என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன்.
    • எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக மொண்டிபாளையம் செல்லும் அரசு நகர பேருந்தில் (எண்.9 ஜே) கண்டக்டராக கடந்த 2 வாரங்களாக கோகிலா (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    திருப்பூரில் இயக்கப்படும் பேருந்துகளில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், பெண் ஒருவர் ஆர்வமுடன் பணியாற்றி வருவது பயணிகள் இடையே பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பெண் பயணிகள் பலர் கோகிலாவுக்கு, பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பெண் கண்டக்டர் கோகிலா கூறுகையில், நான் எம்.ஏ.,படித்துள்ளேன். எனது தந்தை ராமலிங்கம். நம்பியூர் கிளையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரது இறப்பால் தற்போது எனக்கு வாரிசு வேலை கிடைத்துள்ளது.

    இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது. ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். இதுவரை பேருந்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. மகிழ்ச்சியோடு பணியாற்றி வருகிறேன். எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம் என்றார்.

    • கம்யூனிஸ்ட் கட்சி இன்றுவரை உயிர்ப்போடு இருப்பதற்கு நல்லகண்ணு போன்றோரின் தியாகமே காரணம்.
    • இறந்தவர்களை மீட்டுருவாக்கும் தொழில்நுட்பம் கண்டறிந்தால் நல்லகண்ணுவின் மீட்பையே நாடு கேட்கும்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

    நல்லக்கண்ணு மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தோழர் நல்லகண்ணு

    மறைந்துவிட்டார்

    சிவப்புக் கட்சியின்

    கறுப்பு காந்தி இறந்துவிட்டார்

    எழுந்தாலும் விழுந்தாலும்

    கடலின் புகழ்பாடும் அலைபோல,

    கம்யூனிஸ்ட் கட்சியின்

    ஏற்றத்திலும் இறக்கத்திலும்

    செங்கொடி சுமந்த

    சிங்கம் அவர்

    கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும்

    கம்யூனிஸ்ட் கட்சியின்மீது

    கொண்டிருக்கும் மதிப்புக்கு

    நல்லகண்ணுவின்

    வாழ்க்கைமுறை ஒரு காரணம்

    சுதந்திர இந்தியாவில்

    தடைசெய்யப்பட்ட

    கம்யூனிஸ்ட் கட்சி

    இன்றுவரை

    உயிர்ப்போடு இருப்பதற்கு

    நல்லகண்ணு போன்றோரின்

    தியாகமே காரணம்

    செயற்கை நுண்ணறிவு

    எதிர்காலத்தில்

    இறந்தவர்களை மீட்டுருவாக்கும்

    தொழில்நுட்பம் கண்டறிந்தால்

    நல்லகண்ணுவின் மீட்பையே

    நாடு கேட்கும்

    அவர் வாழ்ந்தது

    ஒரு நூறாண்டு;

    அவரை மறக்காது

    இந்த நூற்றாண்டு

    அவருக்கு

    என் செவ்வணக்கம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர்.
    • எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் 1.55 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் - தோழர் திரு.நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

    நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்!

    சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் -

    "சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத்

    தூக்கினில் ஏற்றினாலும்

    விட்டுப்பிரியாது – செங்கொடி

    வீரம் குறையாது"

    என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு.

    கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர்!

    முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், தலைவர் கலைஞருடன் தோளோடு தோள் நின்று களமாடியவர்.

    பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர்.

    முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருதை வழங்கிச் சிறப்பித்தார். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தோழர் அவர்களுக்குத் தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது எனது பெரும் பேறு!

    எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன்.

    தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்!

    "தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்" என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது.

    தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!

    மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்! எனக்கூறியுள்ளார். 

    • நல்லக்கண்ணுவிற்கு வயது 101
    • கட்சி அலுவலகத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லக்கண்ணு இன்று காலமானார். வயதுமூப்பு காரணமாக எழுந்த உடல்நலக் கோளாறுகளால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 20க்கும் நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இன்று 1.55 மணியளவில் காலமானார்.

    இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் இரங்கல்களை பதிவுசெய்து வருகின்றனர்.

    தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட உள்ளது. கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து அவரது உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ மாணவர்களின் ஆய்வுகளுக்காக நாளை சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட உள்ளது.  

    • வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்.
    • நல்லகண்ணு அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.

    சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனது 101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர்.

    தனது 15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் என அனைவரது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் அயராது போராடி வெற்றி கண்டவர். அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

    வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு, 7 ஆண்டுகள் சிறை, 4 ஆண்டுகள் தலைமறைவு என நாட்டுக்காக பல இன்னல்களை தீரத்துடன் எதிர்கொண்டவர்.

