • வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது
    • பசியின் காரணமாக உணவு வாகனங்களை கும்பல்கள் தாக்கி களவாடுகின்றன

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படையினர் (Israeli Defence Forces) ஹமாஸ் (Hamas) அமைப்பினரை அழிக்க வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    மேலும், ஹமாஸ் அமைப்பினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை காசா பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகின்றனர்.

    இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வடக்கு காசாவில் இருந்து மக்களில் பலர் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.

    அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) எனும் சர்வதேச அமைப்பின் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு காசாவில் உணவுகளை வினியோகிக்க சென்ற இந்த அமைப்பினரின் வாகனங்களை பசி மற்றும் வறட்சி காரணமாக காசா மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர்.

    ஒரு சில இடங்களில் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரணமான சூழலால், உணவு வழங்குவதை உலக உணவு திட்ட அமைப்பினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.


    இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருப்பதாவது:

    வடக்கு காசா பகுதியில் வன்முறையும், கட்டுப்பாடற்ற சூழலும் நிலவுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை உருவாகி விட்டது.

    உணவுக்காக கும்பல் கும்பலாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு களவாடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.

    பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்கள் சிறிது சிறிதாக பசி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் தீவிர துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

    உணவு வினியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளோம்.

    விரைவில் வினியோகம் மீண்டும் தொடங்கப்படும்.

    இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் பாலஸ்தீனத்தில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • 132 பணய கைதிகள் ஹமாஸ் அமைப்பினர் வசம் இருப்பதாக இஸ்ரேல் கூறியது
    • தகுந்த தகவல்கள் வரும் போது குறிப்பிட்ட இடங்களை ஆராய்கிறது இஸ்ரேல் ராணுவம்

    பாலஸ்தீனத்தில், 100 நாட்களை கடந்து இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    வட காசாவில், இஸ்ரேலின் குண்டு வீச்சில் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் ஒரு இடுகாடு தகர்க்கப்பட்டது.

    அக்டோபர் 7 அன்று 253 பேரை பணய கைதிகளாக கொண்டு சென்ற ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து சிலர் மீட்கப்பட்டாலும், 132 பேர் அவர்கள் வசம் உள்ளதாகவும், அவர்களில் 105 பேர் உயிருடன் இருப்பதாகவும், 27 பேர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் கூறியிருந்தது.

    அவர்களை தேடி காசா முழுவதும் சல்லடை போட்டு தேடி வரும் இஸ்ரேலிய ராணுவ படை, கான் யூனிஸ் இடுகாட்டில் உள்ள கல்லறைகளில் உடல்களை தோண்டி, தேடப்படும் பணய கைதிகளின் உடல்கள் உள்ளதா என ஆராய்ந்து வருகிறது.

    சர்வதேச சட்டங்களின்படி, போர் சூழலில் குறி வைத்து இடுகாட்டை தாக்குவது போர் குற்றமாக கருதப்படும். ஆனால், விதிவிலக்காக ராணுவ காரணங்களுக்காக இது போன்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.


    இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தெரிவித்ததாவது:

    பணய கைதிகளில், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இருந்தால் அவற்றை கண்டு பிடித்து, அடையாளம் கண்டு, உறவினர்களிடம் ஒப்படைப்பது போரின் நோக்கங்களில் ஒன்று.

    உடல்கள் இருக்கலாம் என எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வரும் போது குறிப்பிட்ட இடங்களை நாங்கள் ஆராய்கிறோம்.

    இடுகாட்டில் இருந்து அடையாளம் காண எடுக்கப்படும் உடல்கள், பாதுகாப்பான வேறொரு இடத்தில் தொழில்நுட்ப உதவியுடனும், இறந்தவர்களின் உடல்களுக்கு தரப்பட வேண்டிய மரியாதையுடனும் அடையாளம் காணப்படுகின்றன.

    பணய கைதிகள் அல்லாதவர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் மறுஅடக்கம் செய்யப்படுகின்றன.

    ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பிறந்த குழந்தைகளை மிருகத்தனமாக கொன்று, பலரை ஹமாஸ் பணய கைதிகளாக கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் இவ்வாறு கல்லறைகளில் தேடுதல் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

    இவ்வாறு இஸ்ரேல் கூறியது.

    • உலக பொருளாதார மன்ற கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது
    • பிராந்திய அமைதி இஸ்ரேலின் அமைதியையும் உள்ளடக்கியது என்றார் ஃபர்ஹான்

    ஆண்டுதோறும், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டம் நடைபெறும்.

    இவ்வருட கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளில் இருந்து தொழில் மற்றும் வர்த்தக துறையை சேர்ந்த அரசாங்க மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் பங்கு பெறுகின்றனர்.

    இதில் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் (Prince Faisal bin Farhan) பங்கேற்றார்.

    அவரிடம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கேட்கப்பட்டது.

    அப்போது பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:

    பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து தருவதில் இஸ்ரேலுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்று கொள்ள சவுதி அரேபியாவிற்கு எந்த தயக்கமும் இல்லை.

    பிராந்திய அமைதி என்பது இஸ்ரேலுக்கான அமைதியையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு கிடைத்து அவர்கள் அமைதியாக வாழும் சூழல் ஏற்பட்டால்தான் அது சாத்தியமாகும்.

    அப்போது இஸ்ரேலை தனி நாடாக ஏற்க சவுதி அரேபியா சம்மதிக்கும்.

    தற்போது இஸ்ரேல், பிராந்திய அமைதியையும், பாதுகாப்பையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

    அப்பகுதியில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் வளமான எதிர்காலம் உருவாக அமைதிதான் ஒரே வழி. போர் நிறுத்தமே அமைதிக்கான முதல் படி.

    அதற்கு நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முயற்சிக்கிறோம்.

    இவ்வாறு ஃபைசல் கூறினார்.

    பெரும்பாலும் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் நிறைந்த சவுதி அரேபியா, அரபு நாடுகளிடையே வலிமை வாய்ந்த நாடாக கருதப்படுகிறது.

    கடந்த வருடம், பிராந்திய அமைதி ஏற்படும் வகையில் இஸ்ரேலுடன், சவுதி அரேபியா ஒரு ஒப்பந்தம் செய்ய இருந்தது.

    ஆனால், அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து அமைதிக்கான சூழல் மாறி விட்டது.

    • காசா பகுதி தாக்குதலில் சுமார் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
    • போர் தொடங்கி 100 நாட்கள் கடந்தும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் தொடுத்துள்ள போர், 100 நாட்களை கடந்தும் தீவிரமடந்து வருகிறது.

    பாலஸ்தீன காசா பகுதியில் தற்போது வரை 24,285 பேர் உயிரிழந்ததாகவும், 61,154 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார துறை அறிவித்துள்ளது.

    தற்போதைய பாலஸ்தீன நிலவரம் குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கூறியிருப்பதாவது:

    காசா பகுதியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் பசியுடன் உள்ளனர். அங்குள்ள மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் மேல் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் திண்டாடி வருகின்றனர். உணவுக்கும், நீருக்கும் அங்கே கடும் பஞ்சம் நிலவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 3,35,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் தவிக்கின்றனர். ஒரு தலைமுறையை சேர்ந்தவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாக உருவாக போகின்றனர். காசாவில் எந்த இடமும் பாதுகப்பானதாக இல்லை எனும் நிலை அங்கு தோன்றி விட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக பிடித்து சென்ற பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ள அமெரிக்கா, ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் கத்தார் நாட்டுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • 100 நாட்களை எட்டிய போர், நிற்பதற்கான அறிகுறி இல்லை
    • பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும் என்றார் பர்கட்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ படை தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    போர், 100-வது நாளை எட்டியும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தவில்லை. போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் முன்வைத்த ஆலோசனைகளை இஸ்ரேல் புறக்கணித்தது.

    இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சார்ந்துள்ள லிகுட் கட்சியை (Likud party) சேர்ந்த அந்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்கட் (Nir Barkat) போர் நிலவரம் குறித்து பேட்டி அளித்தார்.

