என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caste-free village"

    • மகாராஷ்டிராவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே சாதி இல்லாத கிராமம் என்றால் அது சவுண்டாலாதான்.
    • இது ஒரு சிறிய முயற்சி, ஆனால் அது நீண்ட தூரம் செல்லும்

    சாதி அரசியல் இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்தி வரும் நேரத்தில், மகாராஷ்டிராவின் சவுண்டாலா கிராமத்தில் ஒரு சிறிய ஆனால் முக்கிய மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக திகழ்ந்து வரும் சவுண்டாலா, தற்போது கிராம சபையின் முறையான ஒப்புதலுடன், "அம்சி ஜாத்... மானவ்" (எனது சாதி மனிதநேயம்) என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு தன்னை சாதி இல்லாத கிராமமாக அறிவித்துள்ளது.

    இதன்மூலம் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே சாதி இல்லாத கிராமம் என்றால் அது சவுண்டாலாதான். அகமதுநகர் என்று முன்னர் அழைக்கப்பட்ட அஹில்யநகர் மாவட்டத்தின் நெவாசா தாலுகாவில் அமைந்துள்ள சவுண்டாலாவில் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதுதொடர்பாக பேசியுள்ள அக்கிராமத்தினர்,

    "இது ஒரு சிறிய முயற்சி, ஆனால் அது நீண்ட தூரம் செல்லும். சவுண்டாலா இப்போது சாதி இல்லாத கிராமமாக மாறியுள்ளது. பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கூட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    கூட்டத்தில், யாரும் சாதியைப் பின்பற்றவோ அல்லது சாதி அடிப்படையிலான நடைமுறைகளில் ஈடுபடவோ கூடாது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் 'அம்சி ஜாத்... மானவ்' மூலம் வழிநடத்தப்படுவோம். மக்கள் மனிதநேயத்தைப் பின்பற்றுவார்கள்.


    கிராம கூட்டத்தின்போது

    உண்மையில், எங்களுக்கு சாதியில் நம்பிக்கை இல்லை. மனிதநேயம்தான் மிகப்பெரிய சாதி மற்றும் மதம். அனைவரும் சமம்" என தெரிவித்துள்ளனர்.

    முற்போக்கு எண்ணங்களை கொள்கைகளாக கொண்ட தமிழ்நாட்டைவிட பன்மடங்கு முற்போக்கில் சிறந்து விளங்குகின்றனர் சவுண்டாலா கிராம மக்கள். பாலின உணர்திறன், குழந்தை திருமணத்தை தடை செய்தல்,  கைம்பெண்களின் மறுமணத்தை அனுமதித்தல், குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கை, பெண் கல்வியை ஊக்குவித்தல் மற்றும் அரசியல் செயல்பாட்டில் பெண்கள் பங்கேற்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல முற்போக்கான தீர்மானங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அக்கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    முற்போக்கு கொள்கைகளை பேசுவது மட்டும் மாற்றமில்லை. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு உதாரணமாய் திகழ்கிறது இந்த சவுண்டாலா கிராமம். கடந்த 2007ல், 'எவ்வித மோதலும் இல்லாத கிராமம்' என்ற விருதை சவுண்டாலா கிராமம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    ×