    சுற்றுச்சூழலை மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகவும், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும் களப் போராட்டத்தில் மட்டுமின்றி, நீதிமன்றத்திலும் போராடி வெற்றி கண்டவர். சுதந்திர இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது இறுதி மூச்சுவரை போராடிய தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.

    அவரது அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்தார். மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தோழருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி அவரது பெருமைக்கு மேலும் புகழ் சேர்த்தார்.

    தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும்.

    அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுவுடமை இயக்க தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மும்பை ரெயில் நிலைய பணிகளால் புறநகர் ரெயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
    • தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு ரெயில்வே.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரெயில் சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதியுற்றுள்ளனர். இதுகுறித்து அரசியல் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தும், பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில், ரெயில் சேவையில் உடனடி மாற்றம் கொண்டுவரவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதற்கு ரெயில்வே துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று எம்.பி. சு. வெங்கடேசன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த பதிவில் அவர், "ரூ. 2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால் புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

    கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ரூ 734 கோடியில் புணரமைக்கபடும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு இரயில்வே.

    சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்க செய்திருக்கும் இந்த நிர்வாக கோழைத்தனத்திற்கு இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு மனவேதனை அடைந்திருக்கிறேன்.
    • அரசியல் களத்திற்கும், சமத்துவத்தைக் கனவு காணும் ஒவ்வொரு பட்டாளித் தோழனுக்கும் பேரிழப்பு.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    நல்லக்கண்ணு மறைவுக்கு தாவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விடுதலைப் போராட்ட வீரர்!

    விவசாயிகளின் தோழர்!

    உழைக்கும் மக்களின் உரிமைப் போராளி!

    மாபெரும் தலைவர் - தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!

    இந்திய விடுதலைப் போர் வீரராக பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்து, விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாக உருவெடுத்து, பாட்டாளிகளின் தோழராகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் - மாபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்திகேட்டு, வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு மனவேதனை அடைந்திருக்கிறேன்.

    'பொதுவாழ்வில் நேர்மை' என்பதற்கு தோழர் நல்லகண்ணு என்றே தமிழக அரசியல் களத்தில் பொருள்! அந்தளவுக்கு தன்னலமற்ற, போராட்டங்கள் சூழ்ந்த, தியாகங்கள் மிகுந்த பொது வாழ்வை வாழ்ந்துகாட்டியவர் அவர்! கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அவருடைய தியாகப் பெருவாழ்வு, பொதுவாழ்வில் இருக்கும் அனைவருக்கும் நிகழ்காலப் பாடங்கள்!

    தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக அரசியல் களத்திற்கு மட்டுமல்ல, இந்தியப் பொதுவுடமை அரசியல் களத்திற்கும், சமத்துவத்தைக் கனவு காணும் ஒவ்வொரு பட்டாளித் தோழனுக்கும் பேரிழப்பு! அவரை இழந்து வாடும் பொதுவுடமை இயக்கத் தோழர்களுடனும், அவருடைய குடும்பத்தினருடனும் என் ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    பொதுவாழ்வில் எவராலும் அழிக்க முடியாத தியாகத்தின் தடங்களை ஆழமாகப் பதித்துச் சென்றுள்ள பாட்டாளிகளின் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு என் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
    • மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நல்லகண்ணு உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில், நல்லகண்ணு சிகிச்சை பலனின்றி காலமானார். முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் பிற்பகல் 1.55 மணிக்கு காலமானதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    • தமிழகத்தில் வனத்துறையினர் 10 கடலோர மாவட்டங்களில் 49 ஆமைகள் இனப்பெருக்க மையங்களை அமைத்துள்ளனர்.
    • கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட மற்றொரு ஆமையான மேகலை 2 முறை திரும்பி வந்து 211 முட்டையிட்டு இருக்கிறது.

    சோழிங்கநல்லூர்:

    "ஆலிவ் ரிட்லி"எனப்படும் கடல் ஆமைகள் ஆண்டு தோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

