என் மலர்
இந்தியா

ரூ.400 கோடி வாகன கொள்ளை வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்.. வெளியான பகீர் உண்மை
- ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
- கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.
மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ. 400 கோடி கொள்ளை சமைப்பவத்தில் அதிர்ச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சந்தீப் பாட்டில் என்ற லாரி ஓட்டுநர், கடந்த அக்டோபர் 22 அன்று கர்நாடகாவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு செல்லாத 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.400 கோடியைக் கொண்டு சென்றபோது, தன்னை ஏழு பேர் கொண்ட கும்பல் தாக்கி, பணத்தைக் கொள்ளையடித்ததாக போலீசில் புகார் அளித்தார்.
சந்தீப் பாட்டில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிர போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சந்தீப் குறிப்பிட்ட பயண பாதை, சம்பவ நடந்ததாகச் சொல்லப்பட்ட நேரம், அவரது செல்போன் அழைப்பு விவரங்கள் ஆகியவற்றில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
எதுவுமே அவர் சொன்ன விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. விரிவான விசாரணைக்கு பிறகு, அப்படி ஒரு கொள்ளைச் சம்பவமே நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
நேற்று இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிராவின் இகத்புரி நீதிமன்றம், கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.
மேலும், தவறான தகவலைக் கொடுத்து போலீசாரையும் நீதிமன்றத்தையும் திசைதிருப்பிய ஓட்டுநர் சந்தீப் பாட்டில் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. சந்தீப் பொய் புகார் அளிக்க என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.






