என் மலர்
இந்தியா

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்திய அமெரிக்கா - மத்திய அரசு மறுப்பு
ஈரானை தாக்க அமெரிக்கா தனது துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் செய்தியை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சேனலான "ஒன் அமெரிக்கா நியூஸ்" நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியின் போது, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இந்திய கடற்படை தளங்களைப் பயன்படுத்துவதாக முன்னாள் அமெரிக்க இராணுவ கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் கூறியதை அடுத்து வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
"எங்கள் தளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எங்கள் துறைமுக நிறுவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் இந்திய துறைமுகங்களை சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது, இது சிறந்ததல்ல; கடற்படை சொல்வது இதுதான்," என்று அவர் நேர்காணலில் கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உண்மை சரிபார்ப்பு குழு, ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்கில் கூறப்படும் தகவல்கள் "போலியானவை மற்றும் தவறானவை. இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்" என்று X தளத்தில் கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் மோதல் குறித்து இந்தியா "கவலை" தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டு தாக்குதல்களை நடத்தி 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகளை ஏவி வருகிறது.