    சென்னை கடற்கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் சமீபகாலமாக இறப்பது அதிகரித்து வருகின்றன. ஆமைகள் கரை நோக்கி வரும்போது மீன்பிடி படகுகளில் அடிபட்டும், வலைகளில் சிக்கியும் அதிக அளவில் இறக்கின்றன. இதையடுத்து ஆமைகள் மற்றும் அதன் முட்டைகளை பாதுகாக்க வனத்துறையினர் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கடற்கரையில் உள்ள ஆமை முட்டைகளை சேகரித்து அதனை குஞ்சு பொரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்து வருகின்றனர். பின்னர் குஞ்சு பொரித்ததும் அதனை கடலில் விடுகிறார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு வனத்துறையின் மேற்பார்வையில் உள்ள பெசன்ட் நகர் குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட முட்டைகளில் இருந்து 46 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் பொரித்து உள்ளன. நல்ல நிலையில் இருந்த ஆமை குஞ்சுகள் முதல் கட்டமாக பெசன்ட்நகர் கடலில் விடப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 94 முட்டைகள் பாதுகாக்கப்பட்டதில் தற்போது குஞ்சுகள் வெளிவந்து உள்ளன. மீதமுள்ள முட்டைகளில் இருந்து இன்னும் ஓரிரு நாளுக்குள் ஓடுகளை உடைத்துகொண்டு ஆமை குஞ்சுகள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தமிழகத்தில் வனத்துறையினர் 10 கடலோர மாவட்டங்களில் 49 ஆமைகள் இனப்பெருக்க மையங்களை அமைத்துள்ளனர். இதுவரை நகரின் கடற்கரைகளில் ஆமைகள் முட்டையிடும் 209 இடங்கள் அடையாளம் காணப்பட்டு 24 ஆயிரத்து 531 முட்டைகள் சேகரிக்கப்பட்டது.

    அவை குஞ்சு பொரிப்பகங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெசன்ட்நகர் மற்றும் மெரினா கடற்கரைகளில் 18 இடங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேகரித்து உள்ளனர்.

    பெசன்ட் நகர் கடற்கரையில் விடுவிக்கப்பட்ட கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட கயல் என்ற ஆமை சென்னை கடற்கரையில் 3 முறை திரும்பி வந்து முட்டையிட்டுள்ளது. இந்த சீசனில் மட்டும் 389 முட்டையிட்டு இருக்கிறது. இந்த ஆமை தெற்கு நோக்கி சென்ற பிறகும், முட்டையிட மீண்டும் சென்னையையே தேர்ந்தெடுத்து உள்ளது.

    இதேபோல் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட மற்றொரு ஆமையான மேகலை 2 முறை திரும்பி வந்து 211 முட்டையிட்டு இருக்கிறது. ஆமைகள் ஏற்கனவே இருந்த கடற்கரைக்கு திரும்பி வரும் என்பது தற்போது உண்மையாகி உள்ளது என்றார்.

    • கோவை ரேஸ்கோர்சில் வக்கீல்கள் பயிற்சி மைய அலுவலகம் உள்ளது.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை:

    கோவை ரேஸ்கோர்சில் வக்கீல்கள் பயிற்சி மைய அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம் போல் இ-மெயில் தகவல்களை ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு இ-மெயிலில் கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெடித்து சிதற உள்ளது என கூறப்பட்டிருந்தது.

    உடனே இதுகுறித்து ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கோவை கோர்ட்டு வளாகத்திற்கு சென்றனர்.

    அங்கு அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். நீண்ட நேரம் சோதனைக்கு பிறகு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே இந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே வாலிபர் தான் கோவை கோர்ட்டுக்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

    • செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் அவரது மகள் ஆண்டாளிடம் கேட்டறிந்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.

    செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இன்று காலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது.

    நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஆண்டாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

    இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலை குறித்து த.வெ.க. தலைவர் விஜய் நலம் விசாரித்தாக தகவல் வெளியாகி உள்ளது. நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து விஜய் கேட்டறிந்தார்.

    • தனியார் பேருந்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலூகா, வ.உ.சி நகரைச்சேர்ந்தவர் அழகர். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் புவியரசு (வயது 15). இவர் அருகில் வேங்கடாகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

    தினமும் தனது வீட்டில் இருந்து பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். ஒருசில சமயங்களில் அவரது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நடைபெறுவதால் புவியரசு பெற்றோரிடம் கூறிவிட்டு, அவர்களிடம் ஆசீர்வாதமும் வாங்கி காலையிலேயே பள்ளிக்கு புறப்பட்டார்.

    பின்னர் அவர் ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு வேங்கடாகுளம் வழியாக செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். காலை நேரம் என்பதால் அந்த பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் வியாபாரிகள் என 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மாணவர் புவியரசு முன்பக்க படிக்கட்டின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    அந்த பேருந்து ஆலங்குடியை அடுத்த மங்களாபுரம் அருகே குப்பக்குடி பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக பேருந்தில் இருந்து புவியரசு படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்த பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து புவியரசுவை சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் புவியரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் புவியரசுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடியில் இருந்து செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதாகவும் இந்த வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    பள்ளிக்கு சென்ற மகன் இறந்தது குறித்த அறிந்த அவரது பெற்றோர் கதறி அழுதவாறு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

    ×