    அப்போது பர்கட் கூறியதாவது:

    இஸ்ரேலியர்களாகவும், யூதர்களாகவும் இருந்ததற்காக அப்பாவிகளை அக்டோபர் 7 அன்று ஹமாஸ் கொன்று குவித்தது.

    எங்கள் நாட்டில் அனைவரின் குறிக்கோளும் போரை வென்று, பணய கைதிகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்கள் போர் அந்த அமைப்பினர் முழுவதும் சரணடையாமல் நிற்காது.

    எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் சரணடைய வேண்டும். எங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இதற்கெல்லாம் உடன்பட்டு ஹமாஸ் அமைப்பினர்தான் வெள்ளை கொடி காட்ட வேண்டும். இல்லையென்றால் போர் தொடரும். இதை தவிர வேறு எந்த மாற்று வழியும் கிடையாது.

    எங்கள் நாட்டு மக்களை கொல்லவோ, இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்கவோ நினைக்காத ஒரு அமைப்பின் கீழ் புதிய பாலஸ்தீனம் நிறுவப்பட வேண்டும்.

    இவ்வாறு பர்கட் கூறினார்.

    "வெற்றி பெறும் வரை போர் தொடரும்" என சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் போரினால் காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேல் உயிர் இழந்துள்ளனர்
    • சமநிலை இல்லாத போர்க்களத்தில் ஏமனை தாக்குகிறார்கள் என்றார் எர்டோகன்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

    எதிர்பாராத இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுத்து, அன்றிலிருந்தே அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் ஒரு போரை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

    சுமார் 23 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி 100-வது நாளை நெருங்கும் இப்போரில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆதரவு தருகின்றன.

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், ஏமன், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.

    கடந்த 2023 அக்டோபர் 19 அன்று, ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்தும், இஸ்ரேலை எதிர்த்தும், ஏமன் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் செங்கடல் (Red Sea) பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை வான்வழியாகவும், கடல் வழியாகவும் தாக்க தொடங்கினர்.

    அப்பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் போர்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளன.

    இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஏமன் நாட்டின் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வான்வழி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக கருதாத துருக்கி, ஏமன் தாக்குதலுக்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) இது குறித்து கூறியதாவது:

    ஏமனுக்கும் அமெரிக்க-இங்கிலாந்து படைகளுக்கும் இருப்பது ஒரு சமநிலை இல்லாத போர்க்களம். அளவுக்கு அதிகமாக ஏமன் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தாக்குதல் நடத்துகின்றன. செங்கடல் பகுதியை "ரத்த கடல்" (sea of blood) போல் மாற்றி விட முயல்கின்றன. ஆனால், தங்களை காத்து கொண்டு, தங்கள் முழு சக்தியையும் திரட்டி, இதற்கு ஹவுதி அமைப்பினர் தக்க பதிலடி அளிப்பார்கள்.

    இவ்வாறு எர்டோகன் தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல் ஹமாஸ் போர், 95 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது
    • தொடரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்பு அச்சுறுத்துவதாக உள்ளது

    கடந்த 2023 அக்டோபர் 7 தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை 23,210 பேர் உயிரிழந்துள்ளனர்.

    95 நாட்களுக்கும் மேலாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பேச அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை (UNGA) கூட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி ருசிரா கம்போஜ் (Ruchira Kamboj), பாலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை குறித்து பேசினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    காசாவிற்கு இதுவரை இந்தியா 70 டன் அளவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கி உள்ளது. அதில் 16.5 டன் மருந்துகளும் இடம்பெற்றன. அத்துடன் $5 மில்லியன் நிதியுதவி வழங்கினோம்.

    அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதல்தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் தூண்டுதல் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். பயங்கரவாத தாக்குதல்களை ஒரு போதும் இந்தியா ஆதரிக்காது.

    ஆனால், காசாவில் தொடர்ந்து நடைபெறும் பெருமளவு உயிரிழப்புகள் சற்றும் ஏற்று கொள்ள முடியாதது. அதிலும் குறிப்பாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்புகள் அச்சுறுத்துவதாக உள்ளது.

