100ல் ஒருவர் - இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு விகிதம்

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் போரை தொடர்கிறது58,416 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை தெரிவித்துள்ளது
100ல் ஒருவர் - இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு விகிதம்
Published on

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, 2000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், தெற்கு இஸ்ரேலில் அதிரடியாக தரை, கடல் மற்றும் வான் வழியாக நுழைந்து, தாக்குதல் நடத்தி, 1500க்கும் மேற்பட்டவர்களை மிருகத்தனமாக கொன்று, மேலும் சுமார் 250 பேர்களை கடத்தி சென்றனர்.

உலகையே அதிர வைத்த இச்சம்பவத்தால் பெரும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து, போர் தொடுத்தது.

இஸ்ரேலிய ராணுவ படை (IDF) அன்றிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் பெரும்பான்மையாக உள்ள பாலஸ்தீன காசா பகுதியில் தொடர் தாக்குதலை நடத்த தொடங்கியது.

சில பணய கைதிகளை ஹமாஸ் வசத்திடம் இருந்து இஸ்ரேல் மீட்டாலும், இன்னும் பலர் அவர்களிடம் சிக்கி உள்ளதாக இஸ்ரேல் கூறி தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.

போர்நிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் விதித்த கோரிக்கையை புறக்கணித்து, மிக தீவிரமாக இஸ்ரேலிய படையினரால் நடத்தப்படும் இப்போர், 95 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.

இப்போரில் ஏராளமான காசா மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாலஸ்தீன ரமல்லா (Ramallah) பகுதியில் அந்நாட்டு சுகாதார துறை, போர் நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா மக்கள்தொகையில் 100 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 58,416 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

2.27 மில்லியன் மக்கள் வசித்து வந்த பாலஸ்தீன காசாவில், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 22,835 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

கடந்த மாதம் இஸ்ரேலிய ராணுவ படை, போரினால் உயிரிழந்தவர்களில் 8000 பேர் ஹமாஸ் அமைப்பினர் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com