என் மலர்
இந்தியா

அஜித் பவார் விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? - வெளியானது அறிக்கை
- அஜித் பவாரின் மகனும் இந்த சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
- போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
அஜித் பவார் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை எதிர்த்து சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாலும், பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக கடுமையாக விமர்சித்ததாலும் அவரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பின.
மேலும் பெரிய சேதங்களை தாங்கும் விமானத்தின் கருப்பு பெட்டி இந்த விபத்தில் சேதமடைந்ததாக கூறப்பட்டதால் சந்தேகம் மேலும் வலுத்தது. அஜித் பவாரின் மகனும் இந்த சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
இந்த சூழலில் இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) தற்போது தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கைபடி, விபத்து நடந்த சமயத்தில் பாராமதி பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வை தூரம் மிகக் குறைவாக இருந்துள்ளது. விமானங்கள் தரையிறங்குவதற்கு குறைந்தபட்சம் 5,000 மீட்டர் கண்பார்வை தூரம் தேவை. ஆனால், விபத்தின் போது இது மிகவும் குறைவாக இருந்துள்ளது.
விமானம் தரையிறங்கும் முன் விமானிகள் பார்வை தூரம் குறித்துக் கேட்டபோது, கட்டுப்பாட்டு அறையிலிருந்து 3,000 மீட்டர் இருப்பதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது தரையிறங்குவதற்குப் போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த அன்று கட்டுப்பாட்டு அறையை ஒரு பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த தரைவழி பயிற்றுவிப்பாளர் இயக்கியுள்ளார். அவரே விமானிகளுடன் தொடர்புகொண்டு தரையிறங்க அனுமதி அளித்துள்ளார்.
பாராமதி விமான நிலைய ஓடுதளம் கடைசியாக 2016-ல் தான் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடுதளத்தில் உள்ள அடையாளக் குறிகள் மங்கிப் போயிருந்தன. மேலும், ஓடுதளத்தில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடந்ததையும் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.
இந்த விபத்தில் காக்பிட் குரல் பதிவுக்கருவி சேதமடைந்துள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் உதவியுடன், அதில் உள்ள தரவுகளைப் பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்ய AAIB திட்டமிட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற விமான நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என AAIB பரிந்துரைத்துள்ளது.
விபத்துக்கான மூலக் காரணம் மற்றும் உண்மைகளை வெளிக்கொண்டு வர முழு அளவிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக AAIB தெரிவித்துள்ளது.