    இப்பிரச்சனையின் தொடக்கம் முதலே இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.

    மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைத்திட, சச்சரவு தீவிரமடைவதை நிறுத்தியாக வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலுக்கு ஒரு அமைதியான தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு ருசிரா கூறினார்.


    • இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏமன், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கிறது
    • அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதலை முறியடித்தது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.

    செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் "ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்" (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.

    இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

    ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

    மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

    "டெஸ்ட்ராயர்" (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

    • ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் போரை தொடர்கிறது
    • 58,416 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை தெரிவித்துள்ளது

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, 2000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், தெற்கு இஸ்ரேலில் அதிரடியாக தரை, கடல் மற்றும் வான் வழியாக நுழைந்து, தாக்குதல் நடத்தி, 1500க்கும் மேற்பட்டவர்களை மிருகத்தனமாக கொன்று, மேலும் சுமார் 250 பேர்களை கடத்தி சென்றனர்.

    உலகையே அதிர வைத்த இச்சம்பவத்தால் பெரும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து, போர் தொடுத்தது.

    இஸ்ரேலிய ராணுவ படை (IDF) அன்றிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் பெரும்பான்மையாக உள்ள பாலஸ்தீன காசா பகுதியில் தொடர் தாக்குதலை நடத்த தொடங்கியது.

    சில பணய கைதிகளை ஹமாஸ் வசத்திடம் இருந்து இஸ்ரேல் மீட்டாலும், இன்னும் பலர் அவர்களிடம் சிக்கி உள்ளதாக இஸ்ரேல் கூறி தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.

    போர்நிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் விதித்த கோரிக்கையை புறக்கணித்து, மிக தீவிரமாக இஸ்ரேலிய படையினரால் நடத்தப்படும் இப்போர், 95 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.

    இப்போரில் ஏராளமான காசா மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாலஸ்தீன ரமல்லா (Ramallah) பகுதியில் அந்நாட்டு சுகாதார துறை, போர் நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா மக்கள்தொகையில் 100 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 58,416 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

    2.27 மில்லியன் மக்கள் வசித்து வந்த பாலஸ்தீன காசாவில், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 22,835 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

    கடந்த மாதம் இஸ்ரேலிய ராணுவ படை, போரினால் உயிரிழந்தவர்களில் 8000 பேர் ஹமாஸ் அமைப்பினர் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும், பலர் ஹமாஸ் வசம் உள்ளனர்
    • பெய்ரூட்டில் ஹமாஸின் முக்கிய தலைவர் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்

    கடந்த 2022 அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200க்கு மேற்பட்டவர்களை கொன்று, சுமார் 240 பேர்களை பணயக்கைதிகளாக கொண்டு சென்றது.

    இதற்கு பதிலடியாக, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்த இஸ்ரேல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள் நிறைந்திருக்கும் பகுதியான பாலஸ்தீன காசா மீது போர் தொடுத்தது.

    85 நாட்களை கடந்து நடைபெறும் இப்போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட பல நாடுகள் முயற்சித்தாலும், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதில் தீவிரமாக உள்ளது.

    பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டாலும் பலர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர்.

    கடந்த செவ்வாய் அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவரான சலே அல் அரவ்ரி (Saleh al-Arouri) மற்றும் பல தலைவர்கள் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டது என நம்பப்படுகிறது.

    இதனால், கத்தார் மற்றும் எகிப்து மூலம் இஸ்ரேலுடன் முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஹமாஸ் விலகி விட்டது.

    இப்பின்னணியில், கத்தார் பிரதமர் மொஹமத் பின் அப்துல்ரஹ்மான் அல் தனி (Mohammed bin Abdulrahman Al Thani), நேற்று தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணய கைதிகளின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அவர்களிடம், "பணய கைதிகளின் குடும்பத்தினரின் துன்பத்தை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பெய்ரூட் நகர தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது கடினமாக உள்ளது" என அல் தனி தெரிவித்தார்.

    • ஆதிக்க மனப்பான்மை உடைய இஸ்ரேல் தகுந்த தண்டனை பெறும் என ஈரான் எச்சரித்துள்ளது
    • 1980களின் தொடக்கத்திலிருந்தே ஈரான்-சிரியா உறவிற்கு முசாவி பாடுபட்டவர்

    கடந்த அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 80 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு உதவும் நாடுகளையும், அவர்களுக்கு உதவும் அமைப்புகளையும் எதிரியாக கருதும் இஸ்ரேலிய ராணுவ படை (IDF) சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு வெளியேயும் தாக்குதலை நடத்தியது.

    இது குறித்து தொலைக்காட்சியில் அறிவித்த ஈரான் அரசு, "டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் ஜெய்னபியா (Zeinabiyah) மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானிய புரட்சி படை பிரிவை (Iran's Revolutionary Guard Corps) சேர்ந்த மூத்த ஆலோசகர் சையத் ராசி முசாவி (Sayyed Razi Mousavi) கொல்லப்பட்டார். ஆதிக்க மனப்பான்மை உடைய இஸ்ரேல் நடத்திய இந்த குற்ற செயலுக்கு அந்நாடு தகுந்த தண்டனையை பெறும்" என எச்சரித்துள்ளது.

    முசாவி, ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையே ராணுவ உறவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர். இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நட்பு நாடுகளை ஒன்றுபடுத்தும் "ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டன்ஸ்" (Axis of Resistance) அமைப்பில் பலரை ஒன்றுபடுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்.

    1980களின் தொடக்கத்திலிருந்து ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையே புரட்சி படையின் நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் நீண்ட அனுபவம் உடையவர் முசாவி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இஸ்ரேலின் டமாஸ்கஸ் தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியாக முசாவி கொல்லப்பட்டதன் விளைவாக இஸ்ரேல்-ஹமாஸ் போர், மேலும் சில நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பல உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.

    • பெத்லகேம் நகரில் "சர்ச் ஆஃப் தி நேடிவிட்டி" ஏசுநாதர் பிறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது
    • சுற்றுலா பயணிகள் ஓட்டல் முன்பதிவுகளை ரத்து செய்து விட்டனர்

    இன்று ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25 என்பதால் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    ஆனால், இவ்வருடம் ஏசுநாதர் அவதரித்த தலமாக கருதப்படும் பெத்லகேம் (Bethlehem) நகரில் கொண்டாட்டங்கள் இல்லை.

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலின் வடக்கு பகுதி மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதியெடுத்து அந்த அமைப்பினரின் மையமான காசா முனை (Gaza Strip) பகுதியில் பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 20,424 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.

    இந்த போரின் தாக்கம் பாலஸ்தீன கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் பிரதிபலிக்கிறது.

    ஜெருசேலமிற்கு தெற்கே உள்ள நகரம் பெத்லகேம். ஆண்டுதோறும் பெத்லகேம் நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் ஓட்டல்களிலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது. தெருக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


    பெத்லகேம் நகரில் வசிப்பவர்களின் வருவாய் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ளதால் அம்மக்கள் தற்போது பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஏசுநாதர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள "சர்ச் ஆஃப் தி நேடிவிட்டி" (Church of the Nativity), வழக்கமாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும்.


    ஆனால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு குறைந்த அளவே மக்கள் வந்துள்ளனர்.

    போர் தொடங்கியதிலிருந்தே பெத்லகேம் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவுகள் சுற்றுலா பயணிகளால் ரத்து செய்யப்பட்டன. அனைத்து விடுதிகளிலும் அறைகள் காலியாக உள்ளன. கிறிஸ்துமஸ் மரங்கள், சிலுவைகள், மேரி சிலைகள் உட்பட பல பொருட்கள், வாங்குவதற்கு ஆட்களின்றி கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.

    "அமைதிக்கான தூதர்" பிறந்த ஊரில் வாழும் மக்களுக்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரைவில் முடிந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே பிரார்த்தனையாக உள்ளது.

    ×